Friday 30 November 2018

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை

* விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
* விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
* விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.
* விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
* விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
* விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
* விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
* வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது

Wednesday 28 November 2018

விபத்து, எதிரிகள் தொல்லை நீங்க துர்கா கவசம்

விபத்து, எதிரிகள் தொல்லை நீங்க துர்கா கவசம்

விபத்து, எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம்
படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்

2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்

3. உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ

4. ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா

5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ

6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ

7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.

Monday 26 November 2018

காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் - திருநெல்வேலி

காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் - திருநெல்வேலி

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘ஆனந்த வனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை ஈசன் கூறியுள்ளார். பண்டைய காலங்களில் கல்விக் கூடங்கள் பல அமைத்து, கல்வியிற் சிறந்த நகரமாக காசி விளங்கி இருக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை நகரை அடுத்துள்ள சேர்ந்தமரம் என்னும் ஊருக்கு மேற்கே, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் திருமலாபுரம். இவ்வூரில் புராண காலத்தோடு தொடர்புடைய நீண்ட நெடிய கிழக்கு நோக்கிய மலைத்தொடர் ஒன்று உள்ளது. இந்த மலை புராண காலத்தில் ‘வாரணாசி’ மலை என்றும், ‘வருணாச்சி மலை’ என்றும், இப்பகுதியில் அமைந்திருந்த ஊர் ‘வாரணாசிபுரம்’ என்றும், ‘வருணாச்சிபுரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மலைத்தொடர் ‘சர்வேஸ்வரன் மலை’ எனவும், இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் பெயர் ‘பசுபதேஸ்வரர்’ எனவும் வழங்கப்படுகிறது. சிவபெருமானின் வழித்தோன்றல்களான பாண்டிய வம்ச மன்னர்கள், தங்கள் நாயகனின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு சர்வேஸ்வரன் மலைத்தொடரின் இருபுறமும் இரு குடவரைக் கோவில்களை உருவாக்கினர். கிழக்கு - மேற்காக நீண்டிருக்கும் சர்வேஸ்வரன் மலைத் தொடரின் வடக்குப் பகுதியிலுள்ள குடவரைக் கோவில் முழுமை பெற்றுள்ளது. தென்பகுதியில் உள்ள குடவரை முழுமை பெறவில்லை.

வடக்குப் பகுதியில், வடக்குப் பார்த்து அமைந்த முழுமைப்பெற்ற குடவரைக் கோவில், கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுமார் 19 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட செவ்வக வடிவ அர்த்த மண்டபம் உள்ள இக்குடவரையில், கருவறை எட்டு சதுர அடியில் அமைந்துள்ளது. காசியிலுள்ள கருவறை போன்றே சிவலிங்கத்தை வலம் வந்து அர்ச்சகர் பூஜைசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்குள் ஏறிச் செல்வதற்கு மேற்குப் பகுதியில் இருந்தும், கிழக்குப் பகுதியில் இருந்தும் பாறைக் கற்களால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் குடவரையின் உள்ளே புகாவண்ணம் குடவரையின் மேலே, பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது.

குடவரையில் மூன்று நுழைவு வாசல்கள் உள்ளன. நுழைவு வாசலில் காணப்படும் தூண்களின் மீது அழகிய பூ வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசல்களுக்கு நேரே உள்ளே முன்மண்டபத்தில் நடராஜர், பெருமாள், விநாயகர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதிலுள்ள சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பூதங்கள் நிற்கின்றன. வலப்புற பூதத்தின் உடல் பெரு மளவு சிதைந்துள்ளது. கால்கள் மட்டும் எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனை ஓலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடது தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக்கருவியை வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது.

குடவரை கோவில் அமைந்த மலை

தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.

நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.

காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.

சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். திருக்கார்த்திகை தினமான இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலையில் உலக நலன், உலக ஒற்றுமை, உலக நல்வாழ்வு, உலக ஆரோக்கியம் கருதி ‘மகா ருத்ர யாகம்’ நடைபெறுகிறது.

பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பனை) ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது இக்குடவரைக் கோவில். சாலையில் இருந்து கோவில் வரை செல்லும் மண்பாதையின் இருபுறமும் தல விருட்சமான பனை மரம் அணிவகுத்து நிற்பது கொள்ளை அழகு!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!

அமைவிடம்

சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.

Saturday 24 November 2018

கார்த்திகை தீப தகவல்கள் 30

கார்த்திகை தீப தகவல்கள் 30

1. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, “தீப மங்கள ஜோதி நமோ, நம” என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.

7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (25-ந்தேதி) அண்ணாமலையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் கிரிவலம் வர உள்ளனர்.

8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

9. திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.

10. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு, சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.

11. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

12. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

13. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.

14. கார்த்திகை  மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

15. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.

16. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.

17. இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

18. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.

19. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.

20. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.

21. தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

22. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை வந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

23. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

24. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

25. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

26. திருவண்ணாமலை தீபத்தை காண கடந்த ஆண்டு சுமார் 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

28. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? “இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்”- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

29. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

30. தீப திருவிழாவுக்காக இந்த ஆண்டு (2018) சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதலே சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Thursday 22 November 2018

சூரியன் தோஷம் விலக எளிய பரிகாரங்கள்

சூரியன் தோஷம் விலக எளிய பரிகாரங்கள்

சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். 

உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். 

சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

சூரியதோஷத்தில் இருந்து பாதுகாப்பது எப்படி? 

சூரியதோஷம் இருந்தால், அடிக்கடி அனுமன் கோயிலுக்குப் போய் வழிபடுங்கள். 

தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள். 

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் பசுநெய் தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். 

பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். 

சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் கேளுங்கள். 

முடியாதவர் மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள். அடிக்கடி பிரசித்தி பெற்ற அனுமன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு 

சூரியனுக்குரிய தானியமான கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோயிலுக்குப் போவதும் நல்லது. 

தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து உங்களது பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். 

ஞாயிற்றுக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சூரியனை வழிபடுங்கள். இதில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள். சூரியதோஷம் சுலபமாக விலகும்.

தாலி பாக்கியம் தரும் அருணாசலேஸ்வரர் ஆலயம் - திருச்சி

தாலி பாக்கியம் தரும் அருணாசலேஸ்வரர் ஆலயம் - திருச்சி

அம்மனின் பெயரைக்கேட்டதும் திருவண்ணாமலை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் அதே பெயரோடு அம்பிகை அருள்வது திருச்சி ஜே.கே நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில். ஆம்! இறைவன் பெயரும் அதேதான். அருணாசலேஸ்வரர்.

ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நூறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம் பிரமாண்டமாகக் காட்சி தருகிறது. வலதுபுறம் கால பைரவரின் தனிச் சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதால் ஏவல், பில்லி, சூனியம் போன்ற பாதிப்பில் இருந்து பூரணமாக விடுபடலாம் என்பது நம்பிக்கை.

சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மகாமண்டபத் தூண்களை ரசித்தபடி நடந்தால் நந்தியை தரிசித்து, அர்த்த மண்டப நுழைவுவாசலில் உள்ள கம்பீரமான துவாரபாலகர்களின் அனுமதிபெற்று, கருவறையில் இறைவன் அருணாசலேஸ்வரரின் லிங்கத் திருமேனி முன்சென்று நிற்கலாம். கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கும் இறைவன் முன் நின்று கரங்குவிக்கும் போது மனம் பூராவும் வெற்றிடமாகி, மெல்லிய மலர்களால் வருடப்படும் உணர்வு தோன்றுகிறது.

சிவராத்திரியின் போது இறைவனுக்கு நான்கு கால ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம் அனைத்து சோமவார நாட்களில் இறைவனுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ வழிபாடும் சிறப்பாக நடக்கிறது.

இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அன்னதானம் செய்தால் பித்ருதோஷம் நீங்கும் என்றும், ஜாதகக் கோளாறுகள் நிவர்த்தியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

இறைவனின் தேவகோட்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். சண்டேசர் சன்னிதியும் உள்ளது.

அன்னை உண்ணாமுலை அம்மன் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் அருள்பாலிக்கிறாள். புன்சிரிப்பு மலர காட்சி தரும் அன்னையின் அருள் முகம் நம்மை வசீகரிப்பது நிஜம்.

மாங்கல்யம் நிலைத்துத் தழைக்க வேண்டும் என்றும், கணவன் நீண்ட ஆயுளுடன்வாழ வேண்டும் என்றும் விரும்பாத பெண் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட பெண்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறாள் அன்னை.

பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தை வெள்ளிக்கிழமைகள், ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு. வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தால் தாலி பாக்கியம் நீடிக்கும் என்றும், நோயுற்றவர்கள் விரைந்து குணமாவார் என்றும், தோஷங்கள் விலகும் என்றும் நம்புவதால் அன்றைய தினம் அன்னையின் சன்னிதியில் பெண்கள் கூட்டம் நிறைந்திருக்கும். தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவிக்கு புடவை சாத்தி, நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றனர். வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலையை இறைவிக்கு சாத்தினால், திருமணம் விரைந்து நடந்தேறும் என்கின்றனர்.

இறைவியின் தேவகோட்டத்தில் இச்சா, கிரியா, ஞான சக்தியரும், எதிரே சண்டிகேஸ்வரியும் அருள்பாலிக்கின்றனர்.

ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

இறைவன், இறைவியை சேர்ந்தே வலம் வரும் வகையில் உட்பிரகாரம் அமைந்துள்ளது. நிருதி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, முருகன், வள்ளி, தெய்வானை, நால்வர், நவக்கிரக நாயகர்கள் இங்கே அருள் பாலிக்கின்றனர்.

இறைவியின் சன்னிதியை அடுத்து ஜெயம் கொண்ட விநாயகரின் சன்னிதி உள்ளது. ஆனை முகன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்க, கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். அடுத்துள்ளது பாலமுருகனின் சன்னிதி. சஷ்டியின் போது ஆறு நாட்களும் முருகனுக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெறும். மாத சஷ்டி மற்றும் தைப்பூசத்தின்போது முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ரிஷபங்களின் சுதையாலான திருவடிவங்களுடன் ஆலயத்தைச் சுற்றியுள்ள மதிற்சுவர் அழகுற காட்சியளிக்கிறது.

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயத்தின் தல விருட்சம், வில்வம்.

பக்தர்களின் நலம் காக்கும் அருணாசலேஸ்வரரையும், மகளிர் துயர் காக்கும் உண்ணாமுலை அம்மனையும் ஒரு முறை தரிசித்து நன்மை பெறலாமே!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஜே.கேக நகரில் உள்ளது இந்த அருணாசலேஸ்வரர் ஆலயம்.

Tuesday 20 November 2018

16 வகை தீபங்கள்

16 வகை தீபங்கள்

தீபங்களில் 16 வகையான தீபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். தீபம், மகா தீபம், கணு தீபம், வியான் தீபம், மேரு தீபம், மயூர தீபம், சிம்ம தீபம், ஐந்தட்டு தீபம், துவஜ தீபம், புருஷா மிருக தீபம், நட்சத்திர தீபம், அலங்கார தீபம், ஓல தீபம், கமடதி தீபம், நாக தீபம், விருட்சப தீபம் என பதினாறு வகையான தீபங்கள் உண்டு.

தீபத்திற்கான எண்ணெய்

எக்காலத்திலும் தீபம் ஏற்றுவதற்கு, சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தாலம். ஏற்கனவே உபயோகித்த எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே போல் கடலை எண்ணெயையும் பயன்படுத்தக் கூடாது. 

இல்லத்தில் இறை வனின் அருளும், கல்வியும், செல்வமும் சிறந்து விளங்கிடவும், வாழ்வும் துன்பங்கள் இல்லாமல் சுகமாக அமையும் வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், விளக்கெண்ணைய் ஆகிய ஐந்து எண்ணெய்களைக் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பு.

Saturday 17 November 2018

சீதாஎலியா திருத்தலம் - இலங்கை

சீதாஎலியா திருத்தலம் - இலங்கை

ராவணனால் கடத்தப்பட்ட சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம், சீதை நீராடி தவமியற்றிய தலம், ராமபிரானின் கணையாழியை அனுமன் கொடுத்த இடம், தொல்லியல் சான்றுகள் நிறைந்த தலம், ராவணன் கோட்டைக்கு எதிரே அமைந்த தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, இலங்கையில் உள்ள சீதாஎலியா திருத்தலம்.

தல வரலாறு :

தமிழர்களுக்குக் கிடைத்துள்ள இரண்டு இதிகாசங்கள், ராமாயணமும், மகாபாரதமும் ஆகும். இவை இரண்டும் உண்மையே என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள், இந்தியாவிலும், இலங்கையிலும் நிறைந்துள்ளன. அந்த வகையில்.. சீதையை சிறைபிடித்த ராவணன், அவளை காவலில் வைத்த இடமே, சீதாஎலியா என்ற தலம். இங்கு அமைந்துள்ள கோவிலே, சீதை அம்மன் திருக்கோவில் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இங்கு பல்வேறு தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.

கைகேயின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, மன்னன் தசரதன் தந்த வரங்களின் படி, ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல நேர்ந்தது. ராமபிரானுடன் சீதையும் லட்சுமணனும் வனம் சென்றனர்.

ராமன் தண்டகாவனம் சென்று தங்கியபோது, ராவணனின் தங்கை சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு மயங்கினாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினாள். சீதை இருக்கும் வரை ஏக பத்தினி விரதனான ராமன் தன்னை மணம்புரிய மாட்டான் என்று எண்ணிய சூர்ப்பனகை, சீதையைத் தூக்கிச் செல்ல முயன்றாள். இதைக் கண்ட லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தெறிந்தான்.

ராவணன் அரசபைக்குச் சென்ற சூர்ப்பனகை, தனது அண்ணனிடம் புலம்பித் தீர்த்தாள். ‘அழகுமிக்க சீதையை உனக்காக கொண்டுவர முயன்று இந்த கதி ஏற்பட்டது’ என்று பொய் கூறினாள். சீதையின் பேரழகு, ராவணனின் கண்ணை மறைத்தது.

மாரீசன் என்ற தன் மாமனோடு, சீதை தங்கி யிருந்த பஞ்சவடிக்கு வந்தான். ராவணனுக்காகப் பொன் மான் வடிவம் எடுத்த மாரீசன், லட்சுமணனின் அம்பு பட்டு இறந்தான். என்றாலும், சந்நியாசி வடிவில் வந்த ராவணன், சீதையை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றான்.

தன் அரண்மனையில் வைத்துப் பார்த்தால் சீதையின் கோபம் குறையும் என்று நினைத்த ராவணனின் எண்ணம் ஈடேறவில்லை. வேறு வழியின்றி அசோக வனத்தில் சிறை வைத்தான் என்கிறது இந்த ஆலயத்தின் புராணக் கதை.

சீதை சிறைவைக்கப்பட்ட தலமே, சீதாஎலியா என்ற ஊராக விளங்குகிறது. அவ்வூரில் தான் சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. புராண காலத்தில் அசோக வனம் என்று குறிப்பிடப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா அருகில் உள்ள மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இத்தலம் குழந்தைப்பேறு, தம்பதியர் ஒற்றுமைக்கு ஏற்றத் தலமாகத் திகழ்வதால், உள்நாட்டவர் பலரும் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

ராமாயணம் தொடர்புடைய பழம்பெரும் தலங்களான ஹக்கலா, மலிகடென்னா, ராமராசாலா, சீத்தாவாகா, கெலனியா இன்றும் காணப்படுகிறது. இதேபோல, ராவணன் குகை, ராவண எல்லா எனும் இடங்கள் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன. ராவணனின் மற்றொரு கோட்டை தென்கிழக்கு கடற்கரைக் கோவிலாக இருக்கிறது.

சீதா எலியா ஆலயத்தின் எதிரே பிரமாண்ட மலை அமைந்துள்ளது. அதன் உச்சியில் ராவணன் கோட்டையும், அரண் மனையும் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மலையின் முன்பகுதியைப் பார்த்தால் அது அனுமனின் முகம் போல் காட்சி தருவது வியப்பாக உள்ளது.

ஆலய அமைப்பு :

இவ்வாலயம் கண்டி - நுவரெலியா நெடுஞ்சாலையை ஒட்டி, சீதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த இடமே சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வனம் ஆகும். சாலையில் இருந்து சில படிகள் கீழே இறங்கி தான் கோவிலுக்குச் செல்ல வேண்டும். உள்ளே இரண்டு கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்றில் பழைய மூல மூர்த்திகளும், மற்றொன்றில் புதிய மூல மூர்த்திகளும் உள்ளன. எதிரில் அனுமன், ராமபிரானை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றார். இரண்டு கருவறைகளிலும் ராமபிரான், சீதை, லட்சுமணன் அருள்காட்சி வழங்குகின்றனர். ஆலயத்தின் தலமரமாக அசோக மரம் உள்ளது. பிரார்த்தனை செய்வோர் கட்டிய ஏராளமான துணி முடிச்சுகள் அதில் காணப்படுகின்றன.

ஆலயத்தின் பின்புறம் சீதை ஆறு ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மறுகரையில் அனுமன் பாதங்களின் சுவடு கள் பாறையில் அமைந்துள்ளன. அதன் மேலே சிறிய மேடை அமைந்து, அதில் ராமபிரான் கொடுத்த கணையாழியை அனுமன் சீதையிடம் தரும் காட்சி, சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்புறம் மலைகள் நிறைந்திருக்க, அதில் அசோக மரங்கள் நிறைந்துள்ளன.

ஆலயத்தை ஒட்டிய ஒரு பகுதி மண்ணின் நிறம் கருமை நிறமாகவும், மறுபகுதி இயல்பான நிறத்திலும் அமைந்துள்ளது. இதற்குக் காரணம், இலங்கையை அனுமன் எரித்ததால் ஏற்பட்டது என்ற ஐதீகம் கூறப்படுகிறது.

கோவில் நிர்வாகம் தனியார் வசம் இருக்கிறது. இங்குள்ள அர்ச்சகர்கள் பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து வந்து செல்பவர்களாக உள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ராமாயணத்தைக் கதையாகப் படித்து, படமாகப் பார்த்த நமக்கு, அசோக வனத்தையும், சீதை அம்மன் திருக்கோவிலையும் கண்டு வணங்கி, அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களை எல்லாம் பார்த்து திரும்பும் போது, நம் மனதிற்குள்ளும் ராமாயண காலத்தில் வாழ்ந்த பிரமிப்பு ஏற்படும். அந்த மெய்சிலிர்ப்பை அங்கு செல்லும் எவராலும் தவிர்க்க இயலாது.

தேங்காய் எப்படி உடைபட வேண்டும்?:

வழிபாட்டிற்கென்று தேங்காய் உடைக்கும் பொழுது, சரி பாதியாக உடைந்தால் சிறப்பு உண்டாகும். சிறிய மூடியும், பெரிய மூடியும் உடைந்தால் சிறிது நாள் கழித்து காரியம் நிறைவேறும். உள்ளே பூ இருந்தால் குழந்தைப்பேறு உண்டாகும். குறுக்கில் உடைந்தால் குற்றம் இருக்கிறது என்று பொருள். எக்காரணம் கொண்டும் உடைத்த தேங்காயை மூடிப் பார்க்க கூடாது. ஆனால் சிதறு காய் உடைக்கும் பொழுது நன்றாகச் சிதற வேண்டும். அப்பொழுது சரிசமமாக உடையக் கூடாது. சிறு, சிறு துண்டுகளாகச் சிதறி ஓடினால் தான் நமது துன்பங்களும் சிதறும் என்பது ஐதீகம்.

வாழ்வில் வசந்தம் உருவாக... 

சூரியனுடைய அருளைப் பெற விரும்புபவர்கள் சூரிய திசை, சூரிய புத்தி நடப்பவர்கள் சூரிய வழிபாட்டைத் தினமும் மேற்கொள்ள வேண்டும். அதோடு ஞாயிற்றுக்கிழமை சூரிய ஹோரை நேரத்தில் கோதுமை தானமும், ஏழு குதிரைகளுக்கு ஏழு கைப்பிடி கொள்ளும் தானம் கொடுத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் வசந்தம் உருவாகும்.

அமைவிடம் :

இலங்கையின் மத்திய மாகாணமான நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில், கண்டி- நுவரெலியா நெடுஞ்சாலையில் உள்ளது சீதாஎலியா என்ற ஊர். இந்த ஊரின் நெடுஞ்சாலையை ஒட்டியே சீதை அம்மன் ஆலயம் இருக்கிறது. நுவரெலியா, இலங்கை நாட்டின் மலைவாசத் தலம் ஆகும். கண்டியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், கொழும்பில் இருந்து 105 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலும் சீதா எலியா என்ற ஊர் அமைந்திருக்கிறது.

Thursday 15 November 2018

திருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்

திருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்

திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த வலம் 7 என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் இதன் பொருள்...

முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும்.

ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

உலகில் ஏழாக அமைந்தவை

உலகில் ஏழாக அமைந்தவை

இந்த உலகத்தில் சில செயல்களும், வழிபடும் தெய்வங்களும், சில நிகழ்வுகளும் என இப்படி பலவும் 7 என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

கன்னியர்கள் :

பிராம்மி
மகேஸ்வரி
கவுமாரி
வைஷ்ணவி
வராகி
இந்திராணி
சாமுண்டி

ரிஷிகள் :

அகத்தியர்
காசியபர்
அத்ரி
பரத்வாஜர்
வியாசர்
கவுதமர்
வசிஷ்டர்

சிரஞ்சீவிகள் :

அனுமன்
விபீஷணர்
மகாபலி சக்கரவர்த்தி
மார்க்கண்டேயர்
வியாசர்
பரசுராமர்
அசுவத்தாமன்

கொடிய பாவங்கள் :

ஆணவம்
சினம்
பொறாமை
காமம்
பெருந்தீனி
சோம்பல்
பேராசை

மலைகள் :

இமயம்/கயிலை
மந்த்ரம்
விந்தியம்
நிடதம்
ஹேமகூடம்
நீலம்
கந்தமாதனம்

முக்கிய தலங்கள் :

வாரணாசி
அயோத்தி
காஞ்சீபுரம்
மதுரா
துவாரகை
உஜ்ஜைனி
ஹரித்துவார்

கிரகங்கள்

சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி

(ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் ஆகும்)

நதிகள் :

கங்கை
யமுனை
கோதாவரி
சரஸ்வதி
நர்மதா
சிந்து
காவிரி

நீக்கவேண்டியது :

உழைப்பு இல்லாத செல்வம்
மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி
மனிதம் இல்லாத விஞ்ஞானம்
பண்பு இல்லாத படிப்பறிவு
கொள்கை இல்லாத அரசியல்
நேர்மை இல்லாத வணிகம்
சுயநலம் இல்லாத ஆன்மிகம்

மழையின் வகை :

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் - தீ மழை (எரிமலை, சுனாமி)

தலைமுறைகள் :

முதல் தலைமுறை (நாம்)
இரண்டாம் தலைமுறை (தந்தை - தாய்)
மூன்றாம் தலைமுறை (பாட்டன் - பாட்டி)
நான்காம் தலைமுறை (பூட்டன் - பூட்டி)
ஐந்தாம் தலைமுறை (ஓட்டன் - ஓட்டி)
ஆறாம் தலைமுறை (சேயோன் - சேயோள்)
ஏழாம் தலைமுறை (பரன் - பரை)
பரன்- பரை என்பதே ‘பரம்பரை’ என்று சொல்லப்படுகிறது.

Wednesday 14 November 2018

கல்பாத்தி விசுவநாதர் கோவில் - கேரளா

கல்பாத்தி விசுவநாதர் கோவில் - கேரளா

காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கின்ற பலன்களில், பாதி பலன்களைக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி எனுமிடத்தில் அமைந்திருக்கும் விசுவநாதரை வணங்கிப் பெறமுடியும் என்பதால் ‘காசியில் பாதி கல்பாத்தி!’ என்று சொல்லப்படுகிறது.

தல வரலாறு :

கேரளாவிலுள்ள கொல்லங்கோடு எனும் ஊரில் வசித்த லட்சுமியம்மாள், அங்கு தன்னுடைய முன்னோர்கள் வழிபட்டு வந்த தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோவிலைப் போன்று, ஒரு சிவபெருமான் கோவிலைக் கட்ட வேண்டும் என்று ஆசைகொண்டார்.

வயதான காலத்தில், அவர் காசி எனப்படும் வாரணாசிக்குச் சென்று திரும்பி வரும் போது, தன் விருப்பப்படி கோவில் கட்டுவதற்காக, அங்கிருந்து ஒரு பாணலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவர் வரும் வழியில் உள்ள நதிக்கரைகளில் தங்கி, அந்தப் பாணலிங்கத்தை வைத்துப் பூஜை செய்து வழிபடுவதும், பின்னர் அதனை எடுத்துக் கொண்டு வருவதுமாக இருந்தார்.

அவர் பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தி எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த நிலா ஆற்றங்கரையில் பாணலிங்கத்தை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார். பின்னர் வழக்கம் போல், சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து அந்தச் சிவலிங்கத்தை எடுக்க முயன்றார். ஆனால் சிவலிங்கத்தைச் சிறிது கூட நகர்த்த முடியவில்லை.

தான் கொண்டு வந்த சிவலிங்கம் இருக்க வேண்டிய இடத்தை இறைவனான சிவபெருமானே தேர்வு செய்து விட்டதை உணர்ந்த லட்சுமியம்மாள், அவ்விடத்திலேயேத் தன் விருப்பப்படி கோவிலைக் கட்டுவது என முடிவு செய்தார்.

பின்னர், அப்பகுதியை ஆட்சி செய்த இட்டி கோம்பி அச்சன் எனும் அரசரைச் சந்தித்து, தான் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, அங்கு கோவில் ஒன்றை கட்டுவிக்க வேண்டுமென்று வேண்டினார். அப்படியே, அக்கோவில் கட்டுமானப் பணிகளுக்காகத் தான் சேர்த்து வைத்திருந்த 1,320 பொற்காசுகளையும் அரசரிடம் வழங்கினார்.

அரசரும் லட்சுமியம்மாளின் வேண்டுகோளை ஏற்று, அவ்விடத்தில் சிவபெருமான் கோவிலைக் கட்டுவதற்கான நிலங்களைத் தானமாக வழங்கியதுடன், கோவில் மேற்பார்வைப் பணிகளுக்காகச் சோமசுந்தரக் குருக்கள் (இவரைச் சேகர வர்மா என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்) என்பவரையும் நியமித்தார்.

லட்சுமியம்மாள் காசியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்கம் என்பதால், இத்தல இறைவனுக்கும் காசி விசுவநாதர் என்றே பெயர் சூட்டப்பட்டது. பின்னர், அங்கு விசாலாட்சி அம்பாள் சிலையும் நிறுவப்பட்டது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

கோவில் அமைப்பு :

தரைமட்டத்திலிருந்து தாழ்வாக இருக்குமிடத்தில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். தெற்கு மற்றும் கிழக்கு திசைகளில் இருந்து 18 படிகள் கீழிறங்கிச் செல்லும்படி இருக்கிறது. இக்கோவில் பள்ளத்தில் இருப்பதால், மலையாளத்தில் ‘பள்ளம்’ என்று பொருள் தரும் ‘குண்டு’ எனும் சொல்லைப் பயன்படுத்தி, ‘குண்டுக்குள் கோவில்’ என்றும், ‘குண்டம்பலம்’ என்றும் அழைக்கின்றனர்.

இறைவன் காசி விசுவநாதர் கிழக்கு நோக்கிய நிலையிலும், அம்பாள் விசாலாட்சி தெற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். கோவில் வளாகத்தில், மகாகணபதி, தட்சிணாமூர்த்தி, கங்காதரன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சூரியனார் சன்னிதிகளும், நவக்கிரகங்கள் மனைவிகளுடன் இருக்கும் சன்னிதி, நாக தேவதைகள் உள்ளிட்ட ராகு-கேது சன்னிதி போன்றவைகளும் இருக்கின்றன.

இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு உரியதாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் ஆகம விதிகளைப் பின்பற்றியே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

காசியில் உள்ள விசுவநாதரை வணங்கினால் கிடைக்கிற பலன்களில் பாதி பலன்கள், கல்பாத்தியில் இருக்கும் விசுவநாதரை வணங்கினாலும் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு வந்து செல்லும் பக்தர்கள், நிலா ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஆலயத்தை ‘காசியில் பாதி கல்பாத்தி’ என்று சிறப்பித்துச் சொல்கின்றனர்.

இக்கோவிலில் இருக்கும் அம்பாள், தெற்கு நோக்கிய நிலையில் இருப்பதால், எமபயம் நீக்கும் அன்னையாக இருக்கிறார். மேலும் திருமணத்தடை நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும் அன்னைக்குப் புதிய ஆடை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.

இக்கோவிலில் நாள்தோறும் காலையில் நடைபெறும் ‘மிருத்யுஞ்சய ஹோமத்தில் கலந்து கொண்டு, இறைவனை வணங்கி வழிபடுபவர்களுக்கு, உடல் நலம், ஆயுட்காலம் அதிகரிப்பு, நல்வாழ்வு போன்றவை கிடைக்கும் என்கின்றனர்.

நாக மற்றும் ராகு-கேது தோஷங்கள் நீங்க, இங்கிருக்கும் ராகு - கேது சன்னிதியில் பால் மற்றும் மஞ்சள் பொடி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிலர் கோவில் வளாகத்தில் விற்கப்படும், வெள்ளியிலான சிறிய பாம்பு, வெள்ளியிலான முட்டைகள், புற்று போன்றவைகளை வாங்கி, ராகு- கேது சன்னிதியில் வைத்து வேண்டுவது வழக்கமாக இருக்கிறது.

ஆண்டுதோறும் மலையாள நாட்காட்டியின்படி துலாம் (ஐப்பசி) மாதம் வரும் கடைசி பத்து நாட்கள் தேர்த்திருவிழா (ரத உற்சவம்) சிறப்பாக நடத்தப்படுகிறது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மகாமக நாளில், தமிழகத்தைப் போன்றே சுவாமி புறப்பாடு, ஊர்வலம், தீர்த்தவாரி என்று மகாமகத் திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கல்பாத்தி. இங்கு செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

Tuesday 13 November 2018

சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

ஆணவம், அகங்காரம் கொண்டு, தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபதுமனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.

சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அதாவது, சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில்களில் இன்று நடக்கிறது.

சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே காணலாம்...!

முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபதுமனுக்கு எதிரான போருக்கு புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படைத் தளபதிகளாக விளங்கினர். சூரபதுமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அம்மலைக்கு அதிபதியான சூரபதுமனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.

முருக பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபதுமன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3-ம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான்.

அடுத்து சிங்கமுகா சூரன் சிங்கமென சீறிப் பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருகபெருமானின் வேல், சிங்கமுகாசூரனை சம்ஹாரம் செய்து அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபதுமன் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபதுமன் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபதுமன் மட்டுமே. பெரும் படையுடன் சூரபதுமன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி மாயத்தால் தப்பினான். சர்வசங்கார கால மூர்த்தியான உருத்திரமூர்த்தியின் வேற்படை சூரபதுமனை தேடி சென்று, செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இருகூறாக பிரித்தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது.

பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.

தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருக பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார்.

திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும் அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான்- பார்வதிதேவியை முருகன்-தெய்வானை மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருக பெருமான் நீலமயில் மீது ஏறி, குன்றிலே தேவசேனா தேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார்.

முருக பெருமானது வரலாறுகளையும், சூரம்சம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டி அன்று அவனது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவான்.

முருகனோடு தொடர்புடைய ‘6’

முருகனோடு தொடர்புடைய ‘6’

ஆறு எனும் எண்ணுக்கும், முருகனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 

முருகப்பெருமானின் திருமுகங்கள் ஆறு, அவரை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, ‘சரவணபவ’ எனும் மந்திரத்தின் எழுத்துக்கள் ஆறு, முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் படைவீடுகள் ஆறு, கந்தர் சஷ்டி விரதம் இருப்பது ஆறு நாட்கள், ஆறாம் நாளில்தான் சூரசம்ஹாரம் வரும். 

முருகனுக்கு உகந்த சஷ்டி விரதம் என்பது, மாதந்தோறும் வளர்பிறை அல்லது தேய்பிறையில் ஆறாம் நாள் வரும் சஷ்டி திதியாகும்.

Monday 12 November 2018

அர்த்தநாரீஸ்வரர் உணர்த்தும் உண்மை

அர்த்தநாரீஸ்வரர் உணர்த்தும் உண்மை

சிவனும் பார்வதியும் சரி பாதியாக கலந்த உருவமே ‘அர்த்தநாரீஸ்வரர்’. சிவபெருமானை மட்டுமே வழிபடும் பிருகு முனிவர், ஒரு முறை கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபட்டுச் சென்று விட்டார். 

இதனால் வருத்தம் அடைந்த பார்வதி, பூலோகம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ததன் பயனாக, சிவபெருமானின் உடலில் சரிபாதியாக இருக்கும் வல்லமையை அடைந்தார். அர்த்தநாரீஸ்வரர் மூலமாக இறைவன், இந்த உலகத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்பதை நிறுவுகிறார். 

மேலும் சிவனும், சக்தியும் ஒன்று, ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை என்பதும் இதன் மூலம் சொல்லப்படும் பொருள் ஆகும்.

Sunday 11 November 2018

முதல் வணக்கம் முருகனுக்கே

முதல் வணக்கம் முருகனுக்கே

பொதுவாக ஒரு ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் முழு முதல் கடவுளான விநாயகரை வழிபடுவோம். அதற்கேற்ப ஆலயங்களில் விநாயகர் சன்னதி முதலில் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் திருவண்ணாமலை தலத்தில் அப்படி அல்ல. முதல் சன்னதியாக தமிழ் கடவுள் முருகப்பெருமானே வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திருவண்ணாமலை ராஜகோபுரத்தில் விநாயகர் இடம் பெற்றிருந்தாலும் சன்னதி என்ற கணக்கில் வரும்போது திருவண்ணாமலை ஆலயத்தில் நம்மை வரவேற்பது முருகப்பெருமான்தான். எனவே திருவண்ணாமலையில் முதல் வணக்கம் முருகப்பெருமானுக்கே செய்யப்படுகிறது.

திருவண்ணாமலை தலத்தை பொறுத்தவரை அனைத்து கடவுள்களின் அருள்கடாட்சமும் நிரம்பி இருக்கும் தலம் ஆகும். இதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் எந்த சிவாலயத்துக்கும் இல்லாத சிறப்பு திருவண்ணாமலை ஆலயத்துக்கு தனித்துவமாக உள்ளது.அதாவது திருவண்ணாமலையில்தான் சிவபெருமான் தன்னை அக்னி வடிவமாக வெளிப்படுத்திக் கொண்டார். பிறகு அந்த அக்னி வடிவமே மலையாக மாறி சிவனாக வழிபடப்படுகிறது. அந்த சிவ மலையை உமையாள் பார்வதிதேவி தவம் இருந்து கிரிவலம் வந்து  ஈசனிடம் பாதி உடலை பெற்றாள்.

அதுபோல விநாயக பெருமான் இந்த தலத்தில் மன்னனுக்காக தோன்றிய அதிசயம் நடந்துள்ளது. ஈசனின் வாகனமான நந்தியும் ஒரு தடவை இந்த தலத்தில் உயிர் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இத்தகைய தலத்தில் முருகப்பெருமான் தோன்றாமல் இருப்பாரா? தோன்றி தன் பக்தர்களுக்காக அருள்பாலித்து இருக்கிறார்.

ஒருதடவை அல்ல... இரண்டு தடவை முருகப்பெருமான் திருவண்ணாமலை தலத்தில் தன்னை வெளிப்படுத்தி காட்டி உள்ளார். இந்த அற்புதங்களின் பின்னணியில் சில வரலாறுகள் உள்ளன. அந்த வரலாறுகள் அருணகிரிநாதருடன் தொடர்புடையவை. அருணகிரிநாதர் என்றதும் நமக்கு திருப்புகழ்தான் நினைக்கு வரும். அதிலும் “முத்தை தரு பத்தி திருநகை” என்ற பாடலும் சேர்ந்து நினைவுக்கு வரும். இளம்வயதில் பெண்கள் மீது மோகம் கொண்டு அலைந்த அருணகிரிநாதர் அவரது சகோதரியால் மனம் திருந்தினார். இவ்வளவு நாட்களும் வீணாக வாழ்ந்து விட்டோமே என்று அண்ணாமலையார் ஆலயத்துக்குள் சென்று அமர்ந்து யோசித்தார். தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்.

உயிரை மாய்த்துக் கொள்வதற்காக வல்லாள மகாராஜா கோபுரத்தில் ஏறி கீழே குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரை தாங்கி பிடித்துக் கொண்டார். அவரது உடல்நோயையும், மன நோயையும் குணப்படுத்திய முருகப்பெருமான், தன்னை புகழ்ந்து பாடும்படி அருணகிரிநாதருக்கு உத்தரவிட்டார்.

அருணகிரிநாதர் தனக்கு எப்படி பாட தெரியும் என்று கேட்டார். உடனே அருணகிரிநாதரின் நாக்கில் “முத்தை தரு” என்று எழுதிய முருகப்பெருமான் “இனி என்னை புகழ்ந்து பதிகங்கள் பாடு” என்று உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே அருணகிரிநாதர் மடைதிறந்த வெள்ளமென பதிகங்களை பாட தொடங்கினார். சுமார் 16 ஆயிரம் பாடல்களை அவர் பாடி குவித்து விட்டார். ஆனால் நமக்கு கிடைத்து இருக்கும் திருப்புகழ் பாடல்கள் 1,307 மட்டுமே. இந்த நிகழ்வு மூலம் திருப்புகழ் பிறப்பதற்கு அடித்தளம் அமைந்த ஆலயமாக திருவண்ணாமலை ஆலயம் கருதப்படுகிறது.

அருணாகிரிநாதர் தற்கொலை செய்வதற்காக ஏறி குதித்த வல்லாள மகாராஜா கோபுரம் பகுதியில் வலது பக்கத்தில் முருகப் பெருமானுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னதி கோபுரத்து இளையனார் சன்னதி என்று அழைக்கப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரி நாதரை ஆட்கொண்டதால் இந்த இடம் கோபுரத்து இளையனார் சன்னதி என்று பெயர் பெற்றது. 

இந்த சன்னதி போன்றே கம்பத்து இளையனார் சன்னதியும் தனித்துவம் கொண்டது. அதன் பின்னணியிலும் ஒரு வரலாறு இருக்கிறது. திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் என்ற தேவி உபாசகர் வசித்து வந்தார். அவருக்கு அருணகிரிநாதரை சுத்தமாக பிடிக்காது. அருணகிரிநாதரை ஒழித்து கட்ட வேண்டும் என்று அவர் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார். திருவண்ணாமலையை ஆண்டு வந்த பிரபு தேவமகாராஜாவின் அரண்மனையில் உயர் பதவி வகித்ததால் அவர் சொன்னதை எல்லாம் அரசர் கேட்டார். ஒரு தடவை அவர் அருணகிரிநாதரை போட்டிக்கு அழைத்தார்.

யார் தமது கடவுளை எல்லோரின் முன்னிலையில் நிறுத்துகின்றாரோ அவரே சிறந்தவர் எனும் போட்டியை நடத்த அவர் சவால் விடுத்தார். இந்த சவாலை அருணகிரிநாதரும் ஏற்றுக் கொண்டார். முதலில் சம்பந்தாண்டான் தான் வழிபடும் காளியை அழைத்தார். ஆனால் காளி வரவில்லை. இதையடுத்து அருணகிரிநாதர் முருகப்பெருமானை வேண்டினார். “மயிலும்பாடி நீயாடி வரவேணும்” என்ற திருப்புகழ் பாடலை மனம்உருக பாடினார். அருணாகிரிநாதரின் முழுமையான  அர்ப்பணிப்பு பக்தியால் அங்கிருந்த மண்டபத்து தூண் வெடித்தது. அந்த தூணில் இருந்து முருகப்பெருமான் மயிலோடு வந்து காட்சி அளித்தார். இதை கண்டு அனைவரும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்.

அருணகிரி நாதருக்காக முருகப்பெருமான் இரண்டாவது தடவையாக மீண்டும் தோன்றி காட்சி அளித்ததால் முருகன் பாதம் பட்ட இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த இடத்தில் முருகப்பெருமானுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. முருகன் தூணில் இருந்து தோன்றும் காட்சியும் அந்த மண்டபத்து தூணில் காட்சி அளிக்கிறது. அந்த மண்டபம் கொண்ட முருகன் சன்னதி கம்பத்து இளையனார் சன்னதி என்று அழைக்கப்படுகிறது.

கம்பத்தில் இருந்து முருகன் தோன்றியதால் கம்பத்து இளையனார் என்ற பெயர்  பெற்றுள்ளது. முருகப்பெருமானை ஏன் இளையனார் என்று குறிப்பிடுகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம். சிவபெருமான் - பார்வதி தம்பதியருக்கு முதல் குழந்தை விநாயகர். இரண்டாவது குழந்தை முருகப்பெருமான். முதல் மகனான விநாயகரை பெரியவர் என்றும், இளைய மகனான முருகப்பெருமானை இளையவர் என்றும் அழைத்தனர். அந்த இளையவர்தான் நாளடைவில் இளையனார் என்று மருவியது.

கோபுரத்து இளையனார், கம்பத்து இளையனார் போன்று முருகப்பெருமானின் மற்றொரு சன்னதியான  பிச்சை இளையனார் சன்னதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சன்னதி கிளி கோபுர வாசலின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. உலக உயிர்களை காப்பதற்காக கையில் கபாலம் ஏந்திய அண்ணாமலையாரின் தத்துவத்தை பிரதிபலிக்க இந்த சன்னதியில் முருகப்பெருமான் பிச்சை இளையனாராக வீற்றிருந்து சொல்கிறார்கள்.

கல்யாண சுந்தரர் சன்னதி கட்டப்பட்டபோது பிச்சை இளையனார்  சன்னதியும் கட்டப்பட்டது. விஜய நகர அரசனான 2-ம் தேவராயர் பிச்சை இளையனார் சன்னதியை கட்டியதாக குறிப்புகள் உள்ளன. இந்த சன்னதி அமைந்துள்ள கிளி கோபுரத்தில் இன்றும் அருணகிரிநாதர் முருகனின் அருளோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அதற்கு காரணம் இந்த கோபுரத்தில்தான் அருணகிரிநாதர் தனது உடலை பறிகொடுத்தார். அதன் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது.

ஒரு சமயம் அரசர் பிரபுதேவராயருக்கு கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அந்த கோளாறை சரிப்படுத்த வேண்டும் என்றால் சொர்க்கத்தில் இருக்கும் பாரிஜாத மலரை கொண்டு வந்தால்தான் முடியும் என்று சம்பந்தாண்டான் சதி திட்டத்துடன் கூறினான். சொர்க்கத்திற்கு அருணகிரிநாதரை அனுப்பி வைத்தால் அவர் பாரிஜாத மலரை கொண்டு வந்து விடுவார் என்றும் மன்னனிடம் தெரிவித்தான். மன்னனும் பாரிஜாத மலரை எடுத்து வரும்படி அருணகிரிநாதருக்கு உத்தரவிட்டார். அதை அருணகிரி நாதர் ஏற்றுக் கொண்டார். 

கிளி கோபுரத்துக்கு வந்த அவர் கூடு விட்டு கூடு பாயும் திறமையால் இறந்து கிடந்த ஒரு கிளியின் உடலுக்குள் தனது உயிரை புகுத்தினார். உயிரற்ற தனது உடலை கோபுரத்தின் ஒரு பகுதியில் கிடத்திவிட்டு பாரிஜாத மலரை எடுப்பதற்காக மேல் உலகிற்கு சென்று விட்டார். இதற்கிடையே அருணகிரி நாதரின் உடலை தேடிய சம்பந்தாண்டான் அது கோபுரத்தில் கிடப்பதைக் கண்டுபிடித்தான். அங்கேயே அவரது உடலை தீவைத்து எரித்து சாம்பலாக்கிவிட்டான்.  

பாரிஜாத மலருடன் மேல் உலகத்தில் இருந்து திரும்பி வந்த அருணகிரி நாதர் தனது உடல் எரித்து அழிக்கப்பட்டதை கண்டு வேதனை அடைந்தார். மீண்டும் வேறு ஒருவர் உடலுக்குள் செல்ல முடியாது என்பதால் கிளி உடலுடனே இருந்துவிட்டார். அவர் கிளி உடலுடன் அந்த கோபுரத்தில் தங்கியிருந்து முருகன் மீது பதிகங்களை பாடினார். இதனால் அந்த கோபுரம் கிளி கோபுரம் என்று அழைக்கப்பட்டது. 

அந்த கோபுரத்தில் கிளி உடலுடன் இருந்து அருணகிரி நாதர் பாடிய பாடல்களின் தொகுப்பு ‘‘கந்தர் அனுபூதி’’ என்று அழைக்கபடுகிறது. எனவே கந்தர் அனுபூதி பிறந்த தலம் என்ற சிறப்பும் திருவண்ணாமலை தலத்திற்கு உண்டு. நீண்ட நாட்கள் அந்த கோபுரத்தில் இருந்த அருணகிரிநாதர் பிறகு திருத்தணிக்கு சென்று முருகப்பெருமானின் கையில் தஞ்சம் அடைந்ததாக சொல்கிறார்கள். 

அருணாகிரி நாதரால் முருகப்பெருமானின் பாதம் இரண்டு தடவைபட்டதால் திருவண்ணாமலை தலத்தில் முருகப்பெருமானுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. குறிப்பாக அறுபடை வீடுகளில் நடக்கும் அனைத்து முருகன் விழாக்களும் குறைவின்றி திருவண்ணாமலையிலும் நடத்தப்படுகின்றன. தைப்பூச தினத்தன்று அறுபடை வீடுகளையும் மிஞ்சும் வகையில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் காவடி ஏந்தி திருவண்ணாமலைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கந்தசஷ்டி விழாவிற்கு இந்த கோவில்தான் மிகவும் புகழ்பெற்றது!

tiruchendur

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடாகும்.

இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.

150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீப ஆராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீப ஆராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.

இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். 

முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்து கோவில்களும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோயில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் கோயிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

Saturday 10 November 2018

சரவணபவ தத்துவம்

சரவணபவ தத்துவம்

சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் பணியாளர்களாக்கினர். 

பிரம்மா, விஷ்ணு முதல், யாவரும் மோன நிலையிலிருந்த சிவபெருமானை வேண்டினர், அவரும் இசைந்து பார்வதியை பங்குனி உத்திரத்தன்று மணம் புரிந்தார். சூரபத்மாதியரின் அட்டூழியத்தை அடக்க, சிவமறு அவதாரம் வேண்ட, சிவன் தமது ஐந்து முகங்களுடன் அதோ முக்தினின்றும் ஜோதியை எழுப்பி, வாயுவையும் அக்னியையும் அதை ஏந்தி கங்கையில் இடச் செய்தார். கங்கை, சரவணப் பொய்கையில் 6 தாமரைகளில் இட்டாள். அங்கு 6 ஜோதியும் 6 குழந்தைகளாக மாறின. அவர்கள் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டனர். அதனால் முருகன், காங்கேயன், சரவணபவன், கார்த்திகேயன், என்றும் துதிக்கப்படுகிறான்.

உமை, குழந்தைகளை அழைத்து அணைக்க ஆறு குழந்தைகள், ஆறுமுகம், பன்னிருகை, இருகால், ஓருடலாகக் கந்தனாக (ஸ்கந்தன் = ஒன்று சேர்ந்தவன்) மாறினான். கந்தன் உதித்ததினம் வைகாசி மாத – விசாக பௌர்ணமி. அதனால் அவன் பெயர் விசாகன். சிவஜோதியின் மறு உருவம். வேதசொரூபன் அதனால் சுப்ரமண்யன், என்றும் இளையவன் அதனால் குமாரன், மிக அழகானவன் ஆகவே முருகன் (முருக என்றால் அழகு).

மு  – முகுந்தன் என்கிற விஷ்ணு
ரு – ருத்ரன் என்கிற சிவன்
க – கமலத்தில் உதித்த பிரம்மன்.

ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன்.

கந்த சஷ்டி விரத மகிமை

கந்த சஷ்டி விரத மகிமை

கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.

முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.

நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது

நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது

விஷ்ணுவின் அவதாரங்களில் 4-வது அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த அவதாரத்தின்போது சிங்கத்தின் தலையுடனும், மனித உடலுடனும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்தார்.

மற்ற அவதாரங்கள் அனைத்தும் திட்டமிட்டு நடந்தவை. ஆனால் நரசிம்ம அவதாரம் அப்படி அல்ல. அது தன் பக்தனை காக்க ஒரே நொடியில் தோன்றிய அவதார மாகும். இதன் காரணமாக மற்ற அவதாரங் களுக்கும், நரசிம்ம அவதாரத்துக்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. நரசிம்மரிடம் சரண் அடைந்தால் பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாகும். எனவேதான் “நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை” என்பார்கள்.

நரசிம்ம அவதாரம் எப்படி தோன்றியது என்பதற்கான புராண வரலாறு வருமாறு:-

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலிய வனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந் தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. 

எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.

இந்த நிலையில் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் கயாதுக்கும் மகனாக பிரகலாதன் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். 

அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார்.

பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. 

ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்து செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்டான். ஏனெனில் அந்த தூண், இரணியனே பார்த்து, பார்த்து கட்டிய தூணாகும். பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான்.

இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்தார். இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்லை. 

பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அப்போது லட்சுமியும், நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார்.

நரசிம்மருக்கு பல்வேறு வடிவங்கள் புகழ்ந்து கூறப்படுகின்றன. அதில் மிகமிக முக்கியமானது லட்சுமி நரசிம்மர் வடிவமாகும். லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் தான் இந்த பிறவியானது அனைத்து வகையிலும் பூர்த்தியாகும்.

Friday 9 November 2018

வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்

வெங்கடாஜலபதி கடனை அடைக்க வழிகாட்டிய திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்

சிவபெருமானின் உத்தரவை மீறி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றாள் பார்வதிதேவி. இதனால் அவளை, பூலோகத்தில் சாதாரணப் பெண்ணாகப் பிறக்கும்படி சபித்தார் சிவன். பூலோகத்தில் பிறந்த பார்வதி தேவி, சிவனை நோக்கித் தவத்தில் ஆழ்ந்தார். இளகிய மனம்கொண்ட ஈசன், தேவியின் தவத்திற்கு இரங்கி அம்பாளை ஏற்றுக்கொண்டார்.

பூலோகத்தில் அம்பாள் தவம்புரிந்த இடம் திருப்பாச்சூர். இங்கே ஈசன் அழைத்த திருநாமத்தினாலயே ‘தங்காதலி’ என்னும் பெயருடன் அம்மன் அருளாட்சி செய்து வருகிறார். இந்த அன்னையை வழிபடும் தம்பதியரிடையே ஒற்றுமை கூடும், அன்னியோன்யம் அதிகரிக்கும்.

சென்னையை அடுத்து திருவள்ளூர் அருகே உள்ளது இந்தத் திருத்தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், தவம் ஆகிய ஐம்பெரும் சிறப்பம்சங்களோடு, மூவரால் பாடல் பெற்ற புராணப் பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கொண்டது இந்த ஆலயம். தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களுள் இது 16-வது தலம்.

புராண காலத்தின் போது, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். இதனால் வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டது. அத்தோடு ஒரு சபையை அமைத்த விநாயகர், ‘தம்மை வணங்காமல் சென்றது ஏன்?’ என்று சிவபெருமானிடம் விசாரணை செய்தார். அதனடிப்படையில் இவ்வாலயத்தில் 11 விநாயகர்கள் வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ இருக்கிறது. இந்த ஏகாதச விநாயகர் சபை வழிபாடு மிகுந்த பலனளிக்கக்கூடியது.

திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.

அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார். 

அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.

புராணப் பின்னணியைக் கொண்ட இந்த சேத்திரத்தில் ஆலயம் நிர்மாணித்தது கரிகாற் பெருவளத்தான். குறும்பன் என்ற சிற்றரசன், கரிகாற் பெருவளத்தானுக்குக் கப்பம் கட்டி ஆட்சிசெய்து வந்தான். திடீரென கப்பம் செலுத்த மறுத்தான். இதனால் சிற்றரசன் மீது போர் தொடுத்தான் கரிகாற் சோழன். குறும்பனும் தம் குலதெய்வமான காளி தேவியை வணங்கி போர் புரியத் தொடங்கினான். அவனுக்கு உதவியாக காளிதேவி விண்ணிலிருந்து அம்புகளை எய்து சோழர்படை வீரர்களை அழித்தாள். விண்ணிலிருந்து பாய்ந்து வந்த அம்புகளும், அவற்றை எய்யும் காளிதேவியும் சோழர்படை வீரர்கள் கண்களுக்குப் புலப்படவேயில்லை.

இதனால், அம்புகளை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து சோழர்படை வீரர்களும் போரில் கொல்லப்பட்டனர். சோழர் படைத்தளபதி மட்டும் உயிருடன் இருந்தார். அவரை வரவழைத்த குறும்பன், ‘உன் மன்னன் போருக்கு வந்தாலும் கொல்லப்படுவது உறுதி. இந்தத் தகவலை சொல்வதற்குத்தான் உன்னை உயிரோடு விட்டுள்ளேன். இதை கரிகாலனிடம் போய்ச் சொல்!’ என்று திருப்பி அனுப்பினான்.

நடந்ததை கரிகாலனிடம் கூறினார் தளபதி. தம் படை வீரர்கள் மாண்டதையறிந்து வேதனையுற்ற கரிகாலன், படை திரட்டிக் கொண்டு போருக்கு விரைந்தான். கல்மூங்கில் புதர்கள் நிறைந்த இப்பகுதிக்கு வந்தபோது, சிற்றரசனுக்கு தம்முடைய படையை தோற்கடிக்கும் பெரிய ஆற்றல் எப்படி வந்தது என்ற வியப்புடன், சிவபெருமானை நினைத்து வேண்டினான்.

அப்போது சிவபெருமான் அசரீரியாய் தன் பக்தனுக்கு ஆறுதல் கூறினார். ‘‘கவலைகொள்ள வேண்டாம் மன்னா! நான் உன் அருகிலேயே இருக்கிறேன். சிற்றரசனுக்கு அவன் குலதெய்வம் காளிதேவி உதவிபுரிகிறாள். உன்னை இங்கு வரவழைக்கவே இந்த நிகழ்வுகள் நடந்தேறின. குறும்பனுக்கு இந்த தகவல் தெரியாது. நான் சொன்ன பிறகு போரைத் தொடங்கு! நீ வெற்றி கொள்வாய்!” என்றார்.

பின்னர் ஆவேசமாகவுள்ள காளிதேவியை சாந்தப்படுத்த இரண்டு தங்கச் சங்கிலிகளுடன் நந்தியை அனுப்பினார் சிவ பெருமான். தங்கச் சங்கிலியைக் கண்டதும் சினம் தணிந்து சிரித்தாள் காளி. அவளை தங்கச் சங்கிலியால் கட்டி அழைத்து வந்து, ஓரிடத்தில் உட்கார வைத்தார் நந்தி.

இதைத் தொடர்ந்து சிவபெருமான் கரிகாலனிடம், ‘இப்போது நீ போரைத் தொடங்கு!” என்றார். மூங்கில் புதர்கள் மத்தியில் மறைந்திருந்தபடியே ஒற்றன் மூலம் போருக்கு தகவல் அனுப்பினான் கரிகாலன். குறும்பனும் போர்புரிய சம்மதித்தான். கடும் போரில் கரிகாலன் வெற்றிபெற்றான். போரில் தோற்ற குறும்பனின் சொத்துகள் அனைத்தையும் ஈசனுக்குரியதாக ஆக்கினான் கரிகாலன்.

தமக்கருகில் இருப்பதாய்ச்சொன்ன ஈசனை மூங்கில் காட்டுக்குள் தேடியலைந்தான். எங்கு தேடியும் ஈசன் தென்படவில்லை. அங்கிருந்த மூங்கில் புதருக்குள் வசித்த காட்டுவாசி களிடம் கேட்டான். அவர்கள், ‘சிவலிங்கம் இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு புதருக்குள் பசு மாடு செல்லும். அப்போது மூங்கில் மரங்கள் விலகி நிற்கும். மாடு திரும்பிச் சென்றதும் மூங்கில் மரங்கள் தானாக மூடிவிடும்’ என்றுகூறி அந்த புதரைக் காட்டினர்.

அங்கு சென்று மூங்கில் வெட்ட பயன்படுத்தப்படும் ‘வாசி’ என்ற அரிவாளால் வெட்டிக்கொண்டே இருந்தான் மன்னன். அப்போதும் லிங்கத்தைக் காணாது சலிப்படைந்த கரிகாலன் ஆவேசமாக ஒரு மூங்கில் மரத்தை வெட்டினான். திடீரென ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. திடுக்கிட்டு அருகில் சென்று பார்த்தான். சுயம்புலிங்கம் நெற்றியில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உள்ளம் உருக ஈசனிடம் மன்னிப்புக் கேட்டதும் ரத்தம் வடிவது நின்றது. இறைவனின் கருணைக்கு தாம் முற்றிலும் ஆட்பட்டுவிட்டோம் என்பதை அறிந்த கரிகாலன், அவ்விடத்திலேயே ஈசனுக்கு ஆலயம் நிர்மாணிக்க உறுதிபூண்டான்.

ஆலயப் பணி தொடங்கிவிட்டது. ஆனால் போரில் தோற்றவர்கள் கோவில் எழுப்ப இடையூறு கொடுக்கத் தொடங்கினர். இதனால் திருப்பணி மந்தமானது. கரிகாலன் அடிக்கடி வருகை புரிந்து தொல்லை கொடுத்தவர்களை விரட்டியடித்து, மேற்பார்வையிட்டு கோவில் நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்தினான். திருப்பணி நிறைவு பெற்று கம்பீரமாக ஆலயம் உருப்பெற்றது. புராணப்பெருமையும், சரித்திரப் பின்னணியும் கொண்ட ஒப்பற்ற தலம் இது. 1500 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் இறைவன் திருநாமம் வாசீஸ்வரர் ஆகும்.

இத்திருத்தலத்தில் அம்பாள் தினமும் ஈசனுக்கு அபிஷேகம்செய்து வழிபடுவதாக ஐதீகம். ஆகவே பிரதோஷத்தின் போதும், இதர உற்சவங்களின்போதும் முதலில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னரே ஈசனுக்கு அபிஷேகம் நடைபெறும். அம்பாள் சிவனுக்கு வலப்புறம் உள்ளதால், இத்திருக்கோவில் திருமணத்தடை நீக்கும் சேத்திரமாக விளங்குகிறது.

இதையடுத்து 11 விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கும் ‘விநாயகர் சபை’ உள்ளது. அருகில் பெருமாளின் வினைதீர்த்த ஈஸ்வரனும் எழுந்தருளியுள்ளார். மூன்று சன்னிதிகளையும் கடந்து சென்று சுயம்புவாய் வீற்றிருக்கும் திருப்பாசீஸ்வரரை வழிபடலாம். கஜ பிருஷ்ட விமானம் கொண்ட கருவறையில், சதுரவடிவ பீடத்திலுள்ள சுயம்புலிங்கத்தின் தலையில் வெட்டுப்பட்ட தடம் உள்ளதைக் காணலாம். சிவலிங்கத்தின் மேற்பகுதி சற்று இடப்புறத்தில் நகர்ந்த நிலையில் உள்ளது. காயம்பட்ட லிங்கம் என்பதால் தொட்டுப் பூஜை செய்வதில்லை. அலங்காரங்கள் பாவனையாகத்தான் நடக்கின்றன. இம்மூர்த்தியைத் ‘தீண்டாத் திருமேனி’ என்றும் அழைக்கிறார்கள்.

இவ்வாலயத்தில் ஐயாயிரம் வருட பழமையான மூங்கில் மரம், தல விருட்சமாக உள்ளது. அர்த்த மண்டபத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில், வடமேற்கில் சொர்ண காளி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அருகே வசந்த மண்டபம் செல்லும்வழியில் இரட்டைக் காளியும், மண்டபத்தினுள் மிகப்பெரிய குபேரலிங்கமும் உள்ளது.

தாழம்பூ வழிபாடு :

தம்முள் யார் பெரியவர் என பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட போட்டியில், நடுவராய் விஸ்வரூபமெடுத்த சிவபெருமானின் தலைமுடியைக் கண்டதாகப் (பிரம்மாவுக்கு ஆதரவாக) பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளிலிருந்து ஒதுக்கிவைத்தார் சிவபெருமான். பின்னர் சிவனிடம் மன்னிப்புக்கேட்டு தாழம்பூ அடைக்கலம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்குப் பயன்படுத்தும்படி வரம் கொடுத்தார். அதனடிப்படையில் இக்கோவிலில் சிவராத்திரி அன்று மட்டும் இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில்வைத்துப் பூஜை செய்கின்றனர். இந்த பூஜையை தரிசனம் செய்தால் ஆணவம், பொய் சொல்லும் குணம் நீங்கிவிடும்.

இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.

அமைவிடம்

திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாசூர் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.

ஆணவத்தை அழித்தால் ஆறுமுகனை காணலாம்

ஆணவத்தை அழித்தால் ஆறுமுகனை காணலாம்

கலியுக தெய்வமாக, அடியார்கள் நாடிய பொழுதெல்லாம் துணையாகத் திகழ்பவர் தமிழ்க் கடவுள் முருகன். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்று முருகப் பெருமானின் பெருமையையும் குன்றுதோறும் குமரன் கொண்டாடப்படுவதையும் தொல்காப்பியம் பேசும். தேவேந்திரன் தொடங்கி அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார், பாம்பன் சுவாமிகள் தொடர்ச்சியாக, கந்தக் கடவுளின் அருளால் உயர்வு பெற்றவர்கள் ஏராளம். 

கந்தனுக்கு ஆறுமுகங்கள்; இதனாலேயே, ஆறுமுகர், ஷண்முகர், ஷடானனன் போன்ற திருநாமங்கள். முருகனுக்கு ஏன் மூவிரு முகங்கள்? 

நம்முடைய உள்மனக் குரலுக்கு விடையளிப்பதுபோல், பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் இதே விஷயத்தைப் பேசிக் கொண்டார்கள். ‘இந்தப் பிள்ளைக்கு ஏன் ஆறுமுகங்கள்?’ என்று அம்மைவினவ, ஐயன் விடை கூறினார்: ‘எமக்கு ஐந்து முகங்கள்; உனக்கு ஒரு முகம் தேவி; ஐந்தும் ஒன்றும் இணைய, ஆறானது’ என்றாராம். சிவனாருக்கு ஐந்து முகங்கள். இவற்றோடு அம்பிகையின் அழகுமுகமும் சேர, பிள் ளைக்கு ஆறுமுகங்கள் கிட்டினவாம். 

இதற்குள் இன்னும் ஏதேனும் தாத்பரியம் உண்டா? உண்டே!

சிவனாரின் ஐந்து முகங்களும் ஒவ்வொரு திசையைப் பார்த்தவை; மொத்தத்தில், வெளிப்புறம் பார்த்தவை. ஆனால், அம்பிகையின் முகம் உள்முகம் பார்த்தது; அதாவது, அதோமுகம். நம் ஒவ்வொருவரின் ஜீவசக்தி ஆகிற அம்பிகை, நமக்குள்ளேயே நம்முடைய ஆற்றல் சக்தியாகச் சுருண்டு, தன்னுடைய முகத்தை உள்முகமாக வைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது சக்தி தத்துவம். அப்படியானால், ஐயனும் அம்மையும் இணைந்து உருவாக்கும் ஆறு முகங்களுக்கு என்ன பொருள்? 

இப்பொருளை விளங்கிக்கொள்ளும் முன்னர், நம்முடைய அன்றாட வாழ்க்கையின் செயல்கள் சிலவற்றைச் சிந்தித்துப்பார்க்கலாம். நிறைய பணம் செலவாகிறது; கையிருப்பு குறைகிறது. - என்ன செய்வோம்? - மாதம் தொடங்கி, பனத்தை எங்கே, எப்படி எதற்காகச் செலவழித்தோம் என்று கணக்கெழுதுவோம்; வேண்டாத செலவுகள் கண்ணுக்குப் புலப்படும்; ஆராய்ந்து பார்த்து இனி மேல் குறைத்துக் கொள்வோம். நேரம் வீணாகிறது; வேலைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை - என்ன செய்வோம்? - காலை முதல் இரவு வரை என்ன செய்தோம் எப்படிச் செய்தோம் என்று எழுதிப் பார்ப்போம்; தேவையில்லாத அரட்டை, கோபதாபம் போன்றவை தெரிய வரும்; 

அவற்றைக் குறைத்தால் நேரம் நிறையக்கிடைக்கும் என்பது புரியவரும். நம்முடைய குணத்தைப் பற்றி உறவினர்கள் குறை கூறுகிறார்கள் - என்ன செய்வோம்? - இரவு உட்கார்ந்து நம்மை நாமே எடை போட்டுப் பார்ப்போம்; தவறுகளைக் குறைத்துக் கொள்ள முயற்சிப்போம். அப்படியானால்... எந்தச் செயலையும் சூழலையும் அலசி ஆராய்ந்து நம்மை நாமே எடை போட்டுப் பார்த்தால், குறைகள் பலவற்றைக் களையலாம்; மேம்பாடு பெறலாம். அதாவது, உள்முகச் சிந்தனை வெற்றியைத் தரும். உள்முகச் சிந்தனையும் அதன் வெற்றியும் தாம் கந்தக்கடவுள். 

எந்த நிலையிலும் நம்மைச் சுற்றி என்ன உள்ளது, என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகப் புறம் நோக்கிய முகங்கள்; அதே சமயத்தில், நமக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டாராய்ந்து கொள்வதற்காக அகம் நோக்கிய முகம்; புறப்பார்வையால் தெரிவு பெற்று, அகப்பார்வையால் தெளிவு கொண்டு, இரண்டாலும் குறைகளைக் களைந்தால் நிறைவு கிட்டும். - அத்தகைய நிறைவே ஞான பண்டிதனான முருகன். 

முருகனுடைய அவதாரம் ஏன் நிகழ்ந்தது? 

சூரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காகவே கந்தக் கடவுள் அவதாரம் எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதிதானே என்கிறீர்களா? சூரபத்மன் என்னும் அரக்கனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் முறையிட்டார்கள். சிவஅம்சம் மட்டுமே தன்னை அழிக்கமுடியும் என்று வேறு சூரன் வரம் வாங்கியிருந்தான். சூரனை அழிப்பதற்காகவே, சிவனுடைய நெற்றிக்கண்ணிலிருந்து சிவ குமாரராகக் கந்தக் கடவுள் அவதாரம் எடுத்தார். சூரனோடு போர் செய்வதற்கு முன்னாள், சூரனின் சகோதரர்களோடும் உறவினர்களோடும் போரிட்டு அவர் களை அடக்கினார்; அழித்தார். பின்னர், இறுதியாகவே சூரனையும் அழித்தார். 

முருகனுடைய இந்த வரலாற்றில் நாம் அறியவேண்டிய அற்புதங்கள் யாவை? 

சூரனைப் பற்றி சிறிது காணலாம். அசுரர்களுக்குத் தலைவனாக இருந்தவன் அசுரேந்திரன். இவன் நல்லவன். நல்ல வழியில் வாழவேண்டும் என்று எண்ணியவன். அதே நேரத்தில் தன்னுடைய குலகுருவான சுக்ராசார்யரிடமும், பொதுவாகவே பெரியவர்களிடமும் மதிப்பு வைத்தவன். இவனுக்கு மகள் ஒருத்தி பிறந்தாள். குருவினிடத்தில் குழந்தை வளர்ந்தால் நன்மை கிட்டும் என்றெண்ணி, அந்த மகளை சுக்ரரிடம் ஒப்படைத்தான். 

அவரோ அசுரகுரு. அசுர குலம் தழைக்க வேண்டுமென எண்ணினாரேயன்றி, தர்மம் தழைக்கவேண்டும் என்று எண்ணினார் இல்லை. ஆகவே, அந்தப் பெண்ணுக்கு ‘மாயை’ என்று பெயர் சூட்டி (பெயரே சரியில்லையே!), மாயாஜாலங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். பருவப் பெண்ணாக அவள் மலர்ந்ததும், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த மாமுனிவர் காச்யபரை அடையாளம் காட்டி, அவரை மயக்கி, அவர் வழியாகக் குலத்தைப் பெருக்கி, அசுரகுலம் விரியும்படி செய்யச் சொன்னார். 

வளர்ப்புத் தந்தையின் வார்த்தை களைச் சிரமேற் கொண்ட மாயை, தவம் புரிந்த காச்யபரை மயக்கினாள். இர வின் முதல் ஜாமத்தில், இருவரும் அழகிய மானுடர்களாக இருந்த நிலையில் அவர்களுக்குப் பிறந்த மகனே அழகில் சிறந்தவனாகவும் ஒளி படைத்தவனாகவும் விளங்கிய சூரன். இரவின் இரண்டாம் ஜாமத்தில் அவல் பெண் சிங்கமாக மாற, அவரும் அதற்கேற்ப ஆண் சிங்கமாக மாற, அப்போது தோன்றிய மகனே சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசுரன். 

இரவின் மூன்றாம் ஜாமத்தில் அவள் பெண் யானையானாள்; அவர் ஆண் யானை ஆனார்; அவர்களுக்கு அப்போது பிறந்தவன் யானைத் தலை கொண்ட தாரகாசுரன். இரவின் நான்காம் ஜாமத்தில், அவள் பெண் ஆடாக, அவர் ஆண் ஆடாக, அப்போது ஒரு மகள் பிறந்தாள்; அவளே ஆட்டு முகம் கொண்ட அஜமுகி (அஜம்-ஆடு). 

இந்தக் கதையைக் கேட்கும்போது மனத்துக்குள் ஏதோ குடைகிறதல்லவா? ஆமாம், சூரனும் அவனுடைய சொந்தக் காரர்களும் வேறு யாரோ அல்ல. நமக்குள் இருக்கும் பலவிதமான வக்கிரங் களும் குற்றங்களும்தாம்! எப்பேர்ப்பட்டவர் காச்யபர் - அவரே மாயைக்கு மயங்கினார். முதலில் மறுதலித்தவர் பின்னர் மயங்கினார். அறிவு சரியாக வேலை செய்யும்போது மாயைகளையும் மாயை போன்ற வசதி-ஆடம்பரங்களையும் மறுதலிக்கிற நாம், பின்னர், பேராசை,-மயக்கம்-,ஆசை,-சினம்-, இறுமாப்பு போன்ற குணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மாயாஜாலத்தில் வீழ்ந்து விடுகிறோம். 

அத்தகைய தருணங்களில் நமக்குள் துளிர்விட்டு ஜனிப்பவர்களே சூரனும் அவனு டைய சொந்தக் காரர்களும். காச்யபர்தான் தேவர்களுக்கும் தந்தை; சூரன் போன்ற அசுரர்களுக்கும் தந்தை. அசுரத்தனம் தலை தூக்காமல் நல்ல குணங்களும் தவமும் (தவம் என்பது சுயக்கட்டுப்பாடு, ஆடம் பரமின்மை) தலை தூக்கும் என்றால் நாமும் தேவர்கள் ஆவோம்; அசுரத்தனம் ஆட்டம் போட்டால் அசுரர்கள் ஆவோம். 

சூரனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவன் இருந்தான்; அவன் பெயர் கிரவுஞ்சன். அவன் மலைபோல் வடிவம் எடுத்துக் கொள்வான். அந்த வழியாக வரக்கூடியவர் களைத் தன் னுடைய பள பளப்பால் மயக்குவான். ஆங்காங்கே தென்படும் பளபளப்பான குகைகளுக்குள் அவர்கள் புகு வார்கள். அவ்வாறு புகுந்தவுடன், குகையின் திசையை மாற்றி அவர்களை உள்ளுக்குள்ளேயே அழித்துவிடுவான். 

அவன்போலத்தான் நம்மிடம் இருக்கும் ஆடம்பரமும் ஆட்டம் பாட்டமும் - ஏதோ மலைபோல் பெரியவர்கள் என்றெண்ணிக் கொண்டு, நம்மை நாமே உயர்த்திக் கொண்டு, வெற்றுப் பளபளப்பிலும் வேண்டாத மினுமினுப்பிலும் மயங்கிப்போகிற தன்மை. நம்முடைய தூய ஆன்மாவை மயக்கி ஆங்காங்கே இழுத்தடித்துக் கடைசியில் விழுங்கியே விடுகிற கிரவுஞ்சத்தனம். அஜமுகி ஆட்டுமுகம் கொண்டவள். ஆடு சாது போல் தோற்றம் தரும். 

ஆனால், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும். அறியாமை என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல், ஏதோ தனக்குத் தான் எல்லாம் தெரிந்ததுபோல் குதிக் கும்; முட்டும். அஜமுகி துர்வாசரை நாடி அவரை அராஜகமாக வசப்படுத்தியதால் தோன்றியவர்கள் வாதாபி, இல் வலன் என்னும் இரு மகன்கள். மூர்க்கத் தனமான அறியாமை துர்வாசச்சினத் தோடு சேர்ந்தால் பிறரைத் துன்பப்படுத் தும் குணங்கள் வந்துவிடும். 

சூரனும் அவனுடைய சகோதரர் களுமாகச் சேர்த்து மொத்தம் மூவர். தாரகன் இளையவன்; யானைத்தலைக்காரன். யானை புத்திசாலி விலங்கு. ஆனால், தான் புத்திசாலி என்னும் நினைப்பிலேயே மதம் கொள்ளும். மனித புத்தியும் அப்படித்தான். தனக்கு எல்லாம் தெரியும் என்னும் எண்ணத்திலேயே மதம் பிடித்து அலையும். இளையவனுக்கும் மூத்தவனான சூரனுக்கும் நடுவில் சிங்கமுகன். சிங்கம் நேர்மையான விலங்கு. வீரமானது. ஆனால், காட்டுக்குள் சிக்கியதாலேயே அதன் வீரமும் நேர்மையும் வீணாகிப்போகின்றன. மனி தனுக்குள்ளும் அவ்வப்போது நேர்மையும் நியாயமும் வீரக் குரலும் தலை தூக்கும். ஆனாலும், பல நேரங்களில் அவற் றைப் பயன்படுத்தாமல், அதர்மக் காட்டுக்குள் சிக்கியே அவை அமுங்கிப்போகும். 

தாரகன், சிங்கமுகன், சூரன் ஆகிய மூவரும் ஆன்மாவைப் பற்றி நிற்கும் மூன்று மலங்கள் (பாவ அழுக்குகள்) என்று கொள்ளலாம். ஜீவன் என்னும் ஆன்மா, கடவுள் என்னும் பரமனை விட்டுப் பிரிந்திருக்கிறது. இது மீண்டும் அங்குதான் சேரவேண்டும். ஆனால், இதைச் சேரவிடாமல் செய்பவை இந்த மூன்று மலங்களே ஆகும். முதல் மலம் - ஆணவ மலம். இந்த ஜீவன், தான் பரமனுடைய ஒரு துளி என்பதை உண ராமல், ஏதோ தான் ஒரு தனிப்பிறவி என்றும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் எண்னிக்கொண்டு, ‘நான் நான்’ என்று பீற்றிக்கொள்ளும் தன்மையே ஆணவம். இதையே அஹங்காரம் (அஹம்=நான்;அஹங்காரம்=நான் என்னும் நினைப்பு) என்கிறோம். 

இரண்டாவது மலம் - கன்ம மலம். ஜீவன் பரமனிடமிருந்து பிரிந்தபோதே, ஜீவனைச் சுற்றிக்கொண்ட முதல் உறை ஆணவம் என்று வைத்துக் கொண்டால், அடுத்த உறை கன்மம் எனலாம். கன்மம் என்பது என்ன? கர்மவினை அல்லது முற்பிறவிகளில் செய்துவிட்ட வினைகளின் பயன். ஒரு ஜீவன், மனித உடலுக்குள்ளோ விலங்கு உடலுக்குள்ளோ அல்லது வேறேதேனும் வடிவத்திற்குள்ளோ நுழைவதற்கு எது காரணம்? அந்த ஜீவன் செய்திருக்கும் கர்மவினைகளே காரணம் இல்லையா? ஆகவே, நம்முடைய பிறப்பை நிர்ணயிக்கும் உறையாகக் கன்ம மலம் சூழ்கிறது. 

இதற்கும் அடுத்ததாகச் சூழ்வது மூன்றாவது மலமான மாயாமலம். இது என்ன? எதைக் குறிக்கிறது? ஜீவன், கர்ம வினைகளின் பயனாக, ஓரளவுக்கு நல்ல கர்மங்கள் செய்திருந்ததால், மனித உடலுக்குள் புகுந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். அழகிய மனிதப் பிறவி எடுக்கிறது. ஆனால்... தான் பிறந்த இடத்தை வைத்து எவ் வளவு மதம் கொள்கிறது? என் வீடு, என் அதிகாரம், என் செல்வம், என் பிள்ளைகள், என் பலம், என் சுற்றம் என்று தன்னுடைய உலக இருப்பைக் கொண்டு எத்தனை மதம் - இதெல்லாம் மாயைதானே! வீடும் வாசலும் வசதியும் வாய்ப்பும் போதையேற்றும் மாயைகளில்லையா? 

மாயாமலம், கன்ம மலம், ஆணவ மலம் ஆகிய மூன்றும் அழிந்தால், ஜீவன் நிரந்தரமாகப் பரமனிடம் ஐக்கியப்பட்டுவிடும். இதுதான் சூரன் கதை. சகோதரரும் உறவினரும் அழிந்த பின்னரும், தன்னுடைய வர பலம் முடிந்துவிட்டது என்று தெரிந்தும், விடுபட்ட ஓரிரு சொந்தக்காரர்கள் ஆலோசனை சொல்லியும், எதற்கும் அடங்காமல், தன்னுடைய ஆணவத்தில் ஆட்டம் போட்டான். சிவகுமாரனை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணி, மாறுவேடங்களில் சண்டையிட்டான். எந்த வேடத்திற்கும் கலங்காமல் கந்தக் கடவுள் போர் செய்ய. . . . கடைசியில், வடிவத்தை மாற்றிக்கொண்டு மாமரமாக மாறினான். மரமாக நிற்கும்போதே சூரனுடைய ஆர்ப்பாட்டமும் தன்னால் முடியும் என்னும் அசைவுகளும் அடங்கிவிட்டன. 

மாமரத்தைத் தம்முடைய சக்தி வேலாயுதத்தால் பிளந்தார் முருகப்பெருமான். மரம் பிளவுபட்டது; ஒரு பாதி சேவலானது; மறுபாதி மயிலானது. சேவலை எடுத்துத் தம்முடைய கொடியில் சூட்டிய முருகப்பெருமான், சேவல் கொடியோன் ஆனார்; மயிலை எடுத்துத் தம்முடைய வாகனமாக்கி, மயில் வாகனனும் ஆனார். 

இறுதிவரை ஒட்டிக்கொண்டிருந்த ஆனவ மலம், அசைவு அடங்கியபோது அழிந்தது. ஆணவமும் அற்றுப்போன அந்த ஜீவன், சேவலும் மயிலுமாகிப் பணிந்தது. இரண்டையும் தம்முடன் இணைத்துக் கொண்டார் பரம்பொருள். 

நிறைவாக ஒன்றை நினைத்துப் பார்க்கலாமா? சூரன் வதம் என்று யாரும் சொல்வதில்லை. ராவண வதம் என்றும் வாலி வதம் என்றும் இரணியன் வதம் என்று சொல்வதுபோல் சொல்வதில்லை. சூர சம்ஹாரம் தான்! ஹாரம் என்பது மாலை; சம்+ஹாரம் என்றால் நல்ல மாலை. அழுக்குகள் அழிந்த உயிரை, கந்தக் கடவுள் தமக்கான மாலையாகச் சேர்த்துக் கொள்கிறார். தமக்கான ஆபரணம் ஆக்கிக் கொள்கிறார்.