Saturday 16 June 2018

சிவக்கீரை


கும்பகோணத்தில் மளிகைக்கடை நடத்தியவர் குமரேசன் செட்டியார். அவர் மனைவி சிவகாமி ஆச்சி. ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தனர். 'சிவ சிவ' என்ற நாமம் தவிர வேறு எதையும் அறியாதவர் குமரேசன். தினமும் காவிரியில் நீராடி விட்டு, அங்குள்ள சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவார். அன்னதானம் செய்வார். பக்தர்கள் விரும்பும் காய்கறியை, சிவகாமி சமைப்பார். வேலையாள் யாருமில்லை.

ஒரு நாள் நல்ல மழை பெய்தது. பக்தர்கள் யாரும் உணவு கேட்டு வரவில்லை. குமரேசன் குடையுடன் மகாமக குளக்கரைக்கு சென்றார்.  மண்டபத்தில் சாமியார் ஒருவர், தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். அவரை வீட்டுக்கு விருந்தினராக அழைத்து வந்தார்.

சிவகாமி அவரிடம், ''ஐயா! தங்களுக்கு பிடித்த காய்கறியை சொன்னால்,சமையலை தொடங்குவேன்,'' என்றார். உடனே சாமியார் காய்கறிகள் பயிரிட்டிருந்த இடத்துக்கு சென்றார். அங்கே கீரை வளர்ந்திருந்தது. 'கீரைத்தண்டு சாம்பாரும், முளைக்கீரை கூட்டும் போதும்' என்றார் சாமியார். குமரேசனும் கீரை பறித்தார். 

சாமியாரும் உதவிக்கு வந்தார். குமரேசன் பறித்த கீரையையும், சாமியார் பறித்த கீரையையும் தனித்தனியாக சமைத்தார் சிவகாமி. சாமியார் பறித்த கீரையை பூஜையறையில் நைவேத்யம் செய்தார். சாமியாருக்கு பெருமை பிடிபடவில்லை. தான் பறித்த கீரைக்கு முக்கியத்துவம் தர எண்ணியே, இப்படி நடப்பதாக எண்ணினார். சாப்பிடும் போது சிவகாமியிடம் இதுபற்றி கேட்டார்.

''ஐயா! என் கணவர் சிவநாமம் சொல்லி பறித்ததால் முளைக்கீரை, 'சிவக்கீரை' ஆகி விட்டது. அதனால் பூஜையில் வைக்க அவசியமில்லை. நீங்கள் மவுனமாக பறித்தீர்கள். அதனால் அதை நைவேத்யம் செய்தேன்,'' என்றார். இது கேட்ட சாமியார் கலங்கிப் போனார். தம்பதியின் சிவபக்தி முன், தனது துறவு போலி என்பதை உணர்ந்தார். 

இந்த தெய்வத்தம்பதிகள் ஒரே நாளில் இறந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் சிவனடி சேர்ந்தது கண்டு ஊர் மக்கள் அதிசயித்தனர். 1938ல் கும்பகோணத்தில் வாழ்ந்த இத்தம்பதியின் அன்னதானம் பற்றி, காஞ்சிப்பெரியவர் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment