Sunday 24 June 2018

இடுப்பு வலிக்கு! இடுக்கு பிள்ளையார்!


பிள்ளையார் தொந்தியுடன் இருப்பது இயல்பு. ஆனால் இங்கு நந்தியுடன் இருப்பது வித்தியாசம். ஆனால், விசேஷம் என்ன தெரியுமா... இங்கு மூலவர், பிள்ளையார் இல்லை; மூன்று வாசல் கொண்ட சிறிய குகை!

ஆம்... இடுக்குப் பிள்ளையார் - ஒரு 'இன்ஸ்டன்ட் நிவாரணர்'! 

திருவண்ணாமலை என்றதும் அண்ணாமலையார், கிரிவலத்தை தானே ஞாபகம் வைத்திருப்பீர்கள்... இனி இவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  

தொடர்ந்து இருமுறை மாடிப்படி ஏறி இறங்கினாலே அப்பாடா... என ஆகிவிடுகிறது. ஒரே நேரத்தில் 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையை கடந்தால் என்னாவது...? ஒன்றும் ஆகாது. அதற்குத் தான் இருக்கவே இருக்கிறார் இடுக்கு பிள்ளையார்.

கிரிவலப்பாதையில் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. இதில் இடுக்கு பிள்ளையார் மட்டும் ரொம்ப ஸ்பெஷல்! அஷ்ட லிங்கங்களில் ஒன்றான குபேர லிங்கத்திற்கு அருகில் உள்ளது கோயில். 

அளவில் மிகச் சிறியது; அறிவில் மிகப் பெரியது. எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்க முடியுது... என வாய்பிளந்து நிற்கும் அளவிற்கானது கோயிலின் அமைப்பும், அதில் பொதிந்திருக்கும் அர்த்தமும்.

சிறிய குகை போன்ற அமைப்புடன் 3 வாசல் கொண்டது கோயில். அதன் முன்னால் நந்தி, பின்னால் பிள்ளையார் உள்ளனர். கோயிலில் பின் வாசல் வழியாக ஒருக்களித்துப் படுத்தவாறு உள்ளே நுழைய வேண்டும். மெதுவாக கையை ஊன்றி நகர்ந்து நகர்ந்து முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். முழுதாக வெளியே வரும் போது நந்தி சிலை முட்டுவது போல் இருக்கும். ஆனால் முட்ட மாட்டோம். வெளியே வந்து நந்தியை தொட்டு வணங்கி விட்டு எழுந்து நின்று பார்த்தால், இதற்குள்ளா நாம் வந்தோம் என தோன்றும். முதலில் 'சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது' என்று நினைப்போம். ஆனால் அதை அனுபவித்த பிறகே தெரியும் எவ்வளவு உத்தமமான சிந்தனை என்று. குண்டானவர்களும் இதன் வழியாக எளிதாக வரலாம் என்பது கூடுதல் சிறப்பு. 

கிரிவலம் முடித்ததும், இங்கு வழிபட்டால் இடுப்பு, தலை, கை, கால் வலி தீரும். குழந்தை இல்லாதவர்கள் வீட்டில் மழலைக்குரல் கேட்கும். இங்கு வருபவர்கள் 'இடுக்கு பிள்ளையார் இருக்க இடுப்பு வலி எதற்கு...?' என சொல்வது உறுதி. 

No comments:

Post a Comment