Tuesday 8 May 2018

நன்றி மறக்காதே


மாளவதேசத்தில் பிறந்த கவுதமன், பிறப்பால் அந்தணன். ஆனால், அதற்குரிய எந்த குணாதிசயங்களும் அவனிடம் இல்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே அவனது குறிக்கோளாக இருந்தது. வேதம் எதுவும் படிக்காமல் ஊர் சுற்றித் திரிந்தான். 

ஒருநாள் திருடர்கள் மட்டும் வசிக்கும் ஊருக்கு அந்தணன் சென்றான். திருடிப் பிழைப்பதில் சுகம் இருப்பதாக நினைத்தான். அவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தான். விலங்கு, பறவைகளை வேட்டையாட கற்று கொண்டான். மேலும் மேலும் பொருள் சேர்க்க எண்ணி பக்கத்து நாட்டிற்கு சென்றான். 

செல்லும் வழியில் மதம் பிடித்த யானை ஒன்று, ஊர் மக்களை துரத்தி கொண்டிருந்தது. கவுதமனும் அந்த கூட்டத்தில் சிக்கி, திக்கு தெரியாமல் ஓடி காட்டிற்குள் புகுந்தான். 

களைப்பில் ஒரு ஆல மரத்தடியில் இளைப்பாறி கொண்டிருந்தான். அப்போது பிரம்மலோகத்தை சேர்ந்த நாடீஜங்கன் என்ற கொக்கு, அம்மரத்தில் வந்து அமர்ந்தது. அந்த கொக்கின் சிறகுகள் தங்கமாக மின்னின. உடல் வைடூரியமாக ஜொலித்தது. அந்த பறவை கவுதமனை கண்டு இரக்கம் கொண்டது. 

உதவும் நோக்கில் அவனிடம், ''கவுதமனே! பக்கத்துநாட்டில் எனது நண்பனான விருபாட்சகன் என்னும் மன்னன் இருக்கிறான். அவன் தினமும் ஆயிரம் பேருக்கு தானம் செய்பவன். எனவே நீயும் அங்கு சென்று அவனிடம் உனக்கு தேவையானதை பெற்றுக் கொள்.'' என்றது.

விருபாட்சகனை சந்தித்த கவுதமனும் விருந்தில் பங்கேற்று, அளவுக்கு அதிகமான பொன்னையும் பொருளையும் மூடையில் கட்டிக்கொண்டு காட்டு வழியாக புறப்பட்டான். 

நடந்த களைப்பால் பசி மேலிட்டது. ஏற்கனவே தங்கியிருந்த ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு கிடைத்த செல்வத்தை கண்ட கொக்கு மகிழ்ந்தது. ஆனால் கவுதமனுக்கோ கையில் அளவுக்கதிகமான பணமிருந்தும் பயனில்லாமல் போனது. பொன்னையும், பொருளையும் அள்ளி சாப்பிடவா முடியும்? காய், கனிகளை தேடினான். எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான். கொக்கின் மீது குறி வைத்து அம்பு தொடுத்தான். அது சுதாரிப்பதற்குள், அம்பு அதன் கழுத்தில் பாய்ந்து துடிதுடித்து விழுந்தது. கொக்கை சுட்டு சாப்பிட்டான். 

இந்த விஷயம் மன்னன் விருபாட்சகனுக்கு தெரிய வந்தது. தன் நண்பனான கொக்கை கொன்ற கவுதமனை கைது செய்ய உத்தர விட்டான். அவனை கொன்று அவனது மாமிசத்தை அசுரர்களுக்கு உணவாக அளித்தான். அசுரர்களோ, 'நன்றி கெட்ட இவனது மாமிசத்தை சாப்பிட மாட்டோம்' என மறுத்தனர். விலங்குகள் கூட அவனது மாமிசத்தை சாப்பிட விரும்பவில்லை. ஆதலால், நன்மை செய்தவருக்கு எப்போதும் நன்றியுடன் இருங்கள். நன்றி மறந்த பாவத்திற்கு பரிகாரம் கிடையாது.

No comments:

Post a Comment