Monday 19 March 2018

ஜுரதேவர் யார் ?


சிவபெருமான், பார்வதியுடன் 'மேருமலையில் அமர்ந்திருந்தார். கங்காதேவி, தேவ குருக்கள், நந்தி, சித்தர்கள், தபஸ்விகள் உடனிருந்தனர்.

அப்போது தட்சன், தான் நடத்தும் யாகத்திற்கு தேவர்களை அழைக்க சென்றான். இவன் அழைத்தது தான் தாமதம்! எல்லா தேவர்களும் யாகத்திற்கு கிளம்பி விட்டனர். ஆனால் தன் மகளை திருமணம் செய்து கொடுத்திருந்தும், சிவனை மட்டும் யாகத்திற்கு அழைக்காமல் புறக்கணித்தான். யாகங்களின் மூலம் கிடைக்கும் அவிர்பாகம் என்னும் பலன், சிவனுக்கு கிடையாது என்ற விதியின் கீழ் அவ்வாறு செய்தான்.

இருந்தாலும் பார்வதிக்கு இதில் வருத்தம். 'உலக முதல்வரான தன் கணவருக்கு இல்லாத மதிப்பு பிற தேவர்களிடம் என்ன இருக்கிறது?' என்ற அடிப்படையில் தந்தையை தட்டிக்கேட்க சென்றாள். ஆனால், அவளை தட்சன் அவமதித்தான்.

கோபமடைந்த சிவன், யாகம் நடத்தும் இடத்திற்கு சென்று அதை அழித்தார். யாகபலன், ஒரு மானின் வடிவில் வானை நோக்கி சென்றது. சிவபெருமான் அதைக் கையில் ஏந்த, நெற்றியிலிருந்து வியர்வைத்துளி நிலத்தில் விழுந்து, அக்னி தோன்றியது. அதில், சிவந்த கண்கள், மஞ்சள் நிற மீசை, விறைப்பான தலைமுடி, ரோமத்துடன் கூடிய உடல், முட்டை வடிவ கண், கோட்டான் உருவம் கொண்டு கருப்பான உடையில் 'ஜ்வரம்' என்ற பூதம் தோன்றியது.யாகத்துக்கு சென்ற தேவர்களையும், ரிஷிகளையும் அந்த பூதம் விரட்டியது. உயிரினங்கள் மிரண்டன. பூமி நடுங்கியது.

கவலையடைந்த பிரம்மா,“சிவபெருமானே! தங்களை மதிக்காமல் யாகத்தை நடத்தியது தவறு தான். அவர்களை மன்னித்தருள வேண்டும்,” என்றார். பிரம்மனின் வேண்டுகோளை சிவன் ஏற்றார்.

சிவனிலிருந்து தோன்றிய ஜ்வரத்தை (உஷ்ணம்) அப்படியே விட்டால், இந்த பூமி தாங்காது என்பதால், மனிதன் உள்ளிட்ட பல உயிரினங்களிலும் பிரித்து வைத்தார் பிரம்மா. இந்த ஜ்வரமே 'ஜுரதேவர்' என்ற பெயரில் கோயில்களில் இருக்கிறது. இவர் அக்னி வடிவாய் பிறந்தவர் என்பதால், இவருக்கு குளிர்ச்சி தரும் மிளகை அரைத்து பூசி வழிபடுகிறார்கள். காய்ச்சல் வந்தால் மிளகு அரைத்து பூசி ஜுரதேவரை குளிர்வித்தால் நமது உடலும் குளிரும்.

சூடு அதிகமாகி விட்டால் உடல் தளர்ந்து, கால்கள் வலிமையற்று படுத்து விடுகிறோம். இதனால் தான் ஜுரதேவருக்கு நடுவில் மூன்றாவதாக ஒரு கால் இருக்கிறது. அதை வணங்கினால், மீண்டும் நமக்கு சக்தி கிடைக்கும்.

No comments:

Post a Comment