Saturday 21 September 2019

விபூதி என்கிற மருந்து ?


சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விரிவாக விளக்குகின்றன. ஒருசமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விவரித்தார். அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்தும் தனித்தன்மையுடன் விளங்குவதையும் மற்ற நான்கு பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றில் மறைந்து நின்று செயல்படுவதையும் விளக்கிக் கூறினார்.

மகா அக்னியாக விளங்கும் தாமே வானத்தில் இடி, மின்னலாகவும் பூமிக்குள் எரிமலை குழம்பாகவும், கடலுக்குள் வடவாமுகாக்னியாகவும் இருப்பதை விரிவாக எடுத்துரைத்தார் சிவபெருமான். பின் அந்த அக்னிப் பிழம்பாக இரண்டு முகங்கள், ஏழு கைகள், ஏழு நாக்குகள், மூன்று கால்கள், தலையில் நான்கு கொம்புகள் திகழக் காட்சியளித்தார். அந்த பேருருவை கண்டு வியந்த உமாதேவி அவரை வணங்கி தமக்கு காப்பாக இருக்கும் ஒரு பொருளை அருளுமாறு வேண்டிக்கொண்டாள்.

தன் செம்பொன் மேனியில் வெண்ணிறமாய் பூத்திருந்த வெண் பொடியை வழித்துக் கொடுத்து, ‘இதனைக் காப்பாக கொண்டு இவ்வுலகினை வழி நடத்துவாய்’ என்று அருளினார். அதனால் அது சிவவீர்யம் எனறு அழைக்கப்பட்டது. தேவி அதனை நெற்றியிலும் உடலிலும் காப்பாக அணிந்ததால் திருநீற்று காப்பு எனப்பட்டது. உடலெங்கும் பூசிக்கொண்டதால் சிவ கவசம் என்றானது.

எஞ்சிய விபூதியை அவர் ரிஷப தேவரிடம் தர, அவர் அதனை உட்கொண்டார். அதனால் அவர் அளப்பரிய சக்தியைப் பெற்றார். இது, அவர் மூலம் கோ உலகத்தில் உள்ள ஐந்து பசுக்களான சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமனை, நந்தை ஆகிய பசுக்களிடம் சேர்ந்து பின்னர் பூலோக பசுக்களிடமும் வந்து சேர்ந்தது. அதனாலேயே நாம் கோ ஜலம், கோ சாணம் ஆகியவற்றினை கலந்து உருண்டைகளாக பிடித்து நெருப்பிலிட்டு விபூதியைத் தயாரித்து வருகின்றோம்.

திருநீற்றினை வாங்கி இட்டுக்கொள்வதுடன் சிறிது வாயிலும் போட்டுக்கொண்டால் அநேக நோய்களைத் தீர்க்கும். முறையாக மந்திரிக்கப்பட்ட விபூதி, வாதத்தினால் உண்டாகும் எண்பத்தொருவகை நோய்களையும், பித்தத்தால் உண்டாகும் அறுபத்து நான்குவகை உபாதைகளையும், கபத்தினால் உண்டாகும் இருநூற்று பதினைந்துவகை உடல்நலக் கேடுகளையும் தீர்க்கும் மகிமை கொண்டது.

இந்தப் பலன்களெல்லாம் கடையில் விற்கும் காகித சாம்பல் விபூதியில் கிடைக்காது, பசுஞ்சாண விபூதி வாங்கி அதனை இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து எடுத்து பத்திரப்படுத்தி பஞ்சாட்சர மந்திரமான சிவாயநம, நமசிவாய என சொல்லி உபயோகித்தால் மட்டுமே கிட்டும்.

Thursday 19 September 2019

முருகனுக்கு எதனால் இத்தனை பெயர்கள் ?


முருகனுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கின்றது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று கேள்விகள் உங்களுக்கு தோன்றலாம்.

முருகன் :

முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கின்றது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று. இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சரவணபவன் :

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர். சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

ஆறுமுகம் :

சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது. சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

குகன் :

மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன்.

குமாரன் :

கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கின்றார்கள்.

கந்தன் :

கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள்.

விசாகன் :

விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது.

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது. ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள்.

வேலன் :

வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

குருநாதன் :

பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார்.

சுப்பிரமணியம் :

சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர். ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது.

Wednesday 18 September 2019

இந்துக் கடவுள்களை எப்படி வழிபடுவது ?


1.பிள்ளையாரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது.

2.பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாதது ஆகும். தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

3.விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.

4.சரஸ்வதியை பவளமல்லியால் அர்ச்சனை செய்யக்கூடாது.

5.விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசியால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.

6.மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யக் கூடாது.

7.வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகித்தல் கூடாது.

8. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துதல் வேண்டும்.

9.ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.

10.தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதிகள் இல்லை.

11.வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.

12.சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

13.முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை அனைத்தும் சிவபூஜைக்கு உரியவை.

14.துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை ஆகும்.

15.பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம் மற்றும் பலாப்பழம் ஆகும்.

16.திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.

17.அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.

18.குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்தல் வேண்டும்.

Tuesday 17 September 2019

இந்த கோவில் சிவனை பூஜித்தால் 108 லிங்கங்களை ஒருசேரப் பூஜித்த பலன் கிடைக்கும் !


வாழ்க்கையில் முக்கிய கட்டமான திருமணம் நடைபெறுவது தள்ளிப் போனாலோ, திருமணத்தின் பின்னர் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ எங்கு  சென்று வேண்டினால் காரிய சித்தியாகும்? என்று இப்பொழுது பார்ப்போம். 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தட்டாத்தி மூலை வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமியை தரிசனம் செய்தால் திருமணம், குழந்தை  பாக்கியம் கைகூடும். கோயில் சின்ன கோயில் தான் எனினும் இங்குப் பிற கோயில்களில் கிடைக்கப்பெறாத நிகழ்வுகள் இங்கு கிடைக்கப்பெறும். 

இராமாயண காலத்தில் இராமபிரான் தாடகியைத் துரத்தி வந்ததாகவும் அந்த அரக்கி இவ்வூரில் ஓர் இரவு ஒளிந்துகொண்டு தங்கியதாகவும் மறுநாள் இராமபிரானால் வதம் செய்யப்பட்டார் எனவும் புராணக் கதைகள் கூறுகின்றன. எனவே, தான் தாடக + அந்த + புரம் = தாடகாந்தபுரம் என இந்த ஊர் பெயர் வழங்கலாயிற்று. ஆனால் இப்போது இந்த ஊரின் பெயர் தட்டாத்திமூலை என்பது ஆகும்.

அம்பிகை கயிலையில் இருந்து இறைவனுடன் திருவாஞ்சியத்திற்கு மானிட ரூபம் கொண்டு மக்களோடு மக்களாக கார்த்திகை ஞாயிறு அன்று குப்தகங்கையில் புனித நீராட வந்த விசாலாட்சி கால்வலி தாங்க முடியாமல் இந்த வளப்பாற்றங்கரையில் அமர்ந்ததோடு சிவபெருமானை மேற்கு முகமாக வைத்து பூஜித்தாள். அந்த லிங்கத்தை  வடகிழக்கு மண்டபத்தில் வைத்துள்ளனர். தற்போது பெரிய பாணம் மட்டும் உள்ளது. இதனால் இங்கு அம்பிகை அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருள்பாலிக்கின்றார்.

சோமவாரத்தில் வளப்பாற்றங்கரையில் நீராடி வில்வத்தால் மேற்கு நோக்கிய காசி சிவலிங்கத்தையும் விஸ்வநாதரையும் வழிபடும் பக்தர்கள் காசிக்கு சென்ற பலனை பெறலாம். 

இத்தலத்து சிவபெருமானை பூஜித்தால் நூற்றியெட்டு லிங்கங்களைப் பூஜித்த பலனோடு குடும்பத்தில் லட்சுமி கடாட்சமும் உண்டாகும் என நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.  அம்பிகையின் சிறப்பு திருத்தலங்கள் பலவற்றிலும் தமிழகத்துச் சிவாலயங்கள் பெரும்பாலானவற்றில் அம்பிகை நின்ற கோலத்தில் தான் காட்சி தருகிறாள். நம்  தாடகாந்தபுரத்தில் மட்டுமே அம்பிகை விசாலாட்சி என்னும் பெயருடன் அமர்ந்த நிலையில் ஒருகையில் தாமரை மலர் ஏந்தி அருள் பாலிக்கிறாள் என்பது இங்கு தனிச் சிறப்பு.

இந்த திருக்கோயிலில் இருகால பூஜை நடைபெறுகிறது. திருமணம்-புத்திரபாக்கியம் ஆகியவை நல்லவிதமாக அமைய விசாலாட்சி அம்பிகையை பிரார்த்தித்துச் செல்லலாம்.

கருவறை கோட்டத்தில் தென்முகன், துர்க்கை உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகனுக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் பைரவர், சூரியன் சனி பகவான்  உள்ளனர். வடகிழக்கில் ஒரு தீர்த்த கிணறும் அமைந்துள்ளது. 

திருவாரூரிலிருந்து செல்வபுரம் வழியாக நன்னிலம் செல்லும் பேருந்தில் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து குடவாசல் ஆனைக்குப்பம் வழியாகவும் நன்னிலம் செல்லும்  பேருந்தில் செல்லலாம்.

Monday 16 September 2019

இழந்த சொத்துகள், பொருட்களை மீட்டுத்தர ஹோமம்


உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாள், திதியில் யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கர்த்தவீர்யார்ஜுன மந்திரம் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் பலன்கள் உண்டு.

கர்த்தவீர்யார்ஜுன ஹோமம் செய்யும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து விட்டு, தூய்மையான ஆடைகள் அணிந்து, உணவு ஏதும் உண்ணாமல் ஹோம பூஜையில் கலந்து கொள்வது சிறப்பாகும். பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகின்றது.

இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகின்றது. கார்த்தவீர்யார்ஜுனன் ஹோமம் செய்யப்படுவதின் பிரதான நோக்கமே இழந்த நமது பூர்வீக சொத்துக்களையும், பொருட்களையும் திரும்ப மீட்பதற்காக தான்.

வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும். இழந்த பொருட்கள், சொத்துக்கள் போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க வழிவகை செய்கின்றது.

அதேபோல் சில குடும்பங்களில் சில நபர்கள் மிக இளம் வயதிலோ அல்லது பல்வேறு காரணங்களால் காணாமல் போவது, பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகின்றது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் தொலைந்த தங்களின் உறவுகளோடு சேர்க்க செய்யும் ஆற்றல் மிக்க ஹோம பூஜையாக கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் இருக்கின்றது.

Sunday 15 September 2019

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன்


சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டு வந்தார். அவர் அவ்வப்போது தீர்த்த யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் கண்ணபுரம் என வழங்கும் சமயபுரத்தில் அருளும் மாரியம்மனை தரிசிக்கச் சென்றார்.

அன்னையை வணங்கி வழிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் வெங்கோஜி. அப்போது அவர் கனவினில் தோன்றிய மாரியம்மன் தஞ்சை நகருக்குக் கிழக்கே புன்னை வனக்காட்டில் புற்றுருவாய் தான் குடி கொண்டிருப்பதாகவும், அங்கேயே தன்னை தரிசிக்கலாம் எனவும் திருவாய் மலர்ந்தருளினாள். திடுக்கிட்டு விழித்த மன்னர் புன்னைக்காட்டினை அடைந்தார். அங்கே திறந்த வெளியில் புற்றுருவாய் அமர்ந்திருந்த அம்பிகையைக் கண்டார். உலகையே ரட்சிக்கும் அன்னை இப்படி வெட்ட வெளியில் இருப்பது கண்டு மனம் நொந்தார். உடனே மேற்கூரை அமைத்து அனைவரும் வந்து வழிபட வகை செய்தார்.

சிறிது காலம் சென்ற பின் வெங்கோஜி மன்னனின் மகனான  துளசிராஜா ஆட்சிக்கு வந்தார். இவருடைய மகளுக்குக் கடும் அம்மை நோய் கண்டது. அதனால் அவளது பார்வை பறிபோயிற்று. மகளுடைய இந்த நிலையைக் கண்டு மன்னர் ஆழ்ந்த வருத்தம் கொண்டார். அவருடைய கனவில் ஒரு சிறுமி தோன்றினாள். ‘உன் தந்தை எனக்கு வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாப்புத் தர மேற்கூரை வேய்ந்தார். அவருடைய மகளான உன்னை நான்  காக்க மாட்டேனா?’ என்று புன்முறுவலுடன் சொன்னாள். அந்தச் சிறுமி புன்னைநல்லூர் மாரியம்மன்தான் என்பதைப் புரிந்து கொண்டார் துளசிராஜா. 

மறுநாள் துயிலெழுந்ததும் முதல் வேலையாக தன் மகளுடன் புன்னைநல்லூர் வந்தார். மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் அபிஷேகங்களும், அர்ச்சனையும் புரிந்து வணங்கினார். அன்னையின் சந்நதியில் நெய்தீபங்களை ஏற்றினார். அந்த தீபங்களின் ஒளி நேராக துளசிராஜாவின் மகளை நோக்கிச் செல்வது போன்ற பிரமை ஏற்பட்டது. ஆனால், அது பிரமை அல்ல; உண்மை. ஆமாம், அவளுக்குப் பார்வை மீண்டது.

அன்னையின் மகத்தான சக்தியை மனப்பூர்வமாக உணர்ந்த மன்னன், திருச்சுற்றுச் சுவர்களைக் கட்டி, இறைவிக்கு அழகிய கோயிலை உருவாக்கி அதை பக்தர்களுக்குக் காணிக்கையாக்கினார். அந்த மன்னனின் திருவுருவச் சிலை இன்றும் இறைவியின் சக்திக்கு சாட்சியாக ஆலயத்தில் காட்சி தருகிறது. 

சக்திக்கே சக்தி தரும் வகையில் மகான் சதாசிவப்பிரம்மேந்திரர் அம்பிகையின் சந்நதியில் புற்றுமண்ணைக் கொண்டே அம்மனை வடிவமைத்து சக்ரத்தையும் நிறுவினார். அதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. உற்சவ அம்மனுக்குத்தான் அபிஷேகம். வரப்ரசாதியாகக் திகழும் இந்த அம்பிகைக்கு பக்தர்கள் பால் குடமெடுத்தும், மாவிளக்கும் போட்டும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

பேச்சியம்மை, லாட சந்நியாசி, மதுரைவீரன், கருப்பன், பாடகச்சேரி சுவாமிகள், சதாசிவ பிரம்மேந்திரர் ஆகியோரின்சுதை உருவங்கள் உடன் திகழ, அன்னை அருளாட்சி புரிகிறாள்.

கடுமையான கோடைக் காலத்தில் அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்வை பெருகி வரும். இது பலநூறு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் அற்புதம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு வெள்ளைக்கார அதிகாரி, இவ்வாறு வியர்வை அரும்புவதை கேலி செய்ததோடு அது தற்செயலாக வேறு ஏதாவது நீர்பட்டு அவ்வாறு தோன்றியிருக்கும் என்று சொல்லி, அந்த நீரைத் துடைக்குமாறு கட்டளை இட்டான். அவன் ஆணையை மீற முடியாத கோயில் அர்ச்சகர் நடுங்கும் கரங்களுடன் அவ்வாறே செய்ய, முத்துகளாய் அரும்பியிருந்த அந்த வியர்வைத் துளிகள் அதிகாரியின் உடலில் அம்மை முத்துகளாகப் பொங்கி, அவனை அதிர வைத்தன. 

அதிர்ச்சிக்குள்ளான அந்த அதிகாரி, அந்தப் பகுதி பக்தர்களின் நம்பிக்கையைக் கேவலப்படுத்திய தன் தவறை உணர்ந்து வருந்தி, கண்களில் நீர் பெருக்கினான். நாளடைவில் அம்மனின் அருளால் அவன் அதிகத் துன்பமின்றி, நோய் வந்த வடுவும் எதுவும் இன்றி பூரண நலம் பெற்றான். சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலய திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக வேண்டிக் கொண்டால் உடலில் தோன்றும் கட்டிகள், மருக்கள் போன்றவை விரைவில் மறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீல் உள்ளது புன்னைநல்லூர் திருத்தலம்.

Saturday 14 September 2019

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை


* காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. நற்பணிகளில் ஈடுபட்டு வாழ்வை பயனுள்ளதாக்குங்கள். மற்றவர் பேச்சை பொருட்படுத்தாதீர்கள். உங்களின் மனதிற்கு நல்லவராக இருந்தால் போதும்.

* முடிந்தளவு பிறருக்கு உதவி செய்யுங்கள். ஆனால் யாரிடமும் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். அன்றாடம் துாங்கும் முன் அரை நிமிடமாவது யோசியுங்கள். தவறை திருத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

* தர்மவழியில் வாழ்வதே நல்ல வாழ்க்கை. ஆசைகளில் சிக்கினால் அது பாவத்தில் தள்ளி விடும்.

* ஒரு தொண்டனைப் போல ஆன்மிகத்தில் ஈடுபடுபவன் சேவை தவிர மற்றதை சிந்திக்க மாட்டான்.

* பக்தி என்னும் பண்பு இல்லாவிட்டால் மனிதன் விலங்கு நிலைக்கு தாழ்ந்து போவான்.

* தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைப்பவன் எல்லா மேன்மையும் அடைவான்.

* படிப்பு, பணம், புகழ் என எல்லாம் இருந்தாலும் ஒழுக்கம் இல்லாவிட்டால் பயன் உண்டாகாது.

* ஓடும் நதி இறுதியில் கடலைச் சேரும். மண்ணில் பிறந்த உயிர்கள் கடவுளைச் சென்றடையும்.

* உண்பது மட்டுமே வாழ்க்கையல்ல; நாக்கை கட்டுப்படுத்துங்கள். எல்லாம் தானாக அடங்கி விடும்.

* கர்வத்தால் சொல்லும், செயலும் முரண்படும். அடக்கத்தால் சொல்லும், செயலும் ஒன்றுபடும்.

* உலகம் என்னும் சத்திரத்திற்கு கடவுளே உரிமையாளர். யாரும் இதை சொந்தமாக்க முடியாது.

* சத்திரத்தில் சில நாள் தங்கும் பயணி போல, மனிதனுக்கு உலக வாழ்வு சில காலம் மட்டுமே.

- சாந்தானந்தர்

தென்னாடுடைய சிவனே போற்றி


சிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

இந்த திருவாசக மந்திரத்தை துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும். குரு கிரகத்தின் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தியின் அருளால் குரு கிரக தோஷங்கள் நீங்கும்.

Friday 13 September 2019

எல்லாம் சமமே !


நல்ல குணம் கொண்டவர்களை 'தங்கக் கம்பி' என்று புகழ்வார்கள். ஆனால் ஒருமுறை கடவுளிடம் கண்ணீர் வடித்தது தங்கம்.

“ஏன் அழுகிறாய், அனைவரும் உன்னைத் தானே உயர்ந்தவராக நினைக்கிறார்கள்,” என்றார் கடவுள்.

“ஆம் சுவாமி! மக்கள் என்னைப் போற்றுகிறார்கள். பெட்டிக்குள் வெல்வெட் துணி விரித்து பாதுகாப்பாக வைக்கிறார்கள். ஆனாலும் ஒரு வருத்தம் எனக்கு இருக்கிறது'' என்றது.

“பொற்கொல்லர் உன்னை தீயிலிட்டு உருக்குகிறாரே! அது சுடுகிறதா! சுத்தியால் தட்டும் போது வலிக்கிறதே? அதனால் சிரமப்படுகிறாயோ?” எனக் கேட்டார் கடவுள்.

''இல்லை சுவாமி! இல்லை... அதனால் தானே நான் மின்னும் ஆபரணமாக மாறி பெருமையுடன் வாழ்கிறேன். கோயிலில் கவசமாக சுவாமிக்கு சாத்துகிறார்கள். மக்கள் பக்தி பரவசத்துடன் என்னையும் சேர்த்து வழிபடுகிறார்கள். சுவாமியை விட, கவசமான என்னைத் தான் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள்'' என்றது.

“அப்படியானால் என்ன தான் உனக்கு குறை?” என்றார் கடவுள். “மதிப்பு மிக்க என்னை எடை போடும் போது, தராசின் மற்றொரு தட்டில் எளிய குண்டுமணியை வைக்கிறார்கள்'' என்றது.

''அட அசடே! உண்மை அறியாமல் உளறுகிறாய். மற்றவர்களின் உதவி இல்லாமல் யாராலும் வாழ முடியாது. உலகில் உயர்வு என்பதோ, தாழ்வு என்பதோ கிடையாது. எல்லாமே சமம்!'' என்றார்.

விபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் அனுமன் மந்திரம்


இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்துவிட்டு 108 முறை சொல்லி வந்தால் திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும்.

ஆவ்ம் ஐம் ப்ரீம் ஹனுமதே
ஸ்ரீ ராமா தூதாய நமஹ்

சிரஞ்சீவியாக இருக்கின்ற ஸ்ரீ அனுமனின் சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் இது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் உடல் மற்றும் மன சுத்தியுடன், வீட்டில் சிறிய அளவில் இருக்கும் ஆஞ்சநேயர் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாது.

எதிர்மறை சக்திகள், தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் போன்றவை உங்களையும், உங்களை சார்ந்தவர்களும் அணுகாமல் காக்கும் கவசமாக இம்மந்திரம் இருக்கும்.

Thursday 12 September 2019

பலவிதமான கேள்விகளுக்கு விடைகளை தரும் மௌன விரதம்


விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதம் ஆகும்.

உண்ணாவிரதம், உடலை பட்டினி போட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, மௌன விரதம், மனதை பட்டினி போட்டு, மன எண்ணங்களை மேம்படுத்துவதே மௌன விரதம், ஞானிகளாலும், பல்வேறு சமய பெரியோர்களாலும், மோன நிலையில் இறை நிலையை அடைய, அனுஷ்டிக்கப்பட்டது. மௌன விரதம் என்றால் பேசாமல் இருப்பது, எப்படி பேசாமல் இருப்பது? வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாமல், ஓரிடத்தில் அமைதியாக இருப்பதே ஆகும். 

ஆழ்நிலையில் மௌனமாக இருப்பதே, மௌன விரதம்!. பேசிப் பயனிலா சூழலில், மௌனமாக இருப்பது, சிறந்த தீர்வாகும். மௌன விரதம் என்பது, தவ ஞானிகளுக்கு சிறந்த ஆன்மீக அரணாக விளங்கியது, பகவான் இரமணரும், காஞ்சி பெரியவரும் அவ்வப்போது மௌன விரதம் இருந்து மோன நிலையில் இறையுடன் கலந்திருப்பர். திருச்செந்தூர் திருமுருகனின் கந்த ஷஷ்டி விழாவின் கடைசி நாளில், முருகனடியார்கள், ஒரு வார காலம் அனுஷ்டித்த விரதத்தை, மௌன விரதம் இருந்தே நிறைவு செய்வர். இதன் மூலம், தங்கள் கோரிக்கைகளை சீரிய முறையில் முருகப்பெருமான் நடத்தித் தருவார் என்பது, முருகனடியார்களின் முழு நம்பிக்கை.

முதலில் நமக்கு மௌனவிரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே, நாம் மனித வாழ்வின் விளக்கத்தை அடையும் நீண்ட பயணத்தில், நம்மை இணைத்துக்கொள்கிறோம் என்றுதானே பொருள். மௌனவிரதம் என்பது நம்மை நாம் அமைதியாக மனதை ஒடுக்கி, இறை சிந்தனை அல்லது சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதாகும். இதனால் என்ன நடக்கும்? அமைதியாக ஓரிடத்தில் தரையில் தர்ப்பை பாய் அல்லது கோரைப்பாய் விரித்து அமர்ந்து, அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, சிந்திக்கும்போது, தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் அனைத்து செயல்களும் நம்முன் வந்துபோகும். இன்னும் சற்று ஆழமாக சிந்திக்க, அவையெல்லாம், நம்மாலேயே உண்டான பாதிப்புகள் என்பதையும் அறிந்து, அவற்றை எப்படி கடக்கவேண்டும் என்று சிந்திக்க, விடைகள் அனைத்தும் கிடைக்கும்.

மௌன விரதம், நம்மை நாம் ஆராய, நாம் இதுவரை வாழ்ந்த வாழ்வில் நாம் அடைந்தவை என்ன, இனி அடையவேண்டிய இலக்கு என்ன என்பதை, எந்தவித சமரசமும் இல்லாமல், உண்மை நிலையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். நம் வாழ்வு இலக்கில் இருந்து விலகிச்செல்வதை அறிந்தால், இலக்கை ஒட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வாய்ப்பாகும்.

சனியின் தாக்கம் குறைய வேண்டுமா ?


தெய்வீகம், கலை, இலக்கியம், மொழி, இசை இவை வளர்ந்த இடம், பாதுகாக்கப்பட்ட இடம் கோயில்கள் தான். ஒவ்வொரு சிறு கோயில்களிலும் அது கிராம தேவதைகள் கோயில்களானாலும், சைவ வைஷ்ணவ கோயில்களானாலும் சரி அங்கு கலை, இசை மொழி வளர்க்கப்பட்டது. அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். இந்த சிந்தனையுடன் நாம் செல்வது திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள "செருகளத்தூர்" திருத்தலம். 

செருக்களம் என்பதற்கு போர்க்களம் என பெயர். போர் நடைபெற்ற இடம் அல்லது போர்வீரர்கள் அடங்கிய சிறு படை தங்கியிருக்கும் இடமாக இருந்திருக்கலாம். இதிலிருந்து செருகளத்தூர் வந்திருக்கலாம். 

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள குடவாசல் என்னும் ஊரிலிருந்து கிழக்கில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காவிரியின் பிரிவுகளில் ஒன்றான குடமுருட்டி இவ்வூரை மாலையிட்டார் போலச் செல்கிறது. இங்கு ஒரு சிவாலயமும், வைணவ ஆலயமும் உள்ளன. சிவாலயம் ஊரின் கிழக்கு பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சோமன் வழிபட்டதால் சோமேஸ்வரர் என இறைவன் அழைக்கப்படுகிறார்.

கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுச் சிறப்பாக உள்ளது இளம் வயது குருக்கள் பூசிப்பதைப் பார்க்க மனதுக்கினிய காட்சியாக உள்ளது. கோயில் நடுத்தர அளவுடைய கோயில், கிழக்கு தெற்கு என இரு வழிகள் உள்ளன. சோமேஸ்வரர் கிழக்கு நோக்கியும், இறைவி லோகநாயகி தெற்கு நோக்கியும் உள்ளனர். அகில உலகை காக்கும் இறைவனை,  இறைவி இங்கு வந்து வழிபட்டதால் லோகநாயகி எனப் பெயர். இத்தலத்தினை ஆனந்தகிரி பீடம் என அழைக்கின்றனர். 

பிரகாரத்தில் உள்ள விநாயகர் செல்வவிநாயகர் எனவும், முருகன் இருக்குமிடத்தில் மகாலட்சுமி சன்னதியும் உள்ளது. மகாலட்சுமி சன்னதியிருக்குமிடத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அருகில் தெற்கு நோக்கியவாறு சனி பகவான் உள்ளார்.

கருவறை கோட்டத்தில் தென்முகனும், துர்க்கையும் உள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்கள் உள்ளன. அருகில் சிவசூரியன் சன்னதி உள்ளது. இறைவனின் எதிரில் உள்ள முகப்பு மண்டபத்தின் வெளியில் உள்ளது சிறிய நந்தி மண்டபம். சண்டேசர் சன்னதி வாயிலில் ஒரு தாரா லிங்கமும் நந்தியும் உள்ளது. 

தென் திசை நோக்கிய சனி என்பதால் சனியின் தாக்கம் உள்ளவர்கள் கட்டாயம் தரிசனம் செய்யவேண்டிய தலம் இது என்றால் மிகையல்ல. அனைத்து நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய கோயில் இதுவாகும். குறிப்பாக  திங்கள் கிழமையில் வழிபடவேண்டிய கோயில் இது. 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் பிரதான சாலையிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் செருகளத்தூர் சிவன்கோயில் திருத்தலம் அமைந்துள்ளது. 

Wednesday 11 September 2019

பித்ரு சாபங்களை நீக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்


மனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும். பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்துவது முன்னோர்கள் சாபம் எனப்படும் பித்ரு சாபம்தான். அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி ஆகும்.

திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும். இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் எப்படி சாத்தியம்? அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது.

ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். “ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்” என்பதாக அவர்களின் பேச்சு இருந்தது.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், “ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பித்ரு தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்” என்றார்.

பின்னர் அவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்தி நிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

காசிப தீர்த்தம், இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். அதே போல் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை காலங்களிலும் இந்த தீர்த்தத்தில் நீராடலாம்.

இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாசல் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சன்னிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதி உள்ளது. இரண்டாவது உள்வாசலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன. இங்கும் நந்தி சன்னிதியை விட்டு விலகியவாறு உள்ளது.

சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும், அடுத்து நடராச சபையும் உள்ளது. உள் பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சன்னிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும், வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோவில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனியும், மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரும் இருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

அட்டவீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாறில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத்தலம்.

அனைத்து செயல்களுக்கும் வெற்றியை தரும் திருமால் ஸ்லோகம்


இத்துதியை புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று ஆரம்பித்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால், திருமால் திருவருள் கவசம்போல் நம்மைக் காக்கும்;

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம்
த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம்
யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே
தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே
நாராயண ஹ்ருதயம்

பொதுப்பொருள்:

திருமாலே, தங்களைக் காட்டிலும் என்னைக் காப்பவர் யாரும் இல்லை. புண்ணியமே உருவானவர் நீங்கள். என் மனதில் திடசித்தமாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன, மரண காலங்களுக்கு இடையே நான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியை, தாங்கள் எப்போதும், எல்லா வழிகளிலும் அருளவேண்டும். திருமாலே, நமஸ்காரம்...

Tuesday 10 September 2019

வீடு கிரகப்பிரவேசம் எந்தெந்த மாதத்தில் செய்யக்கூடாது ?


நம் வீட்டில் நடைபெறும் முக்கிய விசேஷங்களில் கிரகப்பிரவேசமும் ஒன்றாகும். வாழ்நாள் முழுவதும் வசிப்பதற்கு சொந்த வீடு ஒன்று இருப்பது அவசியம். பலருக்கு சொந்த  வீட்டில் வாழவேண்டும் என்பது ஒரு மாபெரும் கனவாகக் கூட இருக்கும். 

குருவி சேர்ப்பது போன்று சிறுக சிறுக சேமித்தும், நகை வீற்றும், கடன் வாங்கியும் ஆசை ஆசையாகக் கட்டிய வீட்டிற்குச் செல்ல நல்ல நாள் பார்ப்பது அவசியமல்லவா..  ஆம்! கிரகப்பிரவேசம் செய்வதென்றால் நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல மாதம், உகந்த லக்னம் என அனைத்தும் பார்க்க வேண்டியது அவசியமாகும். இந்த கிரகப்பிரவேச  சடங்கை முறையாகச் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். 

கிரகப்பிரவேசம் செய்ய உகந்த மாதங்கள் : 

கிரகப்பிரவேசம் எனப்படும் புதுமனை புகுவிழாவை சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் செய்யலாம் என்கிறனர் ஜோதிடர்கள். இந்த மாதங்களில்  கிரகப் பிரவேசம் செய்தால் குடும்பம் தழைக்கும், சந்ததிகள் கடந்தும், வீடும் வாசலும் நிலைக்கும் என்பது ஐதீகம். 

கிரகப்பிரவேசம் செய்யும் முறை : 

பொதுவாக கிரகப்பிரவேச ஹோமத்தை அதிகாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள்ளும், லக்ன முகூர்த்தங்களான 6.00 முதல் 7.00 ஆகிய நேரங்களில் செய்வதே  நல்லது. 9 மணிக்கு மேல் நல்ல நேரமாக இருந்தாலும் கிரகப்பிரவேசம் செய்யாமல் தவிர்ப்பதே நல்லது.

கிரகப்பிரவேச மனையில் அமரும் கணவன் - மனைவி ஆடம்பரமான உடைகளை அணியாமல் பாரம்பரிய வேட்டி, சேலை அணியலாம். 

கிரகப்பிரவேசம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிரகபிரவேச சடங்குகளை பதற்றப்படாமல்  ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டும். கிரகப்பிரவேச பூஜை செய்ய வரும் அர்ச்சகருக்குப் பூஜைக்கு வாங்கிவைத்த பொருட்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும்.  அவர் விநாயகர் பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை என வரிசையாக ஹோமம் செய்து கலச தண்ணீரை வீடு முழுவதும் தெளிப்பார். 

வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில்  கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழங்க அழைத்து வர வேண்டும். 

கோ பூஜை செய்யும் போது கணவன் மனைவி இருவரும் பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து அதன் கன்றிருக்கும் பொருட்டு வைத்து துணி, மாலை சாற்றி அரிசி,  வெல்லம் கலந்த கலவை மற்றும் அகத்தி கீரையை அந்த பசுமாடுக்கு உண்ணுபதற்குக் கொடுக்க வேண்டும். 

"ஓம் சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசி நீ

பாவநீ சுரபி ஸ்ரேஷ்ட தேவி துப்யம் நமோஸ்துதே"!

என்று வணங்கி கூற வேண்டும்.

ஏ! கோ மாதாவே சகல தெய்வங்களையும் தீர்த்தங்களையும் உடலுள் வைத்துக் கொண்டு லட்சுமி அருளையும், சகல ஐஸ்வர்யங்களையும் பேர் அருளாய்ச் சுரக்கும்  உன்னை அன்னையாகத் துதிக்கிறேன் என்று வரவேற்க வேண்டும். இதனால் வீட்டில் அனைத்து தெய்வ - தேவ வாழ்த்துக்களும் கிடைக்கும்.

அதன்பின் சுபமுகூர்த்த நேரம் முடியும் முன்பாக அடுப்பில் ஒரு புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, மஞ்சள், குங்குமம் வைத்து பசும்பால் ஊற்றிக் காய்ச்ச வேண்டும். பால்  நன்றாக பொங்கவிட வேண்டும். அதை டம்ளரில் ஊற்றி சாமிக்கு வைத்து நிவேதனம் செய்து ஆர்த்தி காட்ட வேண்டும். மறக்காமல் வீட்டில் உள்ள கதவுகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாவிலை, தோரணம் கட்ட வேண்டும். 

கிரகப்பிரவேசம் செய்யக்கூடாத மாதங்கள் : 

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில், வீடு கட்டி கிரகப்பிரவேசம் அல்லது கட்டிய வீட்டைப் புதிதாக வாங்கி கிரகப்பிரவேசம் என எதையும்  செய்யக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஸ்ரீராமஜெயம் எழுதுவதின் சிறப்புகள்...


"ராம" என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா" என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப்  போக்கடிப்பது என்று பொருள். ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக  இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக இதை எழுதுகின்றனர்.

உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராமமந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் வெற்றி உண்டாகும்.

Sunday 8 September 2019

அறுபதாம் கல்யாணம் எப்படி செய்ய வேண்டும் ?


“சஷ்டியப்தபூர்த்தி” என்பது திருமணமான ஒரு ஆண் தனது மனைவியோடு இல்லற வாழ்வில் தனது 60 வயதை கடந்து 61 வயதில் அடியெடுத்து வைக்கும் போது செய்து கொள்ளும் திருமணமாகும். இதை தமிழில் “60 ஆம் கல்யாணம்” அல்லது “மணிவிழா” என்று அனைவரும் கூறுவார். இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கு குடும்பத்தின் மூத்தவரான அந்த ஆண் தான் பிறந்த மாதத்தில், பிறந்த நட்சத்திர திதியன்று நடத்தபடுகிறது. இந்த 60 வது திருமண சடங்கு பற்றி மேலும் பல விடயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நமது தமிழ் பாரம்பரியத்தில் தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது. அதன் படி குடும்ப தலைவரான ஒரு ஆண் இந்த 60 ஆண்டுகள் வயது மற்றும் தமிழ் வருட சுழற்சியை கடந்து 61 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது ஒரு வரமாக கருதுகின்றனர். இதனாலேயே 61 ஆம் வயதில் அந்த ஆண் சஷ்டியப்தபூர்த்தி செய்து கொள்ளும் சம்பிரதாயம் போற்றப்படுகிறது.

மேலும் வயதான தங்களின் பெற்றோர்களின் திருமணத்தை அவர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் தற்போது காணும் பாக்கியத்தையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் மற்றும் அவர்களின் சுற்றமும், நட்பும் வயதில் மூத்த தம்பதிகளின் ஆசிகளை பெற்று நலம் பெறவும் இந்த சஷ்டியப்தபூர்த்தி சடங்கை செய்கின்றனர். சஷ்டியப்தபூர்த்தி சடங்கு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேதியரிடம் நல்ல நாள், நேரம் ஆகியவற்றை குறித்து கொள்வது முறையான தொடக்கம் ஆகும். இச்சடங்கை கோயிலிலோ, திருமண மண்டபங்களிலோ அல்லது உங்கள் வீட்டிலோ செய்து கொள்ளலாம்.

பிறகு அந்த தம்பதிகளின் பிள்ளைகள் உறவினர்களையும், நண்பர்களையும் முறைப்படி சென்று தங்கள் பெற்றோரின் சஷ்டியப்தபூர்த்தி அல்லது மணிவிழாவிற்கு அழைக்க வேண்டும். சஷ்டியப்தபூர்த்தி செய்யும் நாள் அன்று அந்த வயதான தம்பதிகளுக்கு அவர்களின் திருமணத்தின் போது செய்த சடங்குகளை வேதியரின் அறிவுறுத்தலின் படி அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் செய்வர். பிறகு குலதெய்வ பூஜை செய்த பின்பு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம், அமிர்த ம்ரித்துஞ்சய ஹோமம், தன்வந்த்ரி ஹோமம் முதலிய ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும். பிறகு முகூர்த்த நேரத்தில் குடும்பத்தின் 61 வயதை தொடும் ஆண்மகனான மணமகன் புது தாலியை தனது மனைவியின் கழுத்தில் கட்டி சஷ்டியப்தபூர்த்தி சடங்கை நிறைவு செய்வர்.

நமது பெற்றோருக்கு சஷ்டியப்பூர்த்தி சடங்கை செய்வதால் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை காலத்தில் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படுகின்றன. இச்சடங்கின் போது செய்யப்படும் ஹோமங்களின் பலன்களால் அத்தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலத்தையும் தருகிறது. 60 வயதை தாண்டும் அந்த ஆணின் மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறது.

Saturday 7 September 2019

உதவியவர்களை என்றும் மறக்காதீர்கள்


நமக்கு உதவி செய்தவர்களை என்றுமே மறக்கக்கூடாது என்பதற்கு கண்ணன் கற்றுத் தரும் ஒரு நிகழ்ச்சி ஒன்றை பார்ப்போம்...

யமுனைக்கரையில் உள்ள ஆயர்பாடியில் கண்ணன், குழந்தையாக இருந்தபோது வெண்ணெய் திருடி உண்பான். ஒருமுறை வெண்ணெய் திருடியபோது அவனை யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து தப்பி ஓடினான். ததிபாண்டன் என்ற நண்பனின் வீட்டுக்குள் சென்று விஷயத்தைச் சொன்னான். ததிபாண்டன் ஒரு தாழியை அவன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான்.

கண்ணனை தேடிய யசோதை அங்கு வந்தாள். ததிபாண்டனிடம் விசாரித்தபோது, ‘கண்ணன் இங்கு வரவில்லையே’ என்று சொல்லி விட்டான். யசோதை சென்ற பிறகு. கண்ணன் தன்னை மூடிவைத்திருந்த தாழியை எடுக்கச் சொன்னான். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட்டான்.

அவன் கண்ணனிடம், கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன் எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன் என்றான். கண்ணனும், சரி! நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு! என்றான். ததிபாண்டன் அப்போதும் விடவில்லை.

கண்ணா! நான் மோட்சம் பெறகாரணமாக இருந்த இந்த தாழிக்கும் விமோசனம் கொடு! என்றான். கண்ணன், தாழிக்கும் விமோசனம் கொடுத்தான்.

சுமங்கலிகள் எப்படி தாம்பூலம் பெற்று கொள்ள வேண்டும் ?


நவராத்திரி விழாவின்போதும், பண்டிகை காலத்திலும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் வைத்து கொடுப்பார்கள். கொடுக்கும் சுமங்கலி முப்பெரும் தேவியரான துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாகவும் அதை வாங்கும் சுமங்கலியும் 3 தேவியராகவும் இருக்கின்றன. நாம் கொடுக்கும் தாம்பூலத்துடன் மற்ற பொருட்களையும் கொடுப்பது வழக்கம். அவ்வாறு கொடுக்கும் தேங்காய், மட்டையுடன் இருக்கும் தேங்காயாக கொடுக்க வேண்டும். இந்த மட்டை தேங்காய்க்குள் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. அதாவது நாம் ஆணவம், மாயை, வன்மம் இவற்றை அகற்ற வேண்டும்.

ஆணவம் மட்டை தேங்காய், மாயை அதன் நார், வன்மம் ஓடு இவையெல்லாம் நீக்கினால் தான் வெண்மையான தேங்காய் கிடைக்கும். கொடுக்கும் சுமங்கலி நாருடன் கூடிய தேங்காயில் மஞ்சள் தடவி பூவை சுற்றி இருகைகளால் வாங்கும் சுமங்கலி பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். வாங்கும் சுமங்கலிகள் மடி ஏந்தி வாங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

கொடுக்கும் சுமங்கலியிடமும், பெறும் சுமங்கலியிடமும் மூன்று தேவியரும் வாசம் செய்வதால் நாம் நினைக்கும் காரியங்களை, வரங்களை தேவியர் மூவரும் தங்கு தடையின்றி நமக்கு அருள்கின்றன.தாம்பூலத்தை கொடுப்பதிலும், வாங்குவதிலும் நன்மையே ஏற்படும். ஆகையால் நவராத்திரி சமயங்களில் ஒவ்வொரு சுமங்கலி பெண்ணிடமும் அம்பாள் இருக்கிறாள் என்றும், அம்பாளே பெண் உருவில் வந்து வாங்குகிறாள் என்றும் சொல்கிறார்கள்.

ஆகையால் தாம்பூலம் வாங்க கூப்பிட்டால் சந்தோஷமாக வாங்க சென்று நம் கோரிக்கைகளும் நிறைவேற அம்பாளை பிரார்த்திக்க வேண்டும். இந்த முறையில் தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலிகளையும், வாங்கும் சுமங்கலியும் கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Friday 6 September 2019

பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோயில்


பொதிகை மலையில் விழும் மிகப் பெரிய அருவியே பாணதீர்த்தம். கோடை காலத்திலும் வற்றாத அருவி இதுவாகும். இந்த புண்ணிய அருவியில் ஆடி அமாவாசை அன்று நீராடினால் பாவங்கள் விலகும். தாமிரபரணி ஆறு, பொதிகையில் இருந்து ஓடிவரும் போது 122 அடி உயரத்தில் இருந்து அருவியாக விழுகிறது.

இந்த அருவிக்குச் செல்ல தாமிரபரணி அணைக்குள் படகில் செல்ல வேண்டும். நீராடிவிட்டு மீண்டும் படகில் திரும்பலாம். இந்த தீர்த்தத்திற்கு ஒரு மகிமை உண்டு. இது உடலின் அழுக்கை மட்டும் போக்குவதில்லை. உயிரில் கலந்துள்ள அழுக்கையும் போக்குகிறது. இந்த அருவிக்கு திருநெல்வேலியில் இருந்து பொதிகை மலையில் உள்ள காரையார் வரை பஸ்சில் வரவேண்டும். பாபநாசத்தில் இருந்து காரையார் வரை மலைப்பாதை. காரையாரில் இருந்து கவனமாக படகில் 143 அடி கொள்ளளவு உடைய அணையைக் கடக்க வேண்டும்.

பாணதீர்த்தத்தின் அருகே சொரிமுத்து அய்யனார் கோவில் இருக்கிறது. இது ஒரு அய்யப்ப தலமாகும். சபரிமலைக்கும் முந்திய தலம் என்று இதனைக் கூறுவர். இங்கு சாஸ்தா சிவலிங்க வடிவமாகவும் காட்சி தருகிறார். இவரை வணங்குவதன் நோக்கம் காலத்தே மழைபெய்ய வேண்டும் என்பதுதான். இதனால் கிராம மக்களின் வருகை இங்கு அதிகமாக இருக்கும். மழை இல்லாத காலங்களில் இந்த அய்யனுக்கு பூஜை செய்தால் மழை பொழியும் என்பது ஐதீகம். அதனால் தான் இவர் சொரிமுத்து அய்யனார் என அழைக்கப்படுகிறார்.

ஆடி அமாவாசை திரு நாளில் பாணதீர்த்தத்தில் நீராடி உங்கள் பாவத்தை போக்கு வதோடு மட்டுமல்ல. ஊருக்கெல்லாம் மழை பொழிந்து காடு, கழனி விளைந்திட வேண்டிக்கொண்டால் அய்யனின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்கும். ஆடி அமாவாசை திருநாள் மட்டுமல்ல. எல்லா அமாவாசை நாட்களி லும் இங்கு வந்து வழிபட்டு செல்லலாம்.

சிவனின் திருமணத்தின் போது உலகை சமநிலைப்படுத்த தென் பொதிகைக்கு அகத்தியர் வந்தது அனைவரும் அறிந்ததுதான். ஒரு நாள் அகத்தியர் தாமிரபரணில் கரையில் தவம் மேற்கொண்டிருந்த போது அசரிரீ ஒன்று, இப்போது வானில் ஒரு ஜோதி தோன்றும். அதை கவனி என்றது. அகத்தியரும் கண் விழித்துப் பார்த்தார்.

அப்போது சிவனுக்கும், பார்வதிக்கும், விநாயகர், முருகன், தர்மசாஸ்தா (சொரிமுத்து அய்யன்) ஆகியோர் பூஜை செய்த காட்சி தெரிந்தது. அப்படி தெரிந்த நாள் ஆடி அமாவாசை நாளாகும். மனமகிழ்ச்சி அடைந்த அகத்தியர் இந்த தலத்தில் ஆடி அமாவாசை அன்று யார் வந்து நீராடி இங்கு இருக்கும் சொரிமுத்து அய்யனை வழிபட்டால் சகல நலனும் கிடைக்கும் என்றார். அதனால் தான் ஆடி அமாவாசை இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

Thursday 5 September 2019

திருமணம் உண்டா இல்லையா ?


எனக்கு திருமணம் உண்டா இல்லையா ? பொதுவாக எல்லா இளைஞர், இளைஞிகளுக்குத் தோன்றும் கேள்வி. சிலர் தாமாகவே திருமணத்துக்கு, பெண்ணை / ஆணை தேர்ந்தெடுத்துப் பெற்றோர்களின் சம்மதத்திற்கு காத்திருந்தாலும் அவர்கள் மனதில் சிறு இழை ஓடுவது அம்மா, அப்பா ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ அப்புறம் தமது காதலர் வீட்டில் ஒத்துக்கொள்வார்களோ மாட்டார்களோ, இப்படிப் பல கேள்விகளை முன்னிறுத்தி, எனக்குத் திருமணம் உண்டா அல்லது இல்லையா என்கிற பாணியிலேயே இருக்கும்.

அதேபோல், காதலிக்காதவர்களும் எனக்கு அப்பா, அம்மா திருமணம் செய்வார்களா, இல்லையா எனவும் மனது ஏங்கித் தவிக்கத்தான் செய்யும். அப்படியே அவர்கள் இஷ்டப்படி செய்வித்தாலும், வருபவர் என்னை அன்பாகக் கவனிப்பவராக வருவாரா, அவர் சமூக அந்தஸ்து உள்ளவராக இருப்பாரா, அவரின் நிறம் மற்றும் அழகு எவ்வாறு இருக்கும். அவரின் கவர்ச்சித் தன்மை, ஈர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையுமா என்றெல்லாம் எண்ணத்தோன்றும்.

ஒருவருக்கு, அவர்தம் ஜனன கால ஜாதகத்தில், அவரின் லக்கினம், சுப கிரகங்களின் தொடர்பும், இலக்கினாதிபதி பலமாக இருந்தாலும், அவருக்கு திருமணம் நடக்கும்.  லக்கினாதிபதி, ஜாதகரைக் குறிக்கும். 2ஆம் இடம் குடும்பத்தைக் குறிக்கும். 7ஆம் இடம் திருமணம் செய்யும் நபரைக் குறிக்கும், அதாவது பெண் ஜாதகருக்கு வரப்போகும் கணவனைப்பற்றியும், ஆண் ஜாதகர் என்றால் அவருக்கு வர இருக்கும் மனைவியைக் குறிக்கும். இதில் நவாம்ச லக்கினத்திற்கு, சுபர் தொடர்பானால், திருமணம் நிச்சயம் நடக்கும். இதே போல் ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், 2 மற்றும் 7ஆம் இடத்திற்கு (வீட்டிற்கு) சுபர்கள் தொடர்பு இருந்தால் திருமணம் நடக்கும். 

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 1, 2, 7ஆம் இடங்கள், இம்மூன்றும் பாதிக்கப்பட்டால், திருமணம் நடக்காது. மேலும், பிறப்பு ஜாதகத்தில், 1 மற்றும் 7 ஆம் அதிபதிகள், நவாம்சத்தில் உள்ள இடத்தை காண வேண்டும். அவைகள், அந்த அதிபதிகள், முறையே 2, 6, 8, 12ஆம் இடங்களில் பிறப்பு ஜாதகத்திலும் மற்றும் நவாம்சத்தில் இருந்தால், திருமணத்தடையை ஏற்படுத்தும். இரண்டில் ஒரு இடத்தில் நன்றாக இருந்தால் திருமணம் நடக்கும். ஆனால், பிரச்னை உண்டு. சுக்கிரன் பாதிக்கப்பட்டால், திருமணத்தடை ஏற்படுத்தும். பிறப்பு ஜாதகம் மற்றும் நவாம்ச ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல இடத்தில் இருந்தால், திருமணம் நடக்கும். 

இதைத் தவிர, திரிம்சாம்சத்தை D-30 பார்க்க வேண்டும். த்ரிம்சாம்ச லக்கினத்துடன் சுபர்கள் தொடர்பானால் திருமணம் உண்டு. சுபர், பிறப்பு லக்கினத்துடன் தொடர்பானால் நிச்சயம் இளமை (சரியான வயதில்) மணம் உண்டு. திரிம்சாம்சம் பாதிக்கப்பட்டால், திருமணம் தடைப்படும். இதுபோல், ஒருவருக்கு, தாமத திருமணமா, பல மணம் ஏற்படும் அமைப்பை உடையவரா, அன்பாக கவனிக்கும் கணவர் / மனைவி அமைவாரா, நல்ல நிறம் மற்றும் அழகான துணைவர் கிடைக்குமா, திருமணத்திற்குப் பிறகு நல்வாழ்க்கை அமையுமா என்பனவற்றை ஜோதிடம் மூலம் அறிய முடியும். இவை அத்தனையும், நமது மானிட சமுதாயத்திற்கு நமது மூதாதையர் மற்றும் ரிஷிகளால் கூறப்பட்டவை எனும் போது ஆச்சரியம் கலந்த உண்மையாக உள்ளது.

மும்மூர்த்திகளை ஒரே கோவிலில் தரிசனம் செய்யலாம் வாங்க...


சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுமுடி.

பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறக்குரியதாகும்.

மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தை காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது.

கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னி மரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்துள்ளது.

கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையமும் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வந்து சாமியை தரிசித்து செல்கிறார்கள். பழனி கோவில் திருவிழா என்றாலும், கொடுமுடியின் சுற்றுவட்டார கோவில்கள் திருவிழா என்றாலும் கொடுமுடி காவிரி கூடுதுறையில் இருந்துதான் தீர்த்தம் எடுத்துச்செல்லப்படும். இதனால் எப்போதும் கொடுமுடி திருவிழா கோலம் பூண்டு இருக்கும்.

Wednesday 4 September 2019

வீட்டில் எதிர்மறை அதிர்வுகளை நீக்க பரிகாரம் என்ன ?


வீடுகளில் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, தெய்வீக சக்திகள் நிரம்பினால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் வளமையான வாழ்க்கை பெற வழிவகை செய்யும். அப்படி நாம் வசிக்கும் வீடு தெய்வங்களின் அருட்கடாட்சம் பெறுவதற்கு செய்யவேண்டிய ஒரு எளிய பரிகார முறை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். 

தங்க நகை விற்பனை செய்யும் கடைகளில் பஞ்சலோக நாணயங்கள் விற்பனைக்கு கிடைக்கும். அந்த பஞ்சலோக நாணயங்களை வாங்கி வந்து, ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரத்தில் வீட்டின் வாயில் படிக்கு மேலே, கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்படும் போது பயன்படுத்தப்படும் அஷ்டபந்தன மூலிகை கலவையை சிறிதளவு வாங்கி வந்து, சூடாக்கி அதை வீட்டு வாயிற்படியில் மீது தடவி, இந்த பஞ்சலோக நாணயங்களை நேரான வரிசையில் ஒட்டி வைக்க வேண்டும். 

பஞ்சலோக நாணயங்களை ஒட்டுவதற்கு அஷ்டபந்தன மூலிகை மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, நவீன ரசாயன கலவை கொண்டு செய்யப்பட்ட ஒட்டுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஒட்டக்கூடாது. பஞ்சலோக நாணயங்களை வீட்டு வாயிற்படியில் ஒட்டுவதால் வீட்டில் இருக்கின்ற எப்படிப்பட்ட வாஸ்து தோஷங்களும் நிவர்த்தி ஆவதோடு, அதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் காக்கும். வசிக்கும் வீட்டில் அற்புதமான தெய்வீக ஆற்றல் பெருகுவதோடு, அந்த ஆற்றல் அங்கு வசிப்பவர்களின் உடல் மற்றும் மனதை மேம்படுத்தி அனைத்து நன்மைகளையும் வாழ்வில் பெறுவதற்கு உதவுகிறது. 

வீட்டில் இருப்பவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக நிறைவேறும். குறிப்பாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கூடிய சீக்கிரம் சொந்த வீட்டிற்கு குடிபுகும் யோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே வீட்டில் இருக்கின்ற துஷ்ட சக்திகள், எதிர்மறை அதிர்வுகள் அனைத்தும் நீங்கும். மிக அதிக அளவில் செல்வச் சேர்க்கையும் ஏற்படும்.

ஸ்டிக்கர் பொட்டு வைப்பது சரியா ?



நாகரீக மோகத்தில் நிகழும் தவறுகளில் இதுவும் ஒன்று. சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தாம் மகிழ்ந்து இருப்பதாக மகாலட்சுமி கூறுகிறாள். எனவே, குங்குமம் தான் என்போதும் உயர்ந்தது.

பொட்டு வைத்துக்கொள்வதையே, நாகரீகக் குறைவாக சில சகோதரிகள் கருதும் சூழலில் ஸ்டிக்கராவது வைத்துக் கொள்கிறார்களே என்று அற்ப சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் விலகும் என்பது உண்மை.

அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது.

அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தைப் பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிபடும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தித் தருகிறது.

அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவது சிறந்தது. "நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை.. இதுவே சனாதன தர்மம்.."

Tuesday 3 September 2019

கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் பலன்கள்


எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் காரியங்கள் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.

கணபதி ஹோமத்தை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை நேரத்தில் செய்வது இன்னும் கூடுதல் பலன்களைத்தரும். தேன், பால், நெய் கலந்த கலவையை கணபதி ஹோமத்தில் இட்டால் ராஜ வசியம், அரசு பதவிகளைப் பெறலாம்.

திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெற்று வளமோடு வாழ நெல் பொரி, திருமதுரம் கொண்டு வேள்வி செய்ய வேண்டும். தேன் கொண்டு ஹோமம் செய்தால் கடன் தொல்லைகள் நீங்குவதுடன், செல்வச் சிறப்போடு சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

எடுத்துக் கொண்ட மந்திரம் சித்தி பெற வேண்டுமானால் நெய் அப்பத்தினால் ஹோமம் செய்ய வேண்டும். கொழுக்கட்டையினால் ஹோமம் செய்தால் தொட்டதெல்லாம் ஜெயம் தான். பொருள் வளம் பெற வேண்டுமெனில் கரும்புத் துண்டால் ஹோமம் செய்ய வேண்டும்.

நெய், தேங்காய்த்துண்டு, சத்துமாவு, அப்பம், மோதகம், கரும்புத்துண்டு, எள்ளுருண்டை, நெல் பொரி, அவல், வாழைப்பழம், வில்வ சமித்து, அருகம்புல், சர்க்கரைப் பொங்கல் இவைகளால் ஹோமம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

கடன் தொல்லையாலும், வறுமையாலும் வாடுபவர்கள் கருங்காலிக் குச்சியால் வேள்வி செய்தால் அவற்றிலிருந்து விடுபடலாம். கணபதி ஹோமத்தை பவுர்ணமி, மாதப் பிறப்பு, சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்தால், நாம் வேண்டும் பலன்கள் நிச்சயம் கிட்டும்.

உங்களால் கணபதி ஹோமம் நடத்த முடியாவிட்டால் கணபதி ஹோமம் நடைபெறுகிற இடங்களுக்குச் சென்று ஹோமத்துக்குத் தேவையான முழுத்தேங்காய், பழவகைகள், மஞ்சள் கிழங்கு, குங்குமம், மலர் வகைகள், தாமரை மலர், சிவப்பு வஸ்திரம் போன்றவற்றை அவரவர் சக்திக்குத் தகுந்தவாறு வழங்கலாம். இது கணபதியின் கடைக்கண் பார்வைபட வழிவகுக்கும்.

கணபதி ஹோமத்தில் அருகம்புல் என பல பொருட்களை இடுவார்கள். அவற்றால் என்ன பலன் ?

அருகம்புல்- கெட்ட சக்திகளை அழித்து, நன்மை தரும், கரும்பு- புத்திரப் பேறு கிடைக்கும். வாழைப்பழம்- நற்புத்தி, ஞானம் கிட்டும், அவல்- புண்ணியம் உண்டாகும். தேங்காய்- இல்லத்தில் தானியம் பெருகும், எள்- சனி தோஷம் விலகும், வெல்லம்- நோய்கள் குணமாகும்.

ஈஸ்வரனுக்கும் பூக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன ?


தஞ்சாவூர் - திருவையாறு சாலையிலுள்ள கண்டியூருக்கு மேற்கே 4 கி.மீ.  தொலைவில் உள்ள பூந்துருத்தி தலத்தில் புஷ்பவனநாதராக ஈசன் அருள்கிறார். தும்பைப் பூவை விரும்பிச் சூடிடும் பரமனை தும்பைசூடி என திருமுறைகள் போற்றுகின்றன. காஞ்சிபுரம் பங்குனி உத்திர ஏகாம்பரேஸ்வரர் ஏலவார்குழலி  திருமணத்தின் போது தும்பை மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. 

மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பூவனத்தில் ஈசன் பூவண்ணன், பூவணத்தவன், பூவணன் எனும் பெயர்களால் வணங்கப்படுகிறார். ஈசனின் திருக்கோலங்களில் ஒன்றான சதாசிவமூர்த்தி பொற்றாமரை மலரில் அமர்ந்து கைகளில் செந்தாமரையையும் நீலோத்பலத்தையும் ஏந்தியருள்வதால் தாமரைச்  சென்னியன், தாமரைச் சேவடியான், தாமரை மலர்கரத்தான், தண்தாமரைச் சைவன், தாமரையான் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை தேவாரம், சிந்துபூந்துறைச் செல்வர் என போற்றுகிறது. கம்பராமாயணத்தில் எருக்குமதி படைத்த சடை இறைவன் என எருக்கம்பூவைச் சூடிய ஈசன் புகழப்படுகிறார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறையில் புஷ்பவனேஸ்வரர் எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட ஈசனை தரிசிக்கலாம். மன்னார்குடிக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பூவனூரில் புஷ்பவனநாதராக ஈசன் வழிபடப்படுகிறார். 

சென்னை-செங்குன்றத்தை அடுத்த ஞாயிறு திருத்தலத்தில் புஷ்பரதேஸ்வரர் எனும் திருப்பெயரில் மகேசனை தரிசிக்கலாம். பஞ்சபாஸ்கர தலங்களுள் இத்தலமும் ஒன்று. தேவாரத்திலும் திருமுறை நூல்களிலும் சிவபெருமான் கொன்றை வேணியன், கொன்றைச் சடையான், பொன்னங்கடுக்கைப் புரிசடையோன் என குறிப்பிடப்பட்டுள்ளார். செவ்வந்தீஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் அருளும் தலம், காஞ்சிபுரத்தில் உள்ளது. பெரியபாளையத்திற்கு அருகில் ஆரணியாற்றங்கரையில் செண்பகபிச்சாலீஸ்வரர் எனும் பெயரில் சிவ பெருமான் திருவருள்பாலிக்கிறார். 

திருநெல்வேலியில் உள்ள திருப்புடைமருதூரில் நாறும்பூநாதராக பரமேஸ்வரனை தரிசிக்கலாம். தேவாரம் கொன்றை மலரை திருமலர் என போற்றுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள ஆலஞ்சேரியில் திருமலர் உடையார் எனும் பெயரில் ஈசனை வணங்கி மகிழலாம். கரவீரம் எனும் மஞ்சள் அலரி பூவின் பெயரை தன் பெயரோடு சேர்த்து கரவீரநாதராக  பரமன் அருளும் திருத்தலம் திருவாரூருக்கு அருகே உள்ள கரையாபுரம். திருமலைராயன் பட்டினத்தில் உள்ள தியாகராஜப் பெருமான் செண்பகத்தியாகர் என வணங்கப்படுகிறார். திருவாரூர் தியாகராஜரை செவ்வந்தித் தோடழகர், தண்தாமரையான் என பக்தர்கள் அழைத்து வணங்குகின்றனர். 

திருக்கருகாவூரில் முல்லைக்கொடி படர தன் திருமேனியை அளித்த முல்லைவனநாதரை தரிசிக்கலாம். குரங்கணில் முட்டத்தில் ஈசன் பாரிஜாத மரத்தடியில் வீற்றருள் புரிவதால் கொய்யாமலர் சூடியோன் என அழைக்கப்படுகிறார். மன்னார்குடியிலிருந்து 21. கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும்  வழியில் உள்ள திருக்களர் ஈசன் பாரிஜாதவனேஸ்வரர் எனும் பெயரில் அருள்கிறார். 

Monday 2 September 2019

நெல் குத்தி சுவாமியை பற்றி தெரியுமா ?


திண்டிவனம் அருகிலுள்ள தீவனுார் கிராமத்தில் நெல்குத்தி விநாயகர் அருள்பாலித்து வருகின்றார். கணபதி லிங்கம் எனப்படும் இவர் தீபாராதனையின் போது மட்டும் விநாயகர் வடிவத்தில் காட்சியளிக்கின்றார்.

செஞ்சி பகுதியை தேசிங்கு ராஜா ஆட்சி செய்த காலம். அப்போது ஆடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர், வயலில் விளைந்திருந்த நெற்கதிர்களை திருடி ஓரிடத்தில் குவித்தனர். கற்களை எடுத்து நெல்லைக் குத்தி அரிசியாக்கி கொண்டனர். ஒருநாள் நெல் குத்த சரியான கல் அவர்களுக்கு கிடைக்கவில்லை. நீண்ட தேடலுக்குப் பின் சிறுவன் ஒருவன், யானை முகம் கொண்ட கல் ஒன்றை கண்டான். அது நெல் குத்த பயன்படாது என அனைவரும் கூறியதால் நெற்கதிர்களை அங்கேயே வைத்து விட்டு வேறு கல்லைத் தேடிச் சென்றனர். திரும்பிய போது, நெல் குத்தப்பட்டிருப்பது கண்டு  அனைவரும் அதிசயித்தனர். 

''இது சாதாரண கல் இல்லை! நெல் குத்தி சுவாமி! இதை பத்திரப்படுத்த வேண்டும்'' என ஓரிடத்தில் மறைத்தனர். மறுநாள் கல்லைக் காணவில்லை. அப்போது குளத்தில் தண்ணீர் கொப்பளித்ததைக் கண்டனர். அந்த இடத்திற்குள் கல் கிடக்கவே, அதை எடுத்து மீண்டும் பத்திரப்படுத்தினர். 

இந்நிலையில் விவசாயிகள் நெற்கதிர்கள் திருட்டு போவது குறித்து வருந்தினர். பெரிய தனக்காரரான ஏகாம்பர கவுண்டரிடம் புகார் செய்தனர். விசாரணையில் சிறுவர்கள் சிலர் நெற்கதிர்களை திருடுவதும், யானை வடிவ கல் ஒன்றில் நெல்லை குத்துவதும் தெரிய வந்தது. அன்றிரவு பெரிய தனக்காரரின் கனவில் விநாயகர் தோன்றி, நெல் குத்தி கல்லாக தான் இருப்பதை தெரிவித்து கோயில் கட்ட உத்தரவிட்டார். பெருமாள் பக்தரான அவருக்கோ இதில் உடன்பாடு இல்லை. 'கடவுள் ஒருவரே; அவரே வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறார்' என பகவத்கீதையின் மேற்கோள் ஒன்றை உறவினர் ஒருவர் எடுத்துச் சொல்லி, கோயில் கட்டும் பணியில் அவரை ஈடுபடுத்தினார். 

ஒருமுறை இக்கோயிலின் பூசாரி மிளகு வியாபாரி ஒருவரிடம் நைவேத்யத்திற்கு கொஞ்சம் மிளகு தருமாறு வேண்டினார். விரும்பாத வியாபாரி தன்னிடம் உளுந்து இருப்பதாக பொய் சொல்லி விட்டு சந்தைக்குச் சென்றார். அங்கு மிளகு மூடை, உளுந்து மூடையாக மாறி இருந்தது. தவறை உணர்ந்த வியாபாரி விநாயகரை சரணடைந்து மன்னிப்பு கேட்டார். பொய் சொன்னதை தடுத்ததால் 'பொய்யாமொழி விநாயகர்' என பெயர் பெற்றார். கோயிலின் பின்புறம் உள்ள விழுது இல்லாமல் மூன்று ஆலமரங்கள் உள்ளன. திருமணம், குழந்தை பாக்கியம், மன அமைதி பெற வேண்டி பக்தர்கள் இவற்றை சுற்றுகின்றனர். 

விசஷே நாட்கள்: விநாயகர் சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி,பிரதோஷம்

நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணி

எப்படி செல்வது: திண்டிவனம் - செஞ்சி வழியில் 12 கி.மீ.,

விநாயகர் வலது கையில் ஸ்வஸ்திக்குறி காணப்படுவது ஏன் ?


விநாயகர் ஜாதகம்,

விநாயகர் ஆவணியில் சதுர்த்தியில் அவதரித்த நாளையே விநாயகர் சதுர்த்தியாக அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றோம். இவர் கன்னி ராசிக்கு உரியவர். கடகத்தில் குருவும், மகரத்தில் செவ்வாயும் கன்னியில் புதனும் உச்சம் பெற்றுள்ளனர். சூரியன் சொந்த வீடான சிம்மத்தில் உள்ளார். செவ்வாய் சூரிய விருச்சிகமே இவரது லக்னம். உத்திராடத்திற்கு இவர் அதிதேவதையாகத் திகழ்கிறார். இவரது ஜாதகத்தை வழிபட்டால் இந்த நட்சத்திரத்தினர் பலன் பெறுவர் என்பது ஐதீகம்.

யுகங்களில் தோன்றும் கணபதிகள்,

விநாயகர் கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்தில் தோன்றினார். த்ரேதா யுகத்தில் மயூரேஸ்வராக மயில் வாகனத்தில் தோன்றினார். துவாபர பாகத்தில் கஜனை ராக மூஞ்சுறு வாகனத்தில் தோன்றினார். கலியுகத்தில் பிள்ளையாராக எலி வாகனத்தில் விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.


‘உ’ என்பது யஜுர் வேதத்தின் சாரம். ஒரு செயல் தொடங்குவதிலிருந்து, முறையாக நடந்து, சரியாக முடிந்து, நிறைவான பலன் கிட்டும் வழியை விரிவாகச் சொல்கிறது இந்த வேதம். முன்வினை, பின்வினை, செய்வினை என்ற எல்லா வினைகளுக்கும் நாயகன் விநாயகன். ஆக்கம் கொண்ட சிந்தனைக்கு ஊக்கத்தை அளித்து, எந்தத் தொந்தரவும் இன்றி அந்தச் செயல் தொடரவும் வளரவும், வளர்வதைக் காக்கவும் செய்யும் திறன் இந்த விநாயகன் அருளால் கிடைக்கிறது. ஆகவேதான், எந்தச் செயலையும் தொடங்கும் முன்பாக பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.

வலது கையில் ஸ்வஸ்திக்குறி காணப்படுவது ஏன்?

ஸ்வஸ்திகம் என்பது இந்த உலகத்தின் நான்கு திசைகளிலும் இறைவன் அருளாட்சி செய்வதைக் குறிக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு வளைவும் கூறும் தத்துவம் உயர்வானது. ஆன்மாவானது ஞானம் யோகம், சரியை, கிரியைகளைத் தாண்டி பகவானிடம் நெருங்க வேண்டுமானால் பஞ்ச பூதங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றைக் கொண்ட இந்த உலக தர்மங்களைத் கடைபிடித்து வாழவேண்டும் என்று விநாயகர் ஸ்வஸ்திகத்தை கையில் வைத்துக் கொண்டு உணர்த்துகிறார்.

யானைத்தலை விளக்கம்,

தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு. அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத் தலை. யானைத் தலை யானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வு கிட்டும்.

Sunday 1 September 2019

விநாயகர் சதுர்த்தியன்று என்ன அபிஷேகம் எந்த ராசிக்காரர்கள் செய்யலாம் ?


எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்தால் நன்மை? 

1. மேஷம் – மஞ்சள் பொடி

2. ரிஷபம் – சானப்பொடி

3. மிதுனம் – எலுமிச்சை சாறு

4. கடகம் – பச்சரிசி மாவு

5. சிம்மம் – பஞ்சாமிருதம்

6. கன்னி – நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி

7. துலாம் – தேன்

8. விருச்சிகம் – இளநீர்

9. தனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்

10,. மகரம் – சந்தனம்

11. கும்பம் – பஞ்சாமிருதம்

12. மீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர்

விநாயக கடவுளின் 25 வழிபாட்டு தகவல்கள்


1. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம். 3) முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம் ஆகும்.

2. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.

3. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.

4. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல்லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியைத் தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.

5. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.

6. வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.

7. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.

8. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.

9. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.

10. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.

11.இப்வுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.

12. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம் - சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.

13. விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் காப்புதான் மிகவும் பிரியமானது.

14. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.

15. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வை யார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார் ஆவார்.

16. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.

17. விநாயகர் புகழ் பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி ஸ்துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

18. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

19. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழி பாடாகக் கொண்டாடப்படுகின்றது.

20. பிள்ளையாருக்கு ஞானக்கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

21. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.

22. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

23. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

24. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

25. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.