Friday 29 June 2018

முன்னேற்றம் தந்த சமயோசிதம்


சுந்தரவல்லியும், அவளது கணவன் சுந்தரனும் முருக பக்தர்கள். இவர்களுக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் இருந்தனர். பிள்ளைகளை வளர்க்க பணப்பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த நிலையிலும் ஒரு புன்செய் நிலத்தை வாங்கினான் சுந்தரன். அதில் ஒரு மரம் இருந்தது. மரத்தை வெட்டி நிலத்தைப் பண்படுத்தி, பயிர் செய்ய எண்ணினான். 

சுந்தரவல்லியும் அவனுமாய் இணைந்து மரத்தை வெட்ட கோடரியை ஓங்கினர். அதில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டது. “நில்லுங்கள்! இம்மரத்தில் நான் நீண்ட நாட்களாய் குடியிருக்கிறேன். இதை வெட்டினால், உங்களை கொல்வேன்,” என பயமுறுத்தியது.

பழநி முருகன் அருள் பெற்றிருந்த சுந்தரவல்லி கலங்கவில்லை. அவள் பூதத்திடம், “ஊரில் எத்தனையோ மரங்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றில் தங்கிக் கொள். போய் விடு. எங்கள் பிழைப்பைக் கெடுக்காதே,” என்றாள்.

பூதம் மறுத்தது. மறுநாள் முருகன் கோயிலில் அபிஷேக தீர்த்தம் வாங்கி வந்து மரத்தின் மீது தெளித்தாள். சக்தி மிக்க தீர்த்தம் கண்டு அஞ்சிய பூதம் வெளியேறியது. மரம் வெட்டப்பட்டது. இருப்பினும், இவர்களை பழிதீர்க்க எண்ணியது பூதம்.

தம்பதியர் நிலத்தைப் பண்படுத்தி சோளம் பயிரிட்டனர். விளைந்து வரும் வேளையில் பூதம் கடும் மழையை வரவழைத்தது. பயிர் தண்ணீரில் மூழ்கியது. சுந்தரன் கலங்கினான்.

சுந்தரவல்லி அவனை தேற்றி, “அன்பரே! பழநியாண்டவர் நம்மைக் காப்பார். இந்நிலத்தை உழ ஏற்பாடு செய்யுங்கள். தண்ணீருள்ள நிலம் நன்செய்யாக மாறும். நன்செய் நிலத்தில் நெல் நன்றாக விளையும். நெல் விளைந்தால் நல்ல லாபம் கிடைக்கும்,” என்றாள். மனைவி சொல்படியே கணவனும் செய்தான். நெல் செழித்து வளர்ந்தது. அதைப் பார்த்து பெருமைப்பட்டான் சுந்தரன். ஆனால், பூதம் மீண்டும் வந்தது.

“சுந்தரா! நீ அறுவடை செய்யும்போது கட்டுக்கு இரண்டு படி நெல்தான் தேறும்,” என சாபமிட்டது. கவலையில் இருந்த சுந்தரனை மனைவி தேற்றினாள். “பயம் வேண்டாம். என் பக்தி உண்மையானால், பழநி முருகன் நம்மை காப்பான். அறுவடை நடக்கட்டும்,” என்றாள்.

அறுவடை நடந்தது. கூலியாட்களை அழைத்த சுந்தரவல்லி, “ஒரு கட்டில் இரண்டு கதிர்களை மட்டும் வையுங்கள்,” என்றாள். களத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஒவ்வொரு கட்டையும் அடித்த போது, இரண்டு படி நெல் கிடைத்தது. 

இப்படியே, கட்டுக்கு இரண்டுபடி வீதம், ஏராளமான நெல் சேர்ந்தது. பூதத்தின் சாபம், பழநியாண்டவனின் அருளாலும், சுந்தரவல்லியின் பதிபக்தி, சமயோசிதத்தாலும் ஏராளமாக நெல் கிடைத்தது. பார்த்தீர்களா! பக்தியுடன், சமயோசிதமும் சேர்ந்து விட்டால் வாழ்வில் முன்னேற்றம் தான்.

No comments:

Post a Comment