Thursday 24 August 2017

வேதநாயகனின் வாழ்விலிருந்து- நாராயணனே வியாசர்

 

ஒருவருடைய உயர்ந்த குணங்கள் இன்னொருவரிடம் அப்படியே தொற்றிக்கொள்ளுமானால் அதை "அனுப்பிரவேச அவதாரம்' என்பர். பராசர மகரிஷயின் பிள்ளையே வியாசர். அந்த மகரிஷி தன் பிள்ளை வியாசரின் பெருமையைப் பற்றி விஷ்ணுபுராணத்தில் சொல்கிறார்.""என் பிள்ளை வியாசரைப் பற்றி நீங்கள் சாமானியமாக நினைக்காதீர்கள். விஷ்ணுவினுடைய அவதாரம் அவன். இல்லையென்றால், மகாபாரதம் என்ற அவ்வளவு பெரிய கிரந்தத்தை அவர் இயற்றியிருக்க முடியுமா? ஆகையால், அவரை நாராயணன் என்றே நீங்கள் உணருங்கள்,'' என்கிறார்.திருமாலின் அம்சங்கள் வியாசரிடத்தில் நிறைந்திருந்தபடியால், அவரை அனுப்பிரவேச அவதாரம் என்றனர்.

மீன்வாசம் பூ வாசம்

வியாசரின் தாய் சத்தியவதி. அவளுக்கு ""மச்சகந்தி'' என்றொரு பெயருண்டு. அவள் இருக்கும் இடத்தில் மீன்வாடை வீசியதால் இப்பெயர் உண்டானது. மீனவர்களாலும் சகிக்கமுடியாத அளவுக்கு அவள் உடம்பில் மீன்நாற்றம் அடித்தது. அவள் தன்னை நினைத்து வருந்தாத நாளில்லை. யமுனை ஆற்றில் படகோட்டியாக பணி செய்தாள்.

ஒருநாள் தீர்த்தயாத்திரை வந்த பராசர முனிவர், இவளது படகேறி பயணிக்க வந்தார். பிதுர் சாபத்தினால் (முன்னோர் சாபம்) தான் அவளுக்கு மீன்வாடை நோயாக தொற்றிக் கொண்டது என்ற உண்மையையும், தாங்கள் அந்த நேரத்தில் உ<றவு கொண்டால், அதற்கு முடிவு வரும் என்றும் தெரிவித்தார். அவளும்

சம்மதித்தாள்.

அந்த உத்தமமான நேரத்தில் மச்சகந்திக்கு பராசரமுனிவரால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவர் தான் வேதங்களை நமக்களித்த வியாசர். அன்றுமுதல் மச்சகந்தியின் உடலில் நறுமணம் வீசத் தொடங்கியது. ஒரு யோஜனை தூரம் அந்த நறுமணம் பரவியதால் அவள் ""யோஜனகந்தி'' என்று அழைக்கப் பட்டாள். பராசரரின் யோகசக்தியால், அவள் மீண்டும் கன்னித்தன்மையை அடைந்தாள்.

தாய்க்கு பிள்ளை தந்த வரம்

பராசரருக்கும், மச்சகந்திக்கும் பிறந்த மகன், பிறக்கும் போதே ஏழு வயது குழந்தையாக இருந்தான். அவனது தந்தை அவனுக்கு ஆசியளித்து ஒரு கமண்டலத்தைப் பரிசாக வழங்கினார். பாச மேலீட்டால் பிள்ளையை அணைக்க ஆவல் கொண்டாள் மச்சகந்தி. ஆனால் பிள்ளையோ, ""மீனவப்பெண்ணான நீ என்னைத் தொடக்கூடாது!'' என்று தடுத்தான். மச்சகந்தி அப்படியோ சிலையாக நின்று விட்டாள். கண்களில் கண்ணீர் பெருகியது. "தாயும் தந்தையும் சமம்' என்று முனிவர் பிள்ளைக்குப் போதித்தார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்த வியாசர், அவரது கட்டளைக்கு இணங்கி, அன்போடு அம்மாவின் மடியில் அமர்ந்து கொண்டார். மச்சகந்தி தன் பிள்ளையிடம்,""ரிஷிபுத்திரா! நீ என்னை விட்டு விலகிச் செல்லாதே!'' என்று வேண்டிக் கொண்டாள். தன்னால் மனம் வருத்தம் அடைந்த தாய்க்கு வியாசர் ஒரு வரம் அளித்தார்.

"" அம்மா! இப்போது போகிறேன். நீ எப்போது நினைத்தாலும் அப்போதெல்லாம் உன் முன் உடனே தோன்றி விடுவேன்!'' என்றார். தாயின் வயிறு குளிர்ந்தது.

No comments:

Post a Comment