உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் விஷ்ணுவையும், சிவபெருமானையும் ஒரே இடத்தில் நின்று வழிபடலாம். வேறு எந்த கோயிலிலும் இந்த அதிசயத்தைக் காணமுடியாது. அம்பலத்தில் ஆடும் தில்லை கூத்தனையும், யோகசயனத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாளையும் ஒரே நேரத்தில் வழிபடலாம். தில்லை திருசித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திருப்பதிகளில் 23வது திருப்பதியாக உள்ளது. பிராட்டியைத் திருமார்பில் கொண்ட பெருமானை சிந்தையில் வைப்பதற்காக காயையும், கனிகளையும் உண்டு, காற்றை சுவாசித்து ஐந்துவிதமான தீயினை வளர்த்து, கடுமையான தவத்தைச் செய்ய வேண்டாம்.
வேதங்களை உணர்ந்து ஓதும் மறையோர்கள் தினமும் முறைப்படி வளர்த்த வேள்வித் தீ ஓங்கும் அளவுக்குப் புகழோங்கி நிற்கும் திருச்சித்ரகூடம் போய்ச் சோ்வீர்களாக என இக்கோயில் குறித்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். நடராஜர் கோயில் கனகசபையின் முன்பு கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்துடன் தனி கொடி கம்பத்துடன் கூடிய தனிக் கோயிலாக ஒரு சுற்றுடன் இக்கோயில் அமைந்துள்ளது.
இங்கு மூலவர் கோவிந்தராஜப் பெருமாள் சாத்வீக விமானத்தின் கீழ் யோகசயன நிலையில் உள்ளார். உற்சவரான தேவாதிதேவன் அமர்ந்த நிலையிலும், திருச்சித்திரக்கூடத்தான் நின்ற நிலையிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் சுற்று பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர், வேணுகோபாலர், ஆழ்வார்கள், ஆஞ்சநேயர் முதலான மூர்த்திகளுக்கு தனி சன்னதிகள் உள்ளன. இக்கோயிலின் அருகே நாச்சியார் தாயார் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றனர். அருகே கண்ணாடி மாளிகை, மடப்பள்ளி ஆகியவை உள்ளன. இக்கோயிலில் திருமங்கையாழ்வார் 32 பாசுரங்களாலும், குலசேகர ஆழ்வார் பதினொரு பாசுரங்களாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
இரண்டாம் நரசிம்மவாமன் என்ற பல்லவ மன்னர் காஞ்சியில் வைகுந்த பெருமாள் கோயிலை கட்டிய போது தில்லை திருச்சித்ரகூடத்தை எண்ணூறாம் ஆண்டில் கட்டியுள்ளார். இக்கோயிலுக்கு தனிவாயில், தனி கொடிமரம், கோபுரம் உண்டு. தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தில் மக்கள் கூட்டம் அலை மோதும். சொர்க்கவாசல் திறப்பு, நவராத்திரிவிழா போன்றவையும் சிறப்பாக நடத்தப்படுகிறது. சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்களின் சமத்துவ நெறியை இத்தலம் உணர்த்துகிறது. பெருமாளை மனமுருக வழிபட்டால் தீவினைகள் அகன்று வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.
கடலில் வீசப்பட்ட பெருமாள் கருவறைக்கு வந்தார்
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவ, வைணவ மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. அதேபோல் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் குலோத்துங்கன் நடராஜர் கோயிலை விரிவுபடுத்தும் போது யோகசயனத்தில் இருந்த கோவிந்தராஜரை அடியோடு பெயர்த்து கடலில் எறிந்ததாகவும், பின் வெகுகாலத்திற்கு பிறகு ராமானுஜ சுவாமிகளின் பெருமுயற்சியினால் கடலில் கிடந்த கோவிந்தராஜப் பெருமாள் சிலையை கண்டுபிடித்து மீண்டும் தில்லை திருசித்திரக்கூட தலத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
No comments:
Post a Comment