Friday 28 December 2018

வழிபட்டால்.... வாழ வைக்கும்.... வக்கிர காளியம்மன்

வழிபட்டால்.... வாழ வைக்கும்.... வக்கிர காளியம்மன்

“சந்திர சேகரனே அருளாயென்று தண்விசும்பில்
இந்திரனும்முதலா இமையத்தவள் தொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஓரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத்தான் இடம் வக்கரையே”

-திருஞானசம்பந்தர்

தமிழ்நாட்டில் எத்தனையோ, பழமையான காளி கோவில்கள் உள்ளன. அவற்றுள் திருவக்கரை வக்கிரகாளி அம்மன் ஆலயம் மிக, மிக வித்தியாசமானது. தனிச் சிறப்புகள் அதிகம் கொண்டது.

இந்த ஆலயத்துக்குள் யார் ஒருவர் காலடி எடுத்து வைக்கிறாரோ, அவரது ஜாதகத்தில் உள்ள அனைத்து வக்கிரத் தோஷங்களும் அடுத்த நிமிடமே தவிடு பொடியாகி விடும் என்பது ஜதீகம். சிவாலயமாக இருந்த போதிலும் காளியின் சிறப்பு காரணமாகவும் இந்த தலம் சக்தி தலங்களில் ஒன்றாக புகழ் பெற்று திகழ்கிறது.

பழமையும், பெருமையும் வாய்ந்த திருவக்கரை என்னும் இத்திருத்தலம் தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30-வது தலமாகும். 7-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோவில் சமயக்குரவர் நால்வருள் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்புடையது. 

ராஜகோபுரத்தின் வழியாக நுழைந்தவுடன் வடக்கு நோக்கிய வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. வழிபட்டால் நம்மை வாழ வைக்கும் தாய் இவள். இதற்கு அருகே மேற்கு நோக்கி வக்கிராசுரன் வழிபட்ட வக்ரலிங்கம் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் சன்னதி அரிதாகவே காணப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 

காளி சன்னதியிலிருந்து உள்ளே மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. நேரே பெரிய வடிவில் திருநந்தி அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜகோபுரம், திருநந்தி, கொடிமரம், மூலவர் சன்னதி முதலியன நேர்கோட்டில் அமையாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகி அமைந்திருக்கும் அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

திருநந்தியை கடந்து கிளிகோபுரம் வழியாக மூலவர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். மூலவர் சன்னதிக்கு வடப்புறம் கிளிகோபுரம் அருகே அம்பாள் வடிவுடையம்மன் தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றாள். தென் திசையில் குணடலினி மாமுனிவர் ஜீவசமாதி அடைந்த சன்னதி உள்ளது. 
கருவறைக்குப் பின்புறம் வக்கிராசுரனை வதம் செய்த வரதராஜபெருமாள் தாயார் இன்றி தனியாக பிரயோகச் சக்கரத்துடன் வீற்றிருக்கின்றார். 

இக்கோவிலில் நடராஜ பெருமாள் கால்மாற்றி வக்ரதாண்டவம் ஆடிய திருக்கோலத்தைக் காணலாம். இங்கு நவகிரக சன்னதியில் தெற்கு திரும்பிய காக வாகனத்தில் நின்ற வக்ரசனியைக் காணலாம். இத்திருக்கோவில் அமைப்பு, உறையும் இறைவன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் வக்கிர நிலையில் அமைந்து அருள்புரிகின்றனர்.

Friday 21 December 2018

பரசுராமரிடம் போர் தந்திரங்களைக் கற்ற துரோணர்

பரசுராமரிடம் போர் தந்திரங்களைக் கற்ற துரோணர்

தவ வலிமை மிகுந்த பரத்வாஜர்- கிருதசி தம்பதியரின் மகன் துரோணர். பரம ஏழையாக இருந்த துரோணரால் தன் மகன் அசுவத்தாமனுக்கு பசும்பால் கூட கொடுக்க முடியவில்லை. தன்னோடு குருகுலத்தில் பயின்ற சத்ரியனான துருபதனிடம் சென்று, நட்பின் அடிப்படையில் பசு ஒன்றை தரும்படி துரோணர் கேட்டார். ஆனால் துருபதன், அவரை அவமதித்து அனுப்பினான். 

இதையடுத்து துரோணர், பரசுராமரிடம் சென்று போர் தந்திரங்களைக் கற்றார். தன்னுடைய போர் முறையை சத்ரியர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று பரசுராமர் பெற்ற வாக்குறுதியை மறந்து, அஸ்தினாபுரத்தில் பாண்டவர்களும், கவுரவர்களுக்கும் குருவாக இருந்து போர் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார் துரோணர். மகாபாரத போரில் கவுரவர்களின் பக்கம் நின்று பாண்டவர்களின் படையை எதிர்த்தார்.

இவர் பாண்டவர்கள், கவுரவர்களின் குரு. கண்ணுக்குப் புலப்படாத போர் வீரர். குருஷேத்ர யுத்தத்தில் கவுரவர்களுக்காக போரிட்ட இவர் பாண்டவர் படையில் ஆயிரம் வீரர்களை கொன்று குவித்தார். போரில் தன் மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாக கிடைத்த தகவலால் மனம் நொறுங்கிய துரோணர் ஆயுதங்களை வீசி எறிந்தார். அப்போது திரவுபதியின் சகோதரர் திருஷ்டத்துயும்னன், துரோணரை கொன்றான்.

Tuesday 18 December 2018

ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல். 

ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார். அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார். அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், “நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்“ என்றனர். அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும். அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார். “என்னோடிருப்பீர்களாக” என்று பக்தர் களுக்கு அருளை அளிக்கிறார்.

ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி. ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம். 
ஏகாதசி- என்றால் பதினொன்று நாள் என்று பொருள். ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் -5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்று படுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி. இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடை பெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும். மார்கழியில் வரும் வளர் பிறை ஏகாதசி தான் சிறப்பானது. இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.

பரமபதம்

வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.

வைகுண்ட ஏகாதசி அன்று படிக்க வேண்டிய ஸ்லோகம்

வைகுண்ட ஏகாதசியான இன்று படிக்க வேண்டிய ஸ்லோகம்

திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.

ஓம் வாஜுஸூதேவம்
ஹ்ருஷீகேஸம் வாமனம்
ஜலஸாயினம் ஜனார்தனம் 
ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் 
கருடத்வஜம்
வராஹம் புண்டரீகாக்ஷம் 
ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
அவ்யக்தம் ஸாஸ்வதம்
விஷ்ணும் அனந்த 
மஜமவ்யயம்
நாராயணம் கதாத்யக்ஷம்
கோவிந்தம் கீர்திபாஜனம்
கோவர்தனோத்தரம் தேவம்
பூதரம் புவனேஸ்வரம்
வேத்தாரம் யக்ஞபுருஷம்
யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
சக்ரபாணிம் கதாபாணிம்
ஸங்கபாணிம் நரோத்தமம்
வைகுண்டம்
துஷ்டதமனம் பூகர்பம்
பீதவாஸஸம் த்ரிவிக்ரமம்
த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம்
நந்திகேஸ்வரம்
ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம்
ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம்
ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம்
மங்கலாயுதம்
தாமோதரம்
தமோபேதம் கேஸவம்
கேஸிஸ¨தனம் வரேண்யம்
வரதம் விஷ்ணுமானந்தம்
வஸூதேவஜம்
ஹிரண்யரேதஸம்
தீப்தம் புராணம்
புருஷோத்தமம் ஸகலம்
நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம்
குணஸாஸ்வதம்
ஹிரண்யதனுஸங்காஸம்
ஸூர்யாயுத
ஸமப்ரபம்மேகஸ்யாமம்
சதுர்பாஹம் குஸலம்
கமலேக்ஷணம்
ஜ்யோதீ ரூமரூபம் சஸ்வரூபம்
ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம்
ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம்
ஸர்வதோமுகம்
ஜ்ஞானம் கூடஸ்தமசலம்
ஜ்ஞானதம் பரமம்
ப்ரபும்யோகீஸம் யோக
நிஷ்ணாதம் யோகினம்
யோகரூபிணம்
ஈஸ்வரம் ஸர்வபூதானாம்
வந்தே பூதமயம் ப்ரபும்இதி
நாமஸதம் திவ்யம்
வைஷ்ணவம் கலுபாபஹம்
வ்யாஸேன கதிதம் பூர்வம்
ஸர்வபாப ப்ரணாஸனம்
ய: படேத் ப்ராதருத்தாய ஸ
பவேத் வைஷ்ணவோ நர:
ஸர்வ பாப விஸூத்தாத்மா:
விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
சாந்த்ராயண ஸஹஸ்ராணி
கன்யாதான ஸதானி ச
கவாம் லக்ஷஸஹஸ்ராணி
முக்திபாகீ பவேந்நர:
அஸ்வமேதாயுதம் புண்யம்
பலம் ப்ராப்னோதி மானவ: 
விஷ்ணு ஸதநாம
ஸ்தோத்திரம்.

Monday 17 December 2018

முத்தங்கி சேவையை விசேஷமாக சொல்வது ஏன்?

முத்தங்கி சேவையை விசேஷமாக சொல்வது ஏன்?

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பக்தர்களின் உற்சாக முழக்கங்கள், வாத்திய இசை எல்லாமாகக் கலந்து தெய்வீக லயத்தை எழுப்பும். ரத்தின அங்கியில் தன் பேரெழில் துலங்குமாறு புறப்பட்டு வருவார் பெருமாள்.

மார்கழி மாத ஏகாதசி ஆயிற்றே! எம்பெருமான் திருமேனி மீது பனி விழுமே! அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருகிறார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலித்த அரங்கன், சேனை முதலியார் சன்னதிக்கு வந்து நிற்கிறார். அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படுகிறது.

இதற்கு என்ன பொருள் தெரியுமா?

அரங்கன் மீண்டும் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளும் வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறான். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகிறது.

நாழி கேட்டால் வாசல், கொடி மரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்கிறார். அங்கே யஜூர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்று மறையாகிறது.

அதைத் தொடர்ந்து மற்ற வேதங் களையும் சொல்கிறார்கள். வேதங்களை சுவாசமாகக் கொண்ட பகவான், பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருளிவிட்டார். இதோ, ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கிறது. பரமபத வாசலின் மணிகள் ஒலிக்கின் றன. கதவுகள் திறந்து கொள்கின்றன.ரங்கா ரங்கா என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கிறது. பக்தவத்சலனான பரமன், தன் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிக்கிறான்.

அதிகாலை வேளையில் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிதல் வேண்டும் என்ற கருணையின் வடிவாக வீற்றிருக்கிறான் அரங்கநாதன். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் பெறுகிறார்கள்.

அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்கிறான் பெருமான். மீண்டும் அரையர் சேவை நடைபெறும் அன்று நள்ளிரவு வரை ரங்கநாதர் இங்கே வீற்றிருப்பார். எப்போது யோக நித்திரையிலேயே காட்சி தருபவர், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று மட்டும் ஓய்வில்லாமல் வீற்றிருந்து தரிசனம் அருள்வார். அதன் பிறகு மூலஸ்தானத்தை சென்று சேர்வார்.

வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். இந்த ஏகாதசி நாளிலும், அதையடுத்தும் மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்!

வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு நிஜம் என்பது புரியும்.

கரூர் தான்தோன்றிமலை பாதாள லட்சுமி நரசிம்மர்

கரூர் தான்தோன்றிமலை பாதாள லட்சுமி நரசிம்மர்

கரூர் தான்தோன்றிமலை வடக்கு தெருவில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. சின்ன திருப்பதி என அழைக்கப்படும் தான்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி திருக்கோவிலின் மிக அருகாமையில் பாதாள லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. 

இந்த கோவிலின் முன்பு ஜல நரசிம்மர் ஆலயமும் இருக்கிறது. வெங்கடரமண சுவாமி கோவில் உருவான அதே கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் ஜல நரசிம்மர் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. 

லட்சுமி நரசிம்மர் பாறையில் சுயம்புவாக காட்சி அளிக்கிறார். வாரத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணிக்குள் 5 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்த நேரம் குரு மற்றும் ராகுவுக்கு உகந்த நேரமாக இருப்பதால் சிறப்பாக இருக்கிறது. குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், வீடு, வாசல் போன்ற அனைத்து தேவைகளையும் லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி தருகிறார். 

கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஒருவர் ரூ.17 லட்சம் பணத்தை மற்றொருவர் ஏமாற்றி விட்டதாக கூறி நெய் விளக்கேற்றி மனமுருகி வேண்டினார். அடுத்த சில நாட்களில் ஏமாற்றியவர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார். இவ்வாறு எத்தனையோ அற்புதங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

மேலும் நின்ற நிலையில் இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதியையும், உட்கார்ந்த நிலையில் இருக்கும் நாமக்கல் நரசிம்மரையும், ஸ்ரீரங்கத்தில் படுத்த நிலையில் இருக்கும் பெருமாளையும் ஒரே நாளில் தரிசித்தால் சிறப்பு என்று சொல்வார்கள். இது சாத்தியமில்லை. ஆனால் இங்கு சின்னதிருப்பதி என அழைக்கப்படும் தான் தோன்றி வெங்கடரமண சுவாமி கோவிலில் பெருமாளை நின்ற நிலையிலும், அருகில் உள்ள பாதாள லட்சுமி நரசிம்மரை உட்கார்ந்த நிலையிலும், ஜல நாரசிம்மரை படுத்த நிலையிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் வழிபடும் பாக்கியம் கிடைக்கிறது.

மகத்துவம் நிறைந்த மார்கழி

மகத்துவம் நிறைந்த மார்கழி

‘மாதங்களில் நான் மார்கழி” என்று கூறினார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. கடவுளே தம்முடையதாகப் பெருமிதப்படுகிற மாதம் இந்த மாதம்.

மிருகசீர்‌ஷ நட்சத்திரம் சந்திரனுடன் சேர்வதால் மார்கசீர்‌ஷம் என்றும் (மார்கசீர்‌ஷம் என்பதே மிருகசீர்‌ஷம் என்றழைக்கப்படுகிறது; இதுவே மார்கழி என்றும் சுருங்கிவிட்டது), சூரியன் தனுசு ராசியில் இணைவதால் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிற இம்மாதத்தில்தான் சிவபெருமானுக்கு உரித்தான ஆருத்ரா தரிசனப் பண்டிகையும் (திருவாதிரைத் திருநாள்) திருமாலுக்கு உரித்தான வைகுண்ட ஏகாதசியும் வருகின்றன. தவிரவும், குருசேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணர் வைகுண்ட ஏகாதசியன்றுதான் கீதோபதேசம் செய்தார். ஆகவே, இதே நாள், கீதா ஜயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.

மும்மூர்த்திகளின் ஒட்டுமொத்தமாகக் கருதப்படுகிற தத்தாத்ரேயர் அவதாரம் செய்த தத்தாத்ரேய ஜயந்தியும், பார்வதி தேவி அன்னபூரணியாகத் திருவதாரம் செய்த அன்னபூரணி ஜயந்தியும் இம்மாதத்திலேயே வருகின்றன. இந்த மாதத்தில்தான், ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடந்ததாக வடநாட்டவர்கள் நம்புகிறார்கள். துளசிதாசர் தம்முடைய ராம சரித மானசத்திலும் இப்படியே பாடுகிறார். ஆகவே, விவாக பஞ்சமியும் மார்கழி மாதத்திலேயே கொண்டாடப்படுகிறது.

இது ‘பீத மாதம்’! ‘பீத’ என்னும் வடமொழிச் சொல்லுக்கு ‘மஞ்சள்’ என்று பொருள். பீதாம்பரம் (பீத + அம்பரம்) என்றால் மஞ்சள் வண்ண ஆடை என்றும் பொருள். மார்கழியில், அதுவரைக்கும் இருந்த இருளும் மழையும் விட்டுப்போய், குளிர் வந்துவிடும். இருந்தாலும், அடுத்து வரஇருக்கிற உத்தராயணத்தின் காரணமாக, செடிகொடிகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். குறிப்பாக, மஞ்சள் வண்ணப் பூக்களைத் தரும் தாவரங்கள் அதிகமாகப் பூக்கும். இதனால், சுற்றிலும் பார்க்கும்போது, மஞ்சள் வண்ணம் பிரதானமாகக் கண்ணில் படும். இதை வைத்துக் கொண்டு நம்முடைய முன்னோர்கள், இந்த மாதத்தைப் ‘பீத மாதம்’ என்று விவரித்தார்கள். இதுவே காலப்போக்கில் மருவி, ‘பீடை மாதம்’ என்றாகிவிட்டது.

அது சரி, அப்படியென்றால், கல்யாணம் போன்றவை மார்கழி மாதத்தில் வேண்டாமென்று ஏன் சொன்னார்கள்? அதற்கும் முக்கியமான காரணங்கள் உள்ளன. மழை, இருள் போன்ற அகன்று, அடுத்து வரஇருக்கும் தை மாதத்தில் அறுவடைப் பணிகள் தொடங்கவேண்டும்.

எந்தப் பணியாக இருந்தாலும் அதைத் தொடங்குவதற்கு முன்னர் கடவுளை வணங்குவது நம்முடைய மரபு. அதுவும் வயிற்றுக்குச் சோறிடும் அறுவடைப் பணிகளுக்கு முன்னதாக தெய்வத்தைத் தொழாதிருக்கலாமா? அது மட்டுமில்லை, அறுவடை முடிந்தால்தான் கையில் பணம் கிடைக்கும். அப்போதுதான் திருமணம், கிரஹப்பிரவேசம் போன்றவற்றை நடத்தமுடியும். இன்னொரு சூட்சுமமும் உண்டு. அந்தக் காலத்தில் கிராமத்து வாழ்க்கை. ஒரு வீட்டில் கல்யாணம் என்றால், மொத்த கிராமமும் அதில் பங்கெடுக்கும்.

கிராமம் முழுக்கத் திருமண வீட்டில் குவிந்துவிட்டால், ஊர்ப் பொதுவையும் கோயில் வேலைகளையும் யார் கவனிப்பார்கள்? இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டனர் நம்முடைய பெரியவர்கள். சூழல், வருமானம், கோயில் காரியம் என்று எல்லாவற்றுக்கும் வசதியாக மார்கழி மாதத்தைக் கடவுள் வழிபாட்டு மாதமாக மாற்றிவிட்டனர். மொத்தம் பனிரெண்டு மாதங்களில், ஒரு மாதம் முழுமையும் ஆண்டவனுக்கு என்று அமைத்தனர்; இதனால், மீதமிருக்கும் பதினொரு மாதங்களும் சரியாக இருக்கும் என்பது மட்டுமில்லை, கடவுளுக்கான மாதத்தில் தனிப்பட்ட சுயநலங்களும் அவரவர் வீட்டு விசே‌ஷங்களும் இல்லாமல், வழிபாடுஆலயம்பொது நன்மை என்று மட்டுமே கவனமும் இருக்கும்.

மார்கழி மாதம் என்பது பிரம்ம முகூர்த்த மாதமும் ஆகும். அதென்ன பிரம்ம முகூர்த்தம்? ஒவ்வொரு நாளும், சூர்யோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்த காலமாகும். இந்த நேரத்தில் எந்தச் செயலைச் செய்வதற்கும் ‘நல்ல காலம்’ பார்க்கவேண்டியதில்லை.

மார்கழி எப்படி பிரம்ம முகூர்த்த காலமாகும்? நம்முடைய (அதாவது மனிதர்களுடைய) ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள், அவர்களுக்குப் பகல் பொழுது; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சணாயண ஆறு மாதங்கள், அவர்களுக்கு இரவுப் பொழுது. இந்தக் கணக்குப்படி, தேவ பகல் தொடங்குவதற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்தச் சுப வேளையில், தேவர்களும் முனிவர்களும்கூட, இறைவனை வழிபடுகிறார்கள்.

ஆயர்பாடியின் பெண்கள், கிருஷ்ணனே தங்களுக்கு மணாளனாகக் கிடைக்கவேண்டும் என்பதற்காகக் காத்யாயனி தேவியை வழிபட்டு நோன்பு நோற்றார்கள்; இந்தக் காத்யாயனி நோன்பை மார்கழியில்தான் நோற்றார்களாம். பழந்தமிழ் நூலான பரிபாடல், மார்கழி மாதத்தில் கன்னியர்கள், அம்பா ஆடல் ஆடினர் என்கிறது. காத்யாயனி நோன்பையும் அம்பா ஆடலையும் அடிப்படையாகக் கொண்ட ஆண்டாள் நாச்சியாரும் மாணிக்கவாசகப் பெருமானும், திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிக் கொடுத்தனர்.

பரிபாடல், இன்னொரு செய்தியையும் தெரிவிக்கிறது. மார்கழியில், அந்தணர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள் என்பதே அந்தச் செய்தி. அறுவடைக்குப் பின்னர், வயல்வெளிகளில் வேலைகள் கூடும்; சமுதாய வாழ்க்கை முழு வேகமெடுக்கும். வேதங்களும் துதிகளும் ஓதக்கூடிய அந்தணர்கள், இப்படிப்பட்ட முழு வேகச் சமுதாய வாழ்க்கை நன்றாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், ஆண்டு முழுவதும் முறையாக அமையவேண்டும் என்பதற்காகவும் மார்கழியில் பிரார்த்தனை செய்தார்கள்.

மார்கழி மாதப் பண்டிகைகளில் வெகு சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு மோட்சதா (மோட்சம் தருவது) ஏகாதசி, முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலையில், திருமால் திருக்கோயில்களில், வைகுண்ட வாசல் திறப்பு வெகு கோலாகலமாக நடைபெறும்.

திருமால் ஆலயங்களில், உள் பிராகாரத்திலிருந்து வெளிப் பிராகாரத்திற்குத் திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால், வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருள்வார். இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருப்பார்கள். பக்தர்களில் சிலர், பெருமாள் எழுந்தருளும்போது, தாங்களும் கூடவே இந்த வாசல் வழியாக வருவார்கள். இன்னும் சிலர், நாள் முழுவதும் வைகுண்ட வாசல் வழியாக வந்து, ஏற்கெனவே இவ்வாசல் வழியாக எழுந்தருளி, மண்டபத்திலோ அலங்கார மேடையிலோ கொலுவிருக்கும் பெருமாளைச் சேவிப்பார்கள்.

ஆண்டு முழுவதும் திறக்காமல், அன்று மட்டும் திறக்கிற வைகுண்ட வாசலுக்கு என்ன தனிச் சிறப்பு?

ஒருமுறை. பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவைத் தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார்.

அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர்; அவரின் கர்வமும் அடங்கியது. நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர். இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார். 

போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள். தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோயில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேணும்’ என்று வேண்டினர்.

இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. பரமபதமான வைகுண்டப் பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன.

ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரைத் திருவிழாவும் மார்கழியின் சிறப்புகளில் ஒன்று. சிவபெருமானின் நட்சத்திரம் என்று பெருமை பெறுகிற திருவாதிரையில், நடராஜப் பெருமானின் நடனக் காட்சியைக் காண்பதே ஆருத்ரா தரிசனமாகும். சிவன் கோவில்களில், இந்த நாளில் ஏக கொண்டாட்டம்.

27 நட்சத்திரங்களில், இரண்டுக்கு மட்டுமே ‘திரு’ என்னும் அடைமொழி உண்டு திருமாலின் நட்சத்திரமான திருவோணம் (திரு+ஓணம்); சிவனின் நட்சத்திரமான திருவாதிரை(திரு+ ஆதிரை). ஆருத்ரா என்றால் நீருடைய, நீர்த்தன்மை மிக்க, ஈரமான என்று பொருள் சொல்லலாம். ஆ+திரை என்றால் நீர்த்துளி என்றே பொருள்.

கடவுள் கருணையின் ஈரம் கொண்டவர் என்பதே இதன் உட்பொருள். ஓரியன் விண்கூட்டத்தில், பெட்டல்ஜூஸ், ஆல்ஃபா ஓரியானிஸ் என்னும் விஞ்ஞானப் பெயர்களோடு காணப்படுகிற ஆதிரை நட்சத்திரம், சூரியனைப் போல் 30 மடங்கு அளவில் பெரியது; செந்நிறம் கொண்டது. உலக நாகரிகங்கள் அனைத்திலும் இந்த நட்சத்திரம் சிறப்பாகப் போற்றப்படுகிறது. அராபியர்களுக்கு பைத்அல்ஜைஸா, சீனர்களுக்கு ஷீன் ஸியுக்ஸி, மத்திய அமெரிக்கர்களுக்குச் சக் டுலிக்ஸ் என்று இதன் பெருமைகள் அபாரம். அமெரிக்காவின் பழங்குடியினர் இதனை அனவரூ (ஆதாரத்தம்பம்) என்று அழைக்கிறார்கள். பண்டைய ரோமாரியர்களைப் பொறுத்தவரை, இறப்புக்கும் மறுபிறவிக்குமான நட்சத்திரம் இது.

ஆதிரை நட்சத்திரம் மட்டுமல்ல, ஆதிரையானான சிவனாரும் செந்நிறத்தவர்தாம்! செம்பொற் சோதி என்றே இவர் போற்றப்படுகிறார். மார்கழி மாத முழு நிலா, மிருக சீர்‌ஷம் மற்றும் அதன் அடுத்த நட்சத்திரமான திருவாதிரை ஆகியவற்றோடு சேரும். இந்த நாளில், வியாக்ரபாத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் நடனக் காட்சி நல்கினார் சிவபெருமான். ஆகவேதான், இந்த நாளில் இறைவனுடைய நடராஜத் திருக்கோலத்தை தரிசிக்கிறோம்.

ஏராளமான சிறப்புகளோடும் கடவுள்தன்மையோடு துலங்குகிற மாதமே, மாதங்களில் தலையாயதான மார்கழி.

மார்கழி மாதத்தைச் சிலர், ‘பீடை மாதம்’ என்று புறந்தள்ளுகின்றனர். கல்யாணம், புதுவீடு புகுதல் போன்ற சுப நிகழ்வுகளை இம்மாதத்தில் நிகழ்த்துவதில்லை என்பதையும் சேர்த்துக்கொண்டு, பீடை மாதம் என்பதற்கு இன்னும் சிலர் ஆதரவு தேடுகின்றனர். பேச்சு வழக்கில், சொற்கள் சில சிதைந்துபோகும். பேச்சு வழக்கின் வேகம் காரணமாகப் ‘பீடை மாதம்’ என்னும் தவறான பிரயோகம் வந்துவிட்டது.

Thursday 6 December 2018

அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்..

அன்பு சீடனும்.. அகங்கார துறவியும்..

அழகு மலர்களும் அன்பான விலங்குகளும் சூழ்ந்த அந்த அடர் வனத்தில் நெடுங்காலமாக ஆன்மிக தவம் புரிந்து ஞானியான துறவி ஒருவர் இருந்தார். அவரைக் காண மக்கள் விரும்பினாலும் முற்றும் துறந்தவரான அவர் ஊர் வாழ்க்கையை விரும்பாததால் யாரையும் காண விரும்பாமல் சிந்தனை முழுவதும் சிவனே என்று வாழ்ந்து வந்தார். ஆனாலும் அவரின் தவவலிமையால் அவரின் புகழ் எப்படியோ மக்களிடம் பரவியது. அவரின் பெயரே ‘வனத்துறவி’ என்றாயிற்று.

வனத்தின் அருகில் இருந்த ஊரில் வசித்து வந்த ஆனந்தன் என்ற இளைஞன், இறை சிந்தனை மிகுந்து துறவியாகும் ஆர்வத்தில் இருந்தான். வனத் துறவியைப் பற்றி கேள்விப்பட்டு அவரையே தன் குருவாக ஏற்க விருப்பம் கொண்டான்.

வனத்திற்குச் சென்று துறவியுடன் தங்கினான். அவர் பாராமுகம் காட்டினாலும், அவருக்குத் தேவையான சேவைகளை செய்து அவரின் மனதில் இடம் பிடித்தான். இருவரும் குருவும் சீடனுமாக நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆன்மிக வாயிலாக குருவுடன் ஒத்துப் போன இளைஞனால், தான் பிறந்த இனத்தின் மீது கர்வம் கொண்டிருந்த துறவியையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதையும் அவனால் ஏற்க முடியவில்லை.

எப்படியாவது தனது குருவின் உயர்வு, தாழ்வு எண்ணத்தை, அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்கான நாளும் நெருங்கியது.

ஒரு முறை துறவிக்கு திருவண்ணாமலை ஈசனை வணங்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இதற்காக துறவியும், இளைஞனும் காட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டனர்.

வழியில் பிறரிடம் பிச்சை கேட்டு வாங்கி உணவருந்தினர். அப்போதும் கூட உயர்வானவர்களைப் பார்த்தே பிச்சை வாங்கி உண்டார் துறவி. அதைக் கண்டு இளைஞன் வருந்தினான்.

ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரிந்தது. எந்த திசையில் செல்வது என்று இருவருக்குமே தெரியவில்லை. தோராயமாக ஒரு பாதையைத் தேர்வு செய்து சென்றனர். ஆனால் அது ஆள் நடமாட்டம் இல்லாத பாதையாக இருந்தது. வன விலங்குகளின் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் பசி, களைப்பு ஏற்பட்டது. உணவருந்த ஏதாவது கிடைக்குமா? என்று ஏங்கினர். களைப்பு மிகுதியில் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி உட்கார்ந்தனர்.

அப்போது அங்கு விலங்குகளை வேட்டையாட வந்த வேடன், இருவரையும் பார்த்து, ‘இந்த அடர்ந்த காட்டில் எப்படி வந்து சிக்கினீர்கள்?’ என்று கேட்டான்.

விவரம் அறிந்து கொண்ட வேடம், துறவியையும், இளைஞனையும் தன்னுடைய குடிலுக்கு அழைத்துச் சென்றான். இளைஞன் உற்சாகமாகச் சென்றாலும், துறவி வேண்டா வெறுப்பாகத் தான் உடன் சென்றார். ஏனெனில் வேடன் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவனாயிற்றே.

பசி மயக்கத்தில் இருந்த துறவிக்கும், இளைஞனுக்கும் வேடனின் மனைவி சூடான உணவை பரிமாறினாள்.

நன்றி உணர்வுடன் ஆனந்தன் அந்த உணவை ரசித்து ருசித்துக் கொண்டிருக்க, துறவியும் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக உணவை உண்டார். பசி தீர்ந்ததும், சரியான பாதையில் அவர்கள் இருவரையும் வேடன் அனுப்பி வைத்தான்.

செல்லும் வழியில் “என்ன ஆனந்தா பசி தீர்ந்ததா?” என்று கேட்டார் குரு.

“ஆம் குருவே! அற்புதமான ருசியுடன் அருமையான வெல்லம் போன்ற உணவு” பதிலளித்தான் சீடன்.

“என்னவோ போ.. பசியில உனக்கு ருசி கூட தெரியல.. வேட்டையாடிய உணவைக் கொண்டு சமைத்ததோ என்னவோ, சாக்கடை மண்ணு மாதிரி அவ்வளவு துர்நாற்றம்” முகம் சுளித்தபடி கூறினார் துறவி.

பசிக்கு உணவிட்டவர்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், இழிவாக பேசாமல் இருக்க துறவிக்கு தெரியவில்லையே என்று இளைஞன் வருந்தினான்.

துறவி மீண்டும் தொடர்ந்தார். “சரி.. நீ சாப்பிட்ட உணவை வெளியேற்று. அது வெல்லமாக வருகிறதா? விவகாரமாக வருகிறதா? என்று பார்ப்போம்” என்றார்.

குருவின் கட்டளையை மீறாத சீடனாய் ஆனந்தனும் மூச்சை இழுத்துப்பிடித்து உண்ட உணவின் சிறு பகுதியை வெளியேற்றினான். அதிர்ந்து போனார் துறவி. காரணம் வெல்லம் கலந்த பாயசமாக வந்தது உணவு.

“பார்த்தீர்களா குருவே! நான் சொன்னது சரியானது” என்ற இளைஞன் “நீங்கள் சாப்பிட்டதும் இதே உணவுதானே, உங்களுக்கு மட்டும் எப்படி அது மண்ணாகும்” என்றான்.

எதிர்பாராத விதமாக வாந்தி எடுத்த துறவியின் வாயில் இருந்து சாக்கடை நாற்றத்துடன் உணவு வந்து விழுந்தது. அது அந்த இடத்தையே அசுத்தமாக்கியது.

அதைப் பார்த்த இளைஞன், “குருவே! தங்களின் மனதில் இருந்த அகங்காரமே இப்படி சாக்கடையாக நாற்றம் அடிக்கிறது. வேடனை பசியைத் தீர்க்க வந்த சகமனிதனாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் நீங்களோ அவனை தீண்டத்தகாத மனிதனாகத்தான் நினைத்தீர்கள். இனியாவது உங்கள் மனதிலிருக்கும் அகங்காரத்தை ஒழித்து மகானாக மாறவேண்டும்” என்றான்.

குரு தன் தவறை உணர்ந்து வருந்தினார்.

Monday 3 December 2018

ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகள்

ஒரு வருடத்தில் வரும் 24 விரத ஏகாதசிகள்

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இந்து சமயத்தவர்கள், சிறப்பாக வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்' என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர். 

கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்படும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றைத் தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்

3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)

4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)

5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது

6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை பெற்றான்)

7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரடம் இருந்த நாள்

8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது

9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்

10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்

11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன் தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)

12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்

13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்

14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)

15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)

16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)

17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்

18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்

19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்

20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்

21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்

22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் அகலும்

23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்

24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்

25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

Saturday 1 December 2018

சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்

சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட ஆதி மகா பைரவேஸ்வரர் கோவில்

ஆதியும் அந்தமும் இல்லாதவர் சிவபெருமான். இந்த பிரபஞ்சத்திலுள்ள ஜீவராசிகள் மட்டுமின்றி ஏனைய பிற இறை வடிவங்களையும் படைத்தவரும் அவரே. அசுரர்களால் உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம், சிவபெருமான் தனது அம்சமாகவும், வலிமைமிக்க ஞானமூர்த்தியாகவும் பைரவரை உருவாக்கினார் என்றும், எட்டுதிசைகளிலும் அவரை குடிகொள்ளச் செய்து உலகினைக் காக்கும் பொறுப்பை அளித்து, அதன் மூலம் அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்றும் பைரவர் தோற்றத்தைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன.

‘பைரவர்’ என்றால் ‘பயத்தைப் போக்குபவர்’, ‘பாபத்தையும் இன்னல்களையும் நீக்குபவர்’ என்று பொருள். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் ஒடுக்குதல் ஆகிய முத்தொழில்களின் மூலமாக, பல கோடி உயிர்களை காப்பதற்காக படைக்கப்பட்ட பைரவருக்கு, சிவபெருமானின் கையில் இருக்கும் திரிசூலமே ஆயுதமாக வழங்கப்பட்டிருக்கிறது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். பைரவரை, பூஜை செய்தால் மட்டுமே ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் என்றில்லை. இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் அவரை நினைத்தாலே போதும். நம்மை துன்பங்களில் இருந்து உடனடியாக காப்பார்.

பைரவர் தோற்றம் :

பைரவர் தோன்றியது பற்றி இருவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதிய தானகாசுரன் என்னும் அசுரன், ‘பெண்களால் மட்டுமே எனக்கு மரணம் நிகழ வேண்டும்’ என்ற வரத்தைப் பெற்றான்.

அந்த வரத்தின் காரணமாக, பிரம்மதேவன் முதலான தேவர்களை அவன் துன்புறுத்தினான். அவனது கொடுமையில் இருந்து விடுபட, தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டினர். சிவபெருமானும் தனது அம்சமான காளியைத் தோற்றுவித்து, தானகாசுரனை அழிக்க கட்டளையிட்டார். அதன்படியே அசுரனை அழித்த காளி, அதன் பிறகும் கோபத் தீயுடன் உலகெங்கும் சுற்றித் திரிந்தாள். அவளது கோபத் தீயினால், உலக உயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.

இதையடுத்து மாயையை, ஒரு பாலகன் உருவில் இடுகாட்டில் கிடந்து அழும்படி செய்தார் ஈசன். அங்கு வந்த காளி, குழந்தையை தூக்கி அணைத்து பால் கொடுத்தாள். காளியிடம் பால் குடித்த அந்தக் குழந்தை, பாலுடன் காளியின் கோபத் தீயையும் சேர்த்து பருகியது. அதனால் காளியின் கோபம் தணிந்து, உலக உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

காளியின் கோபத்தைத் தணித்த குழந்தை ‘ஷேத்திரபாலர்’ என்று அழைக்கப்பட்டது. ‘ஷேத்திரம்’ என்றால் ‘மண்’ என்று பொருள். மண்ணில் கிடந்த பாலகன் என்பதால், ‘ஷேத்திரபாலர்’ அதாவது ‘மண்ணின் மைந்தர்’ என்று அழைக்கப்பட்டார். நாய் வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் அந்த ஷேத்திரபாலரே, பைரவர் திருவடிவம் என்று லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தகாசுரன் என்னும் அசுரன், சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து கடுந்தவம் செய்தான். அதன் வாயிலாக சிவபெருமானிடம் இருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றான். பின்னர் தேவர்களை வென்றான். தோல்வியுற்ற தேவர்களை, பெண்களின் ஆடையை அணிந்து கொண்டு தனக்கு சேவகம் செய்யும்படி கூறி அவமதித்தான்.

அசுரனின் கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், பெண் வேடத்துடனேயே சிவபெருமானைச் சந்தித்து, தங்கள் இன்னல்களை அகற்றும்படி வேண்டினர். அவர்களின் துயரம் கேட்டு சிவபெருமான் கோபம் கொண்டார். அவர் அடைந்த உக்கிரத்தால் உடல் வெப்பமாகி, நெற்றியில் வியர்வை உருவானது. அந்த வியர்வையில் இருந்து மகா பைரவர், அதிஉக்கிரத்துடன் தோன்றினார். அந்தகாசுரன் மீது போர் தொடுத்து, தனது சூலாயுதத்தில் அவனை குத்தித் தூக்கியவாறு, மூன்று உலகங்களிலும் வலம் வந்தார் என்பது மற்றொரு வரலாறு.

இதுபோல் அநேக அசுரர்கள் தோன்றும் போதெல்லாம், சிவ பெருமான் அநேக பைரவர்களைத் தோற்றுவித்து அவர்களை அழித்தார். பொதுவாக சிவாலயங்களில் பைரவரின் திருவுருவம் ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இடம்பெற்றிருக்கும். தவிர அஷ்ட பைரவர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பல ஆலயங்களில் இடம்பிடித்திருப்பார்கள். இருப்பினும் சிவபெருமானால் முதன்முதலாக உருவாக்கப்பட்டவரும், அஷ்ட பைரவர்களை உருவாக்கியவருமான ஆதி மகாபைரவ மூர்த்திக்கான ஆலயம் சோழவரம் என்ற ஊரில் இருக்கிறது.

இவ்வாலயம் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது. மகாபைரவர் பூவுலகில் முதன்முதலில் தம் திருவடிகளை எடுத்து வைத்த புண்ணிய பூமியாகவும், மகா பைரவர்- மகாபைரவியுடன் அருள்பாலிக்கும் தலமாகவும், பைரவப் பெருமான் சிவலிங்க ரூபமாக காட்சியளிக்கும் தலமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

மூலவரின் திருநாமம் மகா பைரவேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் மகா பைரவேஸ்வரி. உற்சவர்களின் திரு நாமம் கல்யாண பைரவர், கல்யாண பைரவி. எட்டு அல்லது அதற்கு மேலான எண்ணிக்கை கொண்ட இலைகள் கொண்ட வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது. ஆலய தீர்த்தம் ‘பைரவ அமிர்த தீர்த்தம்’ ஆகும். திராவிட கட்டிடக் கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

அகத்திய மகரிஷி இந்த ஆலய மகா பைரவரை வணங்கி வழிபட்டுள்ளார். அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்டவசுக்களும் இவ்வாலய இறைவனை வணங்கி பேறு பெற்றள்ளனர். இந்தத் திருத்தலம் உள்ள சில பகுதிகளை தாங்கியும், புறவெளி சுத்திகரிப்பு பணியையும் அஷ்டதிக்கு பாலகர்களும், அஷ்ட வசுக்களும் செய்து வருகின்றனர். எனவே இத்தலம் வாஸ்து சக்தி நிறைந்ததாக விளங்குகிறது. வாராந்தி வாஸ்து நாளான செவ்வாய்க்கிழமைகளிலும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களிலும் இந்த ஆலயத்தில் வாஸ்து பூஜை செய்யப்படுகிறது. புதிய வீடு கட்டுபவர்கள் அதுபோன்ற நாட்களில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய இந்த ஆலயம், தரைமட்டத்தில் இருந்து உயர்த்தப்பட்ட பீடத்தில் விமானம் வரை கருங்கல்லால் கட்டப்பட்ட கற்றளி ஆகும். செப்புக்காப்பு செய்யப்பட்ட படிக்கட்டு வழியே மேலேச் சென்றால், மகாநந்தி, உச்சிஷ்ட கணபதியும், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானும் உள்ளனர். இவர்களுக்குப் பின்புறம் சிவலிங்க ரூபத்தில் மகா பைரவர் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு இடதுபுறத்தில் மகா பைரவி தென்திசை நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார்.

பிரகார சுற்றில் தெற்கில் விநாயகர், பிரளய காலமூர்த்தி, நடராஜர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகியோரும், மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, காலபைரவர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை, கங்காவிஜர்ணமூர்த்தி ஆகியோரது திருவுருவங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, இவ்வாலயத்தில் சிறப்பு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ அஷ்டமியாக கொண்டாடப்படுகின்றது. அன்றையதினம் எட்டுவிதமான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாணமும், வீதியுலாவும் நடத்தப்பெறுகிறது.

அமைவிடம் :

விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பனந்தாளில் இருந்து 6 கிலோமீட்டர் தெற்காகவும், கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் வடக்காகவும் உள்ளது சோழவரம். இந்த ஊரின் சாலையோரத்திலேயே ஆலயம் இருக்கிறது. சென்னை, கும்பகோணம், வடலூர், காட்டுமன்னார்கோயில், ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. ஆலயத்தின் அருகில் உள்ள ரெயில் நிலையம் கும்பகோணம் ஆகும்.