Tuesday 1 August 2017

ரகு குல திலகன்... ராமனை இப்படி அழைப்பது ஏன் ?


புரட்டாசி சனிக்கிழமையன்று, திருமாலின் அவதாரமான ராமரை வணங்குவோரும் உண்டு. ராமனை "ரகு குல திலகன்' என்பர். இந்தப் பெயர் அவருக்கு ஏன் வந்தது என்று தெரிந்து கொண்டு, அவரை வணங்கினால், நம் வழிபாடு இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

வரதந்து மகரிஷியிடம் கவுத்சன் என்ற சீடன் பாடம் கற்க வந்தான். பயிற்சி முடிந்ததும், சீடனை சோதிக்க குரு தேர்வு நடத்தினார். அதில் கவுத்சன் வெற்றி பெற்றான். 

பிறகு, ""குருதேவா! உங்களுக்கு தட்சணை தர விரும்புகிறேன். தங்களின் விருப்பம் அறிய விரும்புகிறேன்,'' என்றான்.

""இத்தனை காலமும் நீ என்னிடம் பணிவுடன் கற்ற விதமே, தட்சணை பெற்ற மன நிறைவைத் தந்தது. எனவே வேறு ஏதும் தேவையில்லை,'' என்றார் வரதந்து. ஆனால், கவுத்சன் விடுவதாக இல்லை.

""தாங்கள் தட்சணை பெற்றுக் கொண்டால் தான், எனக்கு மனநிறைவு உண்டாகும்,'' என உறுதியுடன் தெரிவித்தான். 

"" சரி.... கவுத்சா.... நீ இதுவரை என்னிடம் 14 ஆயிரம் வித்தை கற்றுக் கொண்டாய். வித்தைக்கு ஒரு தங்கக் காசு வீதம் 14 ஆயிரம் பொன் கொடு'' என்றார் வரதந்து.

இதுகேட்டு கவுத்சன் சிறிதும் மனம் கலங்கவில்லை.

""நிச்சயம் நீங்கள் கேட்ட தட்சணையுடன் வருகிறேன் குருநாதா,'' என்று சொல்லிப் புறப்பட்டான். அயோத்தி மன்னர் ரகு பற்றி கவுத்சன் கேள்விப்பட்டிருந்தான். அவரிடம் சென்றால் தானம் பெறலாம் என்ற நம்பிக்கை அவனுக்குள் எழுந்தது. 

அயோத்திக்கு புறப்பட்டான். அவனை மன்னர் ரகு வரவேற்றார். 

ரகு அளித்த அறுசுவை உணவை சாப்பிட்ட கவுத்சன், ""தங்களின் உபசரிப்புக்கு நன்றி'' என்று சொல்லி விட்டு கிளம்பத் தயாரானான். 

""அதிதியாக வந்த தாங்கள், தானம் ஏதும் பெறாமல் செல்லலாமா?'' என்றார் ரகு. 

""அரசரே.... நானும் தங்களிடம் பொருள் பெறும் நோக்கத்துடன் தான் வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகே, தாங்கள் பொன், பொருள் அனைத்தையும் தானம் செய்து விட்டதை அறிய முடிந்தது. எனக்கு உணவளிக்க கூட எளிய மண் பாத்திரங்களையே வைத்திருக்கிறீர்கள். 

என்னுடைய தேவையோ பதினாலாயிரம் பொற்காசுகள். அதைக் கேட்டு உங்களைச் சிரமப்படுத்த விரும்பவில்லை,'' என்றான் கவுத்சன்.

""உங்கள் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுவரை இங்கேயே தங்கியிருங்கள்'' என்றார் ரகு.

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் மீது போர் தொடுத்து, செல்வம் பெற்று வரலாம் என்பது அரசரின் எண்ணம். ஆனால், அப்போது அங்கு ஓடி வந்த அமைச்சர், "" அரசே! நமது பொக்கிஷ அறையில் குபேரன் தங்கமழை பொழிந்து கொண்டிருக்கிறார்,'' என்றார்.

""அப்படியா... மகிழ்ச்சி'' என்றார் ரகு.

உடனே கவுத்சனை அழைத்து, ""உமது விருப்பம் எளிதாக நிறைவேறி விட்டது. குபேரன் மீது போர் தொடுக்க தேவையில்லை. 

அவன் தானாகவே வந்து தங்கமழை கொட்டிக் கொண்டிருக்கிறான். அவை அனைத்தும் உமக்கே சொந்தம்,'' என்றார். 

கவுத்சன்,"" குருதட்சணையான பதினாலாயிரம் பொன் மட்டும் போதும். அதற்கு மேல் வேண்டாம்'' என்றான்.

""அப்படி என்றால், நீங்கள் பெற்றது போக மீதியை தானம் பெற வருவோருக்கே கொடுப்பேன்'' என்றார் ரகு. இப்படி, தனக்கென வைத்துக் கொள்ளாமல், பிறருக்கே அனைத்தையும் கொடுத்து மகிழ்ந்த அரசர் ரகுவின் வம்சத்தில், திருமால் ராமராக பிறந்தார். "ரகு குல திலகன்' என பெயர் பெற்றார்.

No comments:

Post a Comment