Friday 31 August 2018

கிரகங்களாக மாறிய ராகு - கேது வரலாறு

கிரகங்களாக மாறிய ராகு - கேது வரலாறு

அமிர்தம் பெறுவதற்காக பாற்கடல் கடையப்பட்டது. தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது சில பொருட்கள் கடலுக்குள் இருந்து வெளிப்பட்டன. அதில் காமதேனு என்ற பசு, உச்சை சிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற யானை மற்றும் கற்பக விருட்சத்தை தேவர்களின் தலைவனான தேவேந்திரன் எடுத்துக்கொண்டான். அப்சரஸ்திரிகளை அசுரர்கள் ஏற்றுக் கொண்டனர். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார். பின்னாளில் அவளை கவுதம முனிவர் மணம் முடித்தார். திருமகள் என்ற லட்சுமி தேவியை, மகாவிஷ்ணு தன் மார்பில் அமர்த்திக் கொண்டார்.

இறுதியாக அமிர்த கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி பகவானிடம் இருந்து, அசுரர்கள் அமிர்த கலசத்தை பறித்துச் சென்றனர். அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பதில் அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது. இதில் அமிர்தம் யாருக்கும் கிடைக்காமல் வீணாகிவிடும் நிலை உருவானது. இதனால் தேவர்கள் பெரும் கவலை அடைந்தனர்.

அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று, அமிர்தத்தைக் காத்து அருளும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடம் சென்றார். மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணு, ‘நான் அமிர்தத்தை தேவர்களுக்கும் உங்களுக்கும் சரிபாதியாக பங்கிட்டு தருகிறேன்’ என்று அசுரர்களிடம் கூறினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தனர்.

அமிர்த கலசத்தை வாங்கிய மோகினி, தேவர்களையும் அசுரர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னாள். பின்னர், ‘முதலில் எந்த வரிசைக்குக் கொடுக்கட்டும். இல்லை ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா?’ என்றாள்.

அசுரர்கள் அமிர்த கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமிர்தத்தை தங்களுக்கும், தெளிந்த மேல் பகுதியில் இருப்பதை தேவர்களுக்கும் அளிக்கலாம் என்றனர்.

அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கத் தொடங்கினாள் மோகினி. அளவுக்கு அதிகமாகவே தேவர்களுக்கு வழங்கப்பட்டது. மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு என்ற அசுரன், தேவர்களைப் போல உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் போய் நின்றான். அவனைக் கவனிக்காத மோகினி, சுவர்பானுவுக்கும் அமிர்தத்தை வழங்கினாள்.

அமிர்தம் கிடைத்தவுடன் அதை உடனடியாக பருகிவிட்டான் சுவர்பானு. தான் அமிர்தம் உண்டதை யாரும் அறியவில்லை என்று சுவர்பானு கருதினான். ஆனால் அவனைக் கவனித்த சூரியனும் சந்திரனும் அவன் ஒரு அசுரன் என்பதை மோகினிக்கு உணர்த்தினர்.

இதையறிந்த மோகினி, அமிர்தம் வழங்குவதற்காக வைத்திருந்த அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள். உடல் வேறு, தலை வேறாக பிரிந்தாலும், அமிர்தம் உண்ட காரணத்தால் சுவர்பானுவுக்கு மரணம் சம்பவிக்கவில்லை. மேலும் துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்தன.

அசுரர்களுக்கு அமிர்தத்தை வழங்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்த மோகினிக்கு, சுவர்பானு உருமாறி வந்த காரணம் கிடைத்து விட்டது. அதைச் சுட்டிக் காட்டி அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க மறுத்து விட்டாள். இதனால் சுவர்பானுவின் மீது கோபம் கொண்ட அசுரர்கள், சுவர்பானுவை தங்களின் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்ளவில்லை. மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்ட அவனை, தேவர்களும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த சுவர்பானு, பிரம்மதேவரை தஞ்சம் அடைந்தான். தனக்கு பழைய உடல் உருவைத் தரும்படி பிரம்மனிடம் வேண்டினான்.

பிரம்மதேவரோ, ‘நாராயணரால் தண்டிக்கப்பட்ட உன்னை, பழைய நிலைக்கு மாற்றுவது என்பது இயலாது. எனவே இருவேறு உடல் பிரிவுகளைக் கொண்டவனாக இருப்பாய். மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு ‘ராகு’ என்றும், மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு ‘கேது’ என்றும் பெயர் அமையும்’ என்றார் பிரம்மதேவர்.

இதையடுத்து பிரம்மனிடம் மேலும் சில வேண்டுதலை வைத்தான் சுவர்பானு. ‘சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்ததால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே அவர்களைப் பழி வாங்குவதற்கு அருள்புரிய வேண்டும்’ என்றான் சுவர்பானு.

பிரம்மதேவர் எவ்வளவு எடுத்துரைத்தும் அவன் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து ‘நவக்கிரக பரிபாலனத்தில் இணையும்போது, சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை அடக்கி அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கி சஞ்சாரம் செய்வீர்கள்’ என்று பிரம்மன் அருள்புரிந்தார்.

அப்போது ராகு-கேதுவின் முன்பாக மகாவிஷ்ணு தோன்றினார். அவர் பிரம்மனிடம், ‘ராகுவையும், கேதுவையும் உடனடியாக நவக்கிரக பரிபாலனத்தில் ஈடுபடுத்தக் கூடாது. அசுரர்களின் ஆட்சி நடக்கும் காலத்தில் அசுரன் ஒருவனை அப்படி ஈடுபடுத்துவது சரிவராது. அது அசுரர்களின் பலத்தை அதிகரிக்கும். கடைசி அசுரனான ராவணன் அழியும் வரை, கேது கடக ராசியில் அமர்ந்து ரிக், யஜூர், சாம வேதங்களையும், ராகு மகர ராசியில் இருந்து அதர்வண வேதத்தையும் உரியவர்கள் மூலமாக கற்றுணர்ந்து கொள்ளட்டும். ராவணன் அழிவுக்குப் பிறகு, ஞானம் பெற்ற ராகு ஞானகாரகனாகவும், கேது மோட்சகாரகனாகவும் செயல்பட்டு பூமியில் தோன்றிய உயிர்களுக்கு ஞானம் மற்றும் மோட்சத்தை பெற அனுக்கிரகம் செய்யட்டும்’ என்றார்.

அதன்படியே ராவணன் அழிக்கப்பட்ட பின்னர், கேதுவும் ராகுவும் நவக்கிரகங்களில் கிரக அந்தஸ்து பெற்று சஞ்சாரம் செய்யத் தொடங்கினார்கள் என்பது புராண வரலாறு.

திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்

திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்

இறைவனை வழிபட்ட அடியார்கள் பலரும், தாங்கள் அடைந்த பரவசத்தையும், அனுபவத்தையும் பாடல்களாக பாடினர். அப்படிப் பாடிய அடியாளர்களில் சமயக் குரவர்களாக போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்.

பாதிரி மர வனமாக இருந்த பகுதியில் பூத்து குலுங்கிய பலவகை பூக்களை, இறைவழிபாட்டிற்காக பறிக்க விரும் பினார் வியாக்ரபாதர். மரங்களில் ஏறி பூக்களைப் பறிப்பதற்காக இறைவனிடம் வேண்டி புலிக்கால்களைப் பெற்றார். இதனால் இவர் ‘புலிக்கால் முனிவர்’ என்றும் அழைக்கப்பட்டார். ஊரின் பெயரும் புலியூர் ஆனது. சிதம்பரத்திற்கு ஏற்கனவே ‘பெரும்பற்ற புலியூர்’ என்ற பெயர் இருந்ததால், பாதிரி மரங்கள் நிறைந்த இந்த ஊர் ‘திருப்பாதிரிபுலியூர்’ என்றானது. இந்த ஊர் தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ளது.

இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் பாடலேஸ்வரர். இவர் கன்னிவனநாதர், தோன்றா துணையுடைய நாதர், கடைஞாழலுடைய பெருமான், சிவகொழுந்தீசர், உத்தாரேண்யேஸ்வரர், பாடலநாதர், கரையேற்றும்பிரான் என்ற பெயர்களாலும், இறைவி பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவ நாயகி, பிரஹன்நாயகி என்ற பெயர்களாலும் அழைக்கப்படு கிறார். தலவிருட்சம் பன்னிரண்டு வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரமாகும். இத்தலத்தில் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம் (குளம்), பாலோடை, கடிலநதி மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

தல வரலாறு :

உலகத்து உயிர்கள் நலம் பெறுவதற்காக, பரமன் அவ்வப்போது பல திருவிளையாடல்களை நிகழ்த்துவதுண்டு. அதில் ஒன்றுதான் பார்வதியுடன் சேர்ந்து இறைவன் சொக்கட்டான் என்னும் பகடைக் காய் விளையாடியது. விளையாடுவதற்காக அன்னையின் தோழிகள் மாணிக்கக் கல், மரகதப் பலகை, வைரத்தாலான பகடை கருவிகள் தந்து பகடையாடச் செய்தனர். ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அம்பிகையே வெற்றி பெற்றார். ஆனால் ஈசனோ, தான் வெற்றி பெற்றதாகக் கூறினார்.

அருகில் இருந்து ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த திருமால், உண்மையை கூறினால் மற்றொருவரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் எனக்கருதி ஆட்டத்தைக் கவனிக்கவில்லை எனக் கூறிவிட்டார்.

இறைவிக்கு கோபம் எழுந்தது. ‘இறைவன் திருக்கண்களை மறைப்பேன். அதைத்தாண்டி ஒளி தந்தால் இறைவன் வெற்றி பெற்றதாகவும், ஒளி தராவிட்டால் நான் வெற்றி பெற்றதாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி இறைவனின் கண்களை மூடினார். அடுத்த நொடி அண்டசராசரங்களும் இருளில் மூழ்கின. அனைத்து இயக்கங்களும் செயல்களும் நின்று போயின. உயிர்கள் ஓலமிட்டன. ஒரு கணமே நீடித்த இந்த நிகழ்வு, தேவர்களுக்கும் முனிவர்களுக்கு பல யுகங்களாக நீடித்தது.

பதறிப்போன இறைவி, சிவனின் கண்களில் இருந்து கரத்தை எடுத்துவிட்டு தன் செயலால் ஏற்பட்டுவிட்ட விபரீதத்திற்கு மனம் வருந்தினாள். தன்னை மன்னித்து அருளும்படி ஈசனிடம் வேண்டினாள்.

இறைவனோ, ‘நீ பூலோகம் சென்று அங்குள்ள 1008 சிவ தலங்களை தரிசித்து வா. அப்படி நீ தரிசிக்கும் போது, எந்த தலத்தில் உனது இடது கண்ணும், இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் உன்னை நான் ஆட்கொள்வேன்’ என்று அருளினார்.

அதன்படி பார்வதிதேவி ஒவ்வொரு சிவாலயமாக தரிசித்தபடி வந்தாள். ஒரு கட்டமாக பாதிரி வனமாக திகழ்ந்த இந்தத் தலத்திற்கு வந்து இறைவனை தரிசித்தபோது, அன்னையின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. அந்த தலத்தில் அன்னை தவம் இயற்றினாள். அரூபமாக இருந்து இறைவனை பூஜித்து வந்தாள். இறைவியின் பூஜைக்கு சப்தமாதர்கள் உதவி புரிந்தனர்.

பாடலேஸ்வரர் ஆலயத்தில் மூலவரின் கருவறையைச் சுற்றி வரும்போது கஜலட்சுமி சன்னிதி காணப்படும். அதை யடுத்து துர்க்கை கோஷ்டமூர்த்தம் உள்ள இடத்தில் அம்பிகை அரூப வடிவில் தவம் செய்த இடம் தனிச்சன்னிதியாக இருக்கிறது. இது அருந்தவநாயகி சன்னிதி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் அரூப நிலையை உணர்த்தும் பொருட்டு இந்த சன்னிதியில் உருவம் ஏதும் இல்லை. பீடம் மட்டுமே உள்ளது.

இறைவி தவம் செய்து தன் மணாளனை கரம் பற்றிய தலம் என்பதால், பிரிந்த தம்பதியினர் இத்தலம் வந்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமை சிவகர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்குவோர் நினைத்தது கைவரப்பெறுவர். செவ்வாய்க்கிழமைகளில் 108 தாமரை மலர் கொண்டு, 108 திருவிளக்கிட்டு அம்பிகையை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

கோவில் அமைப்பு :

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகர தீர்த்தம் உள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து ஏழு நிலை ராஜகோபுரமும் இருக்கிறது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாசலைக் கடந்து உள்ளேச் சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம், மற்றும் நந்தியம்பெருமானை தரிசிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் சன்னிதிகள் ஏதுமில்லை. வெளிப்பிரகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, இரண்டாவது வாசலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள் சுற்றில் சந்திரனும், திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தமும், மூல மூர்த்தமும் தனித்தனி சன்னிதிகளாக உள்ளன. திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இவ்வாலயத்தில் மட்டுமே காண முடியும்.

உட்பிரகாரம் சுற்றி வரும்போது அறுபத்துமூவர் சன்னிதியை தரிசிக்கலாம். அடுத்து தல விநாயகரான கன்னி விநாயகர் அருள்கிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சன்னிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதி, வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னிதிகள் இருக்கின்றன. துவாரபாலகரைத் தொழுது உள்ளே சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சன்னிதிக்கு அருகில் இருக்கும். இறைவன் இறைவியின் சன்னிதிக்குச் செல்வது நடைமுறை. பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. ஆனால் பள்ளியறை இறைவனின் திருச்சன்னிதியில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

இறையருள் பெற்ற மாணிக்கவாசகர் :

உலக உயிர்கள் நலம் பெறுவதற்காக, இத்தல இறைவன் பதினாறு வயதினராய் சித்தர் வடிவில் இங்கு வந்தார். இத்தல ஆலயத்தில் உள்ள சிவகரை தீர்த்தம், சித்தராக உருக்கொண்டு வந்த ஈசன் கை வைத்ததால் உருவானது என்று கூறப்படுகிறது. இதில் கங்கையின் ஒரு பகுதி கலந்துள்ளதாக ஐதீகம். ஈசான்ய மூலையில் இந்த தீர்த்தம் இருப்பதால், இந்த தீர்த்தத்துக்கு சக்தி அதிகம். சித்தர் வடிவில் வந்த சிவனின் திருவடிகளில் வேதங்களும் ஆகமங்களுமே பாதுகைகளாக விளங்கின. இவரைப்பார்த்த குருடர்கள் கண் பெற்றனர். செவிடர்கள் கேட்கும் திறன் பெற்றனர். ஊமைகள் பேசும் திறன் பெற்றனர். தீரா நோயுடையோர் நலம் அடைந்தனர்.

மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானை தரிசிக்கச் சென்றார். அப்போது கெடிலநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் அங்கேயே மூன்று நாட்கள் காத்திருந்தார். வெள்ளம் வடியவில்லை. தன் நிலையைக் கூறி பெருமானை வழிபட, சித்தராகத் தோன்றிய சிவன், மாணிக்கவாசகரை நீர்மேல் நடந்துவருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன், மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு, பிரம்பு ஒன்றை ஏவி பாடலவனத்தில் வராமல் அந்த நதியை திசை திருப்பி ஓடச் செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர், இறைவனின் கருணையை நினைத்த படியே திருத்தலம் வந்து வழிபட்டார். 

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கடலூர் ரெயில் நிலையத்தின் அருகில் திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அனைத்து ஊர்களில் இருந்தும் கடலூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன. 

Thursday 30 August 2018

கேட்ட வரம் அருளும் வழித்துணை பாபா

கேட்ட வரம் அருளும் வழித்துணை பாபா

மதங்களைக் கடந்து பலரும் வழிபடும் தெய்வமாக இருக்கிறார், சீரடி சாயிபாபா. அவருக்கு நாடு முழுவதுமே ஏராளமான ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் சென்னை புற நகர் பகுதியான வண்டலூரில் அமைந்துள்ள வழித்துணை பாபா ஆலயம். நெடுந்தூரம் பயணம் செல்லும் ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பாகவும், பயணிகளின் பயணத்தை வெற்றிகரமாக முடிக்கவும் துணை புரிவதால், இந்த ஆலயத்தில் உள்ள சாயிபாபா ‘வழித்துணை சாயிபாபா’ என்று அழைக்கப்படுகிறார்.

‘என் மீது நம்பிக்கை இருந்தால் நான் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’ என்றவர் சீரடி சாயிபாபா. அந்தக் கூற்றின்படி இந்த ஆலயத்தின் வழித்துணை சாயிபாபா உயிர்ப்புடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு கூட்டு பிரார்த்தனை கோபுரம் அமைந்துள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் தங்களது குறைகளை வரி வடிவத்தில் கடிதமாக, பிரார்த்தனை படிவமாக எழுதி பாபாவின் பிரார்த்தனை பெட்டியில் போட்டால், அது பாபாவால் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

மேலும் குழந்தை இல்லாத தம்பதிகள் எலுமிச்சை பழத்தை பாபாவின் பாதங்களில் வைத்து பிரார்த்தித்து வந்தால், அதன் மூலம் குழந்தை வரமும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரமும் கிடைக்கும் என் கிறார்கள். அப்படி தங்களின் பிரார்த்தனை நிறைவேறி மகப்பேறு பெற்ற தம்பதியர், குழந்தையோடு இங்கு வந்து பாபாவின் பாதங்களில் குழந்தையை வைத்து ஆசிபெற்றுச் செல் கிறார்கள். தம்பதியினர் இடையே ஒற்றுமை இன்மை, கடன் பிரச்சினை, நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், காரியத் தடைகள் அனைத்துக்கும் வழித்துணை பாபா கூட்டுப் பிரார்த்தனை கோபுரத்தில் வழி கிடைக்கும்.

இங்கு இந்துக்கள் பண்டிகைகள் கொண்டாடப்படுவதோடு, பிரதி மாத பவுர்ணமி தினத்தில் சத்திய நாராயண பூஜையும், பிரதோஷம், சங்கட ஹர சதுர்த்தி, மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளான ரமலான், பக்ரீத் பண்டிகை நாட்களிலும் பாபாவிற்கு லுங்கியும் ஜிப்பாவும் அணிவித்து அழகுபார்பதோடு தினமும் திருக்குரானையும், பைபிளையும், சாயி சத் சரித்திரத்தையும் படித்து வருகிறார்கள்.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள இரணியம்மன் கோவிலுக்கு அருகிலேயே இந்த ஆலயம் இருக்கிறது.

சத்தியம் காக்கும் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்

சத்தியம் காக்கும் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்

ஆதி கயிலாயத்தில் கொலுவிருக்கும் சிவபெருமான், தினமும் உலக மக்களுக்கு படி அளக்கிறார். ஈசன் படி அளப்பதன் மீது சந்தேகம் கொண்ட பார்வதி, அவரை சோதனை செய்ய எண்ணினாள். அதற்காக ஒரு எறும்பை பிடித்து சிமில் கூண்டிற்குள் அடைத்தாள். சிவபெருமான் படி அளந்துவிட்டு வந்ததும், அவரிடம் ‘நீங்கள்ல்லா உயிர்களுக்கும் பட்டினி இல்லாமல் படி அளந்து விட்டீர்களா?’ என்று கேட்டாள் பார்வதி.

அதற்கு சிவபெருமான் ‘ஆமாம்’ என்று கூறினார். அப்போது பார்வதி, சிமில் கூண்டிற்குள் அடைத்து வைத்து இருந்த எறும்பை பார்த்தார். அந்த எறும்பு ஒரு திணை அரிசியை தனது வாயில் கவ்விக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி வந்தது. உடனே பார்வதி, சிவபெருமானிடம் ‘சுவாமி! நான் செய்த தவறை மன்னிக்க வேண்டும்’ என்று வேண்டினாள்.

சிவபெருமானும் தவறை மன்னிப்பதாக கூறினார். அப்போது பார்வதி தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் ‘கயிலாயத்தில் உள்ள 32-வது தூணில், நீ சேலையின் முந்தானையை ஏந்தி தவம் செய்தால் உனக்கு குழந்தை கிடைக்கும்’ என்றார்.

பார்வதியும் அவ்வாறே செய்தார். அந்த தவத்தின் மூலம் அவருக்கு ஆண் குழந்தை கிடைத்தது. அந்த குழந்தைக்கு ‘சுடலைமாடன்’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள் பார்வதி. சுடலை மாடன் சைவ கயிலாயத்தில் மாமிசத்தை கலந்தார். உடனே சிவபெருமான், சுடலைமாடனை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார் என்றும், பூலோகத்திற்கு வந்த சுடலைமாட சுவாமி பக்தர்களை காக்கும் காவல் தெய்வமாக வலம் வருகிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

சீவலப்பேரி கோவில் :

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊர். இங்கு தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி ஆகிய 3 நதிகளும் இணைகின்ற திருவேணி சங்கமம் என்ற இடம் உள்ளது. இதை ‘முக்கூடல்’ என்றும் அழைத்து வந்தனர். ஒரு முறை வறட்சியான காலத்தில் மாசானக்கோனார் என்ற 12 வயது சிறுவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு சுடலைமாட சுவாமி சன்னியாசி வேடத்தில் வந்து சிறுவனிடம், தனக்கு பசியாக உள்ளது, தனது பசியை தீர்க்க ஒரு ஆட்டை காட்டி அதில் பால் கறந்து தரவேண்டும் என்று கேட்டார்.

உடனே சிறுவன் ‘அது ஒரு மலட்டு ஆடு’ என்றான். இருந்தாலும் சன்னியாசி தன்னிடம் இருந்த திருவோட்டை கொடுத்து, அதில் ஆட்டுப் பால் கறந்து தரக் கூறினார்.

சன்னியாசி சொல்வதைத் தட்ட மனமில்லாத சிறுவன், மலட்டு ஆடு மடுவின் கீழ் திருவோட்டை வைத்தான். மடுவில் இருந்து தானாக பால் சுரக்க ஆரம்பித்தது. பாலை அருந்தி விட்டு சுவாமி தன் தோற்றமான சுடலை வடிவில் காட்சி அளித்தார். இதைக் கண்டு சிறுவன், சுவாமியை வணங்கினான். சுவாமி சிறுவனிடம் ‘நீ என்னை கோவில் கட்டி வழிபடு. நான் உன் வம்சத்தையும், ஊர்மக்களையும் காத்து அருள்கிறேன்’ என்று கூறினார்.

அதற்கு அந்தச் சிறுவன் ‘நான் உன்னை கோவில் வைத்து வழிபட்டால், எனக்கு ஒரு வரம் தரவேண்டும்’ என்று கேட்டான். சுடலைமாடனும் ஒப்புக்கொண்டார்.

‘பிறக்கும் பிள்ளைக்கும்.. கறக்கும் கன்றுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் மண்டையில் பத்து பூசாமல் பாதுகாத்து கொடுக்கவேண்டும்’ என்றான். வரம் அளித்ததற்கு அடையாளமாக மாசானக்கோனாரின் நாக்கில் ‘அ’ என்ற அச்சாரத்தை சுடலைமாடசாமி எழுதினார்.

அதன்பின் சிறுவன் முறையான வழிபாட்டு முறைகளை கற்பதற்காக, சுந்தரமகாலிங்க சுவாமி அருளும் சதுரகிரி மலைக்கு சென்றான். அங்கு கோரக்க சித்தரின் சீடரான சுந்தரமூர்த்தி முனிவருக்கு சேவை செய்து சீடராக பணியாற்றினான். 12 ஆண்டுகள் தான் செய்த தவத்தை முடித்து காசிக்கு அந்த முனிவர் செல்லும்போது மாசானக்கோனாரிடம், ‘நீ உன் இடத்திற்குச் சென்று, உன் இறைவன் சுடலைக்கு பூஜை செய்வாயாக’ என்று கூறினார். மேலும் மாசானக்கோனாருக்கு ‘வாலகுரு’ என்ற பெயரையும் சூட்டினார்.

24 வயது இளைஞனாக மாசானக்கோனார் தனது ஊரான சீவலப்பேரிக்கு நீள சடைமுடியுடன் வந்தார். இதை கண்ட ஊர்மக்கள் அவரை ‘சன்னியாசி’ என்று அழைத்தனர். அன்று முதல் மாசானக்கோனார் என்ற அவருடைய பெயர் மருவி ‘வாலகுரு சன்னியாசி’ என்று விளங்கியது.

முக்கூடலில் சுடலைமாடசாமி காட்சி அளித்த இடத்திற்கு வாலகுரு சன்னியாசி வந்தார். அந்த இடத்தில் சுடலைமாடசாமி, சுயம்புலிங்க சொரூபமாக காட்சி அளித்தார். அந்த இடத்தில் கோவில் கட்டி அதற்கு உரிய பூஜைகளை முறையாக செய்து வணங்கி வழிபட்டு வந்தார். இது 600 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது. இன்னும் அந்த சுயம்பு லிங்கம், சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், பிரம்மசக்தி சிலை உள்ள பீடத்திற்கு கீழ் இருக்கிறது. சுடலைமாடசாமிக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்ய சத்திவாக்கு பெற்ற வாலகுரு சன்னியாசிக்கும் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.

சுடலைமாட சுவாமி எதிரே ஒரே கல்லில் புதிய சுவாமி சிலையும், முண்டசுவாமி சிலையும் உள்ளது. புதிய சுவாமி மேற்கு நோக்கியும், முண்டசுவாமி கிழக்கு நோக்கியும் உள்ளனர். முண்டசுவாமி முன்பாக ஆடு, கோழி, பன்றி பலியிடக்கூடிய இடம் உள்ளது. இதில் கோவில் கொடைவிழா நடைபெறும் சித்திரை மாதம் 1-ந்தேதி ஏராளமான ஆடு, கோழி, பன்றிகள் பலியிடப்படும். தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சுடலைமாட சுவாமி கோவில்கள், இந்த கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து சென்று கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவிலின் சிறப்பு :

இந்தக் கோவிலில் சுடலைமாட சுவாமி, நான்கு கைகளுடன் காட்சி அளிக்கிறார். வலது கையில் சங்குடனும், இடதுகையில் அக்னியுடனும் அருள்கிறார். இதன் விளக்கம் சங்கு - ஆற்றல் சக்தி வாய்ந்தது. அக்னி - அழித்தல் சக்தி வாய்ந்தது. இந்த இரண்டும் கயிலாயத்தில் சிவபெருமான் சுடலைமாடசாமிக்கு கொடுத்த வரமாகும். 

இந்தக் கோவில் தோன்றிய நாளில் இருந்து இதுவரை இருவேளை ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி இந்த கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்தக் கோவிலில் வழங்கப்படும் விபூதி, மயானக்கரை பகுதியான கழுவன்திறடு என்ற இடத்தில் இயற்கையாகவே உற்பத்தியாகிறது. அங்கிருந்து அந்த மண்ணை எடுத்து வந்து பக்தர்களுக்கு விபூதியாக வழங்குகின்றனர். அந்த மண் விபூதி அந்த இடத்தில் அள்ள அள்ள குறையாமல் விளைந்து கொண்டே இருக்கிறது.

இந்த கோவிலில் செய்யப்படுகின்ற சத்தியபிரமாணம் சிறப்பு மிக்கதாகும். சீவலப்பேரி சுடலை மீது சத்தியம் என்று சொல்லிவிட்டால் மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள். பொய்சத்தியம் செய்தால் சுடலைமாட சுவாமி அவர்களை தண்டித்து விடுவார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

கோவில் கொடைவிழாவில் நையாண்டி மேளம், வில்லிசை, கணியான்கூத்து ஆகியவை முக்கியபங்கு வகிக்கும். கணியான் தனது கையை கத்தியால் வெட்டி சுவாமிக்கு ரத்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி சுடுகாட்டிற்கு சென்று பிணத்தை உண்ணும் நிகழ்ச்சியும், சோற்றில் ஆடு, பன்றி ரத்தத்தை கலந்து வானத்தை நோக்கி விசுகின்ற திரளை பலி என்ற நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுடலை மாடசுவாமி கோவில் இல்லாத ஊரே கிடையாது.

சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்வதற்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Wednesday 29 August 2018

புத்திர பாக்கியம் தரும் நவநீதகிருஷ்ணன்

புத்திர பாக்கியம் தரும் நவநீதகிருஷ்ணன்

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.

மனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.

குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.

இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திருஅவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.

நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது.

தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்

தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்

‘குழல்இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்' என்பது வள்ளுவன் வாக்கு. அதாவது குழலின் இசையும், யாழின் இசையும் இனிது என்பவர்கள், அவர்தம் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவர்களே என்கிறார் திருவள்ளுவர். குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி, தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.

மனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.

அபிராமி பட்டர் பதினாறு வகைப் பேறுகளை திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும்போது, ‘தவறாத சந்தானம் வேண்டும்’ என்று கேட்கிறார். அதாவது மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; குழந்தைப் பாக்கியம் எனும் சந்தானப் பிராப்தி தவறாமல் கிடைக்க அருள்செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.

இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திருஅவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.

ஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில் தவழும் அதே திருக்கோலத்தில் தொட்டமளூர் திருத்தலத்தில் தவழ்கிறான் கண்ணன். நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இந்தக் கோவிலைக் கட்டி உள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப் படுகின்றன. ராமானுஜர், ராகவேந்திரர், வியாசராஜரும் இங்கு வழிபட்டுள்ளனர்.

கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனத்தைக் காணலாம். இங்கு மூலவராக மூன்றடி உயரத்தில் சாளக்கிராமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை ராமர் வழிபாடு செய்துள்ளாராம். அதனால் தான் ‘ராம அப்ர மேயர்’ என்று பெயர். ‘அப்ரமேயன்' என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்' என்று பொருள்.

ஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தத்குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார் என்கிறார்கள். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.

அடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார்.

சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோவில் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா' என்னும் கீர்த்தனையைப் பாடினார். ஆச்சரியம்.. கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத் திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம்.

நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது.

அமைவிடம் :

பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது. 

Tuesday 28 August 2018

முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள்

முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள்

ஞானசக்திதரர்: திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம், ‘ஞானசக்திதரர்’ வடிவமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.

கந்தசாமி: பழனி மலை மீது இருந்து அருளும் பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் ‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த உருவத்தை வழிபட்டு வேண்டிக்கொண்டால், சகல காரியங்களும் சித்தியாகும்.

ஆறுமுக தேவசேனாபதி: சென்னிமலை முருகப்பெருமான் ஆலயத்தின் கர்ப்பக் கிரக மாடம் ஒன்றில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ வடிவத்தை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

சுப்பிரமணியர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடை கழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘சுப்பிரமணியர்’ ஆவார். இவர், தன்னை வழிபடும் பக்தர் களின் வினைகளை நீக்கி ஆனந்தத்தை அளிக்கக் கூடியவர்.

கஜவாகனர்: திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக் கோபுரத்தில், யானை மீது இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்கலாம். இவரை ‘கஜவாகனர்’ என் கிறார்கள். இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.

சரவணபவர்: சென்னிமலை மற்றும் திருப்போரூர் திருத் தலங்களில் ‘சரவணபவர்’ திருவுருவை காணலாம். இந்த வடிவத்தில் அருளும் முருகப்பெருமான், தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.

கார்த்திகேயர்: கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிலும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது. இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விசேஷமான பலனைத் தரும்.

குமாரசாமி: கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலிலும் இந்த திருவுருவை தரிசிக்க முடியும்.

சண்முகர்: திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். இவரை வழிபட்டால் சிவன்- சக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.

தாரகாரி: `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி அருள்கிறார்.

சேனானி: தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை நீங்கும்.

பிரம்மசாஸ்தா: காஞ்சீபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா வகை செயல்களிலும் தேர்ச்சி பெறலாம். கல்வியில் வெற்றி கிட்டும்.

வள்ளிகல்யாணசுந்தரர்: திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்.

பாலசுவாமி: திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் குப்பம் ஆகிய தலங்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது. இவர், அங்கக் குறைபாடுகளை அகற்றுபவராக இருக்கிறார். மேலும் நீண்டநாள் நோய் விலகும்.

சிரவுபஞ்சபேதனர்: திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உள்ளன. இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.

சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர்.

வாராகி மாலை அற்புதம் நைவேத்தியம் விளக்கங்கள்

வாராகி மாலை அற்புதம் நைவேத்தியம் விளக்கங்கள்

என் வாராகி பக்த கோடிகளே நான் இரு வாரங்களாக வாராகி மாலை விளக்கங்கள் கொடுத்து வந்தேன். அன்னையின் மாலை கேட்டு கண்ணீர் மல்க என் அன்னையின் மகத்துவத்தை அறிந்து மகிழ்ந்து கூறிய உங்கள் மனதையும் பொற்பாதங்களையும் வணங்கி மகிழ நான் கடமைபட்டுள்ளேன். இவ்வாரம் வாராகி மாலை படித்து அன்னையை பூஜிப்பதால் ஏற்படும் அற்புதங்களையும் அவளுக்கு பிடித்த நைவேத்தியம் என்ன வென்று பார்க்கலாம், மேலும் வாராகி மாலையில் இன்னும் 6 பாடல்கள் உள்ளது. அதை பாடலாக மட்டும் கொடுத்துவிடுகிறேன். எல்லா பாடல்களுமே அன்னை நம்மை காக்கும் கவசமாக நிற்கும் அற்புத பாடல்களே. அதை மட்டும்கொடுத்து அதன் அற்புதங்களை விளக்குகின்றேன். 

25. ‘‘சிந்தை தெளிந்து வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய் 
நிந்தனை பண்ணி மதியாத உலத்தர் நிணம் அருந்தி
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற்பொற் கொடியே...’’

26. ‘‘பொருப்புக்கு மாறுசெய் பாழியும் தோளும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் எனது
இருப்புக் கடிய மனதில் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக்குவால் என கொல்வாய் வாராஹி என் நிர்குணியே’’

விளக்கம்:-
இப்பாடலை மனம் ஒருநிலைபடுத்த பாடினால் மனம் தெளிந்து ஒற்றுமைபடும். முயற்சித்து அருள் பெருக. 

27. ‘‘தேறிட்ட நின்மலர்ப்பாத அரவிந்தத்தை சிந்தை செய்து 
நீறு இட்டவர்க்கு வினைவருமோ? நின் அடியவர் பால்
மாறிட்டவர் தமை வாளாயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட்டு எறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.’’

28. ‘‘நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமாள்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே 
சரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே’’

29. ‘‘வீற்றிருப்பாள் நவகோணத்திலே, நம்மை வேண்டுமென்று
காத்திருப்பாள் கலி வந்தனுகாமல் என் கண் கலக்கம்.
பார்த்திருப்பாள் அல்லல் எங்கே என்று அங்கு சபாசம் கையில் 
கோர்த்திருப்பாள், இவளே என்னை ஆளும் குலதெய்வமே’’

30. சிவஞான போதகி செங்கைப் கபாலி, திகம்பரி நல்
தவமாகும் மெய்அன்பர்கே இடர்சூடும் தரியலரை 
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி, இங்கு நலமாய் வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே...

இந்த வார விசேஷங்கள் - 28.8.2018 முதல் 3.9.2018 வரை

இந்த வார விசேஷங்கள் - 28.8.2018 முதல் 3.9.2018 வரை

28-ந்தேதி (செவ்வாய்) :

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

29-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

30-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* சங்கடஹர சதுர்த்தி.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.

31-ந்தேதி (வெள்ளி) :

* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்தில் பவனி வருதல்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.
* கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.

1-ந்தேதி (சனி) :

* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்துகிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.
* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (ஞாயிறு) :

* கிருஷ்ண ஜெயந்தி.
* கார்த்திகை விரதம்.
* திருநெல்வேலி டவுண் சந்தானகோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துகிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் புறப்பாடு.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (திங்கள்) :

* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குட வருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் காட்சியருளல்.
* வரகூர் உறியடி உற்சவம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி கோவில் உற்சவம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.

Monday 27 August 2018

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருங்கள்

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருங்கள்

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது. சிவராத்திரி விரதம் அனுசரிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.

“ஓம் நமசிவாய” என்ற மந்திரம் உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்று கூடி ‘சிவாய நம’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை.

நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாக சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத்தாலும் மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பூ, செண்பகம் நீங்கலான மற்ற மனம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். 

ஆடிக்கிருத்திகை, கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம்.

கொக்கு அறு கோ

கொக்கு அறு கோ

முருகனின் கையில் கொடியாக அமர்ந்த அமர்ந்த சேவல் 'கொக்கு அறு கோ!' என்று கூவியது. மனித இனத்தை விழிப்படையச் செய்ய இன்றும் தொடர்ந்து, அதிகாலையில், 'கொக்கு அறு கோ!' என்று கூவுகிறது! ஏன் அவ்வாறு கூவுகிறது?

'கொக்கு' என்றால் மாமரம் என்று பொருள். கொக்கை (மாமரத்தை) அறுத்த தலைவன் என்ற பொருளில் சேவல், 'கொக்கு அறு கோ' என்று முருகனைப் போற்றியது.

அழகனான குமரக்கடவுள், மேனி முழுவதும் கண்களாக இருந்த இந்திரனாகிய மயிலூர்தியை விடுத்து, நல்லுணர்வு பெற்று நல்லொழுக்கம் வரப் பெற்ற சூரனின் ஒரு கூறாகிய மயில் மேல் எழுந்தருளினான்! ‘மயிலே! எம்மைச் சுமந்திடுவாயாக!’ என்று கூறி அம்மயிலை வானத்திலும், திக்குகளிலும், பூமியிலும் செலுத்தலானான். 

இந்திரன் முருகனின் இடைக்கால மயிலூர்தியாக இருந்து போர்க்களத்தில் பணியாற்றினான். சூரன் மயிலாக மாறியவுடன் இடைக்கால ஊர்தியை விட்டு இறங்கினான். சேவலும் மயிலும் ஆகிட, விரும்பி, தவம் செய்த சூரனுக்கு பேரருள் செய்யும் பொருட்டு அவனைத் தன் ஊர்தியாக்கி அதன் மீதேறி உலகைச் சுற்றி வந்தான். புதிய மயிலூர்தியில் வலம் வந்த வடிவேல் முருகனை அமரர்களும், தம்பியரும் சூழ்ந்து நின்று போற்றினர்.

செல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன் கோவில்

செல்வத்தை அருளும் திருக்காட்கரையப்பன் கோவில்

கேரளா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் திருவிழா, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருக்காட்கரை என்னும் இடத்தில் அமைந்திருக்கும் திருக்காட்கரையப்பன் கோவிலில்தான் முதன் முதலாகத் தொடங்கியது என்கின்றனர்.

தல வரலாறு :

மலையாள தேசத்து அரசன் மகாபலி அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும், நல்லாட்சி செய்து தன் நாட்டு மக்களிடம் நற்பெயரைப் பெற்றிருந்தான். அவனுக்கு மூவுலகையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் திடீரென்று ஏற்பட்டது. அதற்காக அவன், அசுரர் குலக்குருவான சுக்ராச்சாரியாரைக் கொண்டு மிகப்பெரும் வேள்வியை நடத்தத் தொடங்கினான்.

மகாபலி நடத்தும் வேள்வியால், தன்னுடைய இந்திர பதவி பறிபோய் விடுமோ என்று பயந்த இந்திரலோகத்து அரசன் இந்திரன், அந்த வேள்வியை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட முடிவு செய்தான். முதலில், பிரம்மாவுடன் ஆலோசனை செய்த அவன், பிரம்மாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டான். அவர்கள் சொல்வதைக் கேட்ட மகாவிஷ்ணு, மகாபலியின் வேள்வியை நிறுத்தி, மூவுலகையும் காப்பதாகச் சொல்லி இருவரையும் அனுப்பி வைத்தார்.

மகாவிஷ்ணு ஒரு கையில் ஓலைக்குடையும், மற்றொரு கையில் கமண்டலமும் தாங்கி, மூன்று அடி உயரத்திலான வாமனத் தோற்றத்தில் பூலோகம் வந்தார். பின்னர் மகாபலி வேள்வி நடத்தும் இடத்துக்கு சென்று, அங்கு தானம் பெற்றுச் செல்வதற்காக நின்றிருந்தவர்களின் வரிசையில் போய் நின்று கொண்டார். அவரது முறை வருவதற்கு முன்பாகவே தானம் முடிவடைந்து விட்டது.

அங்கிருந்த மகாபலி, வாமனரைப் பார்த்து, ‘நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள். பரவாயில்லை, உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள், நான் தருகிறேன்’ என்றான்.

வாமனர் அவனிடம், தனது காலால் அளக்கும் வகையில் மூன்று அடி நிலம் தானமாக அளிக்க வேண்டினார். அப்போது அங்கிருந்த சுக்ராச்சாரியார், ‘நம் வேள்வியை நிறுத்தும் எண்ணத்துடன் மகாவிஷ்ணுவே வாமனர் உருவத்தில் வந்திருக்கிறார். எனவே தானம் செய்து ஏமாற்றமடைய வேண்டாம்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

ஆனால் மகாபலி, அந்த எச்சரிக்கையை மீறி, வாமனரின் கையிலிருந்த கமண்டல நீரைப் பெற்றுத் தானமளிப்பதாகச் சொன்னான். அதனைத் தடுக்க நினைத்த சுக்ராச்சாரியார் வண்டாக உருமாறிச் சென்று, கமண்டலத்தின் நீர் வரும் வழியை அடைத்தார். உடனே வாமனர், ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தினார். அதனால் காயமுற்ற வண்டு உருவிலிருந்த சுக்ராச்சாரியார் கமண்டலத்தில் இருந்து வெளியேறினார்.

மகாபலி வாமனரிடம் இருந்த கமண்டல நீரைப் பெற்று, நிலத்தில் விட்டுத் தானமளிக்கத் தயாரானான். உடனே, வாமனர் தோற்றம் மிகப்பெரும் தோற்றமாக மாறி, ஒரு அடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தார். பின்னர், ‘மூன்றாவது அடி வைக்க நிலம் எங்கே?’ என்று மகாபலியிடம் கேட்டார்.

அதனைக் கண்டு வியப்படைந்த மகாபலி, வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டு, ‘தங்களது மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்” என்று கூறினான். வாமனரும் அவ்வாறே வைத்து, மகாபலியை நிலத்தினுள் அழுத்தினார்.

அப்போது மகாபலி, ‘இறைவா! என் நாட்டின் மீதும், என் மக்களின் மீதும் நான் பேரன்பு கொண்டிருக்கிறேன். ஆண்டுக்கொருமுறை என் நாட்டு மக்களைக் காணும் வாய்ப்பை எனக்கு வரமாகத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினான். வாமனர் தோற்றத்திலிருந்த மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தைத் தந்தருளினார்.

மகாவிஷ்ணு வாமனத் தோற்றமெடுத்து மகாபலி மன்னனை நிலத்தினுள் அழுத்தி அழித்த இடத்தில் அமைந்ததே திருக்கட்காரை ஆலயம் என்று சிலர் இத்தலத்தின் வரலாறைத் தெரிவிக்கின்றனர்.

இன்னொரு தரப்பினர், மகாபலி அழிவுக்குப் பின், கபில முனிவர் மகாவிஷ்ணுவை வாமனத் தோற்றத்தில் காண விரும்பியதாகவும், அவருடைய விருப்பத்தை நிறைவேற்று வதற்காக மகாவிஷ்ணு இங்கு வாமனர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்றும், கபிலருக்குக் காட்சியளித்த இடத்தில் அமைந்ததே இக்கோவில் என்றும் சொல்கின்றனர்.

கோவில் அமைப்பு :

மகாவிஷ்ணு வாமனர் தோற்றத்தில், நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை தாங்கியபடி நின்ற நிலையில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வாமனர் தோற்றத்தில் இருக்கும் இவரை ‘திருக்காட்கரையப்பன்’ என்றே அழைக்கின்றனர். இங்கிருக்கும் இறைவி ‘வாத்சல்யவல்லி’ (பெருஞ்செல்வ நாயகி) என்று அழைக்கப் படுகிறார். இக்கோவில் வளாகத்தில் பகவதி, சாஸ்தா, கோபாலகிருஷ்ணன், பிரம்மராட்சசன், யட்சி ஆகியோருக்குத் தனிச்சன்னிதிகள் இருக்கின்றன.

இக்கோவிலின் எதிர்புறம் மகாபலி அரசன் நிறுவி வழிபட்ட சிவபெருமான் கோவில் அமைந்திருக்கிறது. ‘தெற்குக்கரை தேவர் கோவில்’ என்றழைக்கப்படும் இந்த ஆலயம், திருக்காட்கரையப்பன் கோவிலைக் காட்டிலும் மிகவும் பழமையானது. இக்கோவில் வளாகத்தில் பார்வதி, துர்க்கை, கணபதி, முருகன் ஆகியோருக்குச் சன்னிதிகள் உள்ளன.

வழிபாடுகள்:

இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள், எதிரில் உள்ள சிவபெருமானை முதலில் வழிபட்டு, அதன் பிறகு வாமனரை வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவிலில் வாமனருக்குப் பால் பாயசம் படைத்தும், சிவபெருமானுக்கு நெய் பாயசம் படைத்தும் வழிபடுகிறார்கள். இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் (ஆவணி) மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவோணம் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். விழா நாட்களில் சாக்கியார் கூத்து, ஓட்டம் துள்ளல், கதகளி மற்றும் படகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.

வழிபாட்டுப் பலன்கள் :

இறைவனின் பத்துத் தோற்றங்களில் ஒன்றான வாமன தோற்றம் நிகழ்ந்த இத்தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மனநிறைவும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இக்கோவிலின் யட்சி மண்டபத்துக்கு முன்னால், பொம்மைத் தொட்டில்களை வாங்கிக் கட்டி தங்களுக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டிக் கொள்கின்றனர்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திகழும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி போற்றியிருக்கிறார். இத்தல இறைவனுக்கு நேத்திரம் பழங்களையே படைத்து வழிபடுகிறார்கள். இங்கு கபில முனிவரால் உருவாக்கப்பட்ட கபில தீர்த்தம் உள்ளது. இதுவே ஆலய தீர்த்தமாக பயன்படுகிறது.

முப்பெருங்கடவுள் மரம் :

திருக்காட்கரையப்பன் கோவில் பிரகாரச் சுற்றில், பெரிய அளவிலான அரச மரம் ஒன்று உள்ளது. இதனை ‘முப்பெருங்கடவுள் மரம்’ என்கின்றனர். இம்மரத்தின் வேர்ப்பகுதி பிரம்மா, நடுப்பகுதி விஷ்ணு, உச்சிப்பகுதி சிவபெருமான் என்று நினைத்து, முப்பெருங்கடவுளாக வணங்கி வருகின்றனர். இம்மரத்தடியில் மேடை கட்டி, மாடவிளக்கு ஒன்றையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர நாளிலும், இந்த மரத்தடியில் பூஜை செய்யப்படுகிறது. அவ்வேளையில், நாகர் இனத்துப் பழங்குடியினர் இங்கு ‘புல்லுவன்’ பாட்டைப் பாடிச் சிறப்பிக்கின்றனர். 

பிரம்மராட்சசன் சன்னிதி :

ஒரு விவசாயி நிலத்தில் விளைந்த நேந்திரம் வாழைப் பழங்களில் சில தங்கமாக இருந்தன. அந்தத் தங்க வாழைப்பழங்களைக் காட்கரையப்பன் கோவிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார். ஒரு நாள், கோவில் அர்ச்சகர், தங்க வாழைப்பழங்களைச் சன்னிதியில் வைத்துவிட்டு வெளியே சென்றிருந்தார். திரும்பி வந்தபோது, தங்க வாழைப் பழங்களைக் காணவில்லை.

இந்தச் செய்தி அந்நாட்டு அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னன், சில அரண்மனைக் காவலர்களை அனுப்பி விசாரிக்கச் சொன்னான். அவர்கள், கோவிலில் தங்கியிருந்த அப்பாவி யோகி ஒருவரைச் சந்தேகப்பட்டுக் கைது செய்தனர். அரசன் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டான். சிறையில் யோகியை துன் புறுத்தினர்.

இதற்கிடையில் தங்க வாழைப்பழங்கள் மூலவரின் கருவறையில் பத்திரமாக இருப்பதை அறிந்து, யோகியை மன்னன் விடுதலை செய்தான். ஆனால் செய்யாத தவறுக்காக தண்டனை வழங்கியதை எண்ணி துடித்த யோகி, தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர், பிரம்மராட்சசனாக மாறி, அரசனுக்கும் மற்றவர்களுக்கும் துன்பம் கொடுத்தார்.

மன்னன் தன் தவறை நினைத்து வருந்தியதுடன் திருக்காட்கரையப்பனை வணங்கி, யோகிக்கு கோவில் வளாகத்தில் ஒரு சன்னிதியை எழுப்பினான். அங்கு அவருக்கு தினசரி பூஜை செய்து பிரம்மராட்சசனாக இருந்த யோகியின் கோபத்தைத் தணித்தான். இந்த சன்னிதி ‘யோகி சன்னிதி’ என்றும், ‘பிரம்மராட்சசன் சன்னிதி’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதும் இங்கு தினசரி பூஜைகள் நடக்கின்றன. 

இறைவனால் தோன்றிய வாழை :

விவசாயி ஒருவர் தன் நிலத்தில் வாழை சரியாக விளையாததால், திருக்காட்கரையப்பன் கோவிலுக்கு வந்து, மகாவிஷ்ணுவின் கடைக்கண் தன் நிலத்தில் பட வேண்டுமென்று வேண்டினார். மகாவிஷ்ணுவும் தன் பக்தன் நிலத்தைத் தன் நேத்திரத்தினால் (விழியினால்) பார்க்க, புதியதொரு வாழை அங்கு தோன்றியதுடன் விளைச்சலும் அதிகமானது. அன்று முதல் அந்த வாழைக்கு ‘நேந்திரம் வாழை மரம்’ என்ற பெயரும் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். 

ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்:

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் திருக்காட்கரை எனுமிடத்தில் இந்த ஆலயம் உள்ளது. திருச்சூர் நகரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், இரிஞ்சாலக்குடா என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது.

Sunday 26 August 2018

மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 15 பேறுகள்

மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 15 பேறுகள்

லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும் அவை வருமாறு.

1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.
2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.
3. பகை அழிந்து அமைதி உண்டாகும்.
4. கல்வி ஞானம் பெருகும்.
5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.
6. நிலைத்த செல்வம் அமையும்.
7. வறுமை நிலை மாறும்.
8. மகான்களின் ஆசி கிடைக்கும்.
9. தானிய விருத்தி ஏற்படும்.
10. வாக்கு சாதுரியம் உண்டாகும்.
11. வம்ச விருத்தி ஏற்படும்.
12. உயர் பதவி கிடைக்கும்.
13. வாகன வசதிகள் அமையும்.
14. ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.
15. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

மிகவும் தொன்மையான முருகன் வழிபாடு

Image result for murugan

முருகு அல்லது முருகன் என்னும் சொல் மிகமிகத் தொன்மையானது. 'முருகு' என்ற சொல்லுக்கு அழியாத அழகும், குன்றாத இளமையும், இயற்கை மணமும், எல்லாப் பொருள்களிலும் கடவுள் தன்மை உண்டு என பல பொருள்கள் உண்டு. 'மு' என்பது திருமாலையும் 'ரு' என்பது சிவபெருமானின் அம்சத்தையும் 'க' என்பது பிரம்மனையும் குறிக்கும் என்பர்.

அதுபோல உருவ வழிபாட்டில் தொன்மையானதும் முருகன் வழிபாடாகும். முருகன் குறிஞ்சி நிலக்கடவுள், மலையும் மலை சார்ந்த இடங்களின் கடவுள் முருகன். அதனால் முருகனைக் 'குறிஞ்சிக் கிழவன்' 'மலைகிழவோன்' என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ வழிபாடு தொடங்கினார்கள். ஒரு குழந்தை வடிவம் படைத்து அதை கடவுளாக வழிபாடு செய்தது முருகன் வழிபாடு என சொல்கிறார்கள்.

முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தனி நிலை எனப்படும் ஆயுதமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு, தமிழ்த் தெய்வமாகிய முருகன் தமிழ் வடிவாக விளங்குகின்றான்.

ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும், இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன். அவனுடைய ஆறு திருமுகங்களில் உலகுக்கு ஒளியையும் ஆன்மாக்களுக்கு அழியாத பேரின்ப ஒளியையும் தருவது ஒரு முகம்.

ஆன்மாக்களுக்கு எல்லாம் அவற்றின் வினைகளைப் போக்கி வேண்டும் வரங்களை அளிப்பது ஒரு முகம். வேள்விகள் வேத ஆகமச் சடங்குகள் இவற்றை ஐயமின்றி முற்றுப்பெறச் செய்வது ஒரு முகம். முனிவர்களுக்கு நூற்பொருளை விளக்குவது ஒரு முகம். நேசமுடன் போகம் நுகரும் வள்ளி தெய்வானை அம்மையர்க்கு மோகம் தருவது ஒரு முகம்.

அசுரரை அழித்துக் களவேள்வி செய்கிறது ஒரு முகம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் «பரழகு வாய்ந்த தெய்வீக வடிவம் கொண்டவன் முருகன். முருகன் ஒரு தொகுப்புத் தெய்வம். முருகனை வணங்கினால் பல கடவுளரை வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம். மகனுக்குச் செய்யும் சிறப்பால், தந்தை தாயாகிய சிவபிரானும் உமாதேவியும், தம்பியைப் போற்றுதலால் சகோதரனாகிய விநாயகரும், மருமகனை வழிபடுதலால் மாமனாகிய திருமாலும், தலைவனை வணங்குதலால் தேவரும், முனிவரும் ஆகிய அனைவரும் மகிழ்ச்சி அடைவர். எனவே முருகன் வழிபாடு மிக்க சிறப்புடையது.

முருகனை அன்புடன் வழிபட்டு முருகா முருகா என கூறித் தியானிப்பவர்கள் என்றும் குறையாத பெருஞ்செல்வத்தைப் பெறுவார்கள், அவர்களை ஒருபோதும் எத்தகைய துன்பமும் அணுகாது. 

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
கந்தவேல் முருகனுக்கு அரோகரா..

Saturday 25 August 2018

முருகன் பற்றிய 40 ருசிகர தகவல்கள்

மிகவும் தொன்மையான முருகன் வழிபாடு

1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச «பதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

8. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

9. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

10. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

11. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

12. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான திருப்புகழ் நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

13. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

14. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

15. முருகனைக் குறித்துக் குமார சம்பவம் என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

16. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

17. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

18. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

19. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

20. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

21. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

22. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

23. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.


24. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

25. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

26. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

27. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

28. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

29. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

30. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

31. முருகனைப் போன்று கருப்பைப வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

32. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

33. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

34. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

35. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

36. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

37. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

38. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

39. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

40. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்

பயம் போக்கும் நிமிஷாம்பாள் பௌர்ணமி விரதம்

கர்நாடக மாநிலம் மைசூரு அருகிலுள்ள கஞ்சாம் நிமிஷாம்பாள் கோயிலில் பவுர்ணமி விரதமிருந்து வழிபட்டால் பயம் நீங்கும். முக்தராஜன் என்னும் அம்மன் பக்தன் இப்பகுதியை ஆட்சி செய்தான். ஜானு சுமண்டலன் என்னும் அசுரன் முக்தராஜனைத் துன்புறுத்தினான். அவனை அரசனால் அடக்க முடியவில்லை. தன் இஷ்ட தெய்வமான பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான்.

பராசக்தி மன்னனின் கோரிக்கையை ஏற்று, அசுரனை அழிக்கப் புறப்பட்டாள். அசுரனின் முன் நின்று கண்களை இமைத்தாள். நிமிஷ நேரத்தில் அவன் சாம்பல் ஆனான். தனக்கு அருள் செய்த அம்பிகைக்கு கோயில் கட்டி ‘நிமிஷாம்பாள்’ என பெயரிட்டான். ‘கண நேரத்தில் வரம்  அளிப்பவள்’ என்பது பொருள்.

‘கிருஷ்ண சிலா’ என்னும் கருப்பு சிலையாக இருக்கும் அம்பாளின் கைகளில் சூலம், உடுக்கை உள்ளது. தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் அம்மனின் தலைமீது தர்ம சக்கரம் குடையாக நிற்கிறது. 

பவுர்ணமியன்று விரதமிருந்து அம்மனை தரிசிக்கின்றனர். எதிரி பயம், திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் உண்டாகவும் விரதம் மேற்கொள்கின்றனர். துர்க்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பாலபிஷேகம் செய்கின்றனர்.

Friday 24 August 2018

ஆவணி பவுர்ணமி திருவண்ணாலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

ஆவணி பவுர்ணமி திருவண்ணாலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த மாத ஆவணி பவுர்ணமி நாளை சனிக்கிழமை மதியம் 2.59 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.58 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம். இதுவே கிரிவலம் வர உகந்த நேரமாகும் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லட்சுமி விரதம் பற்றிய 40 தகவல்கள்

லட்சுமி விரதம் பற்றிய 40 தகவல்கள்

1. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

2. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

3. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

4. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.

5. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

6. நாளை காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை கோலமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும். கலசத்தில் லட்சுமியை ஆவாகனம் செய்து நிவேதனங்கள் படைத்து வழிபட வேண்டும்.

7. மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.

8. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

9. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

10. இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறுமையும் தரும் இனிய விரதமாகும்.

11. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

 12. நாம் செய்யும் பாவ, புண்ணியத்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.

13. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்றழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொள்கிறார்கள்.

14. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

15. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.

16. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.

17. லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

18. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு,கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.

19. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.

20. வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது.

21. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

22. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன் படுத்தலாம்.

23. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.

24. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழிபடலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.

25. நடு நிலை தவறி உறவினர்களுக்கு அநீதி இழைத்து விட்டவர்கள், வரலட்சுமி விரதம் இருந்தால் அந்த பாவத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம்.

26. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.

27. லட்சுமிவிரதம் இருந்து பூஜை செய்பவர்கள், அந்த பூஜைக்கு வரும் ஏழைகளை கடவுளாகவே பாவித்து நடந்து கொள்ள வேண்டும்.

28. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் சொம்பு தாமிரச்சொம்பு அல்லது வெள்ளிச் சொம்பாக இருக்கலாம்.

29. பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் லட்சுமியால் பொறுத்துக் கொள்ள இயலாது. எனவே பெரும்பாலான பெண்கள் லட்சுமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விரதத்தை மேற் கொள்கிறார்கள்.

30. வரலட்சுமி பூஜை தினத்தன்று 3 தடவை அம்மனை வணங்கினால் நல்லது.

21. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.

32. சிலர் வரலட்சுமியை விதம், விதமான வாகனங்களில் அமரச்செய்து அலங்காரம் செய்வார்கள்.

33. வரலட்சுமி பூஜைக்கு உங்கள் வீட்டுக்கு வருபவர்களுக்கு உங்கள் சக்திக்கு ஏற்ப தாம்பூலம் கொடுக்கலாம். ஆனால் உங்கள் விருந்தாளிகளிடம் நீங்கள் காட்டும் அன்பே முக்கியமானது.

34. சித்ரநேமி என்ற கணதேவதை இந்த விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.

35. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக இந்த விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.

36. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.

37. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.

38. இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்மணிகள் இவ்வுலகில் சகல போகங்களை அனுபவித்து பின் வைகுந்தம் சேருவார்கள்.

39.வரலட்சுமி விரதம் மேற் கொள்ள நமது உள்ளத்துத் தூய்மையுடன் இல்லத்து தூய்மையும் மிகவும் அவசியம். எனவே விரதம் மேற் கொள்ள வீட்டை தூய்மைபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

40. வரலட்சுமி பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் கொண்டு அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

Thursday 23 August 2018

சந்தோஷமான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம்

சந்தோஷமான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம்

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவே தான் விநாயகரை ‘ஆதி மூல கணபதி’ என்று வர்ணிக்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்கின்றோம்.

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும், 3 விதமான கணங்களாகப் பிரித்து திருமண சமயத்தில் பொருத்தம் பார்க்கும் பொழுது கணப்பொருத்தம் பார்ப்பார்கள். மூன்று வகையான அந்த கணப் பிரிவு தேவ கணம், மனித கணம், ராட்சச கணம் என்பதாகும். கணப்பொருத்தம் இருந்தால்தான் தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவர் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி.. அனைவரும் வணங்க வேண்டிய தெய்வம் ஆனைமுகப்பெருமான்.

விநாயகருக்கு உகந்த நாட்கள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். ஞாலம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். அதற்கு உகந்த மாதமாக இந்த (ஆவணி) மாதம் விளங்குகிறது. மற்ற மாதங்களிலும் கூட சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதம் வரும் சதுர்த்தியை மட்டும்தான் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கிறோம். அன்றைய தினம் ஆலயத்திற்குச் சென்று, அருகம்புல் மாலையிட்டு கணபதியை வழிபட்டால், அவர் பெருகும் பொன்னை அள்ளி பெருமையுடன் நமக்களிப்பார்.

இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா 13.9.2018 (வியாழக்கிழமை) ஆவணி மாதம் 28-ந் தேதி வருகின்றது. அன்றைய தினம் பிள்ளையாரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கே எப்போது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் காட்சி தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்கிரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்கு சென்றும் வழிபடலாம்.

தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.

விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலை அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. அவருக்குப் பிடித்த மலர் தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ ஆகியவையாகும்.

விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக்கொள்வது வழக்கம். ‘தோர்பிகர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் ‘கைகளில்’ என்று பொருள். ‘கர்ணம்’ என்றால் ‘காது’ என்று பொருள். கைகளினால் காதைப் பிடித்துக்கொள்ளுதல் என்பது இதன் முழுப்பொருளாகும்.

கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு அஞ்சிய தேவர்கள், அவனுக்கு முன் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை விநாயகர் அழித்தார். எனவே, விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டனர். அந்தப் பழக்கமே இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதாக சொல்கிறார்கள்.

ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகிய வற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது, ‘இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான். சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி, புத்திக்கூர்மை ஏற்படும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள் உருண்டை நிவேதனம் செய்தால் சனி பகவானின் பாதிப்பில் இருந்து விடுபட இயலும்.

கனவுகளை நனவாக்கும் கற்பகமூர்த்தியாக சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் வீற்றிருக்கின்றார். அவரை சதுர்த்தியன்று பூவணிந்தும், பாவணிந்தும் வழிபட்டால், நம் தேவைகள் நிறைவேறும். தவிர அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்றும் ஆனைமுகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள். இதனால் அகிலம் போற்றும் வாழ்க்கையும், சந்தோஷம் நிறைந்த வாழ்வும் அமையும்.

ஜாதகத்தில் கேதுவின் ஆதிக்க திசை, புத்தி நடக்கும்போது விநாயகரை வழிபட்டால் காரிய தடைகள் நீங்கும். தக்க விதத்தில் வாழ்க்கையமையும். தடுமாற்றங்கள் அகலும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கின்றன. விக்னங்களை அகற்றுவதால் ‘விக்னேஸ்வரன்’ என்று பெயர் பெற்றவர் விநாயகர். முருகப்பெருமான், வள்ளியை மணம் முடிக்க விநாயகர் யானை வடிவில் வந்து உதவி செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. எனவே யானைக்கு கரும்பு, வாழைப்பழம் போன்ற உணவுப் பொருட்களை வழங்கி அதன் ஆசியைப் பெறுவதும் நல்லது. விநாயகர் சதுர்த்தியன்று இதுபோன்ற வழிபாடுகளை செய்து தும்பிக்கையானைத் துதித்தால் உங்கள் நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும்.

நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் சிங்கிரிகுடி

நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் சிங்கிரிகுடி

புதுச்சேரி - விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது. புராணக் கதைகள் மூலம் இந்த ஊருக்கு சிங்கர்குடி, சிங்கிரிகுடி, கிருஷ்ணரண்ய கோவில் என்னும் பெயர்கள் உள்ளன. 

அபிஷேகப்பாக்கம், அபிஷேக சேத்திரம் என்றும் மார்க்கண்டேய புராணத்தில் ஸ்ரீநரசிம்மவனம் என்றும் இச்சிங்கர்குடி வர்ணிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் சோழர் காலமான கி.பி. 1051--ம் ஆண்டில் அரியூர் ஆழ்வார் சிங்கவேள் குன்றம் என்று குறிக்கப்பட்டுள்ளது. 

கல்வெட்டுக்களின் மூலம், சோழ அரசர்களின் நன்கொடையும், பின்னர் வந்த ஸ்ரீகிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர அரசரின் நன்கொடையும் இத்தலத்துக்கு கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

மூலவிக்ரமாகிய உக்ர நரசிம்மர் மேற்கு பார்த்து சந்தியில் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மற்றும் பல திவ்ய தேவதைகள் கிழக்கு மூலையில் உள்ளனர். லீலாவதி என்கிற ஹிரண்யகசிபுவின் மனைவி, குழந்தை பிரகலாதன் அசுரர்களின் குர சுக்ராச்சாரியார், தேவகுரு வசிஷ்ட மகரிஷி ஆகியோரது சிலா உருவங்கள் சாமியின் கீழ் நிலைமேடையில் இத்திருக்கோவி லில் உள்ளன.

ஸ்ரீவைகாசன ஆகமவிதிகளின் படியும், ஸ்ரீநரசிம்ம சாமியின் அனுஷ்டான விதிகளின்படியும் இக்கோவிலில் பூஜைகள் நடை பெறுகின்றன. ஸ்ரீநரசிம்மர் அவருடைய திவ்ய மங்கள விக்ரகத்தில் மனித உடலில் சிங்கமுகத்தில் கோபமாகவும் நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் அகன்ற மார்பை உடையவராகவும், வாயையும் உடையவராகவும் விளங்குகிறார். 

இங்கு நரசிம்மர் சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். ஸ்ரீநரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும் காட்சியளிக்கிறார். 

பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார். 

அவருடைய இடது கரம் அந்த அரக்கனுடைய தலையை தம் மடி மீது அழுத்துவது போன்றும், மற்றொரு வலது கரம் அசுரனுடைய தொடையை அழுத்துவது போன்றும், மற்ற கரங்களினால் அரக்கனுடைய கால்களை நன்றாக அழுத்தி மடித்திருப்பது போன்றும், மற்ற இரு கரங்களினால் இரண்யனுடைய மார்பைக் கிழித்து கொல்வது போலவும் மிக அற்புதமாக சேவை சாதிக்கிறார். 

மேல்கை அபய முத்திரையாகவும், தன்னுடைய பக்தர்களைக் காப்பது போன்றும், இடது மேல்கை அவருடைய அவதார ரூபத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வலது திருக்கரத்தால் அவருடைய அன்பிற்குரிய குழந்தை பிரகலாதனை ஆசீர்வதிப்பது போலவும், மற்ற கரங்களால் பலவிதமான ஆயுதங்களை ஏந்தியிருப்பது போலவும் சேவை சாதிக்கிறார்.

யார் இந்த ஸ்ரீநரசிம்மர் குடி கொண்டுள்ள சிங்கர்குடிக்கு வந்து வணங்க வருகிறார்களோ அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பகவான் அருளால் நீங்குகின்றன. மேலும் அவர்களுடைய வாழ்க்கை அமைதியாகவும், தீர்காயுளுடன் கூடியதாகவும் விளங்குகிறது. இங்கே ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி உற்சவம், பிரம்மோற்சவம் (10நாட்கள்) கொண்டாடப்படுகின்றன. பெருமாள் உற்சவமூர்த்தி பாண்டிச்சேரி கடற்கரைக்கு ஊர்வலமாக புறப்பாடு எழுந்தருளி தீர்த்தவாரி (மாசி மகத்தில்) உற்சவம் கண்டருள்கிறார்.

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. வசிஷ்டர் சிங்கிரிக்குடி கோவிலில் நரசிம்மரைக் குறித்துத் தவமியற்றி பாவங்கள் தொலைத்துப் பெருமாளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார். நவக்கிரக தோஷ நிவர்த்தியாகும் தலம் இது என்று சொல்லப்படுகிறது. குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள் சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது.. 

புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.