Saturday 16 June 2018

கடைசி வரை யாரோ!


பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற குரு, ஒரு ஊரில் தங்கினார். பணக்காரர் ஒருவர் குருவை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

''இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்தை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,'' என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சற்று யோசித்த குரு,''நல்லது.. எனக்கு ஒரு உதவி வேண்டும்,'' என்றார்.

''எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள், செய்கிறேன்” என்ற பணக்காரரிடம், தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்துக் கொடுத்த குரு, “இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுங்கள்,” என்றார். “இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வரமுடியும்?” என்று கேட்டார் பணக்காரர்.

சிரித்த குரு, ''இந்த உலகை விட்டுப் போகும்போது, சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக பெருமை பேசுகிறீர்கள்... ஒருவன் செய்த நன்மை, தீமை மட்டுமே இறந்த பிறகும் கூட வரும். செல்வத்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அது தான் மகிழ்ச்சி தரும்,'' என்று அறிவுரை கூறினார். அன்று முதல் பணக்காரர் தான, தர்மங்களில் ஈடுபட்டார்.

No comments:

Post a Comment