Wednesday 31 October 2018

மதிப்பும், மரியாதை தரும் சத்யநாராயண ஸ்லோகம்

மதிப்பும், மரியாதை தரும் சத்யநாராயண ஸ்லோகம்

கீழே உள்ள துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

‘அர்கௌகாபம் கிரீடாந்வித மகரலஸத்
குண்டலம் தீப்திராஜத்
கேயூரம் கௌஸ்துபாபாஸ பலருசிரஹாரம்
ஸபீதாம்பரம் ச
நாநாரத்நாம்ஸு பிந்நாபரண ஸதயுஜம்
ஸ்ரீதராஸ்லிஷ்டபார்ஸ்வம்
வந்தே தோ: ஸக்த சக்ராம்புருஹ தரகதம்
விஸ்வவந்த்யம் முகுந்தம்.’

பொதுப்பொருள்: எங்கும் வியாபித்திருக்கும் நாராயணனே, நமஸ்காரம். மகர, குண்டலங்களோடு பீதாம்பரதாரியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பெருமாளே, நமஸ்காரம். சங்கு, சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றைக் கையில் ஏந்தி, நீலமேக ஸ்யாமளராக காட்சியளித்து, பக்தர்களைக் காக்கும் சத்யநாராயணப் பெருமாளே, அஷ்டாக்ஷர மந்திர வடிவினரே நமஸ்காரம்.

Tuesday 30 October 2018

புராண கதாபாத்திரங்கள்

புராண கதாபாத்திரங்கள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் பல வகையான கதாபாத்திரங்கள் உள்ளன. அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் கதையின் போக்குக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதாகவும், வலுசேர்ப்பதாகவும் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட புராண, இதிகார கதாபாத்திரங்கள் பற்றிய தகவலை இந்தப்பகுதியில் பார்க்கலாம்.

அபிமன்யு

மகாபாரதம் என்னும் புகழ்பெற்ற இதிகாசத்தில் முக்கியமான கதாபாத்திரமாக திகழ்பவன் அர்ச்சுனன். இவனது வீரப்புதல்வன் தான் அபிமன்யு. குருஷேத்திரப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக அபிமன்யுவும் பங்கேற்றான். கவுரவர்களின் படைத்தளபதி துரோணர் பாண்டவர்களை அழிப்பதற்காக சக்கரவியூகம் அமைத்தார். வலுமிகுந்த அந்த சக்கரவியூகத்தை உடைத்து உடைபுகும் வித்தையை கண்ணன், அபிமன்யுவுக்கு கற்றுக்கொடுத்திருந்தார். அதைப்பயன்படுத்தி சக்கரவியூகத்தை உடைத்த அபிமன்யு கடுமையாக போர் செய்தான். அதே நேரம் சக்கரவியூகத்தை உடைத்து வெளியேறும் வித்தையை அவன் அறியாத காரணத்தால், போரில் வீரமரணம் அடைந்தான். மகாபாரதத்தின் குருஷேத்திரப் போரில் அபிமன்யுவின் வீரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பீஷ்மர்

அளவில்லாத சக்திகளைப் பெற்ற மாவீரன், பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் பிதாமகராக விளங்கிய பீஷ்மர். இவர் சாந்தனு என்ற அரசனுக்கும் கங்கை தேவிக்கும் பிறந்தவர். தன் தந்தையின் ஆசைக்காக வாழ்நாள் முழுவதும் மணம் முடிக்காமல் பிரம்மச்சாரியாக விரதம் மேற்கொள்வேன் என்று சபதம் மேற்கொண்டு, அதனை நிறைவேற்றியவர். காலச் சூழ்நிலையின் காரணமாக மகாபாரதப் போரில் கவுரவர்களின் படைகளுக்கு முதல் பத்து நாட்கள் தலைமை தாங்கி வழி நடத்தினார். 10-ம் நாளில் அர்ச்சுனனின் அம்பால் வீழ்த்தப்பட்டார். ‘விரும்பும் போது உயிர் பிரியும்’ என்ற வரத்தை பீஷ்மர் பெற்றிருந்ததால், அவர் உயிர் பிரியும் வரை, ஒரு அம்புப் படுக்கையை உருவாக்கி அதில் அவரை படுக்க வைத்திருந்தான், அர்ச்சுனன்.

அஸ்வத்தாமா

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் கல்வி, போர் திறன் களைக் கற்றுக்கொடுத்த குரு, துரோணாச்சாரியார். அவரது மகன் தான் அஸ்வத்தாமா. இவன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன் ஆவான். பிறந்த பொழுது இவனது அழுகை, குதிரையின் குரலை போன்று இருந்தது. அதன் காரணமாக ‘அஸ்வத்தாமா’ என்று பெயர் பெற்றான். குதிரையின் வலிமையைப் பெற்றவன் என்பதாலும் இந்தப் பெயர் வந்ததாக ஒரு சாரார் சொல்வார்கள். கவுரவர்களுக்காக போர்க்களத்தில் ஒரு பகுதி படைக்கு தலைமை தாங்கி போரிட்டவன் அஸ்வத்தாமா. அவன் போரில் இறந்ததாக துரோணாச்சாரியாரை நம்ப வைத்து, அவரை பாண்டவர்கள் கொன்றனர். அதற்கு பழிவாங்கும் விதமாக திரவுபதியின் ஐந்து மகன்களையும் அஸ்வத்தாமா கொன்றான்.

ஐராவதம்

பெருமதிப்பு பெற்ற ஐராவதம் ஒரு யானையாகும். வெள்ளை நிறம் கொண்ட இந்த யானையானது, தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்டது. அதனை தேவர்களின் அரசனான இந்திரன் தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டான். ஐராவதம் யானை நான்கு தந்தங்களையும், ஏழு துதிக்கை களையும் கொண்டது.

அகத்தியர்

கும்பத்தில் இருந்து தோன்றியவர் அகத்தியர். குறுகிய வடிவம் கொண்டவர். அதனால் இவர் ‘குறுமுனி’ என்றும் அழைக்கப்படுகிறார். பாரதம் எங்கும் பயணம் செய்து தனது தவத்தின் வலிமையால், அவர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஈசனிடம் இருந்து தமிழ் மொழியை அறிந்து கொண்டு, தமிழுக்கு இலக்கணம் அமைத்தவர் அகத்தியப் பெருமான். இதனால் அவர் தமிழ் இலக்கணத்தின் தந்தை என்று அறியப்படுகிறார். விந்திய மலைத் தொடரை வில்லாக வளைத்துக் காட்டிய ஆற்றல் மிகுந்தவர். குறுமுனியாக இருந்தாலும், கடலுக்கடியில் மறைந் திருந்த அசுரர்களை வெளிக்கொண்டு வருவதற்காக, கடல்நீர் முழுவதையும் குடித்து தனக்குள் அடக்கியவர். வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் போன்றவற்றில் பெரும் பங்காற்றிய இவர், சித்த மருத்துவத்தில் முதன்மையானவராக அறியப் படுகிறார்.

அட்சய பாத்திரம்

இல்லை என்று சொல்லாமல் அளித்துக் கொண்டே இருப்பதற்கு ‘அட்சய பாத்திரம்’ என்று பொருள். பசி என்று வருவோருக்கு இல்லை என்ற சொல்லுக்கு இடமில்லாமல் வயிறு நிறைய உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யும் ஒரு பாத்திரம். தம்மை நாடிவரும் உயிர்களுக்கு தங்கு தடையின்றி உணவு வழங்க வேண்டும் என்று பாண்டவர்கள் விரும்பினர். அதனால் பாண்டவர்களின் மூத்தவரான தர்மர், சூரிய பகவானிடம் வேண்டிப் பெற்றதே அட்சய பாத்திரம். பாண்டவர்கள் வனத்தில் மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நேரத்தில், உணவுகளைப் பெறுவதற்காக சூரியபகவான் தர்மருக்கு இந்த அட்சய பாத்திரத்தை வழங்கியதாகவும் ஒரு கதை உண்டு. இது ஒரு அள்ள அள்ள குறையாத அமுத சுரபி.

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மர்

நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நரசிம்மர்

ஓசூரில் இருந்து தர்மபுரி வரை 30 லட்சுநரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. இதில் 8 ஆலயங்கள் மிக பழமையான தொன்மை சிறப்பு கொண்டவை. இந்த ஆலயங்களுள் ஓசூரில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் அத்திமுகம் என்ற ஊர் அருகே உள்ள நரசப்புரம் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயம் தனித்துவம் கொண்டது. இந்த ஆலயம் சுமார் 1500 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். 

இந்த ஆலயத்து நரசிம்மர் சம்மத நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் இவர் மிகுந்த சிறப்பு வாய்ந்தவர். இவரிடம் மிக எளிதில் பக்தர்கள் செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். இவர் மனது வைத்தால்தான் இந்த தலத்திற்கு செல்ல முடியும்.

இந்த தலத்தில் சுவாதி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தால் வேண்டியதை தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக திருமணம் கைகூடும் தலமாக இது திகழ்கிறது. ஓசூரில் இருந்து இந்த கோவிலுக்கு 48, 33 ஆகிய எண்கள் கொண்டு டவுண் பஸ்கள் செல்கின்றன.

Monday 29 October 2018

பூணூல் அணிவதன் மகத்துவம்

பூணூல் அணிவதன் மகத்துவம்

மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும். நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான். ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது. இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும். பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர்.

பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். இவ்வாறு, முற்காலத்தில் குடும்பத் தலைமை, சமூகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதையாகி விட்டதாம். இன்று பூணூல் அணிவது, பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தாலும், பொற்கொல்லர்கள் (தட்டார்கள்) பூணூல் அணிந்திருப்பதை ஓர் உரிமையாகவும் சடங்காகவும் வைத்துள்ளனர். பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும்.

இவை சிவன், விஷ்னு, பிரம்மாவையும், சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும். அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது. முக்காலத்தையும் விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம். மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோக, பரலோக, அகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது. மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர்.

மனித உடலில் ஓடும் இடகலை, பின்கலை, சூட்சம நாடிகள் குண்டலினி சக்தியின் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சி உருவகமாக காட்டுகிறது. வேதங்கள் பூணூலை பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன. சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன.

அல்லல் அகற்றும் ஆதிமூலப்பெருமாள் கோவில்

அல்லல் அகற்றும் ஆதிமூலப்பெருமாள் கோவில்

வேலவனுடன், மாமன் மாலவன் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் பல உள்ளன. திருப்பரங்குன்றில் தெய்வானையை முருகன் மணமுடிக்கும் போது பவளக் கனிவாய்ப் பெருமாளாகவும், செந்தூரில் திருக்கோவில் பிரகாரத்தில் செந்தில் கோவிந்தனாகவும், பழமுதிர்ச்சோலையிலே மலைமீது முருகன் காட்சி தர, அடிவாரத்தில் சுந்தரராஜப் பெருமாளாகவும் திருமால் அருளாட்சி செய்கிறார்.

இதுதவிர எண்கண் என்னும் தலத்தில் மயில் மீது ஆறுமுகப்பெருமான் அமர்ந்திருக்கும் கோவிலை ஒட்டி, கருடன் மீது வீற்றிருக்கும் நாராயணனின் ஆலயம் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவிலை ஒட்டி கோல வாமனப் பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.

அதேபோல சென்னையில் புகழ்பெற்று விளங்கும் வேலவனின் வடபழநி ஆண்டவர் திருக்கோவிலை ஒட்டி, தென்பகுதியில் 600 வருட பழமையான திருமாலின் திருக்கோவில் ஒன்று உள்ளது என்பது நமக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

எளிமையான இந்த வைணவ ஆலயத்தில் கருவறைக்குள், கதிர் உதயம் நோக்கி காட்சி தருபவர் ஆதிமூலப் பெருமாள் ஆவார். அமர்ந்த திருக்கோலத்தில் இடது திருவடியை மடித்து வைத்து, வலது திருவடியைத் தொங்கவிட்டு தாமரை மலர் மீது வைத்தபடி அருள்கிறார். மேலும் சங்கு, சக்கரம் ஏந்தியும், வரத ஹஸ்த முத்திரையுடனும் புன்னகை மிளிர காண்போரை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் இவர் வீற்றிருக்கிறார். இருபுறமும் நில மகளும், திருமகளும் இருந்து அருள் மழை பெய்கின்றனர்.

இங்கே உற்சவ மூர்த்தியாக கஜேந்திர வரதப் பெருமாள் பேரருள் புரிகிறார். எனவே இத்தலம், மகாவிஷ்ணுவின் கஜேந்திர மோட்சம் என்னும் புராணக்கதை தொடர்புடைய திருத்தலமாக கருதப்படுகிறது.

மூலவருக்கு எதிரே பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருட பகவான் வீற்றிருக்க, அர்த்த மண்டபத்தின் உள்ளே வடக்கு நோக்கி சிறிய திருவடியான வரத ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். தெற்கு சன்னிதியில் உடையவர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாளர், பாமா - ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகியோரின் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

சுவாமி விமானத்துக்கு வலதுபுறம் தனிக் கோவிலில் விமானத்தின் கீழ் கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஆதிலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். இந்த அன்னையின் உற்சவ மூர்த்தியாக பெருந்தேவி தாயார் இருக்கிறார். கோவில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் பரந்து விரிந்த பசுமையான அரசும் வேம்பும் இணைந்து இயற்கைச் சூழலை இதமாக்குகின்றன. இதுவே ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.

குழந்தைப் பேறு வழங்கும் சந்தான கோபாலன், வழக்குகளில் வெற்றி தரும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தோஷங்கள் போக்க வல்ல கல்யாண சர்ப்பம், தாய்மார்களின் கருவினைக் காக்கும் கர்ப்பஸ்வபினி தாயார், குடும்ப பிரச்சினைகள் நீங்கி இனிமை நிலவ செய்யும் சல்லாப நாகங்கள் என்று பல மூர்த்தங்கள், அரசமரத்தடியைச் சுற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எனவே நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு துயரங்களுக்கும் பரிகாரம் தரும் இடமாக இத்தலம் இருக்கிறது.

‘இந்த வைணவ ஆலயத்துக்கு வேறென்ன சிறப்பு?’ என வினவினால், திருமணத்தடை விலக ஏற்ற பரிகாரத் தலம் என்று பகர்கிறார்கள். வயது அதிகரித்தும் திருமணம் கூடிவராத ஆண்களும், பெண்களும் இங்கே வந்து வழிபட்டு பரிகாரம் செய்து விட்டுச் செல்கிறார்கள். செவ்வாய்க் கிழமை தோறும் 16 வாரங்கள் நம்பிக்கையுடன் வர வேண்டும். முதல் வார செவ்வாய் அன்று 3 மாலைகளை வாங்கிவர வேண்டும். பெருமாள், தாயாருக்கு தலா ஒரு மாலையை அணிவித்து விட்டு, மூன்றாவது மலர் மாலையை திருமணத் தடையுள்ளவர்கள், தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை வலம் வர வேண்டும். பிறகு ஒவ்வொரு செவ்வாயும் வந்து சேவித்து விட்டு, 16-வது வார செவ்வாய் அன்று முதல் வாரத்தில் செய்தது போலவே மாலை யணிந்து சுற்றிவர வேண்டும். விரலி மஞ்சள் கிழங்கை மாலையாகக் கட்டி தாயாருக்கு சாற்றுவது மங்கல வாழ்வு தரும்.

இப்படி வேண்டிக்கொள்பவர்கள், திருமணம் கைகூடிய பின், ஒரு நன்னாளில் புதுமணத் தம்பதியராக வந்து ஆதிமூலம் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள் அடி வைத்து, இறைவனுக்கும், இறைவிக்கும் நேர்த்திக் கடன் செலுத்துவதை வழக்கமாக வைத் திருக்கிறார்கள்.

இது தவிர, பகைவர்கள் தொல்லை விலகவும், மரண பயம் அகலவும், தீராத பிணிகள் தீரவும், கடன் கவலை குறையவும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இத்தல இறைவனை வழிபட்டுச் செல்கிறார்கள். கல்யாணத்தடை நீங்க செவ்வாய்க்கிழமையும், கடன் பிரச்சினை தீர புதன் கிழமையும், செல்வம் செழிக்க வெள்ளிக்கிழமையும், புத்திரப் பேறு உண்டாக ரோகிணி நட்சத்திர தினமும் வழிபாட்டுக்குரிய சிறந்த நாட்களாகச் சொல்லப் படுகிறது.

ஒவ்வொரு புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மூலவர் திருமஞ்சனமும், வெள்ளி காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனமும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மக்கள் புரட்டாசி சனிக் கிழமைகளில் நீண்ட வரிசையில் நின்று சேவிக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வடபழநி ஆதிலெட்சுமி சமேத ஆதிமூலப் பெருமாள் கோவில், தினமும் காலை 6.30 முதல் 11.30 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையிலும் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

Sunday 28 October 2018

16 வகையான பூஜை செய்வது எப்படி?

16 வகையான பூஜை செய்வது எப்படி?

கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு ஆகும். உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும், இன்பமாக வாழ்ந்து இறுதியில் முக்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆகம விதிகளின்படி சோடச உபசார பூஜைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் இந்த பூஜை முறைகளை எளிமைப்படுத்தினார்.

சில ஆலயங்களில் ஆவாகனம் முதல் புஷ்பதானம் வரை பத்து வித பூஜை மட்டும் செய்வார்கள். இதற்கு தச உபசாரம் என்று பெயர். சில இடங்களில் நீர்சாரம், ஜலீயோ உபசாரம், தைஜசோ உபகாரம், வாயவீயோ உபசாரம், நாதசோ உபசாரம், பஞ்ச உபசாரம் என்றெல்லாம் பூஜைகள் நடத்தப்படுவதுண்டு.  ஆனால் சோடச உபகார பூஜையே மிகவும் சிறப்புடையது. முழுமையானதும் கூட.

இந்த பூஜைகளை தொடங்கும் முன்பு பூஜை செய்பவர் தன் உடம்பை சுத்தப்படுத்தும் ஆத்ம சுத்தி, கருவறையை சுத்தப்படுத்தும் ஸ்தான சுத்தி, பூஜை பாத்திரங்களை சுத்தப்படுத்தும் திரவிய சுத்தி, அந்தந்த மூர்த்திக்குரிய மூல மந்திரத்தை ஜெபிக்கும் மந்திர சுத்தி, விக்கிரகத்தை சுத்தப்படும் லிங்க சுத்தி ஆகியவற்றை செய்ய வேண்டும். அதன்பிறகே சோடச உபகார பூஜையைத் தொடங்க வேண்டும்.

மிகவும் பழமையான ஆலயங்களில் சோடச உபசார பூஜைகள் மிகவும் விரிவாக, அழகாக நடத்தப்படுகிறது. அந்த பதினாறு வகை பூஜைகள் வருமாறு:-

1. ஆவாகனம்: இறைவனை வரவழைத்து விக்கிரகத்தில் எழுந்தருள செய்வதே ஆவாகனம் எனப்படும். ஜீவ சைதன்யத்தை மூலாதரத்தில் இருந்து மேலே ஏற்றுவதாக பாவித்து சங்கல்பம் செய்ய வேண்டும்.

2. ஸ்தாபனம்: இறைவனை விக்கிரகத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்திப்பது ஸ்தாபனம் ஆகும்.

3. சன்னிதானம்: நாம் பூஜிக்கும் மூர்த்தி, நமக்கு அனுக்கிரகம் செய்வதற்காக நடத்தப்படும் பூஜைக்கு சன்னிதானம் என்று பெயர். இந்த பூஜையால் சிவத்தின் அருள் சுரந்து நம்மிடம் நிறைந்து நிற்கும்.

4. சன்னி ரோதனம்: இறைவா என்னிடம் என்றும் கருணையோடு இருக்க வேண்டும் என்று மனம் உருகி பிரார்த்தனை செய்வதற்கு சன்னிரோதனம் என்று பெயர்.

5. அவகுண்டனம்: கருவறை மூலவர் விக்கிரகத்தை சுற்றி கவச மந்திரத்தால் மூன்று கவசம் உண்டாக்க வேண்டும். மூலவர் பூஜைக்கு தடைகள் வராமல் மந்திரத்தால் அதனை மூட வேண்டும். இதற்காக ஆகம விதிப்படி சோடிகா முத்திரை, காளசண்டீ முத்திரை ஆகிய முத்திரைகளை பூஜை செய்பவர்கள் செய்தல் வேண்டும்.

6. அபிஷேகம்: எண்ணெய், மாப்பொடி, நெல்லி முள்ளி, மஞ்சள் பொடி, பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், பால், தேன், தயிர், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம், பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம், பத்ரோதகம், கும்போதகம் ஆகியவற்றை வரிசைப்படி அபிஷேகம் செய்ய வேண்டும். அப்போது தேனு முத்திரை காட்டப்படுதல் வேண்டும். கை விரல்களால் பசுவின் மடி நான்கு காம்போடு இருப்பது போல காட்டுவது தேனு முத்திரையாகும். அப்போது இறைவன் இவ்விடத்தில் அமர்ந்து எங்கள் பூஜையை ஏற்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

7. பாத்தியம்: சந்தனம், அருகு, வெண்கடுகு, விலாமிச்சை இந்த 4 பொருட்களையும் பாத்திய நீரில் கலந்து சுவாமி பாதத்தில் இட வேண்டும். ஆன்மாக்களாகிய நாம் சிவபதம் அடையவே இந்த பாத்தியம் கொடுக்கப்படுகிறது. அப்போது, நம என்பதோடு கூடிய இருதய மந்திரம் சொல்ல வேண்டும்.

8. ஆச மனீயம்: ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், நாவல்பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி நிரப்பி இறைவன் பாதத்தில் வைக்க வேண்டும். அப்போது சம்கிதா மந்திரம் சொல்ல வேண்டும். ஆன்மாக்கள் பரமாத்மாவின் முகத்தில் சேர்த்தல் என்ற பாவத்தில் இந்த பூஜை செய்யப்படுதல் வேண்டும்.

9. அர்க்கியம்: எள், நெல், தர்ப்பை, நுனி, தண்ணீர், பால், அட்சதை, வெண்கடுகு, யவை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி அர்க்கியம் கொடுக்க வேண்டும் மூல மந்திரத்துடன் ஸ்வாகா என்ற மந்திரம் சேர்த்து சொல்ல வேண்டும். அபிஷேகம் ஆரம்பம் - முடிவு, நைவேத்தியம் ஆரம்பம் - முடிவு, தூபம் தீபம் ஆரம்பம் - முடிவு, பூஜைகள் ஆரம்பம் - முடிவு ஆகிய சமயங்களில் அர்க்கியம் கொடுக்க வேண்டும். 

10. புஷ்பதானம்: அழகான பூக்கள், மலர்களால் இறைவனை அலங்கரிக்க வேண்டும். மலர் அலங்காரத்தில் கடவுளை ரசித்துப் பார்க்க வேண்டும். செண்பகம், அருகு, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிரகதி, அரளி, தும்பை ஆகிய 8 வகை பூக்களுடன் அட்சதை சேர்த்து மூல மந்திரத்துடன் வெளவுட் என்ற மந்திரம் உச்சரித்து மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். இது பேரின்ப வீட்டை அடைய செய்யும். சுவாமிக்கு பத்மாசனத்தில் ஆவாகனமும், ஆனந்த சயனத்தில் அபிஷேகமும், விமலாசனத்தில் அர்ச்சனையும், யோகாசனத்தில் நைவேத்தியமும், சிம்மாசனத்தில் வஸ்திர சமர்ப்பணமும் செய்ய வேண்டும்.

11. தூபம்: கருவறை மூலவருக்கு சாம்பிராணி புகை போட்டு வழிபடுவதே தூபம் எனப்படும். இது நமது அஞ்ஞானத்தை கிரியா சக்தியால் அகற்றலாம் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அகில், கீழாநெல்லி, சாம்பிராணி, குங்கிலியம் ஆகியவை சிறந்த தூபப்பொருட்களாகும். தூபம் போட்டு இறைவனை வழிபட்டால் பாபம் விலகும் என்பது ஐதீகமாகும். தூபம் காட்டும் போது, ஹிருதய மந்திரத்துடன் ஸ்வாகா என்பதை கடைசியில் கொண்டதாக உச்சரிக்க வேண்டும். மூலவருக்கு தூபம் காட்டும் போது, அவர் மூக்குக்கு நேராக காட்ட வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

12 தீபம்: சோடச உபசாரங்களில் தீபம் காட்டுவது என்பது மிக, மிக முக்கியமானது. சுமாமிக்கு தீபம் காட்டப்படும் போது வழிபட்டால் நம்மிடம் உள்ள ஆணவம் நீங்கி, ஞானம் பெற முடியும். தீபம் ஏற்ற பசு நெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. துணி, பஞ்சு இவைகளில் திரி செய்து தீபம் ஏற்றலாம். தீப வழிபாடு ஞான சக்தியை அதிகரிக்க செய்யும். மூலவருக்கு தீபம் காட்டும் போது கண்ணுக்கு நேரில் காட்ட வேண்டும். தீப முத்திரை காட்டிய பிறகு மணி அடித்து, மந்திரங்கள் சொல்லியபடி மூலவரின் கிரீடம் முதல் பாதம் வரை தீபம் காட்டப்படுதல் வேண்டும்.

13. நைவேத்தியம்: சுத்த அன்னம், பாயசம், பொங்கல் ஆகியவை சுவாமிக்கு நைவேத்தியமாக படைக்க ஏற்றவையாகும். மனிதர்களின் சராசரி குணமாகிய ஆசை, கோபம், மோகம் போன்றவைகளை நாம் அன்னமாக வேக வைத்து இறைவனுக்கு சமர்ப்பிதையே இது காட்டுகிறது. இறைவனின் 5 முகங்களில் சத்யோஜாதம் முகத்துக்கு எள் அன்னம், வாமதேவத்துக்கு சர்க்கரை அன்னம், அகோரத்துக்கு பாயாசம், தத்புருஷத்துக்கு சுத்த அன்னம், ஈசானத்துக்கு பொங்கல் படைப்பது மிகவும் விசேஷமாகும். இது தவிர ஒவ்வொரு ஆலயத்திலும் இறைவனுக்கு பிடித்த நைவேத்தியம் மாறுபடும். காய்கறி உணவு வகைகள், பாயாசம், வடை, இனிப்புகள் படைப்பது பொதுவானதாக உள்ளது. இறைவனுக்கு நாம் நைவேத்தியம் படைப்பதால் உலகில் சுபீட்சம் ஏற்படும்.

14. பானீயம்: இறைவன் குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வேண்டும். அது பானீயம் எனப்படும். இதனால் நமது மனதில் உள்ள இவ்வுலக பற்று நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். 

15. ஜெப சமர்ப்பணம்: இறைவனின் மூல மந்திரத்தை 108 தடவை சொல்லி, அதை ஈஸ்வரனுக்கு சமர்ப்பணம் செய்வதே ஜெப சமர்ப்பணம் என்றழைக்கப்படுகிறது. ஜெபம், பூஜை ஹோமம் ஆகிய எல்லா புண்ணியைச் செயல்களையும் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இறைவன் அதை ஏற்றுக் கொண்டு நமக்கு முக்தி தருவார். பூஜை முறைகளில் நம்மையும் அறியாமல் ஏற்படும் குற்றம், குறைகளை நிவர்த்தி செய்ய இந்த ஜெப சமர்ப்பணம் உதவுகிறது. ருத்ராட்ச மணி கொண்டு மூல மந்திரம் சொல்லி சம்கிதா மந்திரத்தால் முறைப்படி கவசம் செய்து அர்க்கிய தண்ணீரை ஈசனின் வலக்கையில் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.

16. ஆரத்தி: மேள, தாளம் முழங்க, மணி அடித்து ஆரத்தி காட்டப்பட வேண்டும். ஆரத்திக்கான தீபத்தில் பூ போட்டு பார்த்தல், தண்ணீர் தெளித்தல், தட்டுதல், மந்திரம் சொல்லி சுற்றுதல் என்ற 4 வகைகளை செய்தல் வேண்டும். இறைவனுக்கு தீபம் காட்டும் போது முகம், கண், மூக்கு, கழுத்து, மார்பு, கால்கள் என வரிசையாக 3 தடவை சுற்றி காட்டுதல் வேண்டும். தீபத்தில் 16 வகை உள்ளது. பூமி, ஆகாயம், சொர்க்கம் ஆகிய மூன்றையும் காக்கவே மூன்று தடவை தீபாரதனை காட்டப்படுகிறது.

இப்படி 16 வகை உபசாரங்கள் ஆகமங்களில் வகுத்து வைக்கப்பட்டிருந்தாலும் எல்லா ஆலயங்களிலும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை, உற்சவம் என்ற அடிப்படையில் 6 வகையான உபச்சாரங்களே செய்யப்படுகின்றன.

Saturday 27 October 2018

தீர்த்தமாடும் முறை

தீர்த்தமாடும் முறை

கடலிலோ, புண்ணிய நதிகளிலோ புனித நீராடும்போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. உடுத்தியிருக்கும் ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும்.

தீர்த்தத்தில் மூழ்குவதற்கு முன், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இடுப்பு வரையில் தண்ணீரில் நனையும்படி நிற்க வேண்டும்.

மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து ஆசமனம் (சிறிதளவு குடித்தல்) செய்ய வேண்டும். பின்பு புரோட்சணம் (தலையில் சிறிதளவு தெளித்தல்) செய்யவேண்டும்.

முதல் முறை மூழ்கும்போது கண்கள், காதுகள், மூக்குத் துளைகளை கைகளால் மூடி மூழ்க வேண்டும்.

இரவில் தீர்த்த நீரில் மூழ்கக் கூடாது; சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும் இரவு நீராடலாம்.

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவுப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவன் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். 

இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை கூறுவார். கோவில் நிர்வாகம் சார்பில் சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என 2 பூக்கள் வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் ஆண்டவன் உத்தரவுபெட்டியில் வைக்கப்பட்டு தொடர்ந்து தினமும் பூஜை செய்யப்படும்.

இந்த ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 17-ந்தேதி முதல் செம்மண் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்றுமுதல் செம்மண் அகற்றப்பட்டு 3 கதிர் அரிவாள் (கறுக்கருவாள்) வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதை திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுங்கிலியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி பி.வேலுச்சாமி (வயது 80) என்பவர் முருகன் தனது கனவில் வந்து கூறியதாக கூறினார். இதையடுத்து பூ போட்டு பார்த்து கதிர் அரிவாள்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

இதுபற்றி பக்தர்கள் தரப்பில் கூறுகையில் “சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கதிர் அறுக்கும் அரிவாள் 3 வைக்கப்பட்டுள்ளது. இது சமுதாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து போகபோகத்தான் தெரிய வரும்” என தெரிவித்தனர்.

Friday 26 October 2018

ஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதங்கள்

ஏற்றம் தரும் ஐப்பசி ஏகாதசி விரதங்கள்

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்றும் அழைக்கிறார்கள். ஐப்பசி மாத ஏகாதசிகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. அவற்றின் சிறப்புகளை இங்கு பார்க்கலாம்.

பாபாங்குசா ஏகாதசி

ஐப்பசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியான இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் உண்டாகுமோ, அவ்வளவு பலன்களையும் இந்த ஓர் ஏகாதசியே கொடுக்கும். இந்த விரதத்தைக் கடைபிடிப்பவர்கள், எம வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ கூட இந்த விரதத்தைக் கடைபிடித்தாலும், பலன் கிடைக்கும். அப்படியானால், இந்த விரதத்தை முறைப்படி செய்தால், அதனால் விளையும் நன்மைகளையும், மேன்மைகளையும் சொல்லவும் வேண்டுமா என்ன?

இந்திர ஏகாதசி 

ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.

பின்னர் நாரதர் வந்ததின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறி முடித்தார் நாரதர்.

தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.

இன்னும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம் என்பது உறுதி.

நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்

சிவாலயங்களில் ஈசனை தரிசனம் செய்யும் முன்பு நந்திதேவரை வணங்கி அவர் அனுமதியுடன் பெருமானை தரிசனம் செய்வது நம் வழக்கம். மேலும் பிரதோஷ காலத்தில், நந்தி எம்பெருமானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இத்தகைய நந்திதேவரை வணங்குவதும், அவரை பிரதட்சணம் செய்வதும் எண்ணிலா நற்பலன்களைக் கொடுக்க வல்லது. நந்தியை எத்தனை முறை பிரதட்சணம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

3 முறை பிரதட்சணம் செய்தால் - நாம் விரும்பும் இஷ்ட சித்தி கிடைக்கும்.

5 முறை பிரதட்சணம் செய்தால் - எடுத்த காரியத்தில் ஜெயம் கிடைக்கும்.

7 முறை பிரதட்சணம் செய்தால் - அனைவரும் போற்றக் கூடிய சற்குணங்கள் கிடைக்கும்.

9 முறை பிரதட்சணம் செய்தால் - உலகம் மெச்சும் புத்திரப் பிராப்தம் கிடைக்கும்.

11 முறை பிரதட்சணம் செய்தால் - நோய் நொடி இல்லாத ஆயுள் விருத்தி கிடைக்கும்.

13 முறை பிரதட்சணம் செய்தால் -  எண்ணிய பிரார்த்தனை சித்தி அடையும்.

15 முறை பிரதட்சணம் செய்தால் - கணக்கில்லா தனப்பிராப்தி கிடைக்கும்.

17 முறை பிரதட்சணம் செய்தால் - கிடைத்த தனம் விருத்தி அடையும்.

108 முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்கும்.

1008 முறை பிரதட்சணம் செய்தால் - ஒரு வருட தீட்சையாகப் பலன் கிடைக்கும்.

Thursday 25 October 2018

விரதங்களை அனுஷ்டிக்கும் போது வீட்டில் கடைபிடிக்க வேண்டியவை

விரதங்களை அனுஷ்டிக்கும் போது வீட்டில் கடைபிடிக்க வேண்டியவை

விரதங்களைக் கடைபிடிக்கும் முறைப் பற்றித் தெரிந்து கொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து எண்ணற்ற நற்பலன்களைப் பெறுங்கள். விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து அவரவர் வழக்கப்படி குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள். வழிபடப் போகிற தெய்வ உருவங்கள், படங்களை நன்றாகத் துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள்.

(சில தெய்வங்களை குறிப்பிட்ட மலர் அல்லது இலையால் அர்ச்சிப்பது கூடுதல் பலன்தரும். உதாரணமாக, துர்க்கைக்கு செவ்வரளிப்பூ). அனைத்து பூஜைகளுக்குமே தூய்மையான நீரும், பூவும் அவசியம். முதல் நாளே தனியாக நீரெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லா நோன்புகளுக்குமே ஆரம்பமாக பிள்ளையாரை பூஜிக்க வேண்டும்.

மஞ்சளில் பிடித்து வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும். விரதத்திற்காக வைக்கப்படும் கலசத்தினை ஆரம்பத்திலேயே சரியான இடத்தில் வைத்துவிடவேண்டும். ஒருமுறை வைத்துவிட்டால், விரத வழிபாடுகள் நிறைவடைந்த பிறகே கலசத்தினை நகர்த்தலாம்.

அதற்கு முன் நகர்த்தக் கூடாது. ஆணோ பெண்ணோ விரதம் கடைப்பிடிப்பவர் யாராக இருந்தாலும், குடும்பத்துப் பெரியவர்களிடமோ, பெற்றோரிடமோ ஆசிபெற்றும் வாழ்க்கைத் துணையின் அனுமதியோடும் விரதத்தினை மேற்கொள்வது நல்லது. இதனால் விரதகாலத்தில் பிறரால், எதிர்பாராத மனவருத்தங்கள் வராமல் இருக்கும்.

விரதகாலத்தில் உண்ணாமல் இருப்பதும், அவசியமானால் மிக எளிமையான உணவை எடுத்துக் கொள்வதும் அவரவர் உடல், மன நிலைக்கு ஏற்றபடியானது. அதேசமயம் ஏகாதசி விரதம் போன்ற விரதங்களில் உணவருந்தாமல் இருப்பது அவசியம். எனவே உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற விரதத்தினை அனுசரிப்பதே நல்லது.

விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். விரதம் இருக்கும் தினங்களில் முடிந்தவரை பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். விரதகாலத்தில் எவர்மீதும் கோபப்படுவதோ, வீண்விவாதங்கள் செய்வதோ கூடாது. பூஜைக்கு உரிய தெய்வத்தின் துதிகள், பாடல்களை அன்று முழுவதுமே கேட்பது, படிப்பது, சொல்வது நல்லது.

தெரியாதவர்கள் அந்தக் கடவுளின் பெயரையே திரும்பத்திரும்ப சொன்னாலும் போதும். விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே அனுசரிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள். விரதம் இருப்பதோடு உங்களால் இயன்ற உதவியினை வசதியில் குறைந்தவர்களுக்குச் செய்யுங்கள்.

சனிபகவான் வழிபட்ட சிக்கல் சிவன்கோயில்

Sikkal__5_

சிக்கல் சென்றிருக்கிறீர்களா? எனக் கேட்டால் பெரும்பாலோனோர் சொல்லும் சிக்கல் திருவாரூரின் கிழக்கில் உள்ள முருகன் புகழ் சிக்கலைத்தான். ஆனால் இந்தச் சிக்கல் எனும் ஊர் இருக்குமிடம், கொல்லுமாங்குடி - காரைக்கால் சாலையில் உள்ள பழையார் சென்று அங்கிருந்து வடக்கு நோக்கி மூன்று கி.மீ தூரம் சென்றால் சிக்கல் கிராமம்.

பழமையான சிவாலயம் கிழக்கு நோக்கியது. முகப்பு கோபுரம் ஏதும் இல்லை, ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோயில் கால வேகத்தில் பின் தங்கிவிட்டதில் இன்று செல்வார் யாருமின்றி ஒரு கால பூஜையில் உயிரைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.

கோயில் சிறப்புக்களுக்கு பஞ்சமில்லை, சோழர்கால கோயில், அதிட்டானம் பிரஸ்தரம் வரை கருங்கல் கட்டுமானம். கருவறை அதிட்டானமெங்கும் கல்வெட்டுக்கள் மலிந்துள்ளன. கருவறை சுவற்றில் லிங்கத்தை இரண்டு அரசர்கள் வழிபடுவது போல உள்ளது.

தென் திசை நோக்கி வந்த அகஸ்தியர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. சனிபகவான் வழிபட்ட தலங்களில் இது சிறப்பானது. பிற தலங்களில் காண இயலாத வகையில் கருவறை வடபுற கோட்டத்துச் சுவரில் வடக்கு நோக்கியபடி சனிபகவான் உள்ளார். மிகச் சில கோயில்களில் மட்டுமே இவ்வாறு காண இயலும். அதிலும் கருவறை கோட்டத்தில் அரிதினும் அரிது.

இறைவன் அகத்தியரால் வழிபடப்பெற்றவர் என்பதால் அகஸ்தீஸ்வரர். இறைவி சுந்தராம்பிகை, பெயருக்கு ஏற்றாபோல் மிகுந்த அழகுடையவர். (பின்னமான பழைய அம்பிகை கூட எவ்வளவு அழகுடன் உள்ளார் பாருங்கள்)

கருவறை வாயிலில் விநாயகரும், பாலசுப்ரமணியரும் உள்ளனர். சோழர் கால கல்வெட்டுக்கள் அதிகம் உள்ளன. பல கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்குக் கொடுத்த நிபந்தங்கள் பற்றியே உள்ளன.

Wednesday 24 October 2018

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்

பாபநாசம் (சூரியன்), சேரன்மகாதேவி (சந்திரன்), கோடகநல்லூர் (அங்காரகன்), குன்னத்தூர் (ராகு), முறப்பநாடு (குரு), ஸ்ரீவைகுண்டம் (சனி), தென்திருப்பேரை (புதன்), ராஜபதி (கேது), சேர்ந்தபூமங்கலம் (சுக்ரன்). திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார்.

நவ திருப்பதி 

ஸ்ரீவைகுண்டம்

- வைகுண்டநாதர் (சூரியன்)

நத்தம்

- விஜயாசனப் பெருமாள் (சந்திரன்)

திருக்கோளூர்

- வைத்தமாநிதிப் பெருமாள் (அங்காரகன்)

திருப்புளியங்குடி

- காய்சின வேந்தப்பெருமாள் (புதன்)

ஆழ்வார்திருநகரி

- ஆதிநாதப் பெருமாள் (குரு)

தென் திருப்பேரை

- மகரநெடுங் குழைக்காதர் (சுக்ரன்)

பெருங்குளம்

- வேங்கட வாணப்பெருமாள் (சனி)

தொலைவில்லிமங்கலம்

- தேவபிரான் (ராகு)

இரட்டைத் திருப்பதி

- அரவிந்த லோசனர் (கேது)

காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும்?

காசிக்குச் சென்றால் எதை விட்டு வரவேண்டும்?

காசி, ராமேஸ்வரம் என்றதுமே, அது வயதானப் பின் செல்ல வேண்டிய இடம் என்பது பொதுவாக பெரும்பாலான மக்களின் எண்ணம். வாழ்க்கையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றியவர்கள், இதற்கு மேல் தங்களுக்கு வாழ்க்கையில் எதுவும் இல்லை என்று காசி, ராமேஸ்வரப் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த கடமைகளை முடித்தவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற நியதி ஏதுமில்லை. காசியும், ராமேஸ்வரமும் ஆன்மிக அதிர்வலைகள் அதிகமுள்ள திருத்தலங்கள். இன்றைக்கும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அனைத்து வயதினரையும் காசி, ராமேஸ்வர தளங்களில் பார்க்க முடியும்.

காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை.இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. 

கங்கையில் நீராடிவிட்டு பாபங்கள் நீங்கி புது மனிதனாக பிறப்பெடுக்கும் போது, மீண்டும் இவ்வுலக சுக போகங்களில் பற்று கொண்டு  விடக் கூடாது. மீண்டும் அழியும் பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது. இனி இறைவன் ஒருவனை கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்  என்றார்கள். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழப் பழகுபவனுக்கு, ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும். 

இதன் பொருட்டு தான் காசிக்குச் சென்றால், அழியும் பொருட்களின் மீது தங்களுடைய பிடிப்பை விட்டுவிட்டு வர வேண்டும் என்பார்கள். இதுவே நாளடைவில் காசிக்குச் சென்றால் எதையாவது விட்டு வர வேண்டும் என்று மாறியது. விட வேண்டியது பிடித்த உணவுகளையோ அல்லது காய் கனிகளையோ மட்டுமல்ல. காமக்குரோத மனமாச்சர்யங்களை அக அழுக்குகளை விட்டு வந்து மீண்டும் பிறவாத பெரும் வரம் பெறுவோம்.

ஓம் நமச்சிவாய 

தென்னாடு உடைய சிவனேப் போற்றி!

சன்னிதியை மறைக்கக்கூடாது

சன்னிதியை மறைக்கக்கூடாது

ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக்கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கில் இருந்து விடும் மூச்சுக் காற்றினால் தான், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோவில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னிதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் அதன் காரணமாகத் தான்.

Tuesday 23 October 2018

இந்த வார விசேஷங்கள் - 23.10.2018 முதல் 29.10.2018 வரை

இந்த வார விசேஷங்கள் - 23.10.2018 முதல் 29.10.2018 வரை

23-ந்தேதி (செவ்வாய்) :

* கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

 * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆண்டாள் திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (புதன்) :

* பவுர்ணமி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம், காந்திமதி அம்மன் புஷ்பாஞ்சலி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அன்னாபிஷேகம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (வியாழன்) :

* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் பவனி.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* தென்காசி உலகம்மை ஆலயத்தில் அம்பாள் வீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.

26-ந்தேதி (வெள்ளி) :

* கார்த்திகை விரதம்.
* கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.
* தூத்துக்குடி பாகம்பிரியாள் திருவீதி உலா.
* திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் சுவாமிக்கு அபிஷேகம்.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

27-ந்தேதி (சனி) :

* சங்கடஹர சதுர்த்தி.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை காமதேனு வாகனத்திலும், மாலை ரிஷப வாகனத்திலும் பவனி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

28-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் இந்திர விமானத்தில் பவனி வருதல்.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை புறப்பாடு கண்டருளல்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

29-ந்தேதி (திங்கள்) :

* திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி.
* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன், உடையவர் உடன் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.

தனம் தரும் தாமோதரப் பெருமாள் கோவில்

தனம் தரும் தாமோதரப் பெருமாள் கோவில்

வைகுண்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் துவாபரயுகத்தில் கண்ணனாக (கிருஷ்ணன்) அவதரித்து, கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்து பால லீலைகள் பல புரிந்தவர். இக்கலியுகத்தில் வில்லிவாக்கம் எனும் சேத்திரத்தில் சவுமிய தாமோதரனாக சேவை சாதிக்கிறார்.

பக்தர்களிடம் நீங்காத அன்புள்ளவரும், தாமரை மலரின் (உட்புறம்) சிவந்த நிறமுள்ளவரும், பக்தர்களால் எப்போதும் தேடப்படுபவரும், எல்லாவற்றுக்கும் காரணமானவரும், யசோதை தாயால் கயிற்றினால் கட்டப்பட்ட காரணத்தால் தழும்பு ஏற்பட்டுள்ள வயிறுள்ளவரும், எதையும் பொறுத்துக்கொள்ளும் அடக்கக் குணத்தால் தம் தாய்க்குப் பெருமை சேர்த்தவரே தாமோதரன்!

அன்னையின் வளர்ப்பு :

அத்ரி மகரிஷியின் மகன் துர்வாச முனிவருக்கும், சூரபத்மன் தங்கை அசுமுகிக்கும் பிறந்த வில்வலன், வாதாபி இருவரையும் ஞானமார்க்கத்தில் வளர்க்க தந்தை விரும்பினார். அசுர குணம் படைத்த தாய் அதை விரும்பவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் குடும்பத்தை விட்டு விலகி, காட்டிற்குச் சென்றுவிட்டார். இதன் காரணமாக, ரிஷிகளை பழிவாங்கும்படி தன் பிள்ளைகளுக்குத் தாய் கட்டளையிட்டாள்.

அதன்படியே, அண்ணனும் தம்பியும் சிவ பக்தர்களைப்போல வேடம் கொண்டு, அவ்வழியே வரும் முனிவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். மாயசக்தியால் தன் தம்பி வாதாபியை உணவாக சமைத்து, விருந்து உபசரிப்பார் வில்வலன். முனிவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ‘வாதாபி வெளியே வா!' என்று வில்வலன் அழைத்ததும், முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வாதாபி வெளியே தாவிக் குதிப்பான். உடனே முனிவர்கள் இறந்துவிடுவார்கள்.

இதனால் பயம் கொண்ட முனிவர்கள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அதற்கு ஈசன், அகத்திய மகரிஷி பூலோகம் வரும்பொழுது இதற்கு ஒரு முடிவு ஏற்படும்’ என்று கூறி ஆசீர்வதித்தார்.

சில காலம் கழித்து, பூலோகத்தில் தென்திசை வழியாக அகத்தியர் வந்தபோது, ரிஷிகளுக்கு நடந்த கொடுமைகளை தம் ஞானத்தினால் அறிந்துகொண்டார். வழக்கம்போல வில்வலனும் வாதாபியும் அகத்தியரை விருந்துக்கு அழைத்து உபசரித்தார்கள். முன்னதாகவே இந்த சூழ்ச்சியை அறிந்திருந்த அகத்தியர் விருந்துண்டதும், மந்திர சக்தியால் வாதாபியை தன் வயிற்றிலேயே ஜீரணம் செய்துவிட்டார். தாம்பூலம் தந்து உபசரித்த வில்வலன், எப்போதும்போல் ‘வாதாபி வெளியே வா!' என்றான். அகத்தியர் சிரித்துக்கொண்டே வயிற்றைத் தடவினார்.

தம்பி வெளியே வரமுடியாதது கண்டு கோபங்கொண்ட வில்வலன், அகத்தியரை பலவிதமாகத் துன்புறுத்தினான். உடனே அகத்தியர் தம் இஷ்ட தெய்வம் முருகன் மற்றும் சிவன், விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தார். சிவனும் விஷ்ணுவும் அனுமதி தர, முருகப் பெருமான் மந்திரம் ஜெபித்து, அருகம்புல்லை அஸ்திரமாக விடும்படி அகத்தியரிடம் கூறினார். அவ்வாறே செய்து வில்வலனை சம்ஹாரம் செய்தார். இதனால் அகத்தியருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

அகத்தியரின் ஆசை

தோஷ நிவர்த்திக்காக சிவனை வேண்டினார் அகத்தியர். அவ் விடத்தில், அங்காரஹத் தீர்த்தக் குளம் ஒன்றையும், வழிபட சிறிய படிகலிங்கம் ஒன்றையும் அகத்தியரிடம் வழங்கினார் ஈசன். அதற்கு நன்றி கூறிய அகத்தியர், ‘சுவாமி! எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவ ஞாபகார்த்தமாக தாங்களும் விஷ்ணுவும் இந்த வனத்திலேயே திருக்கோவில் கொண்டு பக்தர்களைக் காப்பற்ற வேண்டும்’ என்று பணிந்து நின்றார். அதன்படியே இங்கு தனித்தனியே கோவில் கொண்டனர் ஈசனும், பெருமாளும்.

புராண காலத்தில் வில்வ வனமாக விளங்கிய இப்பகுதி தற்போது வில்வலன், வாதாபி இருவர் பெயரும் சேர்ந்து ‘வில்லிவாக்கம்’ என அழைக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெருஞ்சிறப்புக் கொண்ட இந்த சேத்திரத்தில் மகாவிஷ்ணு, அமிர்தவல்லித் தாயார் உடனுறை சவுமிய தாமோதரப் பெருமாள் ஆக எழுந்தருளியுள்ளார்.

இவ்வாலயம், தென்கலை வைணவத்தலங்களுள் சிறப்புமிக்கத் தலமாகவும், வைகானச ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவிலாகவும் விளங்குகிறது.

முழங்கால் அளவு

கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் சவுமிய தாமோதரப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மேற்கரம் இரண்டும் சங்கு, சக்கரத்துடன் உள்ளது. கீழ் வலக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடக்கரம் ஆவாஹன ஹஸ்தமாகவும் அமைந்துள்ளது (வழிபடும் பக்தர் களைக் காப்பாற்றுவேன், கவலை வேண்டாம் என உணர்த்தும் அபய ஹஸ்தமாகவும், உங்கள் துயரம் முழங்கால் அளவுதான் என்று உணர்த்தும் ஆவாஹன ஹஸ்தமாகவும் உள்ளது). பெருமாளின் அடிவற்றில் தழும்பு வடுக்கள் அமைந்துள்ளன.

அமிர்தவல்லித் தாயார் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். மேல் கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்கள் தாங்கி, கீழ்க்கரம் இரண்டும் வரத, அபய முத்திரைகளுடன் புன்னகை தவழும் முகத்துடன் தாயார் சேவை சாதிக்கிறார்.

திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்க விரும்பும் பெண்கள், இங்கு அமிர்தவல்லித் தாயாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை தரிசனம் காண்பது சிறப்பு. தொடர்ந்து ஐந்து வாரம் இந்த ஊஞ்சல் தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வரும் உத்திர நட்சத்திரத்தில் மகாலட்சுமி சகஸ்ர நாமம், அஷ்டோத்ரம், அம்ருதவல்லி ஸ்தோத்திரம் சொல்லி தேன், பேரீச்சம்பழம் நிவேதனம் செய்வது நன்று. வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அமிர்தவல்லித் தாயார் ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்து தரிசனம் தருகிறார். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, திருவோண நட்சத்திரம், ஏகாதசி தினங்களில் (பஞ்சபர்வ உற்சவம்) தாயாரும் பெருமாளும் தோட்டத்தில் உலா வந்து, ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வழிபாட்டு முறை

கை, கால் சுத்தம் செய்து கொண்டு, முதலில் பலி பீடத்தையும், கொடிமரத்தையும் வணங்கி, பூமி நமஸ்காரம் செய்து வெளிப்பிரகாரம், அஷ்டதிக் பலி பீடங் களையும் வலம் வந்து மீண்டும் கொடி மரத்தை வணங்கி தாயார், கண்ணன், ராமர் சன்னிதிகளை வணங்கி, ஆண்டாள், ஆழ்வார்களையும் வணங்கி, வலம்வந்து மீண்டும் கொடிமரத்தை வணங்கி, ‘பெரிய திருவடி' கருடனை வணங்கி, ஜய, விஜயர்கள் உத்தரவு பெற்றுக்கொண்டு கருவறையிலுள்ள பெருமாளை வணங்கி, பிறகு ‘சிறிய திருவடி' அனுமனை வழிபடவும்.

வழிபாட்டு பலன்

அறியாமல் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவினால் அடையும் துன்பங்களும், அறிந்தே இப்பிறவியில் செய்த வினையால் ஏற்படும் துன்பங்களும், தாமோதரப் பெருமாளை வழி படுவதால் அகன்றுவிடும். புதன் கிழமை அன்று அர்ச்சனை செய்து, பச்சைப்பயறு, சுண்டல் அல்லது பால் பாயசம் (அக்கார வடிசல்) குழந்தை களுக்கு தானம் தருவது சிறப்பு. மிதுனம், கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து 5 புதன்கிழமை விரதம்இருந்து, தாமோதர காயத்ரி மந்திரம் ஜெபம் செய்து (காலை 6-7, 9-10, மாலை 5-6 மணிக்குள்) பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தை ஐந்து முறை வலம் வர வாழ்வில் மிகுந்த முன்னேற்றம் அடைவார்கள். உத்திர நட்சத்திரம் வரும் புதன்கிழமையிலும், அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்றும் வழிபடுவது உத்தமம்.

அமைவிடம்

சென்னை மாநகரின் மேற்கு திசையில் அயனாவரம் - பாடி இடையே வில்லிவாக்கம் உள்ளது. ரெயில் மார்க்கத்தில் பெரம்பூர் - அம்பத்தூர் இடையில் வில்லிவாக்கம் உள்ளது.

Monday 22 October 2018

ஒரே சமயத்தில் பல்லாயிரம் லிங்கங்களைப் பூஜித்த பலன் கிடைக்க வேண்டுமா?

annabishekam1

மகா வில்லாளி அர்ஜுனனுக்கு தன்னைவிடச் சிறப்பாக சிவபூஜை செய்பவர், சிறப்பான லிங்கத்தை வைத்துப் பூஜிப்பவர் யாருமில்லை என ஒரு கர்வம் கொண்டிருந்தான். அதனை அறிந்த கண்ணன் உன்னைவிட அதிகமான லிங்கங்களை வைத்து சிவபூஜை செய்யும் தம்பதியினர் இதே ஊரில் இருக்கின்றனர். அதனால் உன்னைவிட அவர்களே சிவபூஜை செய்வதில் சிறந்தவர்கள் எனக் கண்ணன் சொல்கிறார். 

யார் என அர்ஜுனன் கேட்க ஒரு குடியானவரையும் அவர் மனைவியையும் காட்டுகிறார். அர்ஜுனன் அக்குடியானவருக்குத் தெரியாமல் காலை முதல் இரவு வரை அவரது நடவடிக்கைகளைப் பார்க்கிறான். ஆனால், சிவபூஜையே அவர் செய்யவில்லை, திரும்ப கண்ணனிடம் வருகிறான். நடந்தவற்றைச் சொல்லி அவர்கள் சிவபூஜையே செய்யவில்லை, சிவலிங்கமே அவர்கள் வீட்டில் இல்லை, ஒருமுறை சேர்ந்து நின்று சாதம் வடித்த பானையை கும்பிட்டனர் அவ்வளவு தான் என கூறுகிறான். 

அப்போது கண்ணன், உலக ஜீவராசிகள் பசிப்பிணி தீர்க்கப் பொன்மணி தேவையா அரிசிமணி தேவையா எனக் கேட்க, அர்ஜுனனும் அரிசிதான் பொன்னைவிட உயர்வானது. அதனால் தான் அரிசியும் சிவனும் ஒன்னு எனப் பழமொழியே வந்தது என்கிறான்.

கண்ணனும் அப்படியென்றால் ஒரு அன்ன பருக்கை ஒரு லிங்கத்திற்குச் சமம் தானே? ஒரு பானை நிறைய சாதம் வடித்தபின் அதனை வணங்கினால் பல ஆயிரம் லிங்கங்களை வணங்கியதற்குச் சமம் தானே அதனால் ஒரே சமயத்தில் பல ஆயிரம் லிங்கங்களை வைத்துப் பூஜித்த அவரே சிறந்த சிவபக்தர் என்கிறார் கண்ணன். 

எந்த லிங்கத்தையும் விட அன்னத்தில் லிங்கம் பிடித்து வைத்துப் பூஜித்தால் பலன் அதிகம். அதனால் நித்தம் வீட்டில் சாதம் வெண்கலப் பானையிலோ, குக்கரிலோ வடித்தபின் அதற்கு ஒரு விபூதி பட்டையிட்டு திலகமும் சிறிது பூவும் வைத்து, முடிந்தால் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் இரண்டை வைத்து கிழக்கு நோக்கி நின்று தம்பதிகளாக வணங்கினால் இம்மை, மறுமை இரண்டிலும் இறைவன் அருள் பெற்று வாழ்வாங்கு வாழலாம். 

அதிலும் அன்னாபிஷேக மாதமான ஐப்பசியில் இதனை செய்வோர் எல்லா நலன்களும் பெற்று வாழ்வார்கள் என்பது திண்ணம். 

இந்தாண்டு சிவாலயங்களில் அன்னவார்ப்பு (அன்னாபிஷேகம்) 24.10.2018 புதன்கிழமை அன்று மாலை நடைபெறும். 

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்

மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

பொதுப் பொருள்:

மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.

இந்தத் துதியை தினமும் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வர, குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.

ஞானம் அருளும் சரஸ்வதி

ஞானம் அருளும் சரஸ்வதி

சத்தியலோகத்தில் இருக்கும் பிரம்மனுக்கும், சரஸ்வதிக்கு ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ‘வாக்கு’ என்னும் கல்விக்கு அதிபதி என்ற கர்வம் சரஸ்வதியிடம் காணப்பட்டது. இதனால் பேசும் சக்தியை இழக்கும்படி சரஸ்வதிக்கு பிரம்மன் சாபம் கொடுத்தார்.

தன் தவறை எண்ணி வருந்திய சரஸ்வதி, பூலோகத்தில் வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் (திருமறைக்காடு) சென்று அங்குள்ள ஈசனை நோக்கி தவமிருந்தாள். பின்னர் அத்தல அம்பாளிடம் யாழ் இசைத்து காண்பிக்க வந்தாள். அப்போது அம்பாளின் குரல், தன் யாழில் இருந்து வெளிப்பட்ட இசையை விட இனிமையாக இருப்பதைக் கண்டு, யாழை மூடிவைத்து விட்டாள். இதனால் தான் வேதாரண்யத்தில் உள்ள இறைவியின் பெயர் ‘யாழைப் பழித்த மென்மொழியாள்’ என்றானது.

தன்னைப் பிரிந்து சென்ற சரஸ்வதியைத் தேடி பூலோகம் வந்தார் பிரம்மன். தவத்தில் இருந்த சரஸ்வதியை சமாதானம் செய்து, வாணியம்பாடி தலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் வழிபட்டதன் பயனாக சரஸ்வதிக்கு பேசும் சக்தி வந்தது. மேலும் அங்குள்ள ஹயக்ரீவன் முன்னிலையில் யாழை மீண்டும் சரஸ்வதி இசைக்க இறைவனும், இறைவியும் அருள்புரிந்தனர். இதையடுத்து சரஸ்வதி இனிய கீதம் இசைத்தாள்.

சரஸ்வதிக்கு வாணி என்ற பெயரும் உண்டு. வாணி பாடிய தலம் என்பதால், அது ‘வாணியம்மைபாடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி ‘வாணியம்பாடி’ ஆனது.

சரஸ்வதி பூஜையன்று இந்த தலத்தில் ஈசனையும், அம்பாளையும், கலைவாணியையும் முறையே ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட்டால் கல்வியறிவு ஊற்றெடுக்கும் என்பது நம்பிக்கை. ஞானம், தெளிவு பிறக்கவும், கல்வியிலும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றிபெறவும், உயர்பதவிகள் கிடைக்கவும் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வேலூரில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது வாணியம்பாடி

Saturday 20 October 2018

காசியில் கருடனும் பல்லியும்

காசியில் கருடனும் பல்லியும்

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. காரணம் பின்வருமாறு:-

ராமர், ராவண வதம் செய்தபின் சேதுவில் சிவ பூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி ஏவினார்.

அனுமார் காசியை அடைந்து பார்த்தார். எங்கும் லிங்கங்கள்; எது சுயம்பு லிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமார் அந்தச் சிவலிங்கத்தைப் பேர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலராகிய காலபைரவர் அதுகண்டு கோபித்தார். “என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்?” என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும், அனுமாருக்கும் கடும் போர் நடந்தது.

அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி, “உலக நன்மைக்காக இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்” என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொடுத்தனுப்பினார்.

தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமாருக்குத் துணை புரிந்த கருடன் காசிநகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்றும் கருடன் பறப்பதில்லை. பல்லி ஒலிப்பதில்லை.

Friday 19 October 2018

புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில்

புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் கோவில்

திருமங்கை நகர், பொன்மலை, கோயில்புரி, கோயில்பட்டி என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர் தற்போது ‘கோவில்பட்டி’ என்றழைக்கப்படுகிறது. இங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பகமன்னன் என்பவன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி, கோவிலும், ஊரும் எழுப்பினான் என்கிறது கோயில்புரி வரலாறு. ஆனால் அவருடைய காலத்தை அறிய இயலவில்லை.

இவ்வூருக்கு தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மந்தித்தோப்பிலுள்ள சங்கரபாரதி திருமடத்தில் ஒரு செப்புப் பட்டயம் உள்ளது. அது குலசேகர பாண்டியனால் கலி4131 சாலிவாகன சகாப்தம் 952-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளதால், கோயில்புரி கலி 4131-க்கு முற்பட்டது எனத் தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஆலயத்தை உள்ளமுடையான் என்பவர் புதுப்பித்தார் என்பதும், அதற்கு 148 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மந்தித்தோப்பு பட்டயத்தில் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளதாலும், சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் இருந்ததென்பது தெளிவாகிறது. இத்திருக்கோவிலைப் புதுப்பித்த உள்ளமுடையான் சிலை ஒன்று, சுவாமி சன்னிதி மகாமண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ளது.

தல வரலாறு :

சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் ஒருங்கே கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.

அங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின் வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே ‘அகத்தியர் தீர்த்தம்’ என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும்.

அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார். ‘நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக’ என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.

முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் இச்சிவலிங்கம் ‘பூவனநாதர்’ என்று பெயர் பெறும். புன்னைக்காவலில்(சங்கரன்கோவில்) உங்கள் ஐயம் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார்.

சங்கனும், பதுமனும் பூவன பூக்களால் இத்தல இறைவனை வழிபட்டதால், இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி, ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையை இகழ்ந்தாள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று, கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது. அம்பாள் அருள்தரும் அன்னையாக, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

இவ்வன்னை இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான் இத்திருக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், முதலில் அம்பாள் சன்னிதியில் வழிபாடு முடித்துவிட்டு, பின்னர் சுவாமி சன்னிதிக்குச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களிடையே, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் செண்பகவல்லி என்ற பெயர் வைக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. தென் தமிழ் நாட்டு திருக்கோவில்கள் பலவற்றில் தேவியருக்கே மகிமை அதிகம். மாமதுரை மீனாட்சி, நீலத்திரை கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை, திருநெல்வேலியில் காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி. இந்த வரிசையில் செக்கிழுத்த செம்மல் செந்தமிழில் புகழ்ந்து பாடிய கோயில்புரியாம் கோவில்பட்டியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை செண்பகவல்லியின் அருள் அளவிடற்கரியது.

பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரமன், இத்திருத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன் பூவனநாதராகப் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்து வருகிறார். பொன்மலை களாக்காட்டிடையே தோன்றிய மூர்த்தி என்பதால் இவருக்கு ‘களாவனநாதர்’ என்ற திருநாமமும் உண்டு.

ஆலய அமைப்பு :

இத்திருக்கோவில் இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சுவாமி- அம்பாள் இருவருக்கும் தனித் தனி திருவாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. இதில் அம்பாள் திருவாசலில் சுவாமி அம்பாள் திருமணக் காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைக்கோபுரம் உள்ளது. சுவாமி திருவாசலின் முன்பாக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கண்கொள்ளாக் காட்சி தருகிறது. அம்மன் சன்னிதி குடவரை வாசலில் தென்புறம் பஞ்சமிகு விநாயகர் சன்னிதியும், வடபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதியும் உள்ளன.

செண்பகவல்லி அம்மனின் சன்னிதி முன்புறம் அமைந்துள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் கடந்து செல்லும் வழியில், கருவறையின் இருபுறமும் துவார சக்திகள் உள்ளனர். அவற்றின் தென்புறம் விநாயகரும், வடபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி கருவறையின் பின்புறம் கிரியா சக்தி பீடமும், வடபுறம் சண்டிகேஸ்வரியின் தனி சன்னிதியும் உள்ளன. அம்பாள் திருக்கோவிலை அடுத்துள்ள தெற்குப் பலிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும், அதனை அடுத்து உக்கிராண அறையும் உள்ளன.

சுவாமி, அம்பாள் திருக்கோவில்களுக்கு நடுவே உற்சவமூர்த்திகள் சன்னிதி காணப்படுகின்றன. அதன் முன்புறம் கொலுமண்டபம் இருக்கிறது. பழங்காலத்தில் இந்த சன்னிதி பாலசுப்பிரமணியருக்கு தனி சன்னிதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கொலுமண்டபத்தின் முன்புறம் அம்பாள் சன்னிதி கொடிமரத்தை அடுத்து, ஆலய தல விருட்சமான களா மரம் உள்ளது. இத்திருக்கோவில் வளாகத்தினுள் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் தீராத பிணியெல்லாம் தீரும். எல்லா செல்வமும் நம்மை வந்து சேரும், பூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங்களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம்.

அமைவிடம் :

தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அடிக்கடி கோவில்பட்டிக்கு பேருந்துகள் உள்ளன. அதைப்போல் குறிப்பிட்ட நேரங்களில் ரெயில் வசதிகளும் உள்ளன.

Thursday 18 October 2018

பக்தனுக்காக சமையல்காரனாக மாறிய பாண்டுரங்கன்

pandu

அது கல்யாண வீடு என்பதற்கு வாசலில் இருந்த இரண்டு வாழை மரங்களே சாட்சியாக நின்றிருந்தன. வேறு எந்த ஆர்ப்பரிப்பும் அங்கு இல்லை. ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த அது ஒன்றும் பணக்காரரின் வீடும் அல்ல, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் வீடும் அல்ல.

தனக்கும், தன் மனைவி மற்றும் மகளுக்கும் தேவையான உணவை, தினமும் உஞ்ச விருத்தி எடுத்துச் சாப்பிட்டு வரும், பாண்டுரங்கனின் பரம பக்தன் நீளோபாவின் வீடு. பிம்பளம் என்ற அழகிய நகரத்தின் நடுவே அமைந்திருந்த நீளோபாவின் வீட்டில்தான் திருமண நிகழ்ச்சி.

அழகு இருந்தும், பணம் இல்லாததால் தன் மகளுக்கு திருமணம் நடைபெறுமா? என்ற கவலையில் தவித்து வந்தார் நீளோபாவின் மனைவி. ஆனால் ‘எல்லாம் இறைவனுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொள்வான்’ என்று அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு, பகவானின் பதத்தை பணிவதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தார் நீளோபா.


இந்த நிலையில் நீளோபா புதல்வியின் அழகில் மயங்கிய வாலிபன் ஒருவன், அவளை மணம் செய்து கொள்ள வலிய வந்தான். அவனும் ஏழைதான் என்றாலும், அழகிலும் வலிமையிலும் சிறந்தவனாக இருந்தான். திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டு, அந்த நாளும் நெருங்கி விட்டது.

நாளையப் பொழுதில் திருமணம். ஆனால் நீளோபாவின் வீடு உறவுகளின் கலகலப்பின்றி காணப்பட்டது. நீளோபாவின் வீட்டில் பணப் பஞ்சம் என்பதால், அவரது உறவினர்களின் மனதில் அன்புப் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் நீளோபாவின் வீடு வெறிச்சோடிப் போய் கிடந்தது. எங்கே திருமணம் வீட்டிற்கு முன்பாகவே சென்றால், பொருள் உதவி செய்ய வேண்டியிருக்குமோ என்ற எண்ணத்தில் எவரும் வந்து சேரவில்லை.

இரக்க குணம் படைத்த பணக்காரர்கள் சிலர் கொடுத்த காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், இலை போன்றவை கொஞ்சம் இருந்தது. ஆனால் அவை திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வைக்க போதுமானதாக இருக்குமா? என்று நீளோபாவின் மனைவி கவலையில் ஆழ்ந்தாள்.

அப்போது வீட்டின் வாசலில் முதியவர் ஒருவர் வந்து நின்றார். வெளியே வந்த நீளோபாவிடம், ‘ஏன்பா! நீளோபா–ன்னா நீதானா. உன் மகளுக்கு கல்யாணமாமே?’ என்று கேட்டார் முதியவர்.

‘எல்லாம் இறைவனின் சித்தம். ஐயா! தாங்கள் யாரென்று தெரியவில்லையே? எந்த ஊர்?’ என்று பணிவாக கேட்டார் நீளோபா.

அதற்கு முதியவர், ‘எனக்கு ஏது ஊரு? எல்லா ஊரும் நம்ம ஊருதான். குருவாயூர், மதுரா, பிருந்தாவனம், கோகுலம், உடுப்பி. இப்படி ஊர் ஊராய் போய் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கிறேன்’ என்று கூறிக் கொண்டே, தான் அணிந்திருந்த கந்தல் துணியில் போட்டிருந்த சிறு சிறு முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினார். ‘ஐயா! எனக்கு இப்போது அபார பசி. என்னிடம் இருக்கும் இந்த அரிசி, பருப்பு, காய்கறி, புளி, மிளகாய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் சாப்பாடு போட்டால் நல்லது’ என்றார் முதியவர்.

நீளோபா அவரைத் தடுத்து, ‘திருமண வீட்டில் சாப்பாட்டுக்கு பஞ்சமா?. உள்ளே போய் பசியார உணவருந்துங்கள். அரிசி, பருப்பு கொடுத்து தான் சாப்பிட வேண்டுமா?’ என்று கூறினார்.

‘நீளோபா! நாளை தான் கல்யாணம். அதற்கடுத்த நாள் வரை இந்தப் பொருட்களை காப்பாற்ற முடியாது. உனக்கு பிச்சைக்காரனிடம் வாங்குவதற்கு அவமானமாக இருக்கிறது போலும். நானும் மானம் உள்ளவன்தான். எனக்கு உன் வீட்டு சாப்பாடு வேண்டாம்’ என்று கூறி அங்கிருந்து புறப்படத் தயாரானார்.

பதறிப்போய் அவரை தடுத்தார் நீளோபா. ‘ஐயா! நில்லுங்கள். அந்தப் பொருட்களை தாருங்கள்’ என்று கூறியவர், தன் மனைவியை அழைத்து அதனை வாங்கிக் கொள்ளும்படி கூறினார்.

முதியவரிடம் இருந்து பொருட்களை நீளோபாவின் மனைவி பெற்றுக் கொண்டாள். அவளிடம், ‘தாயே! இதனை கல்யாண சமையலுக்கு வைத்திருக்கும் பொருட்களோடு சேர்க்க வேண்டும்’ என்றார் முதியவர். அவளும் அப்படியே செய்தாள். அதன்பிறகு முதியவருக்கு உணவு அளித்தனர். அதனை சாப்பிட்டு முடித்தார்.

அப்போது சமையல் அறையில் நீளோபாவின் மனைவியும், மகளும் கல்யாண சமையல் பொருட்களை தரம் பிரித்து வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.

‘என்ன! அனைத்து வேலைகளையும் கல்யாண பெண்ணும், அம்மாவும் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று நீளோபாவிடம் கேட்டார் முதியவர்.

நீளோபா வருத்தம் தோய, ‘ஐயா! நானே உஞ்சவிருத்தி பெற்று சாப்பிடுபவன். நான் எப்படி வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ள முடியும்?’ என்றார்.

‘அப்படியானால் நாளைக்கு சமையல்?’ என்று முதியவர் கேட்க, ‘அதற்காகத்தானே நேரம் கழித்து முகூர்த்தம் பார்த்தது. சீக்கிரமே எழுந்து சமையலை முடிக்க வேண்டியதுதான். தாலி கட்டி முடிந்ததும் அப்பளம் தயார் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்’ என்றார் நீளோபா.

‘நன்றாக இருக்கிறது! தன்னுடைய கல்யாணத்திற்கே மணப்பெண்ணே சமைப்பதா?.நன்றாக இருக்கிறது!. நாளைக்கு அடிப்படிப் பக்கம் நீங்கள் யாருமே வரக்கூடாது. நான் நன்றாகச் சமைப்பேன். சிக்கனமாய், அதே நேரத்தில் சுவையாய், மணமாய், விதவிதமான சமையல் செய்வேன். திருமண விருந்திற்கு என்னென்ன வேண்டும்? என்பது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை திருமணத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்று, விருந்துண்ண அனுப்ப வேண்டியது மட்டும்தான் உங்கள் வேலை’ என்று கூறிவிட்டார் முதியவர். அவரது வார்த்தையைக் கேட்டதும் மகிழ்ந்து போனார் நீளோபா. ‘அந்த பகவானே உங்களை அனுப்பி வைத்ததாக கருதுகிறேன். மிக்க மகிழ்ச்சி’ என்றார். விருந்தில் மயங்கினர்
அப்போது போய் அடுப்படியில் நுழைந்தவர்தான், அனைத்து பணிகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டார். இரவு நேரங்கழித்து தூங்கி, வெகு அதிகாலையிலேயே எழுந்து சமையல் பணியை முடித்துவிட்டார். திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சமையலை ‘ஆஹா, ஓகோ’ என புகழ்ந்து தள்ளிவிட்டனர். அந்த வர்ணிப்பைக் கேட்டு நாக்கில் எச்சில் ஊற சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

‘என்ன நீளோபா.. திருமணத்திற்கு வீடு தேடி வந்து அழைத்தாய்.. வராவிட்டால் ஏழை என்று ஒதுக்கிவிட்டதாக நினைத்து கொள்வாய் என்றுதான், அவசர வேலைகளைக் கூட அப்படியே போட்டு விட்டு வந்தேன்’ என்று கூறியபடி வந்த உறவினர்கள் அனைவரும் திருமண விருந்தைக் கண்டு வாயடைத்து போய்விட்டார்கள்.

விருந்தில் அத்தனை பதார்த்தங்களை இதுவரை எவரும் பார்த்திருக்க மாட்டார்கள். லட்டு, முறுக்கு, அதிரசம் என்று கண்களை கவர்ந்தன. சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது, முந்திரியும், பாதாமும் முதல் பந்தியில் சாப்பிட்டவர்களை, அடுத்த பந்திக்கும் இழுத்தது.

பாண்டுரங்கன் விக்கிரகம்

விருந்தினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், சம்பந்தியும் நீளோபாவை பாராட்டித் தள்ளினர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். நீளோபா, தன்னை அனைவரும் பாராட்டியதற்கு காரணமான முதியவரைக் கண்டு அவருக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதற்காக மடப்பள்ளிக்கு சென்றார். 

ஆனால் முதியவரை காணவில்லை. அங்கே சமையல் பொருட்கள் குறையாமல் அப்படியே இருப்பது கண்டு திகைத்தார். வந்தவர் சாதாரணமானவர் அல்ல என்பது அவருக்குத் தெரிந்தது. அவரது எண்ணம் பொய்யில்லை என்பதை, மடப்பள்ளியில் சிலையாக நின்று கொண்டிருந்த பாண்டுரங்கனின் விக்கிரகம் மெய்ப்பித்தது.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்

saraswathi3

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.

உடல் வலிமையின் சக்தியாக துர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைத் தரவல்ல சக்தியாக மஹாலட்சுமியையும், அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக சரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி எனப்படும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி, மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. நவராத்திரியின் ஒன்பது தினங்களை அடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை வழிபட உகந்த நேரங்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.

சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை

காலை 7.30 - 9.00

காலை 10.30 - 12.00

மாலை 3.00 - 4.30

மாலை 6.00 - 7.30 

Wednesday 17 October 2018

தசரா விழா தோன்றிய கதை

தசரா விழா தோன்றிய கதை

குலசையில் தசரா விழா தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். அவர் தவத்தில் சிறந்தவர். ஒரு நாள் அவரது இருப்பிடம் வழியாக மகா முனிவரான அகத்தியர் வந்தார். அவரை பார்த்தும், பார்க்காதது போல் இருந்த வரமுனி ஆணவ செருக்கால் மதிக்கவில்லை. மாறாக அகத்தியரை அவமதிக்கவும் செய்தார். இதை கண்டு கோபம் அடைந்த அகத்தியர் வரமுனிக்கு கடும் சாபம் கொடுத்தார். ‘வரமுனியே! நீ உன் உருவம் இழந்து எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாய்!’ என்றார். அக்கணமே வரமுனி எருமை தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். முனிவர்களை கொடுமைப்படுத்தினார்.

மகிஷாசுரனின் கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தினர். அவர்கள் வேள்வியில் தோன்றிய அன்னை ஆதிபராசக்தி மகிஷாசுரனை அழிக்க, விரதம் இருந்து அவனோடு போர் புரிய புறப்பட்டாள். மகிஷாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் விதத்தில் தசரா விழாவின்போது பக்தர்கள் அம்மன், கடவுள் வேடங்களை தரித்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.

காளிவேட மகிமை

குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். காளி வேடத்தில் இருப்பவர்களை கண்டதும் அம்மனே நேரில் வந்ததாக பக்தர்கள் நினைத்து வழிபட்டு, காணிக்கை அளித்து அருள்வாக்கு பெறுவதும் வழக்கமாக உள்ளது. அம்மன், சூரனை சூலாயுதத்தால் குத்தும்போது இவர்களும் கைகளில் உள்ள சூலாயுதத்தால் மகிஷனை குத்துவார்கள்.

காளிவேடம் போடுபவர்கள் தசராவின்போது 48 நாட்கள் விரதம் இருப்பர். அந்நாட்களில் ஒருவேளை மட்டுமே சைவ உணவு சாப்பிடுவார்கள். அவரவர் ஊரின் கோவில்களில் தங்கி தானே சமைத்து, காலை, மாலை இரு வேளையும் குளித்து விரதம் மேற்கொள்வார்கள். கொடியேற்றத்திற்கு பின் இவர்கள் ஊர், ஊராக செல்வார்கள்.

தலையின் பின்புறம் தொங்கும்படி கட்டப்பட்ட நீண்ட முடியுடன், தகரத்தாலும், அட்டையாலும் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்ட கிரீடம், நேர்பார்வை மட்டுமே பார்க்க தக்கவாறு சிறு துளையிடப்பட்டுத் தகரத்தால் செய்யப்பட்ட கண்மலர், வாயின் இருபுறமும் செருகி கொள்ளக்கூடிய வீர பற்கள், வெளியில் தொங்கும் நாக்கு, முகத்தில் சிவப்பு நிற பூச்சு, மரப்பட்டையாலும், இரும்பு தகடாலும், அட்டையாலும் செய்யப்பட்ட பக்கத்துக்கு நான்கு என்ற முறையில் 8 கைகள், சிவப்பு புடவை, மனித தலைகள் வரையப்பட்ட அட்டை மாலை, ருத்திராட்ச மாலைகள், பாசி மாலைகள், இடையில் ஒட்டியாணம், காலில் கனத்த சலங்கைகள், கையில் இரும்பு வாள் இவையே காளியின் அவதாரமாக அணிவதற்கு உரிய பொருட்கள். இப்பொருட்களின் மொத்த எடை 30 கிலோ இருக்கும். சமீபகாலமாக முத்தாரம்மன் அருள்பெற இளம்பெண்களும் காளி வேடம் போட தொடங்கி உள்ளனர்.

கல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி

கல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி

சரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள்ள அள்ள குறையாத செல்வம் கல்வி செல்வம் அதை வழங்குவது சரஸ்வதி தாய். 

கல்வி, ஞானம், கலை அனைத்தும் பெற சரஸ்வதி தாயாரை வணங்க வேண்டும். சரஸ்வதி தேவி மூல மந்திரம், அஷ்டோத்ர நாமம், நாமாவளி, சுலோகம் கூறி வழிபடலாம். இதையெல்லாம் சொல்ல தெரியாது என்பவர்கள் "ஓம் சரஸ்வதியே நம !"என 108 தடவை சொல்லலாம். சரஸ்வதிகுரிய  பாடல்கள் பாடியும் வணங்கலாம் .

புதன் கிழமை காலையில்  கிழக்கு நோக்கி அமர்ந்து, சரஸ்வதி 12 நாமங்களை சொன்னால், கல்வி முன்னேற்றம் ,நல்ல வாக்கு வன்மை கிடைக்கும். 

மாணவர்கள், பணி புரிபவர்கள்.கலை துறையில் உள்ளவர்கள் இதை சொன்னால் கல்வியில் உயரவும், இருக்கும் நிலை தக்க வைத்து கொள்ளலாம்.

சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை சுண்டல், வடை, பாயாசம் செய்து வழிப்படலாம். இவையெல்லாம் செய்ய முடியாதவர்கள் கல்கண்டு, பேரீச்சம் பழம் ஏதாவது வைத்து வணங்கலாம்.

படிக்கிற குழந்தைகள் சரஸ்வதியை வணங்க அம்மாவின் அனுக்கிரகம் கிடைக்கும். சகல நலங்கள் பெற சரஸ்வதியை புகழ் பாடி போற்றுவோம்.

ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி
ஓம் அன்பின் வடிவே போற்றி
ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி
ஓம் அறிவுக்கடலே போற்றி
ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி
ஓம் அன்ன வாகினியே போற்றி
ஓம் அகில லோக குருவே போற்றி
ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி
ஓம் ஆசான் ஆனவளே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆதாரசக்தியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி
ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி
ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி
ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி
ஓம் உண்மைப் பொருளே போற்றி
ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி
ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி
ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி
ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி
ஓம் ஓங்கார வடிவினளே போற்றி
ஓம் கலைக் களஞ்சியமே போற்றி
ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி
ஓம் கலை ஞானச் செல்வியே போற்றி
ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி
ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி
ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி
ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி
ஓம் குணக் குன்றானவளே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி
ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி
ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி
ஓம் சாந்த சொரூபினியே போற்றி
ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி
ஓம் சாரதாம்பிகையே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
ஓம் சித்தியளிப்பவளே போற்றி
ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி
ஓம் சுத்தஞான வடிவே போற்றி
ஓம் ஞானக்கடலானாய் போற்றி
ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
ஓம் ஞானேஸ்வரியே போற்றி
ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி
ஓம் ஞான ஆசிரியையே போற்றி
ஓம் ஞானத்தின் காவலே போற்றி
ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி
ஓம் தகைமை தருபவளே போற்றி
ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி
ஓம் தாயான தயாபரியே போற்றி
ஓம் தண்ணருள் தருவாய் போற்றி
ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி
ஓம் நவமி தேவதையே போற்றி
ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
ஓம் நன்னெறி தருபவளே போற்றி
ஓம் நலம் அளிப்பவளே போற்றி
ஓம் நாவிற்கு அரசியே போற்றி
ஓம் நல்லவர்களின் மனமே போற்றி
ஓம் நா நயம் அருள்வாய்போற்றி
ஓம் நான்மறை நாயகியே போற்றி
ஓம் நாவில் உறைபவளே போற்றி
ஓம் நாதத்தின் தலைவியே போற்றி
ஓம் நாத வெள்ளமானாய் போற்றி
ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி
ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி
ஓம் நித்தம் வளர்பவளே போற்றி
ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி
ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி
ஓம் பண்ணின் இசையே போற்றி
ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி
ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி
ஓம் பிரணவ சொரூபமே போற்றி
ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி
ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி
ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி
ஓம் பூரண வடிவானவளே போற்றி
ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி
ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி
ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி
ஓம் மங்கல வடிவானவளே போற்றி
ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி
ஓம் மாயையை அழிப்பவளே போற்றி
ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி
ஓம் முற்றறிந்த அறிவே போற்றி
ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி
ஓம் மூல மந்திர வடிவினளே போற்றி
ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி
ஓம் முக்தி அளிப்பவளே போற்றி
ஓம் மேதையாக்குபவளே போற்றி
ஓம் மேன்மை தருபவளே போற்றி
ஓம் யாகத்தின் பலனே போற்றி
ஓம் யோகத்தின் பயனே போற்றி
ஓம் வழித்துணை வருவாய் போற்றி
ஓம் வரம் அருள்பவளே போற்றி
ஓம் வாணி சரஸ்வதியே போற்றி
ஓம் வாக்கின் நாயகியே போற்றி
ஓம் வித்தக வடிவினளே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி 
ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி
ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி
ஓம் வெண்தாமரையினாளே போற்றி
ஓம் வீணை ஏந்தியவளே போற்றி
ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி
ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி