Tuesday 22 August 2017

கால்நடைகளைக் காத்தருளும் குட்டையூர் ஈசன்


இறைவன் உறையும் கோயில் தேடி நாம் சென்று தரிசிக்கிறோம். அன்னாளில் அவ்வாறு பசுக்களும் சென்று சிவலிங்கத்தின் மீது பால்பொழிந்து வழிபட்டிருக்கின்றன. பசுவிற்குள் சகல தெய்வ சக்திகளும் குடிகொண்டிருப்பதை வேதங்கள், புராணங்கள் எல்லாம் உரைக்கின்றன. அப்படி ஒரு பசு வழிபட்ட தலமே குட்டையூர் ஆகும். கோவை மாவட்டம், காரமடை அருகிலுள்ள குட்டையூர் மலைப் பகுதியில் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்த ஆவினங்களில் ஒரு பசு மட்டும் ஓரிடத்திற்கு தனியாக சென்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தது. அந்தப் பசுவின் மடியில் மட்டும் பால் குறைவதைக் கவனித்த மாடு மேய்க்கும் பெரியவர் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது, அங்கு சுயம்புவாக தோன்றிய அழகிய சிவலிங்கத்திற்கு பசு பால் சொரிவதைக் கண்டு மெய்சிலிர்த்தார். இந்த சிவலிங்கத்தை மாதப்பா, மாதேஸ்வரா என அழைத்து வழிபட்டார். 

பின்னர், ஊர் மக்களுக்கும் இந்தத் தகவலைச் சொன்னார். அவர்களும் இந்த அதிசயத்தைக் கண்டு பக்திப் பரவசமடைந்து தாமும் வழிபடத் தொடங்கினார்கள். அப்போது முதல் இம்மலை, மாதேஸ்வரன் மலை என்றழைக்கப்பட்டது. இந்த மலையில் சித்தர்களும் தங்கி சிவபெருமானை பூஜித்திருக்கிறார்கள். மலையில் மாடு மேய்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது கால்நடைகளுக்கு சுகவீனம் ஏற்பட்டால் ‘மாதேஸ்வரா என் மந்தையைக் காப்பாற்று’ என மிகுந்த பக்தியுடன் வேண்டிக்கொண்டு அங்குள்ள மண்ணை எடுத்து மாடுகளுக்கு பூசி விடுவார்களாம். உடனே கால்நடைகள் குணமாகி சுறுசுறுப்பாக மேய்தலில் ஈடுபடுமாம். சுயம்புவாக இறைவன் தோன்றிய இடத்தில் பெரிய குகை போன்று உள்ளது. அங்கு ஆதி மூலவரான சுயம்பு லிங்கமும், அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மற்றொரு சிவலிங்கம் மற்றும் நாகர் திருமேனி ஆகியவற்றை தரிசிக்கலாம். ஆதி மூலவர் வீற்றிருக்கும் குகைக்கு எதிரில் நந்தியெம்பெருமான், பலிபீடம் அமைந்துள்ளன.

இத்தல இறைவனின் மகிமையை சுற்று வட்டார கிராமங்களுக்குப் பரவி பக்தர்கள் பெருகப் பெருக சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுயம்பு லிங்கம் உள்ள குகைக்கு அருகிலேயே மலை உச்சியில் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், தீப ஸ்தம்பத்துடன் ஆலயம் எழுப்பி  சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மூலவரான மாதேஸ்வரரை வழிபடத் துவங்கினார்கள். மூலவர் மாதேஸ்வரர் லிங்க வடிவில் காட்சியளித்து தன்னை துதித்திடும் பக்தர்களையும், விவசாயிகளின் கால்நடைகளையும் காத்தருள்கிறார். அர்த்த மண்டபத்தில் விநாயகரும், நாகரும் அருள்பாலிக்கின்றனர். சுற்று வட்டாரத்திலுள்ள விவசாயிகள் தங்களது பசு கன்று ஈன்றபின், முதல் முறை கறக்கும் பாலை எடுத்து வந்து இத்தல மாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது வாடிக்கை. இப்போதுகூட கால்நடைகளுக்கு சுகவீனம் ஏற்பட்டால் மாதேஸ்வரரிடம் மனமுருக வேண்டி, இவ்வாலயத்தில் தரப்படும் திருநீறு, தீர்த்தம் ஆகியவற்றை எடுத்துச் சென்று அந்தக் கால்நடைகள் மீது இட்டால் அவை நோய் நீங்கி நலமடைகின்றன. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோமாரி நோய் தாக்குதலுக்கு கால்நடைகள் ஆளானபோது, எண்ணற்ற விவசாயிகள் இங்கு வந்து பிரார்த்தித்து, இவ்வாலயத்தில் தரப்பட்ட திருநீறு மற்றும் தீர்த்தத்தையும் பெற்று, கால்நடைகள் மீது இட்டு அவற்றை நோயின் பிடியிலிருந்து மீட்டதாகக் கூறுகிறார்கள். கால்நடைகளுக்கு நோய் குணமானால் கருங்கல்லில் நந்தி உரு செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதாக மாதேஸ்வரரிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். அதுபோலவே செய்யவும் செய்கிறார்கள். பிள்ளை வரம் வேண்டுவோரும் இதேபோல பிரார்த்தனையை நிறைவேற்றி, நன்றி கூறுகின்றனர். குழந்தை வடிவ சுதைச் சிற்பங்களை செய்து வைப்பவர்களும் உண்டு. தொழிலில் லாபம், வழக்கில் வெற்றி வேண்டுவோரும் அவ்வாறே நந்தி சிலை வைக்கிறார்கள். இப்படி காணிக்கையாக செலுத்தப்பட்ட நந்திகளே கோயிலைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கில் உள்ளன!

புது வீடு கட்டுதல், நிலம் வாங்குதல், திருமணம், ஏன் விவசாயிகள் விதைப்பதற்கும் மாதேஸ்வரரிடம் பூப்போட்டு சம்மதம் கேட்கும் சடங்கு இங்கே மேற்கொள்ளப்படுகிறது. அப்படி பூ வரம் கிடைத்துவிட, அவர்கள் உடனே செயலில் இறங்கிவிடுகிறார்கள். பூ வரம் கேட்க இத்தலத்திற்கு காலை நேரத்தில் வரவேண்டும். இத்தல இறைவனின் பேரருளால் கால்நடைகள் நோய்,நொடியின்றி வாழ்ந்து விவசாயிகளுக்கு பலன்களை அள்ளித் தருவதால் தை மாதம் கனுமாட்டுப் பொங்கல் அன்று அதிகாலை ஐந்து மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு மாதேஸ்வரருக்கு  சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளும், தீப ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. அப்பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அமாவாசை, பிரதோஷம், கிருத்திகை போன்ற முக்கிய விரத தினங்களிலும், திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும்  வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கார்த்திகை மாதம், திருவண்ணாமலை போலவே மாதேஸ்வரன் மலையிலும் மலையின் உச்சியின் மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. தற்போது இம்மலையின் கிரிவலப் பாதையில் ஐஸ்வர்ய கணபதி, அர்த்தநாரீஸ்வரர் மற்றும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய அஷ்டலிங்கங்களும் ஆலயம் கொண்டுள்ளன.

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டையூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்றுத் தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment