Saturday 31 August 2019

இத்தனை வாகனங்களா விநாயகருக்கு ?


விநாயகப் பெருமானின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் இவர், பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள் புரிந்திருக்கிறார்.

கிருதயுகத்தில் இவரது வாகனம் சிங்கம். திரேதா யுகத்தில் மயில். துவாபர யுகத்தில் மூஷிகம். கலியுகத்தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் இவரை தரிசிப்பது அரிதாகும். விநாயகருக்கு ரிஷபம், யானை ஆகியவையும் வாகனமாய் இருந்திருக்கின்றன.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர், சிம்ம வாகனத்தில் காட்சி அளிக்கிறார். திருவொற்றியூர் குருதட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங்களுடன் சிம்மத்தில் அருள்புரிகிறார்.

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும் அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில் உள்ள ஓவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார்.

கோயம்புத்தூர் குருபதேசக் கவுண்டர் ஆலயத்திலும் கடலூர் வட்டம் சென்னப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார்.

திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில் உள்ள அரசாள்வார் விநாயகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ள விநாயகருக்கும் யானை வாகனமாக உள்ளது.

சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்திலுள்ள விநாயகர் முன்பும் நெல்லை காந்திமதியம்மன் கோயிலில் அருள்புரியும் விநாயகப்பெருமானின் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது.

சனி தோஷம் இனி இல்லை


சனி தோஷத்தில் இருந்து விடுபட மதுரை மாவட்டம் திருவாதவூர் வேதபுரீஸ்வரரை தரிசியுங்கள். திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அவதரித்த தலமாகும்.

தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களையும், அசுரகுருவான சுக்ராச்சாரியாரின் தாயாரையும் மகாவிஷ்ணு கொன்றார். இப்பாவத்தைப் போக்க ஒரு குளமாக மாறி சிவனை வழிபட்டார். அங்கிருந்த தாமரை மலரின் நடுவில் வேத நாதம் ஒலிக்க சிவன் தோன்றி பாவம் போக்கினார். இவரே 'வேதபுரீஸ்வரர்' என்னும் பெயரில் இங்குள்ளார். பிரம்மா ஒருமுறை யாகம் நடத்த, அம்பிகை காட்சியளித்து படைப்புத் தொழில் சிறக்க அருளினாள். அவளே 'ஆரணவல்லி' என்னும் பெயரில் உள்ளாள்.

மதுரை அரிமர்த்தன பாண்டியரின் அவையில் முதலமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். இவர் வாழ்ந்த வீடு தனி கோயிலாக உள்ளது. ஆவணி மாதத்தில் மதுரையில் நடக்கும் புட்டுத்திருவிழாவில் பங்கேற்க மாணிக்கவாசகர் மதுரைக்குச் செல்வார்.

மகரிஷியான மாண்டவ்யர், ஏழரைச்சனியால் துன்பபட்டதால் சனியின் கால் முடமாகும்படி சாபமிட்டார். இங்கு வழிபட்ட பின்னரே சனி பகவான் விமோசனம் பெற்றார். இதனால் சுவாமிக்கு 'வாதபுரீஸ்வரர்' என்றும் பெயர் உண்டு. இவரை வழிபட்டால் ஏழரை, அஷ்டம சனி பாதிப்பு நீங்கும். முடக்குவாதம், கை, கால், உடல் வலி உள்ளவர்கள் அபிஷேகம் செய்கின்றனர். கோயிலின் பின்புறம் விஷ்ணு தீர்த்தம் உள்ளது. வாகனத்தை தொலைத்தவர்கள் பைரவருக்கு நெய் தீபம் ஏற்ற பலன் கிடைக்கும்.

விசஷே நாட்கள்: மாணிக்கவாசகர் குருபூஜை, ஆவணி புட்டுத் திருவிழா, மகாசிவராத்திரி, சனி பிரதோஷம்

நேரம்: காலை 6:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி 

எப்படி செல்வது: மதுரையில் இருந்து 24 கி.மீ., 

மகா மாரியம்மன் திருக்கோவில் வலங்கைமான்


தலச்சிறப்பு : மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், 'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள், "தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்". பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும்.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.

தல வரலாறு : வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோயில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோயில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள். அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது. 

அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர். கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது. அய்யனார் கோயிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.

ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள். ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்.

பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார். அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோயிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோயில் தோன்றி வளர்ந்த வரலாராக கூறப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.

கோயில்முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
வலங்கைமான் - 612 804, 
திருவாரூர் மாவட்டம்.

Friday 30 August 2019

விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்படுவது ஏன் ?


பொதுமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாகக் கொண்டு, நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று பின்பற்றப்பட்டு வருகிறது. 

கோவில்களில் இருந்து கும்பாபிஷேகம் வரை அனைத்திலும் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் நமது முன்னோர்கள் செய்து வைத்திருக்கிறார்கள். ஊர் நடுவில் இருக்கும் கோவிலின் கலசங்கள் இடிதாங்கியாக பலனளித்து வந்திருக்கிறது. 

கலசமும் அதனுள் இருக்கும் தானியங்களும் இந்த நலனை அளித்து வந்துள்ளது. இவற்றின் சக்தி 10 லிருந்து 12 ஆண்டுகளுக்குள் குறைந்து விடும். அதனால்தான் இந்த இடைப்பட்ட காலம் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் என்ற பெயரில் அவற்றை மாற்றி வந்துள்ளனர். 

அதேபோலத் தான் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பதும். ஆற்றில் நீர் தங்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர் ஆதாரம் பெறுக வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் தான் இது. ஆடிபெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை கரைத்துக்கொண்டு போய்விடும். அதனால் அவ்விடத்தில் நீர் நிலத்தில் இறங்காமல் ஓடி கடலை சென்றடைந்துவிடும். அதனால் தான் குறிப்பிட்ட ஆடி மாதம் முடிந்து அதற்கு அடுத்த மாதமான ஆவணி மாத சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வந்துள்ளனர் வந்துள்ளனர் நம் முன்னோர்கள். 

ஆற்றில் நீர் தங்கிடவும், களிமண் உள்ள இடத்தில் நீர் கீழே பூமியில் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர் அதிகரிக்கும் நோக்கதுடனும் செய்யப்பட்டது தான் களிமண் விநாயகர் சிலைகள். அதனால் தான் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகளை களிமண்ணால் செய்து ஆற்றில் கரைத்து வந்திருக்கின்றனர் நமது முன்னோர்கள். ஆனால் ஏன் 3 அல்லது 5 நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்க வேண்டும். 

ஈரமான களிமண் சீக்கிரமாக கரைந்து நீரின் வேகத்தோடு அடித்துச் செல்லப்படும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிய தங்கிவிடும். நிலத்தடிநீர் அதிகரிக்கும். இதனால் ஆற்றில் வரும் நீரானது, பூமியில் நிலத்தடி நீராக மாறி நமக்கான குடிநீர் பிரச்சனையை தீர்க்கும். இதனால்தான் நமது முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளனர். 

ஆனால் இன்று ஏன்? எதற்கு? என்று தெரியாமல் கடலில் விநாயகர் சிலைகளை வீணாய் கரைத்து வருகின்றனர். மேலும், இப்பொழுது சாயம் வண்ணங்கள் சேர்த்து உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் நீர் மாசுபடுகிறது. மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு காரியம் இன்று அந்த மக்களுக்கே தீங்காக அமைகிறது என்பது வருத்தத்திற்குரியது.

தங்கையுடன் வீற்றிருக்கும் நரசிம்மர்


தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள அங்கமங்கலத்தில் புகழ்பெற்ற நரசிம்ம சாஸ்தா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நரசிம்மர், சாந்தமான நரசிம்ம சாஸ்தாவாக தங்கை அன்னபூரணியுடன் வீற்றிருக்கிறார். இந்தியாவிலே நரசிம்மர் தன் தங்கையுடன் வீற்றிருக்கும் ஒரே தலம் இதுதான்.  

காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் நரசிம்மருக்கு வடைமாலை சாற்றியும், அவரது உக்கிரத்தைப் போக்க வெட்டிவேர் மாலை சாற்றியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

இந்த ஆலய பிரகாரத்தில் மகாகணபதி, பாலசுப்ரமணியர், அகத்தியர், பேச்சியம்மன் மற்றும் பிரம்மசக்தி ஆகியோர் உள்ளனர்.   

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் ஐஸ்வரியம் கிடைக்கவும் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.  இந்த ஆலயம் 1500 ஆண்டுக்கு முற்பட்டது. இத்தல வரலாறு வருமாறு:-

மகாவிஷ்ணு, தன் பக்தன் பிரகலாதனின் துயர்போக்க தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக கடும் உக்கிரத்துடன் வெளிப்பட்டார். சந்தியாகால வேளையில் தனது திருக்கரங்களால் இரண்யனைத் தூக்கி தன் தொடையில் இருத்தி, கூரிய நகத்தால் தொடையையும், மார்பையும் பிளந்து வதம் செய்தார்.

அதன் பின்னரும் நரசிம்மருக்கு கோபம் குறையவில்லை. மகா உக்கிரமாக அனல் பறக்க நின்ற அவரைக் கண்டு, தேவர்களும் அஞ்சினர். முனிவர்களும், தேவர்களும் ஒன்றுகூடி திருவடிகளைத் தொழுது பல துதிகளால் போற்றி சாந்தப்படுத்த முயன்றார். ஆனால் நரசிம்மரோ நெருங்க முடியாத அளவுக்கு கோபக் கனலுடன் காட்சியளித்தார்.

தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மாவை வணங்கி சாந்தப்படுத்த வேண்டினர். பிரம்மாவோ, என்னிடம் வரம் பெற்ற இரண்யனை சம்ஹாரம் செய்ததால் ஏற்பட்ட சினத்தைத் தணிக்க என்னால் இயலாது என்றார்.

நரசிம்மர் தோன்றியதற்கு காரணமான பிரகலாதனிடம் சொல்லி சாந்தப்படுத்தமாறு யாவரும் வேண்டினர். தன்னைப் போற்றித் துதித்த பிரகலாதனை அழைத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டார் நரசிம்மர். ஆனாலும் அவரது கோபம் முழுவதுமாகக் குறையவில்லை.

நரசிம்மரின் உக்கிரம் தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடுமோ என எல்லோரும் அஞ்சினர். மகாலட்சுமியும் தன் பங்கிற்கு அவரது சினத்தினைப் போக்க உதவினாள். சினம் தணிந்தார் சிங்கவேள். இதுவரை புராணங்கள் சொல்கின்றன.

அதன் பின்னரும் சிறிதளவு சினம் நரசிம்மருக்கு இருந்ததாகவும், அதனைப் போக்க அவரது தங்கையான அன்னபூரணி உதவியதாகவும் சொல்கிறது. இக்கோவிலின் தலபுராணம். தேவர்கள் வேண்டுகோளின்படி அன்னபூரணி, நரசிம்ம மூர்த்தியிடம் சினம் தணிந்திட வேண்டினாள். தங்கையின் விருப்பத்திற்கேற்ப சாந்தரூபமாக மாறினார், நரசிம்மர். பின்னர் சரப தீர்த்தத்தில் நீராடி, லிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கி சாந்தமானார்.

இதனால் இவ்வூரில் உள்ள லிங்கம் நரசிங்க நாத ஈஸ்வரன் என்றும்; இங்குள்ள சிவாலயம் நரசிங்க நாத ஈஸ்வரன் கோவில் கோவில் என்றும் பெயர் பெற்றது. ஒரு சமயம் தென்காசியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நரசிம்ம சாஸ்தாவுக்கு நாய் வாகனத்தை நேர்த்திக்கடனாக செய்து கொண்டு வந்தார். கோவிலில் வைத்து திறந்து பார்த்த போது அது நந்தி வாகனமாக மாறியிருந்தது.

அப்போது அருகில் புறையூர் கிராமத்தில் புதிதாகக் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை அயனாதீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யவிருந்தனர். இந்த நந்தியை அங்கு பிரதிஷ்டை செய்தால் நல்லது என பலரின் ஆலோசனைப்படி புறையூருக்குக் கொண்டு சென்று உரிய முறையுடன் பிரதிஷ்டை செய்தனர்.

தினமும் இந்த ஆலயத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலேயே முறைப்படியான பூஜைகள் தொடங்கி விடுகின்றன. புரட்டாசி மாத நவராத்திரி பூஜையின் போது 1008 தீபம் இலுப்பை எண்ணெயில் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இதனால் துன்பங்கள், தடைகள், எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.
ஆடிப்பூரமும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியும், ஆவணி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நரசிம்ம ஜெயந்தியின் போது நரசிம்மருக்கு பானக அபிஷேகம் செய்யப்படுவது சிறப்பானது.

ஆழ்நிலை தியானம் எப்படி செய்யலாம் ?


மூலாதார சக்தியானது உடலின் செயல்பாடுகளைச் செம்மையாகச் செயல்படுத்தவும், உடலில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படவைக்கவும் முக்கிய காரணமாக அமைகிறது.

பிராண வாயுவை மூலாதாரத்தில் நிறுத்தி மூலாதார சக்தியை வலுவடையச் செய்ய வேண்டும். அதற்குச் சிறந்த வழி ஆழ்நிலை தியானமே சிறந்தது. இந்த ஆழ்நிலை தியானத்தில் ஈடுபடும்போதுதான் பிராண வாயு மூலாதாரத்தையடைந்து மூலாதார சக்தியைத் தூண்டி உடலெங்கும் செயல்பட வைக்கின்றது.

ஆழ்நிலை தியானம் எப்படி செய்யலாம் ?

ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட அமைதியான காற்றோட்டம் மிகுந்த இடம் வேண்டும். நன்கு சுத்தமான சிறிய அறைகூட போதுமானது. அல்லது கடற்கரை, பூங்கா, மலைவாசஸ் தலங்களில் உள்ள இடங்களில் தனித்து தியானம் செய்யலாம்.

பொதுவாக தியானம் காலை மற்றும் மாலை நேரங்களில் செய்வது மிகவும் நல்லது. இப்படி ஆழ்ந்த தியான நிலையில் சுவாசம் மூலம் பிராணன் உட்சென்று மூலாதாரத்தை அடையும். அங்கே மூலாதார சக்தியானது வலுவடையும். இதனால், உடலானது பிரபஞ்ச சக்தியோடு தன்னை இணைந்துகொள்ளும்.

பிரபஞ்ச சக்தியோடு இணைந்து கொண்ட உடல், ஆன்ம சக்திக்கு கட்டுப்படும். இப்படி கட்டுப்பட்ட உடலை ஆன்ம சக்தி பரிபூரணமாக ஆட்கொண்டு முதன்மையான சக்தியாக விளங்கும். ஆன்ம சக்தி ஆட்கொண்டதால் உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணையும். இந்த நிலையே ஒருவரை சாந்த சொரூபியாக மாற்றும். இதைத்தான் ஆன்மீக சக்தி என்று அழைக்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை அடைந்தவர்கள் எப்போதும் புன்முறுவலோடும் நிதானத்தோடும் காணப்படுவார்கள். இவர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தி பெறுவார்கள். இவர்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் ஈடேறும். மேலும் இவர்கள் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துபவராக இருப்பார்கள்.

இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் தான் சிவயோகிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் போற்றப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஆன்ம சக்தி கிடைக்காதவர்கள் உடல் என்ற சக்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். 

இவர்களிடம் ஆன்மீக சக்தி பலமிழந்தே காணப்படும். இதனால் இவர்கள் அடிக்கடி தங்களின் எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எதிலும் நிதானமின்றி காணப்படுவார்கள். எத்தகைய முடிவையும் இவர்களால் எடுக்க முடியாது. ஒருசில நேரங்களில் ஆன்மீக சக்தி இழந்தும் காணப்படுவதுண்டு. உலக சஞ்சாரங்களில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள்.

இவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்காது. இவர்களின் மனம் ஒருநிலைப்படாது. இவர்களால் மூலாதார சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் ஒருங்கிணைக்க முடியாது. ஆன்மிக சக்தியை பெற்றவர்கள்தான் சித்தர்கள். ஆன்மீக சக்தியை ஆட்கொண்டவர்களின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து இருக்கும். மனம், புத்தி, காமம், குரோதம், அகங்காரம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக வலம் வருவார்கள்.

இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் பெற்ற ஆன்ம சக்தியின் பலத்தையும், ஆசியையும் பெறுவதுதான் ஞானத்திற்கு சிறந்த வழி. பிராணவாயுவை உள்வாங்கி மூலாதார சக்தியை தூண்ட தவம் செய்வதே சிறந்த வழியாகும். தவநிலையில்தான் சரசுவாசம் நடைபெறும். 

இந்நிலையில் தான் ஆன்மீக சக்தியைப் பெற முடியும். இதைத்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே என்றும், ஊன் உடம்பே ஆலயம், என்று திருமூலரும் கூறுகிறார்கள். உள்ளத்தை கோவிலாக எண்ணி வழிபட்ட மகான்கள்தான் சித்தர்கள். அமைதியாக சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து பிராண வாயுவை உள் வாங்கி வெளியிட்டாலே இவர்கள் ஆன்மீக சக்தியை பெறலாம்.

சரசுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையை அடையும். இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத்தரும். இந்நிலையை அடைந்தவர்களே சித்தர்கள்.

Thursday 29 August 2019

இன்றும் வாழும் ஏழு பேர் யார் தெரியுமா ?


இந்த உலகில் ஏழு பேர் சிரஞ்சீவிகளாய் வாழ தகுதி பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். சுயநலமற்ற சேவை செய்த அனுமன், அண்ணன் என்றும் பாராமல் நியாத்தின் பக்கம் நின்ற விபீஷணன், மகாவிஷ்ணுவுக்கு தானம் அளித்த மகாபலி, சிவபக்தியால் எமனையே வென்ற மார்க்கண்டேயர், மகாபாரதம் எழுதிய வியாசரும், தந்தை சொல்லுக்காக தாயையே கொன்ற பரசுராமர், கடைசி வரை கட்சி மாறாமல் கவுரவர்களுக்காக போர் புரிந்த துரோணரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சிரஞ்சீவி என்னும் நிலை பெற்று இன்றும் வாழ்வதாக புராணங்கள் கூறுகின்றன.

பணவரவுக்கு பச்சை கற்பூரம் !


பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து, தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்தாகும். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 

2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். அப்படி பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். ஒருவருக்கு மன நிம்மதி இல்லாமல் போவதற்கு காரணமே, வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள்தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியேறி விடும். அதனால் வீட்டில் எப்போதும் மன நிம்மதி இருக்கும்.

அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை வீட்டில் தங்கச் செய்யும் தன்மை இருக்கிறது. அதனால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாத நிலை உருவாகும். வீண் செலவுகள் இருக்காது. பச்சை கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசனைகளையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். 

2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து, உங்களது பர்சில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால் விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படும். பணம் செலவானாலும், வரவும் இருந்து கொண்டே இருக்கும்.

தொழில் விருத்தி அடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

வீட்டில் நடைபெறக் கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி, நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். 

நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.

பஞ்சாங்கம் என்பது என்ன ?


நம்முடைய கலாசாரம், பண்பாடு, சாஸ்திரம், சம்பிரதாயம், விரதங்கள், விசேஷங்கள், வழிபாடுகள், உற்சவங்கள் என பல விஷயங்களை உள்ளடக்கிய ஓர் வழிகாட்டி புத்தகமே பஞ்சாங்கம் ஆகும். இவற்றில் ஐந்து விஷயங்கள் மிக முக்கியமானவை. பஞ்ச என்றால் ஐந்து, இந்த ஐந்து விஷயங்களை மையமாக வைத்து அன்றைய தினத்தை பற்றி தெரிந்துகொள்வதுதான் பஞ்சாங்கம் ஆகும்.

(1) வாரம்: ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகளை அறிவது.

(2) திதி: சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பது. வளர்பிறை 15 திதி, தேய்பிறை 15 திதி மொத்தம் 30 திதிகள்.

(3) நட்சத்திரம்: குறிப்பிட்ட தினம் எந்த நட்சத்திரத்தின் ஆளுமையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்வது. அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27.

(4) யோகம்: குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்கின்ற மொத்த தூரம். விஷ்கம்பம் தொடங்கி வைதிருதி வரை மொத்தம் 27 யோகங்கள்.

(5) கரணம்: திதியில் பாதி தூரம் கரணம் எனப்படும். பவம் தொடங்கி கிம்ஸ்தக்னம் வரை மொத்தம் 11 கரணங்கள்.

நட்சத்திர பலன்

பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நட்சத்திரங்களில் கடன் வாங்குவது கொடுப்பது கூடாது. அந்த நாட்களில் கடன் வாங்கினால் திரும்ப செலுத்துவது மிகவும் கடினம். கடன் கொடுத்தால் திரும்பப் பெறுவதும் கடினம். எக்ஸ்ரே, ஸ்கேன், மருத்துவ பரிசோதனைகள், அறுவை சிகிச்சை போன்றவற்றை செய்யக்கூடாது. வெளிநாட்டுப் பயணம், வியாபார சம்பந்தமான பயணம், சுபவிஷயங்களை பேசுவதற்கான பயணங்களை செய்வது கூடாது.

கலைஞான பாதம்

ஒருவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 16வது நட்சத்திரத்தின் நான்காவது பாதம், கலை ஞான பாதம் என்றழைக்கப்படுகிறது. பிறக்கும்போது ஒருவரின் ஜாதகத்தில் யோக கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சுபகிரகங்கள் இந்த கலைஞான பாதத்தில் அமைந்திருந்தால் மிகப்பெரிய விசேஷமான ராஜயோக பலன்களை அந்த ஜாதகர் அனுபவிப்பார். லக்னத்திற்கு மூன்றாம் வீட்டை சுபகிரகங்கள் பார்த்தால் சரஸ்வதி யோகம். சகல வித்தை, கல்வி, ஞானம் உண்டாகும். இயல், இசை, நாடகம், சினிமா, கலை போன்ற படைப்புத்துறையில் சாதனை படைப்பார்கள். புதன் மற்றும் ஏழாம் அதிபதி பார்த்தால் மாமனார் மூலம் சொத்து குவியும். அதிக உழைப்பின்றி செல்வம் சேரும். பிறருக்கு ஆலோசனை வழங்கி, பணம் சம்பாதிப்பார்கள்.

வியாழ வட்டம்

ஜென்ம லக்னம், ராசி, எதுவாக இருந்தாலும் வியாழன் என்றழைக்கப்படும் குரு எந்த வீட்டிலிருக்கிறார் என்பதைப் பொறுத்து வியாழ வட்டம் ஏற்படுகிறது. ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும் குருவளையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆள்காட்டி விரலுக்கு கீழே உள்ள மேடு குருமேடு என்றழைக்கப்படுகிறது. இந்த குரு மேட்டை சுற்றி வளையம்போல் ஒரு ரேகை அமைப்பு தோன்றும். இதற்கும் குருவளையம் என்று பெயர். சாலமன் ரிங் என்றும் இதனை அழைப்பர். இத்தகைய அமைப்புடையவர்கள் உயர்ந்த அந்தஸ்து, நிறைந்த ஞானம், பெருந்தன்மை உடையவர்கள்.  நிதித்துறை, நீதித்துறை போன்றவற்றில் உயர்ந்த பதவி வகிப்பார்கள். சமூகத்தில் இவர்கள் பேச்சுக்கு  மதிப்பு இருக்கும்.

சூரியனுடன் கேது சேர்ந்திருந்தால் சாஸ்திர ஞானம் உண்டாகும். பக்தி, கர்ம, யோக, ஞான மார்க்கத்தில் ஈடுபடுவார். மந்திர, தந்திர, சித்திகள் கைகூடும். ஜோதிடம், மருத்துவம், ரசவாதம் போன்றவற்றில் தேர்ச்சி, புகழ் கிடைக்கும் சூரியனுடன் ராகு சேர்ந்திருந்தால் சாஸ்திர தர்மங்கள், சமூக ஒழுக்கங்களை பற்றி கவலைப்படமாட்டார்கள். சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபடுவார்கள். தேடப்படுகின்ற குற்றவாளியாக அறிவிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

சந்திரனுடன் ராகு சேர்ந்திருந்தால் விதண்டாவாதம் செய்வார்கள். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். பிடிவாதத்தினால் பல நல்ல வாய்ப்புகளை இழப்பார்கள். பொய்ப் பிரசாரங்கள், ஒருவரைப்பற்றி இல்லாததை, பொல்லாததை பரப்பி விடுவார்கள். சந்திரனுடன் கேது சேர்ந்து இருந்தால் சொல் ஒன்று, செயல் வேறாக இருக்கும். கோபாவேசமாக கத்துவார்கள் அல்லது விரக்தி அடைவார்கள். சஞ்சல புத்தி, சித்த பிரமை ஏற்படும், தற்கொலை எண்ணம் தோன்றும். 

செவ்வாயுடன் ராகு சம்பந்தம் இருந்தால் ஜாதகரை சினிமா சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட வைக்கும். செவ்வாய் கேது சம்பந்தம் மருத்துவத்துறையால் ஜீவனம் அமையலாம். சுக்கிரன் ராகு சம்பந்தம் இயல், இசை, நாட்டியம், சினிமா போன்ற கலைத்துறையில் பிரகாசிக்கும் யோகம் கிடைக்கும். தீயோர் நட்பு, கூடா பழக்க வழக்கங்கள் மூலம் கௌரவ பாதிப்பு, சொத்து, பொன், பொருள் இழப்பு ஏற்படும். மணவாழ்வில் குருதிருமண வாழ்க்கைக்கு இரண்டு கிரகங்களைப் பற்றி முக்கியமாக பார்க்க வேண்டும். 

ஒருவர் தேவகுரு, மற்றொருவர் அசுரகுரு. தேவகுரு வியாழன், அசுர குரு சுக்கிரன். வியாழன், திருமண விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். கல்யாணம் என்றவுடன் குருபயம், வியாழ நோக்கம் இருக்கிறதா என்பதைத்தான் எல்லா பெற்றோர்களும் பார்க்கிறார்கள். அந்தளவிற்கு இந்த ஜோதிட சொல் மிகவும் பிரசித்தம். குருபலம் என்பது கோச்சார நிலையில் ஒரு ராசியை விட்டு அடுத்த ராசிக்கு பெயர்ச்சி, அவரவர் பிறந்த ராசிக்கு 2, 4, 5, 7, 9, 10, 11 போன்ற வீடுகளில் குரு வரும்போது குருபலம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இதில் ஆண் அல்லது பெண் யாராவது ஒருவருக்கு இருந்தாலும் போதும் என்பதும் வழக்கத்தில் உள்ளது. குருவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ளதற்கு காரணம், அவர் தனம், புத்திரப்பேறு என்ற முக்கியமான இரண்டு அதிகாரங்களை பெற்றுள்ளார். பொன், பொருள், பக்தி, சமூக அந்தஸ்து, நல்ல சிந்தனைகள், பெருந்தன்மை, ஞானம், ஒழுக்கம் போன்றவற்றை அருள்பவரும் குருவே. 

பெண்கள் ஜாதகத்தில் குருவிற்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. அதாவது குரு பாத்ருகாரகன், கணவனை குறிக்கும் கிரகம். குரு யோகஸ்தானங்களில் தமது அருள்பார்வையால் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை தருகிறார். குருபலம் இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு திருமணம் கூடிவராது. பல்வேறு சாஸ்திர அம்சங்களில் இதுவும் ஒன்று. உதாரணமாக ஜென்ம குரு என்ற இடத்தில் இருந்து குரு பார்வை பலம் சிறப்பாக அமையும். களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை பார்ப்பார். 

அதேபோல் அஷ்டம குரு எனப்படும் எட்டாம் வீட்டில் உள்ள குரு நேராக குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டைப் பார்ப்பார். ஆகையால் இந்த பார்வை விசேஷம் காரணமாக சுபகாரியங்கள் கூடி வருவது அனுபவத்தில் கண்ட உண்மை. ஜனன லக்னத்திற்கு 5 அல்லது 12ம் இடத்தில் கேது அமையப் பெற்றவர்களுக்கு மோட்ச கதி உண்டு. கேது திசையில் மரணம் அடைந்தாலும் மறுபிறவி கிடையாது. 

லக்னாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டிற்குரிய கிரகம் பலம் பெற்றிருந்தால் பெருந்தன்மை, விட்டுக்கொடுக்கும் பரந்தமனம் இருக்கும். ஞானநிலை ஏற்படும். 5ல் சனி இருந்தால் ஞானத்தேடல் அமையும். 5ல் குரு இருந்தால் வேதாந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் தேய்பிறை சந்திரன் இருந்தாலும், இரண்டாம் இடத்தை தேய்பிறை சந்திரன் பார்த்தாலும் மனஅமைதி இருக்காது. பணத்தட்டுப்பாடு இருக்கும். கையில் காசு இருந்தால் உடனே அதற்கு செலவு வரும். 

பேச்சில் முரண்பாடு இருக்கும். திக்குவாய் குறைபாடு இருக்கும். தண்ணீரில் கண்டம் உண்டு. ஜாதகத்தில் சூரியன் இருக்கும் ராசிக்கு, மூன்றாம் இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள், பாக்கியசாலிகள். இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் வாழ்க்கையில் யோகம் அமையும். குறிப்பாக பெண்களால் இவர்களுக்கு சௌபாக்கிய யோகம் உண்டு. 

ஜாதக கட்டத்தில் அயன, சயன, போக ஸ்தானத்தில் ராகு இடம் பெற்று இருந்தால் ஜாதகரின் நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக இருக்கும். கெட்ட சகவாசம், முறை தவறிய வாழ்க்கை, சூதாட்ட குணம், வீண் ஜம்பம், ஆடம்பரம் போன்றவை இருக்கும். லக்னத்திற்கு மூன்றாம் இடமான திட, தைரிய, வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் இருந்தால் எளிதில் உணர்ச்சிவசப்படுவர். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று செயல்படுவார். தன் கருத்துகளை பிறர் மீது திணிப்பார். பிறர் மனத்தை புண்படுத்துவதில் இவர்களுக்கு அலாதி பிரியம் இருக்கும். 

ஜாதக கட்டத்தில் மாதுர் ஸ்தானமான 4ம் வீட்டிலோ, மனைவி ஸ்தானமான 7ம் வீட்டிலோ வளர்பிறை சந்திரன் இருந்தால் சகல சம்பத்து உடையவராவார். தாயார் மூலம் சொத்து சேரும். பானை பிடித்தவள் பாக்கியசாலி என்பதற்கேற்ப திருமணமானவுடன் சுபயோகம் கூடிவரும். பெண்களால் இன்பம், லாபம் அடையக்கூடியவர். உயில் சொத்து சேரும் யோகம் உண்டு. 

லக்னத்திற்கு நான்காம் வீடாகிய சுகஸ்தானத்தில் ராகு இருந்தாலும், சனி பார்த்தாலும் ஜாதகர் ஜீரண கோளாறினால் பாதிக்கப்படுவார். அடிக்கடி வயிற்று உபாதைகள் வரும். மூலநோய் தாக்கும். பெண் ஜாதகமாக இருந்தால் மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், கருச்சிதைவு உண்டாகும். ஜீவனத்திற்குரிய இடமான பத்தாம் அதிபதி வலுவாக அமர்ந்த சுபகிரகங்கள் பார்த்தால் அல்லது உத்தியோககாரகன் எனப்படும் செவ்வாய் பலமாக இருந்து லக்னத்திற்கு  3, 4, 9, 10, 11 ஆகிய வீடுகளில் இருந்தால் நிச்சயம் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும்.

அமாவாசை

வழிபாடுகள் மற்றும் சாஸ்திர விஷயங்கள் மக்களிடையே தவறாக பரப்பப்பட்டு விட்டது. பெரும்பாலான மக்கள் கண்டும், கேட்டும், வழக்கத்திலும் அமாவாசை திதியை ஒரு நிறைந்த நாள் என்று தவறாக நினைத்துக்கொண்டு பல முக்கியமான காரியங்களை செய்கிறார்கள். முக்கியமாக வாகனம் வாங்குவது, ஒப்பந்தம் போடுவது, புதிய பணிகளை துவக்குவது, அட்வான்ஸ் கொடுப்பது போன்ற சுபகாரியங்களை ஆரம்பிக்கிறார்கள். அமாவாசை திதி என்பதே ஒரு சூன்ய திதியாகும். (இருள் நிறைந்த நாள்) எனவே இதில் சுபவிஷயங்களை தொடங்கக் கூடாது. 

மறைந்த நம் முன்னோர்கள், தாய், தந்தையர், உடன்பிறந்தவர்களை நினைத்து திதி கொடுக்கும் தினம். முன்னோர்களை நினைத்து தானதர்மம் செய்ய சிறந்த நாள். திருஷ்டி கழிக்க ஏற்ற நாள், காளி, நீலி, சூலி, பிரத்தியங்கரா, முனீஸ்வரர், கருப்பண்ணசாமி போன்ற உக்கிர, காவல் தெய்வங்களை வழிபடக்கூடிய நாள். அதேபோல் பௌர்ணமி அன்று சூரிய சந்திர சக்திகளின் மின்காந்த அலை அதிகம் உள்ள நாள். இன்றைய தினம் அறுவை சிகிச்சைகளை செய்யக்கூடாது. குறிப்பாக, சிசேரியன் முறையில் குழந்தை பிறப்பு கூடாது.

Wednesday 28 August 2019

அத்தி ரெங்கநாத பெருமாள் கோவில்


வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பாற்கடல் என்ற ஊர் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 107-வது திவ்யதேசமாக அழைக்கப்படுவது திருப்பாற்கடல். (திருமால் பள்ளிகொண்டிருக்கும் திருப்பாற்கடலை, 107-வது திவ்ய தேசமாக சொல்பவர்களும் உண்டு). இந்த கிராமத்தில் காஞ்சிபுரம் அத்தி வரதரை போலவே, மிகவும் அபூர்வமான அத்தி மரத்தினால் ஆன அத்தி ரங்கநாத பெருமாள் கோவில் கொண்டிருக்கிறார். ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில் காட்சி தரும் பெருமாள் வீற்றிருக்கும் ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

கோவில் வரலாறு,

திருப்பாற்கடலின் ஆதிசேஷன் மேல் சயனித்து கொண்டிருக்கும் திருமாலின், நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மதேவன். பரம்பொருளின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்ததால் பிரம்மனுக்கு அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரமே அவரை, திருமாலை தரிசிக்க முடியாத நிலைக்குத் தள்ளியது. இதனால் வருந்திய அவர், பூலோகம் வந்து காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய நினைத்தார். சரஸ்வதியை தன்னுடன் வந்து யாகத்தில் கலந்து கொள்ளும்படி அழைத்தார். ஆனால் பிரம்மனுடன் இருந்த பிணக்கு காரணமாக, யாகத்திற்கு வர சரஸ்வதி மறுத்து விட்டார். எனவே தன்னுடைய மற்ற மனைவியரான சாவித்திரி, காயத்ரி ஆகியோரோடு காஞ்சிபுரம் வந்து யாகத்தை தொடங்கினார் பிரம்மதேவன்.

இதனால் கடுங்கோபம் கொண்ட சரஸ்வதி, பிரம்மனின் யாகத்தை அழிக்கும் நோக்கில், வேகவதி நதியாக உருவெடுத்து யாகம் நடைபெற்ற இடத்தை நோக்கி ஓடிவந்தார். அப்போது பிரம்மதேவன், திருமாலை நோக்கி பிரார்த்திக்க, இறைவன் ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் வெள்ளம் வரும் பாதையின் குறுக்கே படுத்து நதியை தடுத்தார். யாகமும் பூர்த்தியடைந்தது. பிரம்மாவின் பிரார்த்தனைக்கு இணங்கி பக்தர்களுக்கு நிரந்தரமாக சேவை சாதிக்க இறைவன் ஒப்புக்கொண்டார். ஷீராப்தி (திருப்பாற்கடல்)யில் உள்ள திருக்கோலத்துடனேயே இந்த தலத்திலும் இறைவன் காட்சி தருவதால், இறைவனுக்கு ‘ஷீரப்திநாதன்’ என்று பெயர். ஊரின் பெயரும் திருக்கரைபுரம் என்றானது. அதுவே மருவி தற்போது ‘திருப்பாற்கடல்’ என்று அழைக்கப்படுகிறது.

வேகநதி என்ற பாலாற்றின் நடுவில் சயனித்து கொண்டு இருப்பதால், இத்தல இறைவனுக்கு ‘ரங்கநாதர்’ என்ற பெயர் வந்தது. இந்த பெருமாளை தரிசனம் செய்தால் சித்ரகுப்தன் எழுதி வைத்த நம்முடைய பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தல மூலவரான அத்தி ரங்கநாதர், ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட நிலையில் காட்சி தருகின்றார். 24 கால் மண்டபத்தை கடந்து உள்ளே சென்றதும் இடப்புறம் தாயார் சன்னிதி. அங்கு ரங்கநாயகி தாயார் அற்புதமான தோற்றத்தில் அருள்பாலிக்கின்றார். 

பன்னிரு கரங்கள் கொண்டு விளங்கும் இந்த அன்னையின் முன் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரையும், மற்ற கரங்கள் தாமரை மலர்களைத் தாங்கியும் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ரங்கநாயகி தாயாருக்கு ‘பெரிய பிராட்டி’ என்ற பெயர் உண்டு. அதாவது ‘எல்லாத் தாயார்களுக்கும் பெரியவர் அல்லது மூத்தவர்’ என்று பொருள். திருப்பாற்கடல் ரங்கநாயகி தாயாரும், ஸ்ரீரங்கம் தாயார் போல ‘பெரிய பிராட்டி’யாகவே காட்சி தருகிறார்.

பொதுவாக தாய்மார்களுக்கு பெற்ற மகன்களை விட, மகள்கள் இடத்தில்தான் பாசம் போகும் என்பார்கள். அதேபோல தான் இந்த தாயாருக்கு பெண்கள் இடத்தில் அதிக பாசம் உண்டு. திருமணமாகாத பெண்கள், இந்த ரங்கநாயகி தாயாரை தேன் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால், அன்னை மனம் குளிர்ந்து திருமணம் செய்து வைப்பாள் என்பது ஐதீகம். இதேபோல குழந்தை இல்லாதவர்கள், தாயாருக்கு பாலால் திருமஞ்சனம் செய்து சன்னிதி படியை நெய்யால் மொழுகி, சர்க்கரையால் கோலமிட்டால் குழந்தை பேறு என்னும் சந்தான பாக்கியத்தைத் தருகிறாள்.

ரங்கநாயகி தாயாரின் அனுமதி பெற்று அத்தி ரங்கநாதர் சன்னிதியை அடைந்தால், அங்கு மூலவர் ஆனந்த சயன கோலத்தில் சேவை சாதிக்கிறார். சுமார் 9 அடி நீளமும், 3 அடி உயரமும் உள்ள ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட நிலையில் இந்த பெருமாள் அருள்பாலிக்கின்றார். அவரது திருமுடி அருகே ஸ்ரீதேவியும், திருவடி அருகே பூதேவியும் இருக்க, பெருமாளின் நாபியில் எழும் தாமரைத் தண்டின் மீது பிரம்மதேவன் அமர்ந்திருக்கிறார். இவை அனைத்துமே அத்தி மரத்தால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசியன்று அத்தி ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தால், சொர்க்கத்திற்கு செல்லலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகின்றது.

மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு திருமஞ்சனம் கிடையாது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தைலக்காப்பு நடைபெறும். இந்த நாட்களில் பெருமாளின் முக தரிசனம் பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும். புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளிலும் பூவங்கி சேவை நடைபெறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இக்கோவிலின் தல விருட்சமாக வன்னி மரமும், பின்ன மரமும் இருந்து வருகிறது. திருமணம் ஆகாத பெண்கள், வன்னிமரத்தை 5 முறை வலம் வந்தால் தீய காற்றுகள் அண்டாது என்பது நம்பிக்கை.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா ?


இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழாவாகும்.

முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி  நாளன்று கொண்டாடப்படுகிறது.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும், இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும்  ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர் தான்.

1893-ம் ஆண்டு "சர்வஜன கனேஷ் உத்சவ்" என்ற பெயரில் இவர் ஆரம்பித்துவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்றுவரை மக்கள் மிகப்பெரிய விழாவாக  கொண்டாடி வருகின்றனர். 

புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடன் தேவர்கள் முறையிடதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.

இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் 10 நாட்கள் விநாயகர்  சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தியா மட்டுமின்றி நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

Tuesday 27 August 2019

கோவிலில் இடமிருந்து வலமாக அங்கப் பிரதட்சிணம் ஏன் செய்ய வேண்டும் ?


பொதுவாக கோவிலில் வலம் வரும் போதும், பிரதட்சிணம் செய்வதனாலும், இடமிருந்து வலமாகத்தான் வர வேண்டும். இவ்வாறு பிரதட்சிணம் செய்து வணங்குவது என்பது இயற்கையோடு இணைந்தது. நாம் வாழுகின்ற பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போதும், நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வரும் போதும், இடமிருந்து வலமாகவே சுற்றுகிறது. இயற்கையின் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் நாமும் இடமிருந்து வலமாக சுற்றி வந்து தெய்வங்களை வணங்குகிறோம். நம் வாழ்க்கை சக்கரம் சுழல்வதற்கு கடவுள் என்ற ஒரு புள்ளி வேண்டும்.

அதை மையமாக வைத்தே நம் வாழ்க்கை இயங்குகிறது. நம் தினசரி செயலின் ஆதாரமும், பணிகளின் மையமும் தெய்வமே என்பதை உணர்த்தத்தான், கடவுளை மையமாக வைத்து நாம் ஆலயங்களில் சந்நிதியை சுற்றி வருகிறோம். எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், இந்த பூமியில் வசிப்பவர்கள் இடமிருந்து வலமாகத்தான் சுற்றி வணங்க வேண்டுமே தவிர, வலமிருந்து இடமாக சுற்றி வணங்குதல் என்பது தவறு மட்டுமல்ல, இயற்கை நியதிகளுக்கு மாறானதே ஆகும்.

கோவில்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் வரலாறு !


கோயில்களில் நடத்தப்படும் உற்சவ விழாக்களில் முடிந்த வரை அனைவரும் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொரு பருவ காலத்திற்கும் ஒவ்வொரு விதமான விழாக்களை நடத்துவார்கள். தற்போது பெரும்பாலான கோயில்களில் வசந்தோற்சவம் நடந்து கொண்டிருக்கும். பல கோயில்களில் பிரம்மோற்சவம் நடக்கும். நாம் சிந்திக்க வேண்டிய விஷயமே கோயில் விழாக்களில் இருக்கின்ற சூட்சுமமான விஷயங்களைத்தான்.

முதல் விஷயம், இம்மாதிரியான உற்சவ விழாக்கள் அனைத்திலுமே சமூக ஒற்றுமை ஓங்கியிருக்கும். பெரும் மக்கள் திரளை இம்மாதிரியான விழாக்கள் ஒன்று கூட்டும். இதனால் மக்கள் தங்களின் அன்றாட அலைச்சல்களிலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி கொள்வார்கள். 

கோயில்களில் நடக்கும் திருவிழாக்களுக்குப் பின்னால் ஏதேனும் ஒரு வரலாறு இருக்கும். அந்த வரலாறு பலநூறு வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக இருக்கும். இப்போது அந்த விழாவில் அந்த வரலாற்று நிகழ்வை எல்லோரும் அறியும் பொருட்டு சடங்காக்கியோ அல்லது ஐதீக விழாவாகவோ மாற்றி வைத்திருப்பார்கள். 

கொஞ்சம் உற்று கவனித்தால் அந்தப் பிரதேசத்தின் வரலாற்று நிகழ்வுகள் கூட இருக்கும். இதனால் அந்த வரலாற்றை அழியவிடாது காப்பாற்றிக்கொண்டே வந்திருப்பதை அறியலாம். இரண்டாவது ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தல புராணம் இருக்கும். தல புராணத்தின் இலக்கே தனி மனித ஆன்மிக விழிப்புணர்வுதான். 

தன்னை ஒருவர் சிவ பக்தராகவோ அல்லது வைணவ பக்தராகவோ நினைக்கும், அந்தந்த கோயில் தலபுராணத்தை எடுத்துப் பார்த்தால் அந்த பக்தரை அந்தத் தலபுராணக் கதையானது இன்னும் அணுக்கமாக இறையை நோக்கி நகர்த்துவது முழுவதுமாக புரியும். பெரும்பாலான தல புராணங்கள் மிக மிக சூட்சுமமானவை நிறைய குறியீட்டுச் சொற்களும் கதைகளுமானவை ஆகும்.

நேரடியான பொருளை எடுத்துக் கொண்டால் சிலசமயம் விபரீத அர்த்தங்களைக் கூட கொடுக்கும். அதனால் தலபுராணங்களை அதற்குரியவர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்ளுதல் நல்லது. இம்மாதிரியான தலபுராணங்களை பிரம்மோற்சவம் போன்ற பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாக்களில் நினைவூட்டுவதுபோல் மீண்டும் ஐதீக விழாவாக நடத்திக் காண்பிப்பார்கள். 

கோயில் உற்சவங்கள் கலையழகோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. அழகியலோடு நடத்தப்படுபவை. இசை, நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவை. அலங்காரங்கள் மிகுந்து மனதை கொள்ளை கொள்பவை. பெரும் தத்துவத்தை பத்து உற்சவங்களில் விழாக்களாக மாற்றி வைத்திருக்கும் ஆச்சரியம் நிரம்பியவை. 

இந்த விழாக்கள் பக்தி, ஞானம் இவை இரண்டையும் நம்முடைய கர்ம மார்க்கத்தில் எளிதாக கொண்டு வந்து சேர்க்கும் வல்லமை கொண்டவையாகும். திருவிழாக்களும் உற்சவங்களும் புற உலகில் குதூகலத்தையும், அக உலகின் அழகையும் அமைதியையும் எளிதாக தருபவை. எனவே, உற்சவங்களை உற்று நோக்குங்கள். அது உங்களையே உங்களுக்குக் காட்டும்.

புனித கயிற்றை கைகளில் கட்டும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் ?


கோவிலில் வழங்கப்படுகின்ற கயிறுகள் மற்றும் நாம் பூஜித்த புனித கயிறுகள் கட்டிக்கொள்வதற்கு சில குறிப்பிட்ட வரைமுறைகள் உள்ளது. அவற்றை பின்பற்றுவதால் நமக்கு நன்மைகள் ஏராளம் உண்டு.

பல வண்ணங்களில் இருக்கும் புனித கயிறுகளைப் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு விருப்பம் போன்ற பல வித முடிச்சுகளைப் போட்டு கட்டிக் கொள்கின்றனர். ஆனால் சாஸ்திரப்படி பார்க்கும்போது 5 முடிச்சுகளுக்கு அதிகம் இல்லாத வகையில் முடிச்சு போட்டு கட்டிக் கொள்ள வேண்டும். 

இந்த ஐந்து முடிச்சுகள் என்பது காமம், குரோதம், மதம், மாச்சரியம், லோபம் போன்ற ஐந்து குணங்களை இறைவனின் அருளால் நிறுத்துவதை உணர்த்துவது இந்த ஐந்து முடிச்சுகள் ஆகும்.

கோயில்களில் வாங்கப்படும் புனித கயிறுகளை ஆண்கள் தங்களது வலது கரத்தில் மட்டுமே கட்டிக்கொள்ள வேண்டும். அது போல பெண்கள் தங்களின் இடது கையில் மட்டுமே புனித கயிறுகளை கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கும் தினத்தில் கட்டப்படும் நோன்புக் கயிற்றை மட்டும் பெண்கள் தங்களின் வலது கரத்தில் கட்டிக் கொள்ளலாம்.

மேலும், பலர் கோயில்களில் வழங்கப்படுகின்ற புனித கயிற்றை தங்களின் இஷ்டம் போல நெடுநாட்களுக்கு கைகளில் கட்டி வைத்திருக்கின்றனர். இது தவறான அணுகுமுறை ஆகும். எந்த ஒரு கோயிலிலும் பூஜிக்கப்பட்டு தரப்படும் புனித கயிற்றின் மந்திர சக்தி அதிகபட்சம் ஒரு மண்டலம் எனப்படும் 48 தினங்களுக்கு மட்டுமே இருக்கும். 

அதன் பிறகு அந்த புனித கயிறுகளை மனிதர்களின் காலில் படாத ஓடுகின்ற நதி, கண்மாய்கள் போன்ற ஓடும் நீரில் வீசி விட வேண்டும். அல்லது ஏதாவது ஒரு மரத்தில் கட்டி வைத்து விட வேண்டும்.

கைகளில் புனித கயிறுகளை கட்டியிருக்கும் நபர்களுக்கு பல விதமான ஆன்மீக நன்மைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு தூங்கும் போது கெட்ட கனவுகள் ஏதும் ஏற்படாமல் காக்கிறது. 

துஷ்ட சக்திகள், மாந்திரீக ஏவல்கள் அணுகாமல் காக்கின்ற கவசம் போன்று கயிறுகள் செயல்படுகின்றது. தோஷங்கள் ஏற்படாமல் தடுக்கிறது. உடலில் இருக்கின்ற நோய் நொடிகளை நீக்குகிறது. மனோ தைரியத்தை அதிகரிக்கிறது.

Monday 26 August 2019

தாய்க்கு உபதேசம் செய்த முருகன்


தன் தாய் பார்வதிக்கு உபதேசம் செய்த முருகன், மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பொனார் கோவிலில் அருள் பாலிக்கின்றார்.

ஒருமுறை சிவனின் பேச்சையும் மீறி பார்வதி, தன் தந்தையான தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றாள். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளானாள். குடும்ப நிம்மதிக்கு ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்தும் விதத்தில் தாய் பார்வதிக்கு உபதேசித்தார் முருகன். மனம் திருந்திய அவள், அக்னியின் நடுவில் அமர்ந்து தன் குணத்தை மாற்ற தவமிருந்தாள். 

இதற்காக அவள் தேர்ந்தெடுத்த தலமே செம்பொனார் கோயில். செம்பொன் என்பதற்கு 'துாய தங்கம்' என்பது பொருள். தவத்தின் முடிவில் தங்கம் போல் மாசு மருவற்றவளாக வெளி வந்து சிவபெருமானுடன் இணைந்தாள். உபதேசித்ததை குறிக்கும் விதமாக முருகன் அட்சர மாலையுடன் இருக்கிறார்.
மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், சுகந்த கும்பளாம்பிகையுடன் இருக்கிறார். தட்சனின் யாகத்தை அழிக்கப் புறப்பட்ட வீரபத்திரர் அவதாரம் செய்தது இங்கு தான். திருமாலை அடைய லட்சுமியும், மன்மதனை அடைய ரதியும் வழிபட்டனர். சிறந்த கணவர் கிடைக்க பெண்கள் இங்கு வழிபடுகின்றனர்.

சித்திரை அமாவாசையன்று சூரிய தீர்த்த நீரை தலையில் தெளித்தால் பாவம் தீரும். தியானத்திற்கு ஏற்ற திருத்தலம் இதுவாகும். சித்திரை 7 முதல் 18 வரை சிவனை வழிபடும் விதத்தில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகிறது. இதனை 'சூரியத் திருவிழா' என்கின்றனர்.

விசஷே நாட்கள் : சித்திரை அமாவாசை, வைகாசி விசாகம், நவராத்திரி, மகாசிவராத்திரி

நேரம் : காலை 7:00 - 11.30 மணி; மாலை 5:00 - 8:00 மணி

எப்படி செல்வது : மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 8 கி.மீ.,

சர்ப்பத்தின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் உங்களுக்கு தெரியுமா ?


விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானை வணங்கினால், நம் விக்னகங்கள் அனைத்தும் தீரும் என்பது உறுதி. 

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோயிலான சங்கரன்கோவில், சங்கரலிங்க சுவாமி திருக்கோயிலில் சர்ப்ப விநாயகர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

இந்த சர்ப்ப விநாயகரை வழிபட்டால் புத்திர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது. இக்கோயிலின் உள்பிராகாரத்தில் கன்னி மூலையில் சந்நிதி கொண்டுள்ள இந்த விநாயகர் சர்ப்பத்தின் மேல் அமர்ந்து காட்சியளிக்கிறார்.

அதுமட்டுமின்றி, இடது கையால் சர்ப்பத்தின் தலையைப் பிடித்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

இந்த சர்ப்ப விநாயகரை நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

நீராடிய பின்னர் ஏன் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும் ?


குளித்த பின் முதலில் முதுகைத்தான் துடைக்க வேண்டும் என்பது விதிமுறை. இதில் நம்பத்தகுந்த சுவாரசியமான ஒர் விஷயம் அடங்கியிருக்கின்றது. நாம் குளிப்பதற்காக தலையில் நீரூற்றும் போது ஸ்ரீதேவியும் மூதேவியும் உடலிலிருந்து வெளியேறுகின்றனர். பின்னர் குளித்து முடித்ததும் நமது உடலில் எந்த பாகத்தில் முதலாவது ஈரம் துடைத்து சுத்தமாகின்றதோ அப்பாகத்தில் மூதேவி நுழைந்து விடுவாள். ஏனென்றால் இப்போராட்டத்தில் வெற்றியடைவது தீமையான மூதேவியே. தீமைகள் செய்யும் மூதேவி முந்தி வருகிறாள். நன்மைகள் செய்யும் ஸ்ரீதேவி மெதுவாகவே வந்து நம்மிடம் வாசம் செய்வாள். அதனால் முதலில் முதுகை துடைத்து முந்தி வரும் மூதேவியை முதுகில் வைத்துக்கொண்டு, இரண்டாவதாக முகம் துடைக்க வேண்டும். 

அவ்வாறு செய்தால் அங்கு ஸ்ரீதேவி புகுந்து நாள் முழுவதும் நன்மை விளங்கும் முகத்துடன் வீற்றிருப்பாள். நாமும் அன்றைய தினம் முழுவதும் முக மலர்ச்சியோடு திகழலாம். மாறாக முகத்தை முதலில் துடைத்தால் மூதேவி புகுந்து இறுக்கமான முகத்துடனே, அன்றைய நாளை கழிக்க வேண்டியது தான். அதாவது அன்றைய நாள் அம்போ ! அதனால் முதலில் முதுகைத் துடைத்த பின் முகம் துடைக்க வேண்டுமென்ற போதனை பின் தலை முறைகளுக்கு அளித்துள்ளனர் முன்னோர்கள்.இதைக் கேட்டதும் முற்றிலும் மூட நம்பிக்கை என்றெண்ணி தள்ளி விட வேண்டாம். இந்த நம்பிக்கையின் பின்னால் ஒரு மகத்தான அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது. 

குளிக்கும் போதும் நம் உடலின் எல்லா பாகங்களிலும் குளிர் பரவுகின்றது. மிக அதிகமான குளிர் அனுபவப்படுவது முதுகில் ஆகும். முதுகெலும்பில் அதிக நேரம் குளிர் ஏற்க வேண்டியது வந்தால் நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. இதனால் உண்டாகும் தீங்கைத் தவிர்க்கவே குளித்த உடன் முதுகைத்துடைக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர்.

Sunday 25 August 2019

குழந்தைகளைக் காக்கும் அன்னையாய் மயிலாடுதுறை ராஜராஜேஸ்வரி அம்மன்


நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மருதூர் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு ராஜராஜேஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் ‘ராஜராஜேஸ்வரர்.’ இறைவியின் திருநாமம் ‘தேவநாயகி’ என்பதாகும். இந்த அன்னையின் அற்புத சக்தி பற்றி செவி வழி சம்பவம் ஒன்று சொல்லப்படு வருகின்றது.

வயல்வெளியில் நாற்று நட்டுவிட்டு வீடு திரும்பிய பெண், தூளியில் படுத்திருந்த தனது இரண்டு வயது பெண் குழந்தையைப் பார்த்து பதறினாள். குழந்தை முனகிக் கொண்டிருந்தது. தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அனலாக அடித்தது. அப்போது மாலை 6 மணி. ஊரில் இருக்கும் நாட்டு மருத்துவரிடம் காட்ட குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினாள். அங்கும் விதி விளையாடியது. மருத்துவர் ஊரில் இல்லை. அரசு மருத்துவமனை மயிலாடுதுறை என தற்போது அழைக்கப்படும் மாயவரத்தில்தான்   இருந்தது. 9 கிலோமீட்டர் தூரம் போக வேண்டும். ‘என்ன செய்வது?’ புரியவில்லை அந்த இளம் தாய்மைக்கு.

“காலையில் போகலாம்” என்று கணவன் கூற, அந்த ஊரில் கோவில் கொண்டுள்ள அன்னை தேவநாயகியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு, குழந்தையை அணைத்தபடி படுத்தாள். சிறிது நேரத்தில் உறங்கிப்போனாள். அதிகாலை நேரத்தில் அவளுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் ஒரு பெண் சிரித்த முகத்தோடு தோன்றினாள். “நான் இருக்க பயம் எதற்கு?” என்று கேட்டபடியே, குழந்தையின் நெற்றியில் திருநீற்றைப் பூசினாள். பின்னர் சிரித்தபடியே மறைந்து போனாள்.

திடுக்கிட்டு கண் விழித்த அந்த தாய். தன் குழந்தையை தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் வந்ததற்கான அறிகுறியே இல்லாதது போல் குழந்தை நலமோடு இருந்தது. கனவில் வந்தது அன்னை தேவநாயகிதான் என்று உணர்ந்த அந்தப் பெண், தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு ஆலயம் நோக்கிச் சென்றாள். அன்னையின் முன்பாக குழந்தையை கிடத்தியவள், கண்கள் கலங்க அன்னைக்கு நன்றி கூறியதாக அந்தச் செய்தி சொல்லப்படு வருகின்றது.

இந்த ஆலயத்தினுள் நுழைந்ததும் மகாமண்டபத்தின் கீழ்திசையில் சூரியன், பைரவர் திருமேனிகள் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலில் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். ஆலய கருவறையில் ராஜராஜேஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் தேவநாயகி அம்மன் நான்கு கரங்களுடன் வீற்றிருக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரை காட்டி இருக்கின்றன. கீழ் இரு கரங்களை தொங்க விட்டபடி, நின்ற கோலத்தில் புன்னகை தவழ இருக்கும் அன்னையின் அழகே அழகு.

இந்த ஆலயமானது, 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கின்றனர், அங்குள்ள பக்தர்கள். ஆலயத்தின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமை தோறும் இந்த தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று தயிர் சாதம் பிரசாதமாக தரப்படு வருகின்றது.

பிரகாரத்தின் மேற்கு பகுதியில் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், வடக்கில் சண்டிகேஸ்வரர் உள்ளனர். மேற்கு திசை நோக்கி சனீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர் பக்தர்கள். சனிப் பெயர்ச்சியின் போது விசேஷ ஹோமம் இங்கு நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை.

சோழ மன்னன் ராஜராஜன் சபையில் லட்சுமண பண்டிதர் என்ற அமைச்சர் இருந்தார். அவர் இந்த ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். அவர் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை முறைப்படி கற்ற வேத விற்பன்னர்களைக் கொண்டு, ஒவ்வொரு கால பூஜையின் போதும் வேதங்களை ஓதச் செய்து இந்த ஆலயத்தில் நான்கு கால பூஜைகள் நல்ல விதமாக நடக்க ஏற்பாடு செய்தாராம். அந்த வழக்கம் மேலும் பல தலைமுறைகள் நடைமுறையில் இருந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் நவராத்திரி, திருவாதிரை, மார்கழி 30 நாட்கள், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படு வருகின்றது.

தற்போது இந்த ஆலயத்தில் தினசரி இரண்டு கால பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. ஆலயத்தின் தலவிருட்சம் நெல்லி மற்றும் வன்னி மரம் ஆகும். ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.

குழந்தைகளைக் காக்கும் அன்னையாய் தெய்வமாய் அன்னை தேவ நாயகி விளங்குவதாகவே பக்தர்கள் நம்புகின்றனர்.

இறை வழிபாட்டில் வாழைப்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன் ?


எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.  மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைக்காது. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. ‘எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!’’ என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப் பழத்தை படைக்கிறோம். 

அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. 

முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழை மரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள் என்பதே உண்மை.

Saturday 24 August 2019

திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம் அருளும் விரத வழிபாடு


மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு வன்னி மரத்தின்பொந்திற்குள்ளாக வைத்து விட்டு சென்றனர். பிறகு கௌரவர்களுடன் போர்புரியும் போது அந்த வன்னி மரத்தை வணங்கி அதிலிருந்து தங்களின் ஆயுதங்களை எடுத்துச் சென்று அவர்களுடன் போரிட்டு மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றனர். 

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பஞ்சபாண்டவர்களில் சிறந்த வில்லாளி என பெயர் பெற்ற அர்ஜுனன் ஆவான். அர்ஜுனனுக்கு மற்றொரு பெயர் விஜயன் என்பதாகும். அந்த விஜயன் புரட்டாசி மாதத்தில் வருகின்ற தசமி திதியில் விரதம் இருந்து வன்னி மரத்தை வழிபட்டு போரில் வெற்றி பெற்றதால் இந்த நாளை விஜயதசமி என அழைக்கப்படுகிறது.

ஒரு நபரின் வாழ்வில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, கல்வித்தடை, வேலைவாய்ப்பின்மை தொழில் வியாபாரத்தில் நஷ்டம், உடல் மற்றும் மனநல குறைபாடுகள் போன்றவை தீர விரதம் இருந்து வன்னி மர வழிபாடு செய்து வர வேண்டும். 

அதிலும் குறிப்பாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை அல்லது தேய்பிறையில் தசமி திதிகளில் விரதம் இருந்து வன்னி மரத்தை வணங்குவதால் சிவபெருமானின் அருள் கிடைத்து உங்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி, நீங்கள் விரும்பிய அனைத்தும் நிறைவேறும். 

வன்னி மர வழிபாட்டை மாதந்தோறும் வருகின்ற தசமி திதிகளில் விரதம் இருந்து செய்வது சிறந்தது தான் என்றாலும் விஜயதசமி தினத்தன்று வன்னி மரத்துக்கு அடியில் பச்சரிசி மாவு சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபமேற்றி வன்னி அத்தி மரத்தை 3 முறை சுற்றி வந்து வழிபாடு செய்வதால் அதன் பிறகு உங்கள் வாழ்வில் அனைத்திலும் மகத்தான வெற்றிகளை மட்டுமே உண்டாகும்.

பக்தர்களை வா என்றழைத்து அருள்புரியும் பெருமாள்


பக்தர்களை வா என்றழைத்து அருள்புரியும் சுந்தரராஜப் பெருமாள், சிவகங்கை மாவட்டத்திலுள்ள வேம்பத்துாரில் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வழிபட்ட சங்கப்புலவர்கள் கவிபாடும் ஆற்றல் பெற்றனர் என்பது வரலாறு.

சங்கப்புலவரான கவிகால ருத்ரரின் கனவில் தோன்றிய பெருமாள் பாடும் ஆற்றலை அவருக்கு வழங்கினார். பெருமாளைத் தங்கள் ஊரிலேயே தங்கும்படி ருத்ரர் வேண்டவே பெருமாளும் சம்மதித்தார். அதன் அடிப்படையில் பாண்டிய மன்னர் ஜடாவர்ம குலசேகரன் இக்கோயிலை கட்டினார். சுவாமியை சுந்தரராஜப் பெருமாள் என அழைத்தனர். நாளடைவில் கோயில் சிதிலமடையவே இருபது ஆண்டுக்கு முன் மீண்டும் கோயில் கட்டப்பட்டது. 

இங்குள்ள பெருமாள் 'ஆகூய் வரதராக' அதாவது 'இடதுகையால் வா என அழைத்து, வலதுகையால் அருள்புரிபவர்' இவர். மேலே உள்ள இருகைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்க, பூமிதேவியும், நீளாதேவியும் இவரது இருபுறத்தில் உள்ளனர்.

திவ்யதேசங்களில் வைகுண்டத்தை மட்டும் பூலோகத்தில் தரிசிக்க முடியாது. ஆனால் இத்தலத்திற்கு வந்தாலே வைகுண்டத்தை தரிசித்த பலன் கிடைக்கும். இதனால் இத்தலம் 'விண்ணகரம்' என அழைக்கப்படுகிறது. 

இக்கோயிலில் சுதர்சன சக்கரத்தை விபூதியில் வைத்து விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி ஸ்தோத்திரம், குபேர, தன்வந்திரி, சுதர்சன மந்திரங்களை ஜபிக்கின்றனர். மாலையில் பூஜை முடிந்ததும் விபூதியை பிரசாதமாக வழங்குகின்றனர். நோய் தீர்க்கும் மருந்தாக இதைப் பூசுகின்றனர். 'அரியும் சிவனும் ஒன்றே' என்ற அடிப்படையில் இந்த விபூதி வழங்கப்படுகிறது.

திருப்பணி நடந்த போது பூமியில் புதைந்த பூவராக பெருமாள் சிலை கிடைத்தது. இவருக்கு தனி சன்னதி உள்ளது. ரேவதி நட்சத்திரத்தன்று சர்க்கரைப் பொங்கல், கோரைக்கிழங்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. பூப்பந்தல் அல்லது பூச்சொரிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

கல்விக்கடவுள் லட்சுமி ஹயக்ரீவருக்கு வியாழக்கிழமையில் தேன் அபிஷேகம் நடக்கிறது. தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து மாணவர்கள் வணங்குகின்றனர். கருடாழ்வார், பக்த ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமிக்கு சன்னதிகள் உள்ளன. 

ஒரு முறை பாண்டிய மன்னரின் சார்பாக 2008 அந்தணர்களுக்கு தானம் செய்ய ஏற்பாடானது. ஆனால் ஒருவர் மட்டும் குறைந்த நிலையில், குளக்கரை விநாயகர் அந்தணராக வந்து தானம் பெற்றார். இதன் அடிப்படையில் குளக்கரை விநாயகரோடு மற்றொரு விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 'இரண்டாயிரத்தெண் விநாயகர்' என்னும் இவரை நீரில் மூழ்க வைத்து வருணஜபம் செய்ய மழை பொழியும். 'இரண்டாயிரத்தெண்' என்பதற்கு இரண்டாயிரத்து எட்டு என்பது பொருள். 

நேரம் : காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 08:00 மணி

விசேஷ நாட்கள்: புரட்டாசி சனி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி

எப்படி செல்வது: மதுரை - ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பில் இருந்து 8 கி.மீ.,

மனக்குழப்பமா ? காவனூர் சிவன்கோயிலுக்கு வாருங்கள்


திருவாரூர் - கொரடாச்சேரி சாலையில் உள்ளது அம்மையப்பன், இங்கிருந்து திருமதிகுன்னம் செல்லும் சாலையில் 1 கி.மீ சென்றால் காவனூர் அடையலாம். பிரதான சாலையை ஒட்டியவாறு உள்ளது இந்த சிவன் கோயில்.

கிழக்கு நோக்கிய சிவன்கோயில் எதிரில் ஒரு குளம் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் சைவத்தைத் துறந்து சமணத்தைத் தழுவி வெப்பு நோயினால் துன்புற்று பின்னர், பாண்டியனின் மனைவியால் சம்மந்தர் அழைக்கப்படுகிறார்.

சம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சமணரை வென்று மன்னனின் வெப்புநோயைக் குணமாக்கி மீண்டும் சைவத்திற்குத் திருப்பியபின் பாண்டிய மன்னரால்  கட்டப்பட்ட ஆலயம் இதுவாகும். கோயில் பழுதடைந்து காணப்படுகிறது மதில் சுவர் இடிந்து கிடக்கிறது. விமானங்களில் கலசங்கள் இல்லை, பிரகாரம் முட்செடிகள் உடையதாகக் காணப்படுகிறது

இங்குள்ள நந்தி மிகவும் அழகுடையது. அம்பிகை மீனாட்சி மெல்லிய புன்னகை உதட்டில் பொருத்தி, அருளும் கருணையும் பெருகக் கரத்தில் கிளியை அமர்த்தி அருள்மழை பொழிகிறாள். கிழக்குப் பார்த்த கருவறையில் மூலவர் சொக்கநாதர் கருவறையை ஒட்டிய வட புறத்தில் விநாயகர் இடப்புறத்தில் வள்ளி - தெய்வானை சகிதமாக முருகன் அமர்ந்திருக்கிறார்.

இறைவனின் கருவறை பழமையானது அதில் தென்முகனும், துர்க்கையும் மட்டும் உள்ளனர். பிரகாரங்களில் சிற்றாலயங்கள் ஏதும் இல்லை. தென்மேற்கில் இரு லிங்கங்களும் அதன் அம்பிகையும், நந்தியும் வெயில் மழை என நிற்பது வருந்தத்தக்கவொன்றாக உள்ளது. 

வடகிழக்கில் நவக்கிரகங்களும், சனியும், பைரவரும் உள்ளனர்.  கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்தம் சொக்கநாதர் குளம் என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் வடபுறம் அமைந்துள்ள கிணறு அக்கினித் தீர்த்தம் எனவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து துர்க்கை வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். இதனையடுத்துத் தனி ஆலயத்தில் சண்டிகேஸ்வரர்  உள்ளார்.

பாண்டிய மன்னன் மனக்குழப்பம் அடைந்து புத்தி பேதலித்துச் சமணர்கள் காட்டிய வழியில் சென்று துன்பம் அடைந்தான். இதனை அறிந்த திருஞானசம்பந்த பெருமான் பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்டிருந்த வெப்புநோய்க்கு உரிய முறையில் சிகிச்சையளித்தார். அதன் பிறகு தெளிவடைந்த பாண்டிய மன்னன், திருஞான சம்பந்தரின் அறிவுரையை ஏற்று என்னைப் போல் மனக்குழப்பம், புத்தி தடுமாற்றம், முக்கிய பிரச்னைகளில் முடிவெடுக்க முடியாத சஞ்சலம்.

மற்றவர்களின் சூழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் அவல நிலை கொடிய நோய்களின் தாக்கம் போன்றவற்றால் துன்புறுவோர் இத்தலத்து ஈசனை வணங்கினால் அவர்களது துயர் களைந்து வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக அருள் புரிய வேண்டும் என்று வேண்ட வேதியர் அதையே மந்திரமாக முழங்க இங்கு மூலவரைப் பிரதிஷ்டை செய்தானாம் பாண்டிய மன்னன்.

அதன் காரணமாகவே மேற்கூறிய குறைபாடுகளால் கஷ்டபடுவர்களும் இவ்வாலயத்து இறைவனை அர்ச்சித்து வணங்கி வழிபட்டால் அவர்கள் துன்பம் தானாகவே விலகும். நலம் வளமும் பெருகும்.  

"நாடும் நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான் என்று
பாடு மின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே"

என திருமந்திரம் சொல்வதை ஏற்று  நடப்போம்.

Friday 23 August 2019

கிருஷ்ண ஜெயந்தியை எப்படி கொண்டாடுகிறார்கள்

Image result for கிருஷ்ண ஜெயந்தி

ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.

சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபிஷேக ஆராதனை செய்விக்கப்படும். பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றிலிருந்து பாடல்களைப் பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப் பாடுவார்கள். 

ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல்களாகப் பாடுவார்கள். இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் ‘ஹரேராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.

சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். கேரளா போன்ற இடங்களில் ‘மோகினி ஆட்டம்’ நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும். உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள்.

கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள். பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார். பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். 

மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும். இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். 

Thursday 22 August 2019

வைணவ தலங்களில் நவக்கிரக சன்னிதி தனியாக ஏன் இருப்பதில்லை ?


சிவன் கோயில்களில் நவக்கிரகங்களைச் சுற்றி வருவது போல், விஷ்ணு கோயில்களில் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது! ஏன் ? என்று சிந்தித்து இருக்கீங்களா? தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி இருக்கும்.

ஸ்லோகம்,

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா!!

த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!

நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள்

சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது. ஜோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது! பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம் மற்றும் ஒரு சில ஆலயங்களை தவிர); இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று ஆகிவிட்டது.

அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூஜைகள் - பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு ! சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்றுவிடும்! வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்! பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் - இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது!

இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்துக் கொண்டு இருப்பதாக ஐதீகம்! படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை) முதலியாருக்கு கூட நிறைய ஆலயங்களில் தனியாகச் சன்னதி இருக்காது. ஶ்ரீவைணவத்தில் பெருமாளின் அடியார்களுக்கும், அவரை பாடிய ஆழ்வார்கள் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்! இதுவே அவரது அடியார்கள் பெருமை ஆகும்.

பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே அதிக அதிகாரம் தரப்படுகிறது. அதாவது மோட்சம் வழங்கும் அதிகாரம் வரை ஏன் ? அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும் வலிமையும் முன்னிறுத்தப்படும். அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்! அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!

பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது! அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்! நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!

அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் கட்டிக்காக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார். அவரின் திருவுருவத்திலேயே நவக்கிரகங்களும் அடங்கி விடுகிறார்கள்! 

பகவானின் தசாவதாரத்தில் நவக்கிரக அம்சங்கள் காணலாம்,

சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன் = கல்கி
வியாழன் = வாமானர்
வெள்ளி = பரசுராமர்
சனி = கூர்மம்
ராகு = வராகம்
கேது = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன. (திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)

சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி)

திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)

தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும், நவகிரகங்கள் கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் யாரிடமும் பாரபட்சம் கிடையாது. அவர்கள் தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள். அதே சமயம், அசுரர்கள் தேவர்களுக்கு எதிரிகளாக இருப்பதால் அசுரர்களிடம் பாரபட்சம் எல்லாம் காட்டமாட்டார்கள் இந்த ஒன்பது பேரும்!

அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,

த்வத் தாச தாச = உன்னுடைய அடியாருக்கு அடியார்களிடம்

சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!

இறைவனுக்குத் தானே அடியார்கள்? 

அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?

அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனை சகதொண்டர்களிடமும் காண்பது! அப்படிக் காண்பதால் அடியாருக்கு அடியார் ஆவது! 

தொண்டர் அடிப்பொடி என்பர் (ஒரு ஆழ்வார் தன் பெயராகவே வைத்துக் கொண்டு உள்ளார்) பகவத் கைங்கர்யம் என்னும் திருத்தொண்டில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் மகாபாவம்! அதாவது ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் அவர்மீது நமக்கு கொஞ்சமேனும் பொறாமை வரும்! அதை வெளிக்காட்டிக் கொள்வதும், காட்டாததும் அவரவர் மனோநிலையைப் பொறுத்தது!

அதுபோல் தான் ஒருவரின் கல்விச் செல்வம், பொருட் செல்வம் மட்டுமில்லை. சாதாரண பின்னூட்டச் செல்வம் வரை இந்தப் பொறாமை வளரும் சக்தி பெற்றதாகும். 

இதைப் பக்தியில் கூட சிலர் வெளிகாட்டுவர். அங்கு பொறாமை என்று இல்லாவிட்டாலும் உயர்ந்த பக்தி, தாழ்ந்த பக்தி என்றெல்லாம் தரம் பிரித்துப் பேசுவர். அடியார் கூட்டங்களில் அனைவரும் ஒன்றாகக் கூடி இறைவனை சேவிக்கும் போது, மற்றவர்களையும் சேர்க்க வேண்டும் நாம் மட்டும் தனியாக சேவிக்காமல் கூடியிருந்து குளிர வேண்டுமே - என்ன செய்வது?

அப்போது சக அடியார்களைப் பார்த்து நம் பக்தி சிறந்தது என்ற எண்ணம் துளிர் விட்டால்? ஏனெனில் அது மனித குணம் தானே! அதனால் தான் அடியாருக்கு அடியார் ஆக வேண்டும் என்பது! 

சக அடியார்களிடமும் ஆண்டவனைக் காண்பது. அடியாருக்கு அடியவராகிவிட்டால் பொறாமை தலை தூக்காது. அன்பு தான் தலை தூக்கும்! அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்! 

துவேஷம் தலை தூக்கினால் யுக்தி தான் வளருமே ஒழிய பக்தி வளராது! பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப்படுகிறோமா? இல்லையே! அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்! 

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம் தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே! இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள் !