Tuesday 1 August 2017

நோய் நொடி போக்கும் அழியா இலங்கை அம்மன்


சித்தர்கள் உலவிய ராசிபுரம் உலைவாயன் மலைச்சாரலில் இருக்கிறது கூனவேலம்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அழியா இலங்கை அம்மன் கோயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. சிவனும், பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அம்மன் காட்சியளிப்பது வேறு எங்கும் காணமுடியாத சிறப்பம்சம். அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாகத்திற்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது. அம்மனின் குழந்தைகள் என்று கருதப்படும் 27 நட்சத்திரங்கள் உருவங்களாக அமைக்கப் பட்டு தனித்தனி சன்னதியில் குடிகொண்டு அருள்பாலிக்கின்றனர். நாற்புறமும் மதில்சுவர்கள், மூன்று வாயில்கள் என அதிஅற்புதமாக திகழும் அழியா அம்மன் கோயிலைக் காண,கோடிக்கண் வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.

‘‘ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதையை தேடி அனுமன் இலங்கைக்கு சென்றார். அப்போது வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் அவரை தடுத்தாள். கோபம் கொண்ட அனுமன், தன்வாலில் சுற்றி அவளை தூக்கி வீச, தலைகீழாக வந்து விழுந்த இடம் தான் கூனவேலம்பட்டி. அவளது பாதங்களை இங்கு வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இலங்கை அழிவதற்கு முன்பே அம்மன் இங்கு வந்து சேர்ந்ததால் அழியா இலங்கை அம்மன் என்று போற்றப்படுகிறாள்’’ என்பது தலவரலாறு. ராவணனின் தங்கை சூர்ப்பனகை தான், இந்த அழியா இலங்கை அம்மன். அந்த வகையில் உலகிலேயே சூர்ப்பனகைக்கு கட்டப்பட்ட ஒரே கோயில் இது என்ற பெருமையும் இதற்கு உண்டு என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.

ஆரம்பத்தில் புதர்கள் மண்டிய பூமியாக இந்த இடம் காட்சியளித்துள்ளது. மேய்ச்சலுக்காக வந்த பசுமாடு ஒன்று, அங்கிருந்த புற்றின் மீது தினமும் பாலை சொரிந்துள்ளது. மாடு சரியாக பால் கறக்காத காரணம் என்ன? என்பதை கண்டறிய, அது செல்லும் இடத்திற்கு உரிமையாளர் சென்றுள்ளார். அன்றைய தினம் அவரது கனவில் வந்த இலங்கையம்மன், தனது வரலாற்றை கூறி, புற்றிருக்கும் இடத்தில் தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டாள். இதனால் அந்த இடத்தில் அம்மன் குடியிருக்க, சிறிய குடில் அமைக்கப்பட்டது. அந்த குடில் தான், இன்று 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த அழியா இலங்ைகயம்மன் கோயிலாக காட்சியளிக்கிறது. கருவறை புற்று வடிவில் அமைந் துள்ளது. இந்த புற்றில் வடக்கு திசையில் தலைகீழாக, மேல்நோக்கிய படி அம்மன் பாதங்கள் நிற்கிறது. திருவிழாக் காலங்களில் இந்த பாதத்தின் மீது உருவச்சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

அழியா இலங்கை அம்மனை மனமுருக வழிபட்டால், எப்படிப்பட்ட கொடிய நோயும் அழிந்து போகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. நோய் தீர்க்க வழிபடும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியவுடன் நாய் மற்றும் பாம்பு உருவத்தை அம்மன் சன்னதியில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் விவசாயிகள் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் அம்மனை வழிபட்டுச் செல் கின்றனர். இதற்கு நேர்த்திக்கடனாக மண்ணால் செய்த பசு உருவங்களை கோயிலுக்கு கொண்டு வந்து வைத்துச் செல்கின்றனர்.  ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அம்மனுக்கு கோலாகலமாக திருவிழா கொண்டாடப்படுகிறது. அப்போது சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராம மக்கள், வெள்ளைச் சேலை அணிந்து தரையில் படுத்து உறங்கி, அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடும் ஐதீகமும் ஆண்டாண்டு காலமாய் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மூலிகைகள் கிடைக்கும் மலை

போகரின் சிஷ்யரான கொங்கணர், இந்த மலையில் உள்ள சுனையின் நீரை பெரும் கொப்பரையில் காய்ச்ச, போகர் தக்க பக்குவத்தோடு அனைத்து மூலிகைகளையும் பதம் பார்த்து காய்ச்சினார். இறுகிய மூலிகை பாஷணங்களை கொண்டு தமிழ்கடவுள் முருகனுக்கு சிலை வடித்தார். அது தான், தற்போது பழனிமலையில் அருள்பாலிக்கும் முருகன். நவபாஷாணம் செய்ய உலை வைக்கப்பட்ட மலை என்பதால், இது உலைவாயன் மலை என்று போற்றப்படுகிறது. இந்த மலையில் அனைத்து வித அபூர்வ மூலிகைகளும் உண்டு. காகபுஜண்டரை வணங்கி எந்த மூலிகை தேவை என்று தேட ஆரம்பித்தாலும், அந்த மூலிகை கண்டிப்பாய் கிடைக்கும் என்கின்றனர் மூத்த நாட்டு வைத்தியர்கள்.

No comments:

Post a Comment