Sunday 24 June 2018

ராஜா ராணி சிவன்!


ஹோய்சாள மன்னர்கள் கட்டிய கோயில்களில் கர்நாடக மாநிலம் ஹளபேடுவிலுள்ள ஹோய்சாளேஸ்வரர் கோயில் மிக பெரியது. கலைநயம் மிக்க இங்கு ராஜா பெயரிலும், ராணி பெயரிலும் இரு கருவறைகளில் சிவன் காட்சியளிக்கிறார். 


தல வரலாறு: தங்களை துவாரகாபுரியைச் சேர்ந்தவர்கள் என ஹோய்சாள மன்னர்கள் குறிப்பிடுவர். இருப்பினும், இவர்கள் கிருஷ்ணனை வணங்கியதில்லை. சமண சமயத்தையே பின்பற்றினர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு, மீண்டும் வேத சமயத்தைப் பின்பற்றினர். அதன்பின், சிவன், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நுாற்றாண்டில் ஹளபேடு ஹோய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. இங்கு ஒரு சிவாலயம் கட்டி, மூலவருக்கு தங்கள் வம்சத்தின் பெயரால் 'ஹோய்சாளேஸ்வரர்' என பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டுமான பணி 1207ல் நிறைவு பெற்றது. மன்னர் விஷ்ணுவர்த்தனின் அமைச்சரில் ஒருவரான 'கெட்டுமல்லா' வின் தலைமையில் இப்பணி தொடர்ந்தது. 

வரவேற்கும் விநாயகர்: இந்தக் கோயிலின் வாசலில் விநாயகர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மேல் இரு கைகளில் பாசம், அங்குசம் உள்ளன. வலதுகை அந்நியப் படையெடுப்பில் (மாலிக்காபூர் படையெடுப்பு) உடைக்கப் பட்டது. இடதுகையில் மோதகம் உள்ளது. துதிக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. 
விநாயகரின் கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடு மிக்கவை. கால்கள் இரண்டும் மடித்த நிலையில் உள்ளன. கழுத்தில் இருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே கிடக்கிறது. வெயிலுகந்த விநாயகராக வெளியில் காட்சியளிக்கிறார். 


ராஜா ராணி சிவன்: கோயிலில் இரண்டு பிரதான சன்னதிகள் உள்ளன. முதல் சன்னதியில் 'ஹோய்சாளேஸ்வரர்' என்னும் பெயருடன் சிவன் வீற்றிருக்கிறார். எளிமையாக காட்சி தரும் சிவலிங்க பாணத்தின் மீது நாகாபரணம் குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரு கண்கள் அழகு செய்கின்றன. இதன் முன்னுள்ள நவரங்க மண்டபம் வேலைப்பாடு மிக்கது. ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்த்தனனின் மனைவி சாந்தளாதேவி பெயரால் 'சாந்தளேஸ்வரர்' என்றொரு சிவன் சன்னதி உள்ளது. வடநாட்டுப்பாணியில் இவர் மீது தாராபாத்திரம் உள்ளது.

இரு சன்னதிக்கும் கிழக்கு நோக்கி வாசல் இருந்தாலும், வடக்கு, தெற்காகவும் வாசல் உண்டு. வாசலுக்கு அருகில் அரண்மனை இருந்ததாக கூறுகின்றனர். வெளியில் எவ்வளவு வெயில் இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்ததும் குளிர்ச்சியாக இருக்கும். பிரசாதமாக தீர்த்தம் வழங்கப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சன்னதியில் உற்ஸவர் சிலைகள் உள்ளன. 


ஒய்யார துவாரபாலகர்: மகாகாளர், நந்தி, என்னும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன் உள்ள துவாரபாலகர்கள், கையில் திரிசூலம், உடுக்கை ஏந்தி சிவன் போல காட்சியளிக்கின்றனர். கைகளை லாவகமாக வளைத்தும், கால்கள் சற்று சாய்ந்தும் ஒய்யாரமாக காட்சி தருகின்றனர். சிவனைச் சரணடைந்தால் நாமும் இவர்கள் போல ராஜாவீட்டு கன்றுக்குட்டியாக வாழலாம். 


நந்தி மண்டபம்: ஹோய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் சன்னதிக்கு நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும், மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு போல கலைநயம் மிக்க துாண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல் நந்தி நடுவில் உள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. கழுத்து சிறிது வளைந்திருக்கிறது. 


சித்திர வேலைப்பாடு: பிரகார சுவர் முழுவதும் யானை, சிங்கம், குதிரைவீரர்கள், பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் நுாற்றுக்கணக்கில் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் ஒரு தேர் போலவும், அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 

இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர், கோவர்த்தனகிரியைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர், ராம லட்சுமணர், அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என்று ராமாயணம், மகாபாரதம் தொடர்பான சிற்பங்களும் உள்ளன. இக்கோயில் தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. அந்நியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 120 கி.மீ., தொலைவில் ஹாசன். அங்கிருந்து 39 கி.மீ.,
விசேஷ நாட்கள்: மகாசிவராத்திரி, திருக்கார்த்திகையன்று தேர்
நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 098803 19949

No comments:

Post a Comment