Friday 11 May 2018

சைப்யா


கவுசிக முனிவரின் மனைவி சைப்யா, கணவருக்கு சேவை செய்வதில் மிகவும் சிறந்தவள். முன்வினைப்பயன் காரணமாக கவுசிகர் குஷ்ட ரோகத்தால் அவதிப்பட்டார். சைப்யா அதை பொருட்படுத்தாமல், தொடர்ந்து பணிவிடை செய்து வந்தாள்.

மனைவியின் உள்ள உறுதியை பரிசோதிக்க எண்ணினார் முனிவர். சைப்யாவிடம் தன்னை ஒரு தாசி வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார். இந்தப் பேச்சை எந்தப் பெண் தான் சகிப்பாள்? ஆனால், சைப்யா எந்த சலனமும் இல்லாமல் கணவரின் சுகமே முக்கியம் என நினைத்து ஒரு தாசியிடம் மன்றாடினாள். எந்த தாசியாவது ஒரு தொழுநோயாளியுடன்,கூட சம்மதிப்பாளா? ஆனால், சைப்யா எப்படியோ ஒரு தாசியை சரிகட்டி விட்டாள். இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது என சைப்யாவிடம் சம்மதம் பெற்று, ஒப்புக் கொண்டாள் தாசி.

கவுசிக முனிவரை நீராட்டி, புத்தாடை அணிவித்து, கூடையில் அமரச் செய்து நள்ளிரவில் தாசி வீடு நோக்கிப் புறப்பட்டாள். அந்தவேளையில், மாண்டவ்யர் என்ற முனிவரை கழுமரத்தில் ஏற்றும்படி அந்நாட்டு மன்னன் உத்தரவிட்டிருந்தான். கழுவில் ஏற்றப்பட்ட மாண்டவ்யர் உயிர் பிரியாமல் துடித்துக் கொண்டிருந்தார். அந்த வழியை சைப்யா கடந்து செல்லும் போது, காலை மடக்கி வைத்திருந்ததால் கால் வலி ஏற்பட்டு, காலை வெளியே எடுத்து உதறினார் முனிவர். அது கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாண்டவ்யரின் மீது பட்டு விட்டது. ஏற்கனவே வலியால் துடித்து கொண்டிருந்தவருக்கு, மேலும் வலி அதிகமானது. கோபத்தில், ''கழுவிலே கிடந்து அவதிப்படும் என்னை உதைத்த கவுசிகரே! உமது உயிர் நாளை சூரியன் உதிக்கும்போது போய் விடும்,'' என சபித்தார்.

இதை கேட்ட சைப்யா, ''அறியாமல் செய்த தவறை மன்னியுங்கள்,''என மன்றாடினாள். மாண்டவர் மனம் இரங்கவில்லை. சைப்யாவுக்கு கோபம் வந்தது. ''மாண்டவ்யரே... நான் பதி விரதை என்பது உண்மை என்றால் நாளை சூரியன் உதிக்காது,'' என்று பதில் சபதம் செய்தாள். சைப்யாவின் பதி விரத தர்மத்துக்கு கட்டுப்பட்டு சூரியன் உதிக்கவில்லை. இதைக் கண்டு பயந்த தேவர்கள், அத்திரி முனிவரின் தர்மபத்தினி அனுசூயாவை துாது அனுப்பினர்.
சைப்யாவிடம், ''சூரியன் உதிக்காததால் பூலோகம் இருண்டு கிடக்கிறது. உயிர்களின் நன்மைக்காக உன் சபதத்தை விட்டு விடு!'' என அனுசூயா வேண்டினாள்.

''முடியாது! சூரியன் உதயமானால் என் கணவரின் உயிர் போய்விடும்.'' என மறுத்தாள். ''கலங்காதே, கவுசிகரின் உயிரை மீட்பது என் பொறுப்பு.'' என தைரியம் சொன்னாள்.

சைப்யா மனம் இரங்கினாள், சூரியன் உதித்தது. கவுசிகர் பிணமானார். விஷ்ணுவை அனுசூயா பிரார்த்தித்தாள். ''திருமாலே! பதி விரதையான என் வேண்டுதலை ஏற்று, கவுசிகரை உயிர்ப்பித்து, தொழுநோயையும் குணப்படுத்த வேண்டும்'' என்றாள்.

உடனே கவுசிகரும் துாங்கியவர் போல் எழுந்து, நோய் மறைந்தது கண்டு மகிழ்ந்தார். தன் மனைவியின் கற்புத்திறனை எண்ணி வியந்து கண்ணீர் வடித்தார். அதன் பின் வாழ்வை இறைப்பணிக்கு அர்ப்பணித்தார்.

No comments:

Post a Comment