Sunday 20 May 2018

தங்கச்சி அம்மன்


கர்நாடகா மாநிலம் மைசூருக்கு அருகிலுள்ள உத்தனஹள்ளியில் ஜுவாலாமுகி என்னும் பெயரில் அம்மன் கோயில் உள்ளது. இவள் மைசூரு சாமுண்டீஸ்வரியின் தங்கையாக கருதப்படுகிறாள். 

தல வரலாறு: ரத்த பீஜாசுரன் என்னும் அசுரனுடைய உடம்பில் இருந்து வெளிவரும் ஒவ்வொரு துளி ரத்தமும் அசுரர்களை தோற்றுவித்தது. இதனைப் பயன்படுத்தி அசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். ரிஷிகளின் யாகங்களைத் தடுத்தான். அனைவரும் பார்வதியிடம் முறையிட்டனர். உக்ர ரூபத்துடன் நாக்கை நீட்டிய படி, கோரைப் பற்களுடன் 'ஜுவாலாமுகி' என்ற திருநாமத்தோடு பார்வதி புறப்பட்டாள். அசுரனுடன் போரிட்டுக் கொன்று, அவனது உடம்பிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை குடித்தாள். அநீதியை அழித்து தர்மத்தைக் காக்கும் இவளே உத்தனஹள்ளியில் கோயில் கொண்டிருக்கிறாள். 

குகை கருவறை: மைசூரு சாமுண்டி மலையை அடுத்த குன்றில் கோயில் உள்ளது. மிகச் சிறிய வாசலுடன் குகை போன்ற கருவறையில், புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அம்மன் இங்கு வீற்றிருக்கிறாள். அம்மனின் கைகளில் திரிசூலம், உடுக்கை, வாள், ரத்தம் குடிக்கும் பாத்திரம் உள்ளன. மூலவர், உற்ஸவர் ஒரே பெயரில் அழைக்கப்படுகின்றனர். நாக்கை நீட்டிய படி கோபமாக மூலவர் அம்மனும், சாந்தமாக உற்ஸவர் அம்மனும் காட்சியளிக்கின்றனர். சாமுண்டீஸ்வரியின் சகோதரியாக கருதப்படும் ஜுவாலாமுகியை தரிசித்த பின்னரே மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்ல வேண்டும். 

ராகுகால தீபம்: சன்னதி முன்புள்ள அம்மன் பாதத்தின் அடியில், அசுர சக்திகள் செயல் இழந்து கிடப்பதைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் இங்கு தீபமேற்றி வழிபட சர்ப்ப தோஷம், நாகதோஷம் விலகும். திருமணத்தடை நீங்க பவுர்ணமியன்று வெல்லம், தேங்காய், வாழைப்பழ கலவையை நிவேதனம் செய்து எலுமிச்சை தீபம் ஏற்ற வேண்டும். 

ராமநாதேஸ்வரர்: ஜுவாலாமுகி சன்னதியை ஒட்டி சிவன் சன்னதி உள்ளது. அசுர வதம் செய்த பாவம் நீங்க சிவனை வழிபட்டு பாவம் போக்கினாள் அம்மன். இவருக்கு சித்தேஸ்வரர், ராமநாதேஸ்வரர் என்ற பெயர்கள் உண்டு. விநாயகர், சுப்பிரமணியர், கால பைரவர், நாக பைரவர், மாரகதண்ட நாயக்கர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 12 கி.மீ., துாரத்தில் உத்தனஹள்ளி
விசேஷ நாட்கள்: மகாசிவராத்திரி, நவராத்திரி, ஆடிபவுர்ணமி, சனிபிரதோஷம்
நேரம்: காலை 7:30- - 2:00 மணி; மாலை 3:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 098447 05061
அருகிலுள்ள தலம்: மைசூரு சாமுண்டீஸ்வரி கோயில்

No comments:

Post a Comment