Saturday 24 August 2019

பக்தர்களை வா என்றழைத்து அருள்புரியும் பெருமாள்


பக்தர்களை வா என்றழைத்து அருள்புரியும் சுந்தரராஜப் பெருமாள், சிவகங்கை மாவட்டத்திலுள்ள வேம்பத்துாரில் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வழிபட்ட சங்கப்புலவர்கள் கவிபாடும் ஆற்றல் பெற்றனர் என்பது வரலாறு.

சங்கப்புலவரான கவிகால ருத்ரரின் கனவில் தோன்றிய பெருமாள் பாடும் ஆற்றலை அவருக்கு வழங்கினார். பெருமாளைத் தங்கள் ஊரிலேயே தங்கும்படி ருத்ரர் வேண்டவே பெருமாளும் சம்மதித்தார். அதன் அடிப்படையில் பாண்டிய மன்னர் ஜடாவர்ம குலசேகரன் இக்கோயிலை கட்டினார். சுவாமியை சுந்தரராஜப் பெருமாள் என அழைத்தனர். நாளடைவில் கோயில் சிதிலமடையவே இருபது ஆண்டுக்கு முன் மீண்டும் கோயில் கட்டப்பட்டது. 

இங்குள்ள பெருமாள் 'ஆகூய் வரதராக' அதாவது 'இடதுகையால் வா என அழைத்து, வலதுகையால் அருள்புரிபவர்' இவர். மேலே உள்ள இருகைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. மார்பில் மகாலட்சுமி வீற்றிருக்க, பூமிதேவியும், நீளாதேவியும் இவரது இருபுறத்தில் உள்ளனர்.

திவ்யதேசங்களில் வைகுண்டத்தை மட்டும் பூலோகத்தில் தரிசிக்க முடியாது. ஆனால் இத்தலத்திற்கு வந்தாலே வைகுண்டத்தை தரிசித்த பலன் கிடைக்கும். இதனால் இத்தலம் 'விண்ணகரம்' என அழைக்கப்படுகிறது. 

இக்கோயிலில் சுதர்சன சக்கரத்தை விபூதியில் வைத்து விஷ்ணு சகஸ்ரநாமம், லட்சுமி ஸ்தோத்திரம், குபேர, தன்வந்திரி, சுதர்சன மந்திரங்களை ஜபிக்கின்றனர். மாலையில் பூஜை முடிந்ததும் விபூதியை பிரசாதமாக வழங்குகின்றனர். நோய் தீர்க்கும் மருந்தாக இதைப் பூசுகின்றனர். 'அரியும் சிவனும் ஒன்றே' என்ற அடிப்படையில் இந்த விபூதி வழங்கப்படுகிறது.

திருப்பணி நடந்த போது பூமியில் புதைந்த பூவராக பெருமாள் சிலை கிடைத்தது. இவருக்கு தனி சன்னதி உள்ளது. ரேவதி நட்சத்திரத்தன்று சர்க்கரைப் பொங்கல், கோரைக்கிழங்கு நைவேத்யம் செய்யப்படுகிறது. பூப்பந்தல் அல்லது பூச்சொரிந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

கல்விக்கடவுள் லட்சுமி ஹயக்ரீவருக்கு வியாழக்கிழமையில் தேன் அபிஷேகம் நடக்கிறது. தீபம் ஏற்றி 12 முறை வலம் வந்து மாணவர்கள் வணங்குகின்றனர். கருடாழ்வார், பக்த ஆஞ்சநேயர், சுந்தரராஜ விநாயகர், பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமிக்கு சன்னதிகள் உள்ளன. 

ஒரு முறை பாண்டிய மன்னரின் சார்பாக 2008 அந்தணர்களுக்கு தானம் செய்ய ஏற்பாடானது. ஆனால் ஒருவர் மட்டும் குறைந்த நிலையில், குளக்கரை விநாயகர் அந்தணராக வந்து தானம் பெற்றார். இதன் அடிப்படையில் குளக்கரை விநாயகரோடு மற்றொரு விநாயகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 'இரண்டாயிரத்தெண் விநாயகர்' என்னும் இவரை நீரில் மூழ்க வைத்து வருணஜபம் செய்ய மழை பொழியும். 'இரண்டாயிரத்தெண்' என்பதற்கு இரண்டாயிரத்து எட்டு என்பது பொருள். 

நேரம் : காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 08:00 மணி

விசேஷ நாட்கள்: புரட்டாசி சனி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி

எப்படி செல்வது: மதுரை - ராமேஸ்வரம் சாலையில் திருப்பாச்சேத்தி சந்திப்பில் இருந்து 8 கி.மீ.,

No comments:

Post a Comment