Sunday 20 May 2018

கோயில் மூன்று; திவ்யதேசம் ஒன்று


தஞ்சாவூரில் நீலமேகப்பெருமாள், மணிக்குன்றப்பெருமாள், சிங்கப்பெருமாள் என மூன்று பெருமாள் கோயில்கள் சேர்ந்து ஒரே வளாகத்தில் உள்ளன. 

தல வரலாறு: மணிமுத்தா நதிக்கரையில் தவமிருந்த பராசர மகரிஷி, தன்னிடம் இருந்த அமிர்தத்தை நதியில் கலந்து விட்டார். சிவனிடம் வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் என்னும் மூன்று அசுரர்கள் மகரிஷிக்கு தொல்லை கொடுத்தனர். 

பராசரர் பலமுறை சொல்லியும், அசுரர்கள் திருந்தவில்லை. இந்நிலையில் சிவனிடம், மகரிஷி முறையிட்டார். காளிதேவியை அசுரர்களின் மீது சிவன் ஏவினார். காளியால் அசுரர்களின் உயிர் பிரிய இருந்த நிலையில், அமிர்தம் கலந்த நதிநீரை குடித்து தப்பித்தனர். அசுரர்களால் மகரிஷிக்கு மீ்ண்டும் பிரச்னை தொடர்ந்தது. மகரிஷி மகாவிஷ்ணுவிடம் முறையிடவே, அவர் அசுரர்களை அழிக்க வந்தார். அப்போது தஞ்சகன் யானை வடிவில் எதிர்க்க, விஷ்ணு நரசிம்மராக உருவெடுத்து, மடியில் அசுரனைக் கிடத்தி வயிற்றைக் கிழித்தார். 

விஷ்ணுவின் ஸ்பரிசம் பட்டதால், சாகும் தருவாயில் இருந்த தஞ்சகனுக்கு ஞானம் உண்டானது. அசுர குணம் நீங்கிய அவன், ''சிங்கப்பெருமாளே! இந்த இடத்தில் தங்கி அருள்புரிய வேண்டும், என் பெயரால் இத்தலம் அழைக்கப்பட வேண்டும்''என வரம் கேட்டான். விஷ்ணுவும் சம்மதிக்க, இத்தலம் 'தஞ்சமாபுரி' எனப்பட்டது. அதுவே 'தஞ்சாவூர்' என்றானது. 

இதனடிப்படையில் சிங்கப்பெருமாள் கோயில் எழுப்பப்பட்டது. இதன்பின் மகரிஷியைக் காப்பாற்றும் விதத்தில் தண்டகன், தாரகன் இருவரையும் வதம் செய்தார் விஷ்ணு. நீலமேகப்பெருமாள், மணிகுன்றப்பெருமாள் என இரு கோலங்களில் மகரிஷிக்கு காட்சியும் அளித்தார். இதனடிப்படையில் கோயில்கள் அமைக்கப்பட்டன. மூன்று கோயில்களும் ஒரே வளாகத்தில் திவ்யதேசமாக திகழ்கின்றன. 

ஐந்து நரசிம்மர்: நரசிம்மரின் இடதுபுறத்தில் லட்சுமி தாயார் இருப்பது வழக்கம். ஆனால், நீலமேகப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள நரசிம்மருக்கு, வலதுபுறத்தில் தாயார் இருப்பது மாறுபட்ட அமைப்பு. இவரை 'வலவந்தை நரசிம்மர்' என்கின்றனர். 

சிங்கப்பெருமாள் கோயிலில் வீரநரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் வலவந்தை நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சன்னதியில் கம்பத்தடி யோகநரசிம்மர் என ஐந்து நரசிம்மர்கள் இங்கு காட்சி தருகின்றனர். செங்கமலவல்லித்தாயார், தஞ்சைநாயகி, அம்புஜவல்லித்தாயார் என மூன்று தாயார் சன்னதிகள் உள்ளன. 

லட்சுமி ஹயக்ரீவர்: கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமியை மடியில் வைத்தபடி காட்சியளிக்கிறார். இவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி, நெய்விளக்கு, கற்கண்டு படைத்து வழிபட்டால் கல்வி, செல்வம் செழிக்கும். வீரநரசிம்மர் கோயிலில் நரசிம்மர் யோகப்பட்டையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் இரண்யாசுரன், அவனது மகன் பிரகலாதன் இருக்கின்றனர். சக்கரத்தாழ்வாரின் வலதுபுறத்தில் தஞ்சகாசுரன் விஷ்ணுவை வழிபடும் சிலை உள்ளது.

எப்படி செல்வது: தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 3 கி.மீ.,
விசேஷ நாட்கள்: பங்குனி, சித்திரை, வைகாசியில் பிரம்மோற்ஸவம். வைகாசியில் 24 கருடசேவை,(ஜூன் 4ல் கருடசேவை) நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 7:00 - 12:00 மணி ; மாலை 5:00 -08:30 மணி
தொடர்புக்கு: 04362 - 223 384, 90473 20922
அருகிலுள்ள தலம்: 40 கி.மீ.,யில் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயில்

No comments:

Post a Comment