Tuesday 1 August 2017

கோலாகல வாழ்வருளும் கோட்டை மாரியம்மன்


சேலம்

கொங்கு மண்டலம் மலை வளமும், மண் வளமும், தமிழ் மணமும் கமழ விளங்கிய நாடாக விளங்கியது. சேலம் சேரநாட்டின் ஒரு பகுதியாக திகழ்ந்தது. 500 ஆண்டுகளுக்கு முன்பு சேரநாட்டை சேர்ந்த சிற்றரசர்கள் சேலத்தில் கோட்டை எழுப்பினர். கோட்டையில் தங்கியிருந்த வீரர்கள், அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மனை காவல் தெய்வமாக வழிபட்டு வந்தனர். கால ஓட்டத்தில் அப்பகுதியிலிருந்த கோட்டை இன்று குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டது. கோட்டை இருந்ததற்கான அடையாளமாக கோட்டை மேடு என்ற பகுதி மட்டும் இன்றும் உள்ளது. இங்கே மாரியம்மன் திருமணிமுத்தாறு நதிக்கரையில் எழுந்தருளியுள்ளாள். முன்பு பக்தர்கள் திருமணிமுத்தாற்றில் நீராடி, பின்னர் அம்மனை தரிசனம் செய்து வந்தனர். 

கொங்கு மண்டலத்தில் கோட்டை மாரியம்மன் தனிச்சிறப்புடன் இருந்ததால், சுற்றுப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோட்டை மாரியம்மனை தரிசிக்க நடைப் பயணமாக வந்து சென்றனர். இதற்காக 1876ம் ஆண்டு பழைய கோட்டை பட்டக்காரர் பார்வதியம்மாள், முத்துக்குமார பிள்ளை ஆகியோர் தர்ம சத்திரம் ஒன்றை கட்டிக் கொடுத்தனர். 1881ம் ஆண்டு கோட்டை மாரியம்மன் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அம்மனின் சிரசில் ஜ்வாலா கிரீடம், அக்னி கிரீட அமைப்பில் நாகம் படம் எடுத்த வண்ணம் உள்ளது. வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தியிருக்கிறாள். 

வலது கீழ்கரத்தில் திரிசூலம் இருக்கிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், இடது கீழ்கரத்தில் கபாலத்துடனும் காட்சி தருகிறாள். இடது காலை மேல் யோகாசனமாய் மடித்து ஈசான திசையை நோக்கி அமைதி வடிவாய் ஆனந்த முகத்துடன் வீற்றிருக்கிறாள். அன்னையின் அடியவர்கள் மாரி (மழை) வேண்டி விழா எடுத்தனர். அன்னையும் மனமுருகி மழை பொழிந்தாள். இதனால் ஆடி முழுவதும் மழை பெய்து 18ம் நாள் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.  கோட்டை மாரியம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

ஆடித்திருவிழா இத்தலத்தின் மிகப்பெரிய விழா ஆகும், இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பூச்சாட்டுதலின்போது சேலத்திலுள்ள ஏனைய ஏழு மாரியம்மன் திருக்கோயில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று அந்தக் கோயில்களில் பூச்சாட்டுதல் நடைபெறுகின்றது. இது தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பிரதாயமாகும். இத்திருவிழா மொத்தம் 15 நாட்கள் நடைபெறும். பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், சக்தி அழைப்பு, சக்தி கரகம், உருளுதண்டம், பொங்கலிடுதல், மகா அபிஷேகம் ஆகியவை முக்கிய அம்சங்களாகும். தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோயில் இதுவாகத்தான் இருக்கும். 

எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி இந்த உலக நாயகியைக் கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நைவேத்தியம் அம்பாளுக்கு முன்னால் படைக்கப்படுவதில்லை; மாறாக எடுத்து அம்பாளுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம். கோயிலில் கருவறை, முன்மண்டபம், பலிபீடம், வெளிப்பிராகார மண்டபம், கிளி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றுடன் மிக உயர்ந்த ராஜகோபுரமும் காட்சி தருகிறது. அம்மன் நோய், கண் நோய் நீங்க, திருமணத்தடை, குடும்ப பிரச்னை தீர பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். கீழ்க்காணும் பல்வேறு வகையான பிரார்த்தனைகள் இத்தலத்தில் நிறைவேற்றப்படுகின்றன:

மண் உரு சாத்துதல்:  அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு கோயிலை மூன்று முறை வலம் வந்து பொம்மைகளை சமர்ப்பிக்கிறார்கள். கண்ணடக்கம் சாத்துதல்: கண்ணில் பூ விழுந்தாலோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக் கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகளாலோ கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாத்துவர். உருவாரம் சாத்துதல்: நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதேபோன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பர்.

அடியளந்து கொடுத்தல்: பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மூன்று முறை திருக்கோயிலை சுற்றி வருகின்றனர். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர். உப்பு மிளகு போடுதல்: பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக்கொண்டவர்கள் குங்குமம் கலந்த உப்பை பலிபீடத்தின்மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கறைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதீகம். இத்தலத்தில் வழிபட்டால் கல்யாண பாக்கியம், குழந்தைப் பேறு கைகூடுகிறது.

பூப்போட்டுப் பார்த்தல்: இது மிகவும் பிரசித்தமானது. குடும்பத்தில் சிக்கல் தீர, திருமணம் நடைபெற, நோய் தீர, உத்யோகம் கிடைக்க… இப்படி தங்கள் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க பக்தர்கள் வெள்ளை, சிவப்பு நிறங்களிலுள்ள பூக்களை தனித்தனி பொட்டலங்களில் கட்டி அம்மன் திருவடிகளில் வைத்து எடுப்பார்கள். தாம் நினைத்த நிறப்பூ வந்து விட்டால் தாம் எண்ணி வந்த செயல்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

No comments:

Post a Comment