Tuesday 1 August 2017

பணம் எனக்கு பெரிசில்லே


பெருமாளின் பக்தரான துகாராமை தரிசிக்க மன்னர் சிவாஜி விரும்பினார். அரண்மனை பணியாளர்கள் மூலம் பல்லக்கு, குதிரை, யானைகளை அவரின் குடிசைக்கு அனுப்பி வைத்தார். 

பணியாளர்கள், ""சுவாமிஜி! தங்களை தரிசிக்க மன்னர் சிவாஜி விரும்புகிறார். விரும்பிய வாகனத்தில் அரண்மனைக்குப் புறப்பட வசதியாக யானை, குதிரை, பல்லக்கு எல்லாம் இங்கு வந்திருக்கின்றன. எதில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளுங்கள்,'' என்றனர்.

"எனக்கு வாகனம் எதுவும் தேவையில்லை. கடவுள் கொடுத்த கால்கள் போதும். நடந்தே வருகிறேன். ஆனால், இப்போது திருமாலுக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறேன். வர இயலாதே,'' என்றார்.

" தேடி வந்த ராஜ உபசாரத்தை மறுக்கும் இவர் மன்னரின் கோபத்திற்கு ஆளாகப் போகிறார்,'' என நினைத்த பணியாளர்கள், சிவாஜியிடம் போய் விஷயத்தை சொன்னார்கள்.

சிவாஜிக்கு கோபம் வரவில்லை. மாறாக, துகாராமிற்கு காணிக்கை அளிக்க பை நிறைய பொற்காசுடன் குதிரையில் புறப்பட்டார்.

"சுவாமிஜி....தவறுக்கு மன்னியுங்கள். தங்களைத் தரிசிக்க நான் முதலிலேயே வந்திருக்க வேண்டும்,'' என்றார்.

" தவறு செய்தால் தானே மன்னிக்கலாம்,'' என்ற துகாராம் சிவாஜிக்கு ஆசியளித்தார்.

சிவாஜி அவரிடம், ""சுவாமி... இந்த காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என பொற்காசு பையைக் கொடுத்தார். 

"பணத்தாசை என்னும் மாயையில் சிக்கினால் பக்தி பயனில்லாமல் போகுமே'' என்ற துகாராம் அதை ஏற்க மறுத்தார். துகாராமின் நிஜ பக்தியை உணர்ந்த சிவாஜி வியப்பில் ஆழ்ந்தார்.

No comments:

Post a Comment