Saturday 19 May 2018

தோஷங்களை விரட்டும் ஆற்றல் பெற்ற வலம்புரி சங்கு

தோஷங்களை விரட்டும் ஆற்றல் பெற்ற வலம்புரி சங்கு

சங்கின் பிறப்பு பற்றி தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணரின் மகனாக சுதர்மன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக அவன் அசுர குலத்தில் சங்க சூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது. சங்கசூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் சிவபெருமான் அவனை சூலாயுதத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்லப்பட்டுள்ளது.

சங்கில் பலவகைகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை. இதில் இடம்புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். சைவ மற்றும் வைணவ ஆலயங்களில் 108 மற்றும் 1008 என்ற எண்ணிக்கையில் வைத்து செய்யப்படும் சங்கு பூஜை, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள். திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும். இடது கையால் பிடிக்கத் தகுந்த அமைப்புடன் இருக்கும் சங்குகளே வலம்புரி சங்குகளாகும். இவை புனிதமும் ஆற்றலும் நிறைந்தவை. லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும். காதில் வைத்துக் கேட்டால் ‘ஓம்’ என சதா நேரமும் ஒலித்த வண்ணம் இருக்கும்.

பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர். தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல், வலம்புரி சங்குக்கு மட்டுமே உண்டு. வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டால், மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க்கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.

No comments:

Post a Comment