Thursday 24 August 2017

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம்

Image result for perumal 

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரது முதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். தேவலோகத்திலும் இப்படி நடப்பதுண்டு. தம்பதிகளை சிவபார்வதி கைலாயத்துக்கு  அழைத்தனர். பூமாதேவி வர மறுத்துவிட்டாள்.

 ""அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் "அசலா'.  அதாவது, இருந்த இடத்தை விட்டு நகராதவள் என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். நீங்கள் திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள்? அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா? நீங்கள் மட்டும் போய் வாருங்கள்,'' என்று அனுப்பி விட்டாள்.

பெருமாளுக்கு வருத்தம். மேலும், போகும் இடங்களில் பெருமாளைப் பார்ப்பவர்கள் எல்லாம், ""ஆத்துக்காரி வரலையா?'' என்று கேட்பார்கள். பெருமாளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கடப்பட்டார். இந்த பூமாதேவி அசையவே மாட்டாள். எனவே, இரண்டாம் திருமணம் செய்வோமே என்று சமுத்திரராஜன் பெண்ணான லட்சுமியை மணந்து கொண்டார்.

அவளோ வீட்டிலேயே இருக்கமாட்டாள். ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால், மறுநாள் இன்னொரு வீட்டுக்குப் போய்விடுவாள். செல்வத்தின் அதிபதியல்லவா! நிலையில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். பெருமாள் அவளை அழைக்கச் செல்லும் நேரம், "எங்காவது போயிருக்கிறாள்' என்றே பதில் கிடைக்கும்.

அவளோ அசைய மறுக்கிறாள், இவளே ஓடிக்கொண்டே இருக்கிறாள். பெருமாள் லட்சுமியுடன் சேர்ந்து ஓடினார். ஆனால், அவள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டார்.

பிறகு தன் மகன் மன்மதன் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கலாம் என்று சென்றார். செல்லும் வழியில் ஒரு முனிவர் பார்த்தார். ""உமது மகன் செய்த வேலையைப் பார்த்தீரா! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டிருக்கிறான். அவர் கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்திருக்கிறார். பஸ்பமாகி விட்டான்,'' என்று சொன்னதும், மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் அவர். மீண்டும் பாற்கடல் வந்த அவர், ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்தார். அவனோ விஷக்காற்றை வெளியிட்டபடியே இருந்தான். சற்று வெளியே போய்வரலாம் என கருடன் மீது ஏறி அமர்ந்தார். பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது, பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த கருடன், ""சுவாமி! இதோ! என் உணவான பாம்பு செல்கிறது. அதைப் பிடிக்கப் போகிறேன்,'' என நுடுவழியில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டான். தன்னைக் கவனிக்க யாருமே இல்லாததால், பகவான் ஒரு கட்டையாக தன்னை மாற்றிக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில், பெருமாள் கம்பு வடிவில் இருக்கிறார். பார்த்தீர்களா! அனுபவிக்க வேண்டுமென்ற விதியிருந்தால், யாராக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் துன்பம் வந்தால் கலங்காதீர்கள். அதையும் ரசித்து அனுபவிக்கும் பக்குவ நிலையைப் பெறுங்கள்.

No comments:

Post a Comment