Thursday 14 June 2018

புகார் சொல்லணும் 'புகார்'


அது ஒரு பெரிய மடாலயம். அங்கு சீடர்கள் அதிகம் பேசக் கூடாது. அதுவும் தலைமை குருவிடம் ஓரிரு வார்த்தை மட்டுமே பேச வேண்டும் என்பது விதி. அங்கு புதிதாக சேர்ந்த சீடன் ஒருவன், மடத்தில் சேர்ந்த ஒரு வாரத்திற்குள் தலைமை குருவிடம், ''சாப்பாடு... மோசம்'' என்றான்.

''ஓ அப்படியா…'' என்ற அவர் சொல்லி விட்டு நடந்து விட்டார். மீண்டும் சிலநாள் கழித்து, அந்த சீடன் அவரைச் சந்திக்க வந்தான். '' இந்த முறை என்ன சொல்ல போகிறாய்?'' என்றார். ''பாடம்... கஷ்டம்'' 'முயற்சி செய்தால் முடியும்'' என்று சொல்லி அனுப்பினார் தலைமைகுரு. மேலும் சில நாட்கள் கடந்தன. 
மீண்டும் வந்தான் சீடன்.

''என்ன வேண்டும் உனக்கு'' எனக் கேட்டார் தலைமை குரு. அவன், '' நான்… வீட்டுக்குப் போகிறேன்'' ''ஓ அப்படியா...'' என்றவர் மேலும், '' இது நான் எதிர்ப்பார்த்தது தான்…' என்றார். சீடன் மவுனமாக நின்றான். 

அவர் தொடர்ந்தார்.'' நீ ஒரே விஷயத்தையே விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாய்... அது என்ன வென்றால் 'புகார்... அது மிக எளிய விஷயம். நாளடைவில் அது உன் முன்னேற்றத்தை தடுக்கும் தடையாகி விடும். உள்ளதில் நல்லதை தேடத் தொடங்கு. வாழ்வு வசப்படும். ' நீ புகார் சொல்லவில்லையே' என்று புகார் வருந்தும் விதத்தில் நடந்து கொள்'' என்றார். தவறை உணர்ந்த சீடன் முடிவை மாற்றிக் கொண்டான்.

No comments:

Post a Comment