Wednesday 28 February 2018

விரதங்களில் சிறப்பு பெற்றது மாசிமகம்

விரதங்களில் சிறப்பு பெற்றது மாசிமகம்

கடவுள் வழிபாட்டோடு இணைந்த விரதங்களில் சிறப்புப் பெற்றது மாசிமகம். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம்.

1-3-2018 மாசி மகம்

கடவுள் வழிபாட்டோடு இணைந்த விரதங்களில் சிறப்புப் பெற்றது மாசிமகம். எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்நாளில் தான் பார்வதி தேவி, தக்கன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும், மோட்சத்தையும் அருளக் கூடியவர். கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர்.

மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசி நாதன் சூரியன், கும்பராசியில் இருந்து சந்திரனை பார்க்கும் காலமே மாசிமகமாக திகழ்கிறது. இந்நாளில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இதனை கடலாடும் நாள் என்றும், தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது விசேஷம். அப்படி செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி ஏற்படும். இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள் காலை எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவ சிந்தனையுடன் சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை உணவு உட்கொள்ள வேண்டும். இரவு பால், பழம் அருந்தலாம். அன்று முழுவதும் வேறு வேலைகளில் ஈடு படாமல் தேவார திருவாசகங்களை பாடிய படி இருக்க வேண்டும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. அத்துடன் மதியம் உண்ணும் போது சிவனடியார் ஒருவருக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது.

புராண வரலாறு

மாசி மகத்தில் தீர்த்தமாடல் சிறப்பினை பெற்றதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.

ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு விட்டது. அவர் கட்டப்பட்டுக் கடலில் வீசப்பட்டு இருந்தார். வருணன் செயல்படாததால் உலகில் மழையின்றி வறட்சியும், பஞ்சமும் ஏற்பட்டது. அனைத்து உயிர்களும் துன்புற்றன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வருண பகவானை விடுவிக்கும் படி வேண்டி பிரார்த்தனை செய்தனர். அவர்கள் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசிமக திருநாளாகும்.

விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானிடம் வரம் கேட்டார். தான் பிரமஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடல் நீரில் இருந்தபடியே சிவனை வணங்கியதால் தோஷம் நீங்கியதை போன்று மாசிமகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு அவர் களின் பாவவினைகள், பிறவி பிணிகள், துன்பங்கள் யாவும் நீங்கி அவர்கள் உயர்வு பெற அருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்தமாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது.

மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங்களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் கொடுத்து பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.

தீர்த்தமாடும் வழிமுறை

கடல், புண்ணிய நதிகளில் புனித நீராடும் போது ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராட கூடாது. உடுத்திய ஆடையின் மீது இடுப்பில் மற்றொரு ஆடையை சுற்றிக் கொள்ள வேண்டும். தீர்த்தமாடுவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு தீர்த்தத்தை உள்ளங்கையில் எடுத்து தெளிக்க வேண்டும். ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில் தீர்த்தத்தில் மூழ்கக்கூடாது. பிரம்மஹத்தி தோஷத்தை போக்கி நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவதும் மாசி மகத்தில் தான்.

புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமானும், மகா விஷ்ணுவும் உரிய பலனை வழங்குவார்கள். ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப்பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் செய்த புண்ணியத்திற்கு ஈடே கிடையாது. நீராட முடியாதவர்கள் சிவ சிந்தனையுடன் மாசி மக புராணம் படிக்க வேண்டும்.

மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி விட்டு துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும், வெற்றியும் கிடைக்கும். மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நாளை மாசி மகத் தீர்த்தவாரி

கும்பகோணம் மகாமகக்குளத்தில் நாளை மாசி மகத் தீர்த்தவாரி

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். நாளை மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

கோவில்நகரம் என்று போற்றப்படும் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக திருவிழா நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று மாசி மக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு மாசிமக திருவிழா மகாமக திருவிழாவில் தலைமை கோவிலான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி- அம்பாள் வீதியுலா நடந்தது.

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நேற்று விநாயகர், சுவாமி - அம்பாள் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இன்று மாலை சண்டி கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது.

பிரசித்தி பெற்ற மாசிமக தீர்த்தவாரி நாளை (1-ந் தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் நாளை காலை 11 மணி முதல் 12 மணிக்குள் 7 சிவன் கோவில்கள், மற்றும் 5 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ சுவாமிகள் வீதியுலாவாக வந்து மகாமக குளக்கரையில் எழுந்தருளுகின்றனர்.

பின்னர் அஸ்திரதேவர் மூர்த்திகளுக்கு மகாமககுளத்தில் 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அனைத்து கோவில்களின் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமாக பக்தர்கள் வந்திருந்து மகாமக குளத்தில் புனித நீராடுவார்கள். பின்னர் சுவாமி தரிசனம் செய்த பிறகு பொற்றாமரை குளம், காவிரி ஆறு மற்றும் கோவில்களுக்கு சென்று வழிபடுகின்றனர்.

நாளை காலை 200-க்கும் மேற்பட்ட துறவியர்கள் பங்கேற்கும் ஆன்மீக கருத்தரங்கு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 3 மணிக்கு ஆன்மீக கலாச்சார ஊர்வலம், மாலை 6 மணிக்கு மகாமகக்குளக்கரையில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம், மற்றும் மகா ஆரத்தி ஆகியவை நடைபெறுகிறது. 

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு பரிகாரம்?

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு பரிகாரம்?

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்கள் சிறிய எளிய பரிகாரங்களை மனநிறைவுடன், செய்வதன் மூலம் ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம்.

பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம். 

எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். 

மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம். 

திருமண தடை நீக்கும் கோகுலகிருஷ்ணன்

திருமண தடை நீக்கும் கோகுலகிருஷ்ணன்

திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை.

திருமணத்தடை நீங்க இங்கு வந்து மூலவரை வேண்டிக்கொள்பவர்கள் தடைபட்ட திருமணம் நடந்ததும் மீண்டும் இங்கு வந்து மூலவருக்கும் இறைவிக்கும் வேஷ்டி, பாவாடை எடுத்து வைத்து கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்துகின்றனர்.

பிள்ளை பேறு வேண்டும் தம்பதியினர் தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவன் இறைவிக்கு வெண்ணை காப்பு சாத்தி, புத்தாடை அணிவித்து கற்கண்டு பிரசாதம் விநியோகம் செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.

குழந்தை பேறு வேண்டும் பக்தர்களையும், திருமணத்தடை விலக பிரார்த்தனை செய்யும் பக்தர்களையும் மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களின் மனக்குறைகளை களைவதில் இந்த கோகுல கிருஷ்ணனுக்கு நிகரில்லை என்பது உண்மையே.

கடவுளுக்கு உயிர் பலி கொடுப்பது சரியா? தவறா?

pali

கடவுளுக்கு உயிர் பலி கொடுப்பது சரியான செயல்தானா என்பது சிந்தித்து பார்க்க வேண்டிய விஷயமாகத் தான் உள்ளது. அண்டசராசரங்களையும் படைத்தவர் கடவுள். அவர் பேரன்பாளராகவும், கருணை கடலாகவும் விளங்குகின்றார். அப்படிப்பட்ட கடவுளுக்கு, அவர் படைத்த ஒரு உயிரையே காணிக்கையாக்கி படைக்கிறோம். 

குயவன் ஒருவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. அவன் அருகில் ஒரு ஆடு கட்டிப் போடப்பட்டிருந்தது. அவ்வப்போது அது மே..மே.. என்று கத்திக் கொண்டிருந்தது.

வயதான மகான் ஒருவர் மெல்ல நடந்து அங்கே வந்தார். குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் சட்டியில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன். அதை வாங்கிக் குடித்த மகான்.... இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா?" என்று கேட்டார்.

இல்லீங்க, சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன்...என்றான் குயவன்.

எதற்காக? என்று கேட்டார் மகான். 

பண்டிகை வரப்போகிறதே! இறைவனுக்குப் பலி கொடுக்கலாம் என்று தான்.... என இழுத்தான் குயவன்.

பலியா? மகான் வியப்புடன் கேட்டார். 

ஆமாம், சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும் என்றான். 

இதைக் கேட்ட மகான் எழுந்து தன் கையிலிருந்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது. குயவன் திகைத்து நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான். துறவி நிதானமாகத் கீழே குனிந்தார். சிதறிய மண் பானை சில்லுகளை ஒன்று விடாமல் அடுக்கி குயவனிடம் நீட்டினார்.

என்ன இது? ஏன் உடைத்தீர் என்றான் குயவன் கோபமாக.

உனக்குப் பிடிக்குமே, அப்பா? என்றார் மகான். 

என்ன உளறுகிறீர்கள்? என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள். இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா? கிண்டலா? வம்புக்கு இழுக்கிறீர்களா? அல்லது உங்களுக்குப் பித்தா? என்று ஆத்திரப்பட்டான்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன்தான் செய்தேன். மகான் சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார். 

நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?

நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று யார் சொன்னது?. இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்?. எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டுச் சகிப்பாள்?. எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்? ". குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை?. உன்னிடம் என்ன உண்டு?. அவர் எதைக் கேட்கிறார்?. எதை நீ அளிப்பாய்?.

அவன் படைத்த உலகில், அவன் படைத்த நீ, அவன் படைத்த பொருட்களை நீ அவனுக்கே படைப்பாயா?.

இறைவனுக்கு நான் அதைச் செய்தேன். இதைச் செய்வேன் என்பதும், பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே!.

எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும். தூய மனத்தால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும். சாதாரண மலர் எடுத்து அனுதினமும் அன்புடன் பூஜை செய்தாலே இறைவன் அகம் மகிழ்வான். நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி வாழ்வதையே இறைவன் விரும்புகிறார்.

ஒரு உயிரை இறைவன் பெயர் சொல்லி வெட்டி பலியிடுவது பாவச்செயலாகும். இது இறைவனுக்குப் பிடிக்குமா? என்று கேட்டார் அந்த மகான். அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் ஆட்டை அவிழ்த்துவிட்டுத் திகைத்து நின்றான் குயவன்.

ஆனால், பெரும்பாலான அம்மன் கோயில்களில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்த பலி கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது நிச்சயம் தேவையா? என்று மக்கள் சிந்திந்து பார்க்கவேண்டியது அவசியம். 

பாபா கொடுத்த 9 நாணயங்கள்

பாபா கொடுத்த 9 நாணயங்கள்

பாபா சீரடி சாய்பாபா லட்சுமிபாய் ஷிண்டேவுக்கு ஒரு ரூபாய் நாணயமாக 9 நாணயங்களை எடுத்துக் கொடுத்த கதையை அறிந்து கொள்ளலாம்.

பாபா துவாரகமாயி மசூதிக்கு வந்து என்றைய தினம் தங்க தொடங்கினாரோ, அன்று முதல் துவாரகமாயியை சுத்தம் செய்யும் பணியை லட்சுமிபாய் ஷிண்டே ஏற்றுக் கொண்டார். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் பாபாவை வணங்குவதை பிரதானமாக வைத்திருந்தார். 

லட்சுமிபாயிடம் பாபா, எப்போதாவது சாப்பிட உணவு வேண்டும் என்று கேட்பார். அதுவும் குறிப்பிட்டு இந்த வகை உணவுதான் வேண்டும் என்று கேட்பார்.

சில சமயம் லட்சுமிபாய் சமைத்து கொண்டு வந்து கொடுக்கும் உணவை நாய், பூனை போன்ற பிராணிகளுக்குப் போட்டு விடுவார். லட்சுமிபாயும் அதை கண்டு கொள்ள மாட்டார். 

பாபா சீரடிக்கு வந்த தொடக்க நாட்களில் அவருக்கு உணவு கொடுக்க பல பெண்கள் மறுத்துள்ளனர். ஆனால் அவரது மகிமை தெரிந்த பிறகு பலரும் போட்டி போட்டுக் கொண்டு பாபாவுக்கு உணவு கொடுத்தனர். 

பாபா தினமும் 5 வீடுகளுக்கு சென்று பிச்சை எடுத்து சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். ‘‘பசிக்கு உணவு அளிப்பவர்கள் கடவுளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்’’ என்று அர்த்தம் என பல தடவை பாபா கூறியுள்ளார். 

சாய்பாபாவிடம் லட்சுமிபாய் ஷிண்டே எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் சேவை செய்து வந்தார். இதனால் அவர் மீது பாபாவுக்கு பாசம் அதிகம் இருந்தது. 
தனது இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த பாபா ஒருநாள் லட்சுமிபாய் ஷிண்டேயை அழைத்தார். அவரிடம் ஒரு ரூபாய் நாணயமாக 9 நாணயங்களை பாபா எடுத்துக் கொடுத்தார். 

‘‘இதை வைத்துக் கொள்’’ என்று கூறி ஆசீர்வதித்தார். பாபா தன் பக்தர்களில் ஒருவருக்கு செய்த கடைசி உதவி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய சிறப்புடைய லட்சுமிபாய் ஷிண்டே வீடும் சீரடி தலம் அருகிலேயே உள்ளது. லட்சுமிபாய் ஷிண்டே மரணம் அடைந்ததும், அவர் உடலை அவரது வாரிசுகள் வீட்டிலேயே அடக்கம் செய்து சமாதி கட்டி வைத்துள்ளனர். 

மேலும் பாபா கொடுத்த 9 நாணயங்களையும் அவர்கள் அங்கு பத்திரப்படுத்தி வத்துள்ளனர். சீரடிக்கு செல்பவர்கள் மறக்காமல், தவறாமல் லட்சுமிபாய் ஷிண்டே வீட்டுக்கு சென்று விட்டு வரலாம். 

ஜோதிட ரீதியாக பல திருமணங்கள் செய்யும் ஜாதக அமைப்பு யாருக்கு?

Image result for marriage

திருமணம் என்பது ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பாகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் சமூக பாதுகாப்பு போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. திருமணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. 

திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன. திருமணம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே திருமணம் எனப்படும்.

பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர் என்பதை அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களின் வாயிலாக அறியலாம். திருமணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எண்வகை திருமணமுறைகள் நிகழ்ந்துள்ளன. பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதிமுறைகளை வகுத்தனர். 

திருமண வகைகள்

திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஆண், பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணங்களும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை ஒருபால் திருமணங்கள் எனப்படுகின்றன.

ஒரே தாரம்

ஒருதுணை திருமணம் என்பது ஒரு பெண்ணும், ஒரு ஆணும் மண உறவில் இணைந்து வாழ்வதைக் குறிக்கின்றது. சில சமுதாயங்களில், ஒருவர் தனது வாழ்க்கைக் காலம் முழுவதும், ஒருவரை மட்டுமே கணவனாகவோ அல்லது மனைவியாகவோ கொண்டு வாழும் ஒருதுணை திருமணமுறை உள்ளது. 

வேறு சில சமுதாயங்களில், எந்தவொரு காலகட்டத்திலும் ஒருவரை மட்டுமே துணைவராகக் கொண்டு வாழும் முறை உள்ளதாயினும், காலத்துக்குக் காலம் துணைவர்களை மாற்றிக்கொண்டு வாழ்வதையும் காணலாம். இது, கணவனோ, மனைவியோ இறந்து போவதனாலும், விவாகரத்தினாலும் ஏற்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் திருமணத் தொடர்புகளை ஒரு துணைவருடன் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளும், இத்தகைய திமணமுறை தொடர் ஒருதுணை திருமணம் என அழைக்கப்படுகின்றது.

பலதார திருமணம்

ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது பலதுணை மணம் எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அமைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கணவர்களுடன் திருமண உறவு கொண்டு வாழலாம். முதல் வகை மணம், பலமனைவி திருமணம் என்றும், இரண்டாவது வகை, பலகணவர் மணம் என்றும் அழைக்கப்படும்.

உலகில் மிகப் பெரும்பான்மையான சமுதாயங்களில் பலதுணை திருமணமே வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதிலும் மிகப் பெரும்பான்மையாகக் கைக்கொள்ளப்படுவது பலமனைவி திருமணமேயாகும்.

பலகணவர் மணம் அல்லது "பல்கொழுநம்" என்பது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் உறவு கொண்டு வாழ்தல் ஆகும். இம்முறை திபெத், நேபாளம், பூட்டான் போன்ற இமயமலையை ஒட்டிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்திலும் தென்னிந்தியாவில் தோடர் இனத்திலும் இப்பழக்கம் காணப்படுகிறது.

சில சமூகங்களில் ஒரு பெண் ஒருவனை மணந்தால் அவனுக்கு மட்டுமன்றி அவனுடன் பிறந்தோர் அனைவருக்கும் மனைவியாகிறாள். நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடி மக்களிடையே இம்முறையே நிலவுகிறது.

இப்படி பலதரப்பட்ட திருமணங்கள் வழக்கில் உள்ள நிலையில் ஒருவர் எத்தனை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதோ அல்லது பலதார திருமணங்கள் சரி அல்லது தவறு என்பதை விமர்சிப்பது நமது நோக்கம் அன்று. மாற்றாக ஒருவர் பலரை மணக்க ஜோதிட ரீதியான காரணங்களை அறிவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஜோதிட ரீதியாகப் பலதார திருமணங்கள்

பொதுவாக ஜாதகத்தில் திருமணத்தை குறிப்பிடுவது ஏழாமிடம் எனும் களத்திர ஸ்தானம் ஆகும். இந்தக் களத்திர ஸ்தானத்தின் அதிபதியைக் கொண்டு ஒருவரின் திருமண வாழ்க்கையைத் தீர்மானிக்கலாம் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். அதாவது ஒரு ஆண் அல்லது பெண் இணைந்து வாழும் தன்மையை கூறுவது ஏழாம் பாவமாகும். 

என்றாலும் ஒருவரின் குடும்ப வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் ஏழாம்பாவத்தினை மட்டும் கொண்டு அறியமுடியாது. எனவே, இரண்டாம் பாவத்தினை கொண்டும் குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் புதிய நபர் சேர்வது ஆகியவற்றைப் பற்றியும் கணவன் அல்லது மனைவியால் அடையும் சுகத்தை பதினோராம் பாவத்தைக் கொண்டும் அறியலாம் என்கிறது ஜோதிடம்.

ஒருவருடைய ஏழாம் பாவம் சுத்தமாக அதாவது கிரகங்கள் இன்றி இருப்பது நல்லது. ஏழாம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருப்பது திருமண வாழ்வில் பிரச்னையை ஏற்படுத்தும். இது திருமணத்தை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும். மற்ற விஷயங்களுக்கு மாறுபடும்.

பலதார திருமணங்கள் நடைபெறும் ஜாதக அமைப்பு

1.  ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் உச்சம் பெறுவது மற்றும் செவ்வாய், ராகு சேர்க்கை பெறுவது மற்றும் ஏழாம் வீட்டை உச்சம் பெற்ற கிரகங்கள் பார்ப்பது.

2. இரண்டாம் வீட்டிலோ அல்லது ஏழாம் வீட்டிலோ எந்த ஒரு கிரகங்களாவது உச்சம் பெற்று நின்று செவ்வாய், ராகு தொடர்பு பெறுவது.

3. ஒருவருடைய ஜாதகத்தில் குடும்ப ஸ்தானாதிபதியாகிய இரண்டாம் வீட்டின் அதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி எனும் ஏழாம் வீட்டின் அதிபதிகள் நீசம், வக்ரம் பெற்றும் நின்று அசுபர்கள் தொடர்பு பெறுவது.

4. ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையும் திருமணத்தின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது. பொதுவாகப் பல திருமணங்கள் செய்துகொண்டவர்களின் ஜாதகங்களைப் பார்க்கும்போது செவ்வாயின் வீடுகளான மேஷம், விருச்சிகம் மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் ஏழாம் பாவமாக அமைந்த ஜாதகங்களில் அதிக அளவு இந்த அமைப்பு காணப்படுகிறது.

5. ஏழாம் அதிபதிக்கு வீடு கொடுத்தவர் உச்சமாகி நின்றாலும் பலரை மணக்கும் அமைப்பு ஏற்படுகிறது.

6. ஏழாம் வீட்டில் ஒன்றிற்கு மேல் அசுப கிரகங்கள் நின்றாலும் பல தார அமைப்பை ஏற்படுத்துகிறது.

7. ஏழாம் வீட்டதிபதி உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் நிற்பது.

8. ஏழாம் வீட்டில் சந்திரன் நிற்பது, ஏழாம் வீட்டதிபதி பாப கர்த்தாரி யோகம் பெறுவது ஆகியவையும் பல தார திருமணத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும்.

9. சுக்கிரன் இரட்டை ராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் சுக்கிரனுக்கு வீடு கொடுத்த அதிபதி உச்சமானால் பலரை மணக்கும் அமைப்பு ஏற்படுகிறது.

இன்னும் எத்தனையோ விதிகள் இருந்தாலும் அனேகமாக இந்த விதிகளில் குறைந்தது இரண்டு விதிகள் இருந்தாலே அவர்களுக்கு பல தார யோகம் அமைந்துவிடுகிறது.

உதாரண ஜாதகங்கள்

1. இன்று பிறந்த நாள் காணும் அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகையான எலிசெபத் டெய்லர் எட்டு பேரை மணந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி அதன் இரண்டாமதிபதியான குரு உச்ச வீட்டில் நிற்பதும், ஏழாம் வீட்டதிபதியான சுக்கிரன் குருவின் வீட்டில் உச்சம் பெற்று ராகுவோடு சேர்க்கை பெற்று நின்று உச்ச குருவின் பார்வை பெற்றது டெய்லருக்கு பல திருமண அமைப்பை தந்தது. 

மேலும் குரு இருக்கும் வீட்டை வளர்ப்பார் என்பதும் ஜோதிட விதி. டெய்லரின் பாக்கிய ஸ்தானத்தில் நின்று களத்திர ஸ்தானாதிபதியை பார்த்தது அவருக்குப் பல திருமண பாக்கியங்களை ஏற்படுத்திவிட்டது.

2. காதல் மன்னன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு ஜெமினி கணேசன் மூன்று திருமணங்கள் செய்துக்கொண்டது அனைவரும் அறிவர்.

அவருடைய ஜாதகத்தில் துலா லக்னமாகி லக்னத்தில் சனி உச்சமாகி இரண்டு மற்றும் ஏழாம் பாவாதிபதியான செவ்வாயுடன் சேர்க்கை பெற்று ஏழாம் வீட்டை பார்ப்பது அவருக்குப் பல திருமணங்களைத் தந்தது எனலாம். குரு சுக்கிர சேர்க்கை, சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை ஆகியவை பல பெண்களை காதலிக்கும் அமைப்பை ஏற்படுத்துகிறது.

3. இந்தியத் திரைப்படத்துறையில், குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மாவில்’ அறிமுகமாகி, தனது ஈடுஇணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, ‘உலகநாயகன்’என்று போற்றப்படும் கமல்ஹாசன் அவர்கள், இருநூற்றுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனது வாழ்க்கை முழுவதையும் திரைத்துறைக்கே அர்ப்பணித்தத் திறமையான நடிகர்களுள் ஒருவரான கமலின் ஜாதகத்தில் துலா லக்னமாகி லக்னத்தில் பாதகாதிபதியாகிய சூரியன் நீசம் பெற்று சுகஸ்தானாதிபதி சனி உச்சம் பெற்று களத்திர ஸ்தானமான மேஷத்தை பார்ப்பதும், இரண்டு மற்றும் ஏழாமதிபதியாகிய செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்று களத்திர ஸ்தானத்தை பார்ப்பதும் பல திருமண தொடர்புகளை ஏற்படுத்தியது.

4.  மூன்று பேரை மணந்த பிரபல ஹிந்தி திரைப்பட நடிகரான சஞ்ஜை தத்தின் ஜாதகத்தில் விருச்சிக லக்னமாகி களத்திர ஸ்தானத்தில் உச்ச சந்திரன் நின்று லக்னத்தை பார்ப்பதும் உச்ச சந்திரன் ராகுவின் திரிகோண பார்வையில் நிற்பதும் குடும்ப ஸ்தானதிபதி குரு பன்னிரண்டில் மறைந்ததும் செவ்வாய் சுக்கிர சேர்க்கையும் பல திருமணங்களை ஏற்படுத்திவிட்டது.

ஆலங்குடி ஞான தட்சிணாமூர்த்தி



நவக்கிரக தலங்களில் குருவுக்குரியது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, ஞானம் தருபவராக வீற்றிருக்கிறார். 

சுந்தரர் இங்கு வந்த போது, சிவபெருமான் வெள்ளப்பெருக்கு ஏற்படச் செய்தார். ஆற்றின் மறுகரையில் நின்ற சுந்தரரிடம் ஓடக்காரர் ஒருவர், கோயிலுக்கு செல்வதாக கூறி அழைத்து வந்தார். ஆற்றின் நடுவழியில் ஓடம் கவிழும் நிலை ஏற்பட்டது. கலங்கிய சுந்தரர் சிவனை வேண்ட, அவருக்கு காட்சி தந்த சிவன், தானே ஓடக்காரராக வந்ததை உணர்த்தினார். ஞான குருவாக இருந்து உபதேசம் செய்தார். இதனால் இவருக்கு 'ஞான தட்சிணாமூர்த்தி' என்று பெயர் வந்தது. குரு பெயர்ச்சி விழா இங்கு சிறப்பாக நடக்கும்.

கடலுக்குள் கண்ணன்


குஜராத்தில் உள்ள துவாரகை, கடலிலுள்ள ஒரு தீவாகும். இந்த ஊரை கடலுக்குள் நிர்மாணித்தவர் கண்ணபிரான். கம்சனுக்கு பெண் கொடுத்த மாமனார் ஜராசந்தன். 

கண்ணன் தன் மருமகனை கொன்று விட்டான் என தெரிந்ததும் அவர் மீது பகை கொண்டான். கண்ணனை அழிப்பதற்காக தன் படைகளை கிருஷ்ணர் தங்கியிருந்த மதுராபுரிக்கு அனுப்பினான். ஆனால் அவர்களால் கண்ணனைப் பிடிக்க முடியவில்லை. விடாக்கண்டனான ஜராசந்தனோ ஒருமுறை இரு முறை அல்ல... 18 முறை கண்ணன் மீது போர் தொடுத்தான். 

அவர்களது படையெடுப்பால் கண்ணனுக்கு எந்த பாதிப்பும் வராவிட்டாலும், யாதவ மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மேற்குக்கடலில் இருந்த ஒரு தீவுக்கு கண்ணன் அவர்களை அழைத்துச் சென்றான். அந்த தீவிலேயே ஒரு அழகிய நகரத்தை உருவாக்கினான். அதுவே துவாரகை என பெயர் பெற்றது. இங்கு கிருஷ்ணர் கோயில் உள்ளது.

Tuesday 27 February 2018

ஏழு குருக்கள் ஒரே தலத்தில்!


குருமார்கள் ஏழு பேர் உள்ளனர். அவர்கள் தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞான குரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி. இவர்கள் அனைவரையும், திருச்சி அருகிலுள்ள உத்தமர்கோவிலில் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான இங்கு பிரம்மாவிற்கும் சன்னதி உள்ளது. குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபட்டவருக்கு குருதோஷம் நீங்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தம் தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.

வடக்கு பார்த்த தட்சிணாமூர்த்தி


தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள தனி கோயிலில், வடக்கு பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் நான்கு முனிவர் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு 18 முனிவர்கள் உள்ளனர். குருதோஷ பரிகாரமாக இவரது சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இனிப்புகள் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு பரிகாரம் ?

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்களுக்கு பரிகாரம்?

ஜாதகத்தில் குரு மோசமாக இருப்பவர்கள் சிறிய எளிய பரிகாரங்களை மனநிறைவுடன், செய்வதன் மூலம் ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம்.

பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் நபர்கள்/ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். எழுதப், படிக்க சொல்லித் தந்த ஆசிரியர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கலாம். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைச் செய்யலாம். 

எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பது, ஏழை மாணவர்களுக்கு உரிய ஜாதிச் சான்றிதழ் பெற்றுத் தருவது போன்ற உதவிகளும் குருவால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மீள உதவும். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். 

மேற்கூறியவற்றை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.

சர்வ சதா காலமும் மனதினில் சொல்ல வேண்டிய மகாமந்திரம்..!!

shiva

மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்ல 'ஓம் நமசிவாய' என்ற வார்த்தையை மனதினிலேயே சொல்லிப் பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.

இந்த நாமம் ஒலியின் ஒலி. ஆத்ம சுத்தம் செய்யும் ஆன்ம கீதம். உங்கள் உள் ஒளிந்து கிடக்கும் சக்திகளை வெளிக்கொணரும் பிராண நாமம். 'ஓம் நமசிவாய' இது வேதத்தின் இருதயம். நம்மைப் புனிதப்படுத்தும் சப்தம். நாமம், காம, க்ரோத, மோகங்களை அழிக்கும் நாமம். பிறப்பினை அழிக்கும் நாமம் என சொல்லிக் கொண்டே போகலாம். இது வார்த்தை ஜால பேச்சல்ல. வாழ்வின் உண்மை.

'ஓம் நமசிவாய' -  நான் சிவ பிரானை வணங்குகிறேன் என்ற இந்த வார்த்தைக்கு இத்தனை மகிமைகள் உள்ளது. மன வேதனைகளையும், கவலைகளையும் நீக்க வல்லது. 

இதனை மனதினிலேயே சர்வ காலமும் சொல்லி பழகுவது சிறந்த ஆக்கப்பூர்வ அலைகளை நம்முள் நிரந்தமாக்கி விடும்.

ந என்பது நிலம், ம என்பது நீர், சி என்பது அக்னி, வா என்பது காற்று, ய என்பது ஆகாயம் சிவபிரான் பஞ்ச பூதங்களின் அதிபதி. இந்த மந்திரம் அண்ட சராசரங்களின் கருப்பையான சிவபிரானின் அருளினைப் பெற்றுத்தரும். இந்தக் கருப்பையில் இருந்தே அனைத்தும் வெளி வருகின்றன. பின்னர் அதனுள்ளே செல்கின்றன. அப்பேர்பட்டது தான் அந்த "ஓம் நமசிவாய" என்ற சொல். 

• இந்த மந்திரம் மனிதன் மனதில் இருக்கும் அனைத்துப் பயங்களையும் நீக்கும்.

• மனிதனை நோய்களிலிருந்து காக்கின்றது.

• மனிதன் சிந்தனை, செயலினை தெளிவாக்குகின்றது.

• வாழ்க்கை வழியினை நற்பாதையில் திருப்பி விடுகின்றது.

• 108, 1008 என ஆரம்பித்து பின் இந்த நாமத்தினை தனது மூச்சாக மாற்றி வாழ்பவர்கள் இன்றும் கணக்கற்றோர் உள்ளனர். இவையனைத்தும் மிகப்பெரிய மகான்களால் வழி வழியாய் கூறப்பட்டவையாகும். 

• கவனத்திறனையும் செயல் திறனையும் கூட்டுகின்றதாம். 

• 'ஓம்' என்ற  வார்த்தையை அமைதி குறைந்தவர்கள், வலிப்பு நோயாளிகள் இவர்களுக்கு சிகிச்சை முறையாக பயிற்சி அளிக்கப்படுகின்றது.

• 'ஓம்'  ஜபிப்பதால் உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்து மத பிரிவினருக்கு யோகா பயிற்சி மூலம் 'ஓம் நமசிவாய' ஜபிக்க வைப்பது உயர் ரத்த அழுத்த சிகிச்சையாக அளிக்கப்படுகின்றது. பொதுவாக நல்ல ஒலி சப்தங்கள் மூளை செயல்திறனை சீராக்குகின்றது.

• மந்திரம் ஜபிக்கும் (எந்த மதம், மொழி, எந்த மந்திரமாயினும்) மக்கள் ஆரோக்கிய இருதயத்துடன் இருக்கின்றார்கள். 

மந்திரங்கள் பிரிவிலும், தனிப்பட்ட முறையிலும் 'ஓம் நமசிவாய' மிகுந்த முக்கியத்துவத்தினைப் பெறுகின்றது. அப்படிப்பட்ட திருநாமத்தை நொடிக்கு நொடி சிந்தையில் கொண்டு வணங்குவோம். 

"தென்னாடுடைய சிவனே போற்றி"
"எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"

தற்கொலைக்குத் தூண்டும் கிரகநிலைகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

suicide

நாம் தினசரி பேப்பரிலும், டிவி செய்திகளிலும் பார்க்கிறோம். பிரபல நடிகை தற்கொலை, பிரபல தொழில் அதிபர் தற்கொலை கடன் தொல்லை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை, காதல் தோல்வியில் தற்கொலை எனவும் பலவாறு பார்க்கிறோம், படிக்கிறோம். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி கவலை கொள்ளலாம். தனக்கு ஏற்பட்ட நெருக்கடியான பாதிப்பே பெரியதாக கருதி ஒரு முடிவு எடுத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

தற்கொலை வேதப்படி மகா பாவம். தற்கொலை மனுதர்மப்படி கொடூர செயல். தற்கொலை சட்டப்படி குற்றமாகும். தற்கொலை சமூக கோழை செயல். தற்கொலை நியாயமான முடிவும் அல்ல. இதனை உணர்ந்தவர்கள் தற்கொலை புரியும் மனப்போக்கு மாறும். இறைவன் கொடுத்த உயிரையும், உடலையும் அழித்துக்கொள்ள முடிவு எடுக்கும் அளவில் மனப்போக்கு மாறும் அளவில் தாளமுடியாத கஷ்டப்படும் மனமே முதலில் இறந்துவிடுகிறது. அதன்பின்புதான் உயிரை இறக்க செய்கிறார்கள். 

மனிதனுக்கு வரக்கூடிய துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும் தற்கொலையே முடிவு அல்ல என்பதை உணர வேண்டும். எல்லா பிரச்னைகளுக்கும் முடிவு தற்கொலை என்று முடிவு எடுக்காமல் இன்றைய விஞ்ஞான உலகத்தில் மனிதனாகப் பிறக்கவே புண்ணியம் செய்ய வேண்டும். உலக விஞ்ஞான சுகங்களையும், புதுப்புது அறிவியல் வளர்ச்சியைக் கண்டும், உலக சுகங்களை அனுபவிக்க மனித பிறவி எடுக்க வேண்டும். பரந்து விரிந்த அதிசய உலகங்களை கண்டு குதூகலம் காணும் மனம் எறும்புக்கும், சின்ன புழு போன்ற உயிர்களுக்கும் வாழ்க்கை இருக்கும் போது மனிதனுக்கு மட்டும் வாழ்க்கை இல்லை எனத் தீர்மானம் செய்யக்கூடாது. 

இவ்வாறு தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் ஜாதகர்களின் கிரக அமைப்பு நிலைகளைப் பற்றி பார்ப்போம். 

தற்கொலைக்குரிய கிரக நிலைகள்

தற்கொலைக்கு முடிவு எடுத்துச் செயல்படும் சக்தி லக்னத்திற்கு தான் உள்ளது. நம்முடைய லக்னம் தான் நமக்கு தலைமைச் செயலகமாக உள்ளது. இந்த லக்னம் ஒரு முடிவை சட்டென்று எடுத்துச் செயல்பட வைக்கிறது. தற்கொலைக்கு லக்னம் எவ்வாறு செயல்படுகிறது எனப் பார்ப்போம். 

லக்னம் 

• லக்னம் செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரக நட்சத்திரசாரம் பெற்று இருப்பதும், 

• லக்னத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது-மாந்தி ஆகிய கிரகங்கள் நின்று இருப்பதும் அல்லது இந்தக் கிரகங்கள் கூட்டு சேர்ந்து இருப்பதும், 

• லக்னத்திற்கு பாதகாதிபதியின் கிரக நட்சத்திர சாரத்தில் லக்னம் நின்று இருப்பதும், 

• லக்னம் ராசி தொடக்கத்தில் அல்லது முடியும் தருவாயில் அதாவது ராசி சந்தி பெற்றால் லக்னம் பலம் குறைந்து காணப்படும். 

• லக்னம் நின்ற ராசிகளில் கிரக யுத்தம் இருப்பினும் லக்னம் பாதிப்பு அடையக்கூடும். 

மேற்கண்ட அமைப்புகளில் லக்னம் இருப்பினும் சட்டென்று தற்கொலை புரியும் எண்ணத்திற்கு வந்து தன்னைத் தானே மாய்த்துக் கொள்வார்கள். இவை போக 

தற்கொலைக்குத் துணை புரியும் மற்ற கிரக நிலை பற்றியும், பாவங்களையும் பார்ப்போம். 

தற்கொலைக்குத் துணை செய்யும் கிரகநிலை-லக்னாதிபதி

• லக்னம் பற்றி பார்த்தோம். இனி லக்னாதிபதி பகை நீசம் பெறுவதும், லக்னாதிபதி பகை கிரங்கங்களுடன் இருப்பதும், லக்னாதிபதி பலம் இல்லாமல் போவதும், 

• லக்னாதிபதி செவ்வாய், சனி, ராகு, கேதுவுடன் சேர்ந்து இருப்பதும் அல்லது லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருப்பதும், 

• லக்னாதிபதி 6,8,12-ல் மறைந்து இருப்பதும், 

மேற்கண்ட நிலையில் இருக்கும் லக்னாதிபதியும் தற்கொலைக்கு துணை போகிறார். 

மூன்றாம் பாவம்

இந்த மூன்றாம் பாவம் தான் மனம் என்று சொல்கிறோம். மனம், மனம் செயல்படும் விதம், மனவலிமை, மனதைரியம், மன அலைகள், மனப்போக்கு, மனம் எடுக்கும் முடிவு, மன நிலைப்பாடுகள், வித்தியாசமான மனம் இவை எல்லாம் மனம் பற்றி கூறுகிறது. இதில் ராகு, கேது, சனி, மாந்தி இருப்பதும், பகை கிரகங்கள் இருப்பதும், கூட்டு கிரகங்கள் இருப்பதும், மனம் பலவீனம் அடைந்து இருக்கும். இதன் பாவாதிபதியும் பலவீனமாக இருப்பதும், மனம் தைரியம் குறைவதால் தற்கொலைக்கு அடித்தளமாக அமைகிறது. தற்கொலைக்கு மூல முதற்காரணம் மனம்தான் முதலில் இறந்துவிடுகிறது. அதன் பின் உடல் இறக்கிறது. எனவே, மூன்றாம் பாவம் அதன் அதிபதி கெட்டுப்போய் இருந்தால், தற்கொலைக்கு மனம் தூண்டிவிடுகிறது. இனி, திசா புத்தி பற்றி பார்ப்போம். 

திசா புத்தி 

தற்கொலைக்கு முடிவு எடுக்கும் சூழ்நிலையும் அற்ப ஆயுள் முடித்துக்கொண்டு உலக வாழ்க்கையில் விடுவித்துக் கொள்ள மனம், எண்ணம் ஒப்புதல் அளிக்கும் அளவிற்கு ஜாதகத்தில் கெட்ட கிரக திசா புக்திகள் நடப்பில் இருக்க வேண்டும். அவ்வாறு கெட்ட கிரக திசா புக்திகளை எவ்வாறு அறிய முடியும் என்பதைப் பார்ப்போம். 

• திசாநாதன் லக்னத்திற்கு பாதகமானவராக இருக்க வேண்டும். பாதக திசா புக்தி காலத்திலும், 

• லக்னத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது நின்று இவர்களுடன் மாந்தி சேர்ந்த திசாபுக்தி காலத்தில் தற்கொலை செய்யும் எண்ணம் வரும். 

• மாந்தியோடு சேர்ந்த எந்தக் கிரக திசா புக்தியும் நடப்பில் இருந்தாலும் தற்கொலை செய்ய தோன்றும். 

• திசாநாதன் 6, 8 12-ல் நின்று திசா நடத்தக்கூடாது. 

• திசாநாதன் பகை, நீசம் பெற்றும் கிரக யுத்தம் பெற்றும் திசா நடப்பதும்.

• திசாநாதன் பகை கிரகங்களுடன் அல்லது 6, 8, 12-ல் பாவாதிபதிகளுடன் சேர்க்கை இருக்கக் கூடாது. 

மேற்கண்ட கிரக நிலைகள் ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகர் தனிமையில் இருப்பதை தவிர்த்து பலரது துணையோடு கலகலப்பாக இருக்க வேண்டும். இது போல் கிரக அமைப்புகள் கொண்ட திசா புக்திகள் நடப்பில் இருந்தால் ஏதோ ஒருவித மனக்காரணத்திற்காக தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் தற்கொலை எண்ணம் வந்துவிடும். 

இழந்த சக்தியை மீட்க


கைலாயத்திற்கு வந்த பிருங்கி முனிவர், சிவனை மட்டும் வலம் வந்தார். பார்வதி கோபத்துடன் ஈசனை நெருக்கி அமர்ந்தாள். சிவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிருங்கி, வண்டாய் மாறி இருவர் இடையேயும் நுழைந்து சிவனை சுற்றினார். இதனால் முனிவரின் சக்தியை தேவி எடுத்துவிட்டாள். அவர் தடுமாறி விழுந்தார். உமையவளிடம் மன்னிப்பு கேட்டார். தாயுள்ளம் கொண்ட அவள் “முனிவரே! திருவேற்காட்டில் கருமாரியாக இருக்கிறேன். அங்கு வந்து இழந்த சக்தியைப் பெறுக!” என கூற, பிருங்கியும் அவ்வாறே செய்தார். நோயால் சக்தி இழந்தவர்கள் கருமாரியம்மனை வழிபட்டால் நலம் பெறுவர்.

நவகிரக தோஷங்களை நீக்கும் விரதம்

நவகிரக தோஷங்களை நீக்கும் விரதம்

நவராத்திரி பூஜை என்பது அன்னை பராசக்திக்காக ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய விரத பூஜையாகும். பொதுவாக நவராத்திரி பூஜை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு.

ஆடி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வாராஹி நவாராத்திரி என அழைக்கப்படும். புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சாரதா நவராத்திரி என அழைக்கப்படும். 

தை மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரி என அழைக்கப்படும். பங்குனி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி வசந்த நவாராத்திரி என அழைக்கப்படும்.

நான்கு வகையான நவராத்திரிகளில் பெரும்பாலும் இந்தியாவில் சாரதா நவராத்திரி எல்லா மாநிலங்களிலும் வசந்த நவராத்திரி மேற்கு வங்காளம் குஜராத் போன்ற சில மாநிலங்களிலும் வராஹி நவராத்திரியும் சியாமளா  நவராத்திரியும் சில ஊர்களிலும் கோயில்களிலும் கொண்டாடப்படுகிரது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒருவயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறார். கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் உண்டாகும்.

சாய்பாபா பயன்படுத்திய பொருட்கள்

சாய்பாபா பயன்படுத்திய பொருட்கள்

பாபா பயன்படுத்திய எல்லாப் பொருட்களுமே முக்கியத்துவம் பெற்றுவிட்டன. அவைகளை ஆண்டவனின் காணிக்கைகளாக மக்கள் கருதுகின்றனர். தமது வயலில் விளைந்த கோதுமையில் ஒரு மூட்டையை பாலாஜி படேல் நிவாஸ்கர் என்ற பக்தர் பாபாவிற்கு தருவார். அதன் நினைவாக ஆண்டுதோறும் புதிதாக ஒரு மூட்டை கோதுமை வாங்குகிறார்கள்.

அதனைக்கண்ணாடி பீரோவில் வைக்கிறார்கள். கோலம்பா என்று ஒரு மண் பானை பாபா பிச்சை எடுத்து வந்த உணவை அதில் தான் போட்டு வைத்தார். அட்சயபாத்திரமாக விளங்கிய அந்த மண்பானையும் ஷிர்டியில் இப்போதும் இருக்கிறது.

சாயிபாபா மூன்று வழக்கங்களைக் கடைபிடித்தார். திருகையில் அரைப்பது, சங்கு ஊதுவது, மணியடிப்பது. இதுபோல் நெருப்பில் ஆகுதி செய்தல், பஜனை, தண்ணீரால் சாயிபாபாவின் பாதத்தைக் கழுவி வழிபாடு செய்தல் போன்றவையும் அனுமதிக்கப்பட்டன.

அவர் விறகை எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருக்கும் “துனி எனும் புனித நெருப்பில் போட்டு வந்தார். இந்நெருப்பில் இருந்து வரும் சாம்பல் “உதி என்று அழைக்கப்பட்டது. அவரைக் காணவரும் பக்தர்கள் ஷிர்டியை விட்டுச் செல்லும் போது உதி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

முருகனை வணங்கினால் திருமண தோஷம் தீரும்

முருகனை வணங்கினால் திருமண தோஷம் தீரும்

திருமண தோஷம், செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்வது நன்மை தரும்.

ஜாதகத்தில் அங்காரக தோஷம் உள்ளவர்க்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கின்றன. 

செவ்வாய்கிழமை விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்த பின் துவரை வழங்கவேண்டும். அதன்பிறகு சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றைத் தரவேண்டும். செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்மை தரும். 

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும். இத்தோஷம் உள்ள பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை நாட்களில் காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கிவிடும்.

Monday 26 February 2018

இந்த நட்சத்திரக்காரர்கள் எண்ணியதை சாதிக்கக்கூடியவர்கள்!

kumbam

ராசிகளில் பதினொராவது இடத்தை வகிக்கும் கும்ப ராசியில் வரும் ஒரு நட்சத்திரமே சதயமாகும். இந்த நட்சத்திரம் உள்ளவர்களின் பொதுவான குணங்களும், நான்கு பாதங்களில் பிறந்தவர்களின் குணநலன்களும் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

உண்மை, சத்தியம் தவறாதவர்கள். உண்மையை நிலைநாட்ட என்ன விலை கொடுக்கவும் தயங்காதவர்கள். விடாப்பிடி லட்சியத்தால் மற்றவர்களோடு கருத்து மோதல்களையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.

இவர்கள் கோபக்காரர்கள். ஆனால் அடுத்த கணம் தணிந்து விடுவார்கள். தற்பெருமை புகழ்ச்சி என்பது பிடிக்காது. இவர்களிடம் ஆயிரம் திறமைகள் இருந்தாலும், அதை வெளிபடுத்தத் தெரியாது.

பெரும்பாலும் முற்பகுதி வாழ்க்கை சோதனை களமாக அமைகிறது. வாலிபம் கடந்த பிறகுதான் வாழ்க்கை சிறக்கிறது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை. திருமணம் ஆகாமலேயே இருப்பவர்களும் உண்டு என்றாலும், தனக்கு அமையும் வாழ்க்கைத்துணை நற்குணங்கள் அமையப் பெற்றிருப்பார்கள்.

சதயம் முதல் பாதம் :

இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நன்னடத்தை உடையவர்களான இவர்கள் திடமான மனதுடன் இருப்பார்கள். விரும்பியதைச் செய்யக்கூடியவர்கள். கால்நடைகளால் இவர்களுக்கு லாபம் அடையவர். 

சதயம் இரண்டாம் பாதம் :

இவர்களிடம் சதய நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருந்தாலும், இந்தக் குணங்களும் இவர்களிடம் இருக்கும். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய இவர்கள் பழிவாங்கும் குணம் கொண்டவர்கள். இறை நம்பிக்கை உடையவர்கள்.

சதயம் மூன்றாம் பாதம் :

காரிய சித்தி உள்ளவர்கள். பசி தாங்கமாட்டார். நற்குணங்களை உடைய இவர்கள் எதையும் விரும்பாதவர்கள். சேவை மனப்பான்மையும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இருப்பர். 

சதயம் நான்காம் பாதம் :

எண்ணியதை சாதிக்கக்கூடியவர்கள். நல்ல குணங்களை உடைய இவர்கள் சௌபாக்கியம் நிறைந்தவர்கள். கீர்த்தி உடையவர்கள். பொறுமையாகச் செயல்படக்கூடியவர்கள்.

ருத்ராக்ஷம் அணிபவர்களா நீங்கள்? இதைக் கடைப்பிடிக்கின்றீர்களா?

rudraksha

ருத்ராக்ஷம் அணிபவர்கள் கட்டாயம் இந்த விஷயத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மகாபெரியவா அருமையான உபதேசம் ஒன்றை அளித்துள்ளார். 

பெரியவாளுடைய ஒரு பக்தர், ஒரு முறை நேபாளம் சென்றார். அங்கு ஸ்ரீ பசுபதிநாதர் கோவிலுக்குச் சென்று அருமையான தரிசனம் பெற்றார்.

அந்த உன்னதமான சிவ க்ஷேத்திரத்தில், உயர்ந்த ருத்ராக்ஷ மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டார்.

பிறகு காஞ்சிபுரம் வந்து பெரியவாளுக்கு பசுபதிநாத் பிரசாதத்தையும், தான் வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும் சமர்ப்பித்தார்.

பசுபதீஸ்வரரை நன்னா தரிசனம் பண்ணினியா?…

பெரியவா அனுக்கிரத்தில்… நன்னா தரிசனம் பண்ணினேன்..

கையில் அந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொண்டார்...

சரி இதை என்ன பண்ணப்போற?

பெரியவா அனுக்கிரகம் பண்ணிக் கொடுத்தேள்..ன்னா, கழுத்தில் போட்டுக்கலாம்னு.....இழுத்தார்

பெரியவா மௌனமாக சில நிமிஷங்கள் இருந்தார்…

அப்போ…நீ…இனிமே பொய் சொல்லாம இருப்பியா? என்று ஒரே தடாலடியாக கேட்டார்.

பக்தருக்கு துக்கிவாரிப் போட்டது!

ஆஹா! பெரியவா……இனிமே பொய்யே சொல்லமாட்டேன்!

இப்படியொரு துணிச்சலான பொய்யை, ஸத்ய ஸந்நிதியில் சொல்ல நாக்கு எழுமா?

இல்ல.. பெரியவா…! சத்தியமா… என்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியாது..!.

ஏனோ …..?

ஏன்னா, நா… பொய் சொல்லாமல் சில ரெக்கார்டுகளை தயாரிக்க முடியாது. இப்படி எழுது…ன்னு எனக்கு மேல இருக்கின்ற ஆபிசர் உத்தரவு போட்டா… என்னால் மறுக்க முடியாது பெரியவா…

பரிதாபமாக தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்.

பெரியவா அந்த ருத்ராக்ஷ மாலையை இன்னும் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.

இந்தா பிடி! பொய் சொல்லாதவா யாருக்காவுது…இந்த மாலையைக் குடு!

பக்தருக்கோ பரம சந்தோஷம்! ஏனென்றால், இப்போது இதை யாருக்கு போடுவது என்பது, ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒன்றுதான்!

நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடமிருந்து அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கிக் கொண்டார்.

ஆஹா! என் மனைவி சொன்னா மாதிரியே ஆச்சு! இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம வீட்டில் இருக்கும் பெரியவாளின் படத்துக்குப் போட்டுவிடுங்கள்...என்று சொன்னா! அதுப்படியேதான் இப்போ பெரியவாளும் உத்தரவு போட்டுள்ளார்…!

பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில் அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த பெரியவா படத்துக்கு அணிவித்தார்.

பொய்யே சொல்லாத ஒருவர்… நம் வீட்டுப் பூஜை அறையில் இருக்கின்றார் என்று எனக்கு இன்றைக்குத் தான் புரிந்தது...என்று மனைவியிடம் கூறி சந்தோஷப்பட்டடார். 

கணவனும் மனைவியும், ருத்ராக்ஷ மாலையை அணிவித்து பெரியவாளை நமஸ்கரித்தனர்.

கொஞ்ச நாள் கழித்து, அந்த பக்தரின் சொந்தக்காரர் ஒருவர், பெரியவாளைத் தரிசனம் செய்ய வந்தார். 

உன்னுடைய சொந்தக்காரன், அதான்! அந்த வங்கியில் ஆஃபீஸரா இருக்கானே! அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்சம் இருக்கு! தெரியுமோ? ஏன்னா…… தன்னால பொய் சொல்லாம இருக்க முடியாதுன்னு பொய் சொல்லாம எங்கிட்டயே ஒத்துண்டான்…

இந்த அருமையான அனுக்கிரக லீலையில், பெரியவா நாம் அனைவருக்கும் ஒரு உபதேசத்தை அளித்திருக்கிறார். ருத்ராக்ஷம் என்பது, ஸ்படிகம், துளசி போல், மிகவும் பவித்ரமானது. ருத்ராக்ஷத்தை அணிபவர்களுக்கு முக்கியமாக இருக்கவேண்டியது… சத்யம்! இதுதான் பெரியவா திருவாக்கு!

வராகர் தங்கிய இடங்கள்


இரண்யாட்சன் என்னும் அசுரனிடம், வராக (பன்றி) வடிவெடுத்து போரிட்ட திருமால், கடும் கோபத்துடன் அலைந்தார். தேவர்களால் பெருமாளை நெருங்க முடியவில்லை. பூமாதேவியிடம் சென்று பெருமாளின் கோபத்தை தணிக்கும்படி வேண்டினர். பூமாதேவியும் அவ்வாறே செய்தாள். திருமால் மகிழ்ந்து பூலோகம் வந்து திருப்பதி, திருவிடந்தை (காஞ்சிபுரம் அருகில்), மாமல்லபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் தங்கினார்.

ஆளைப் பார்த்து எடை போடாதீர்


விவேகானந்தர் காவி உடை, தலைப்பாகை அணிந்திருப்பார். ஒருமுறை ரயிலில் சென்ற போது அவருடன் இரண்டு ஆங்கிலேயர் பயணம் செய்தனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாதென நினைத்து, அவரது துறவுக்கோலத்தை கேலி செய்தனர்.

ஒரு ஸ்டேஷன் வந்தது. அங்கு நின்ற ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்த விவேகானந்தர் “குடிக்க தண்ணீர் எங்கே கிடைக்கும்?” என ஆங்கிலத்தில் கேட்டார்.

அந்த ஆங்கிலேயர்கள் அதிர்ந்து விட்டனர். “உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும், நாங்கள் கேலி செய்த போது, நீங்கள் ஏன் பேசாமல் இருந்தீர்கள்?” என்றனர்.

“நான் முட்டாள்களிடம் பேசுவதில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை” என்றார் சுவாமி. ஆங்கிலேயர்கள் தலை குனிந்தனர். ஆளைப் பார்த்து யாருடைய திறமையையும் குறைத்து எடை போடக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

நாழிக்கிணற்றின் ஆழம்


திருச்செந்தூர் கடலை 'வதனாரம்ப தீர்த்தம்' என்பர். இங்கு நாழிக்கிணறு தீர்த்தமும் உள்ளது. செந்திலாண்டவனை தரிசிக்கும் முன்பு நாழிக்கிணற்றில் நீராடி அதன் பிறகு கடலில் நீராட வேண்டும். முருகப் பெருமான் தன் வேலால் உருவாக்கிய நாழிக்கிணறு ஒரு சதுர அடி பரப்பும், ஏழு அடி ஆழமும் கொண்டது. குறையாத நீர் சுரக்கும் இயல்பு உடையது. பெரிய கிணற்றின் உள்ளே 34 படிகள் இறங்கிச் சென்றால் நாழிக்கிணற்றை அடையலாம்.

அனுமனைப் போல் வாழ்வோம்


விவேகானந்தர் அனுமனைப் பின்பற்றி மக்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார். “மகாவீர அனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவர் ராமபிரானின் உத்தரவுப்படி கடலையும் தாண்டிச் சென்றார். அவருக்கு வாழ்வையும், சாவையும் பற்றிய கவலை சிறிதும் இல்லை. அவர் தன் புலன்களை முற்றிலும் அடக்கி ஆட்சி செய்தார். அற்புதமான புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் அவர் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார்.

இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் உலகையே பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வதிலும் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை. ராமசேவையைத் தவிர மற்ற அனைத்தையும் அறவே புறக்கணித்தார்.

பிரம்மலோக பதவியையோ, சிவலோகப் பதவியையோ கூட அவர் பெரிதாக கருதாமல் வேண்டாம் என்று ஒதுக்கினார். அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய்வது மட்டுமே.

முழுமனதோடுஅர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு செய்யும் சேவையே அனுமனிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.”

தூசியினாலும் நன்மையிருக்கு!


தரையில் குழந்தைகள் உருண்டு விளையாண்டால், 'ஐயோ! உடலெல்லாம் தூசாகும், எழுந்திரு,” என்று கண்டிப்போம். ஆனால் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் முன் கொடி மரம் முன் விழுந்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது நமது உடலில் எவ்வளவு தூசி படிகின்றதோ, அவ்வளவு வருட காலம் நாம் கைலாயத்தில் சிவ பார்வதியோடு வாழும் பாக்கியம் என்கிறது வேதம்.

மாலையில் உண்ணாதீர்


பகல் முடிந்து இரவு தொடங்கும் நேரமான மாலை 6:30 மணியிலிருந்து இரவு 7:30 மணி வரையில் உள்ள காலம் மிகவும் தோஷமுள்ள காலமாகும். இந்நேரத்தில் தீய சக்திகள், அசுரர்கள், ராட்சஷர்கள் நடமாடுவர் என்பது ஐதீகம். எனவே, இந்நேரத்தில் சாப்பிடவோ, தூங்கவோ கூடாது. இந்நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது இதனால் தான். கடவுளின் அருகே கெட்ட சக்திகள் நெருங்காது. ஆனால், இந்நேரத்தில் சுவாமிக்கு பூஜை செய்து, படைக்கும் நைவேத்ய உணவை சாப்பிடலாம்.

அங்க பிரதட்சண தத்துவம்


முப்பத்து முக்கோடி தேவர்கள், யோகிகள், மகான்கள் மற்றும் சித்தர்கள் கோவில்களுக்கு மறைமுகமாக வந்து சுவாமியை வணங்கிச் செல்வர் என்பது ஐதீகம். அவர்களின் திருப்பாதம் பட்ட இடத்தில், உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான உடல் படும்படியாக உருண்டு வந்தால் நமது பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.எனவே தான், நேர்த்திக் கடனாக அங்க பிரதட்சிணம் செய்யும் வழக்கம் உள்ளது.

Sunday 25 February 2018

கல்வி தெய்வம் காயத்ரி!


கல்வி நிறுவனங்கள் திறந்துள்ள நிலையில், மாணவர்கள் காயத்ரியை வணங்கி, படிப்பைத் துவக்கலாம். வேதத்தின் பொருளான இவளை சில கோவில்களில் சிலை வடிவில் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுந்தரேஸ்வரர் சன்னதி நுழைவுவாயில் அருகில் இவள் ஒரு தூணில் காட்சி தருகிறாள். வெண்தாமரை மலர் மீது அமர்ந்த கோலத்தில் காயத்ரி காட்சி தரும் கோவில் சிதம்பரத்தில் உள்ளது.

ஐந்து முகங்களுடன், பத்து கரங்களில் சங்கு, சக்கரம், கதை, கோடரி, அங்குசம், கபாலம், தாமரை, கசை, ஏடு ஆகியவற்றை வைத்திருக்கிறாள். பக்தர்கள் இவளை காலையில் காயத்ரியாகவும், மதியம் சாவித்திரியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் கருதி, காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குகிறார்கள். மாணவர்கள் தாமரை மலர் அணிவித்து வழிபடுகிறார்கள்.

தர்ப்பணம் கொடுக்கும் அண்ணாமலையார்

தர்ப்பணம் கொடுக்கும் அண்ணாமலையார்

அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று பள்ளி கொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார்.

உலகத்துக்கே படியளப்பவர் சிவபெருமான். அவர் காலடி நிழலில் இளைப்பாறத்தான் ஆன்மீகத்தில் பக்குவப்பட்டவர்கள் ஆணவம், அகந்தையை விட்டு, விட்டு அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் அம்மையும், அப்பனுமாகத் திகழும் ஈசன், மன்னர் ஒருவரை தன் தந்தையாக ஏற்றுக் கொண்டார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த அதிசயம் திருவண்ணாமலையில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 

பரம்பொருள் ஈசனால் தந்தையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈடு, இணையற்ற அந்த சிறப்பைப் பெற்ற பெருமைக்குரியவர் வீர வல்லாள மகாராஜா. யாகஅக்னி வம்சத்தில் உதித்த அவர் வட தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் ஒரு பகுதியை உள்ளடக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்தார். 

ஹோய்சாளப் பேரரசின் கடைசி மன்னரான அவர் தற்போது கர்நாடகாவில் உள்ள ஹளபேடு நகரை முதல் தலைநகரமாகவும், திருவண்ணாமலையை இரண்டாம் தலை நகரமாகவும் கொண்டு 1291-ம் ஆண்டு தொடங்கி 1343-ம் ஆண்டு வரை 52 ஆண்டுகள் ஆட்சி செய்தார். வீர வல்லாள மகாராஜா மிகச் சிறந்த சிவபக்தன். தினமும் ஈசனுக்கு பூஜை செய்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அண்ணாமலையார் மீது அவருக்கு அதிக பக்தி இருந்தது. இதனால் திருவண்ணாமலை ஆலயத்தில் அவர் செய்த திருப்பணிகள் ஏராளம். 

5-ம் பிரகாரத்துக்கும் 4-ம் பிரகாரத்துக்கும் இடையே உள்ள கோபுரத்தைக் கட்டியது அவர்தான். 1328- ம் ஆண்டு கட்ட தொடங்கப்பட்ட அந்த கோபுரம் 1331-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அவர் நினைவாக அந்த கோபுரம் வல்லாள மகாராஜா கோபுரம் என்றழைக்கப்படுகிறது. அந்த கோபுரத்தைக் கட்டி முடித்த போது அவருக்குள் கர்வம் தலை தூக்கியது. ‘‘எவ்வளவு அழகான பெரிய கோபுரத்தைக் கட்டி இருக்கிறேன்’’ என்று தற்பெருமைக் கொண்டார். 

இதைப் பார்த்த ஈசன், அவருக்கு அறிவுச் சூடுப் போட முடிவு செய்தார். அந்த கோபுர வாசல் வழியாக திருவீதி உலாவுக்கு வர மறுத்து விட்டார். திருவிழாவின் 10-வது நாள்தான் வல்லாள மகாராஜாவுக்கு தன் தவறு புரிந்தது. உடனே அண்ணாமலையார் முன்பு விழுந்து, வணங்கி மன்னிப்பு கேட்டார். அதன் பிறகே அண்ணாமலையார் 10-வது திருவிழா அன்று மட்டும் அந்த கோபுர வாசல் வழியாக வந்தார். இன்றும் அந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 

அண்ணாமலையார் அருளால், வல்லாள மகாராஜாவின் ஆட்சி மிகச் சிறப்பான ஆட்சியாக நடந்தது. இயற்கை வளங்களை நேர்த்தியாக பயன்படுத்தியதால் அவரது ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தனர். எல்லா செல்வங்களும் அவர் காலடியில் கொட்டி கிடந்தன. என்ன இருந்து, என்ன பயன்? கொஞ்சி மகிழவும், நாட்டை வழி நடத்தவும் அவருக்கு வாரிசு இல்லை. குழந்தை இல்லாத ஏக்கம் அவரை மிகவும் தவிக்க வைத்தது. 

குழந்தைப் பேறுக்காகவே அவர் 2-வதாக சல்லமா தேவி என்ற பெண்ணை மணந்தார். அவளாலும் வல்லாள மகாராஜாவின் வாட்டத்தைப் போக்க இயலவில்லை. அண்ணாமலையாரிடம் கண்ணீர் விட்டு அடிக்கடி தன் தவிப்பை வெளிப்படுத்துவார். வல்லாள மகாராஜாவின் இந்த துயரத்தைப் போக்க அண்ணாமலையார் அருமையான ஒரு திருவிளையாடலை நடத்தினார். துறவி கோலம் பூண்டு அரசவைக்கு வந்து வல்லாள மகாராஜாவை சந்தித்தார். 

தன்னை நாடி வரும் சிவனடியார்களை வரவேற்று நன்கு உபசரித்து அனுப்புவது வல்லாள மகாராஜாவின் வழக்கமாகும். சிவனடியார்கள் எது கேட்டாலும், மறுக்காமல் செய்து கொடுப்பார். துறவிக் கோலத்தில் வந்திருந்த ஈசனைக் கண்டதும் அவரது மனம் பரவசம் அடைந்தது. வரவேற்று உபசரித்தார். பிறகு, ‘‘சுவாமி தங்களுக்கு அடியேன் என்ன உதவி செய்யட்டும்?’’ என்று கேட்டார். 

இந்த கேள்வியை எதிர் பார்த்துதானே ஈசன் வந்திருந்தார். துறவிக் கோலத்தில் இருந்த அவர், ‘‘என்னுடன் இன்று ஒரு நாள் மட்டும் தாம்பத்திய உறவுக்கு ஒரு பெண் வேண்டும்’’ என்றார். இதைக் கேட்டதும் வல்லாள மகாராஜாவுக்கும், அரசவையில் இருந்தவர்களுக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. என்றாலும் கேட்பவர் சிவனடியார் அல்லவா? அவரது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய வல்லாள மகாராஜா உத்தரவிட்டார். 

படை வீரர்கள் திருவண்ணாமலையில் தாசிப் பெண்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று அழைத்தனர். ஆனால் எந்த ஒரு தாசியும் கிடைக்கவில்லை. 
எல்லா தாசிப் பெண்களும் ஒவ்வொரு ஆடவருடன் இருந்தனர். இதுவும் சிவபெருமானின் திட்டப்படி நடந்ததாகும். தாசிப்பெண் கிடைக்காததால் படை வீரர்கள் வெறும் கையுடன் அரண்மனைக்கு திரும்பினார்கள். 

இதையடுத்து தாசிப் பெண்ணை அழைத்து வர வல்லாள மகாராஜாவே புறப்பட்டு சென்றார். பொன், பொருள் உள்பட என்ன கேட்டாலும் அள்ளி, அள்ளித்தர தயாராக இருப்பதாக சொல்லியும் ஒரு தாசி கூட கிடைக்கவில்லை. மன்னர் கவலையோடு அரண்மனை திரும்பினார். அவரது மனவாட்டத்தை கண்ட இளையராணி சல்லமா தேவி, அந்த சிவனடியாரின் விருப்பத்தை தான் பூர்த்தி செய்து உதவுவதாக கூறினாள். 

சிவனடியார் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்தாள். துறவியை வணங்கி, ‘‘சுவாமி என் கணவர் உமக்கு அளித்த வாக்குறுதி ஒரு போதும் தவறாது. அருணாசலமே நீயே துணை’’ என்றபடி சிவனடியாரை தொட்டாள். அடுத்த வினாடி துறவி வேடத்தில் இருந்த அண்ணாமலையார் ஒரு அழகான குழந்தையாக மாறினார். இதைக் கண்டு சல்லமா தேவி பிரமித்தாள். அந்த குழந்தையை வாரி எடுத்து உச்சி முகர்ந்தாள். 

தகவல் அறிந்து வல்லாள மகாராஜா விரைந்து வந்தார். இது அண்ணாமலையாரின் திருவிளையாடல்தான் என்பதை புரிந்து கொண்டு கைக்கூப்பி வணங்கினார். அடுத்த வினாடி அந்த குழந்தை ஓளியாக மாறி மறைந்தது. அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘‘குழந்தைப் பேறு வேண்டி மனத்துயரம் அடைந்துள்ள பக்தனே, நீ மனம் கலங்க வேண்டாம். இந்த பூலோகத்தில் உம் ஆயுள் முடியும் போது யாமே, உனக்கு மகனாக இருந்து உன் ஈம காரியங்களை செய்து முடிப்பேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த சடங்குகளை செய்வேன் என்றார்.

இதனால் வல்லாள மகாராஜா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த அதிசயம் நிகழ்ந்த சில ஆண்டுகளில் மதுரை சுல்தான் படைகளுக்கும் வீர வல்லாள மகாராஜாவுக்கும் இடையே போர் ஏற்பட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்டிருந்த வல்லாள மகாராஜா படை முன்பு மதுரை சுல்தானால் தாக்குபிடிக்க முடியவில்லை. பள்ளி கொண்டாபட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்த போது வல்லாள மகாராஜாவை சுல்தான் நயவஞ்சகமாக ஏமாற்றி கொன்றான். 

வல்லாள மகாராஜாவின் இறுதிச் சடங்குகளை பள்ளி கொண்டாபட்டு அருகே ஓடும் கவுதம நதிக்கரையில் அண்ணாமலையார் செய்து முடித்தார்.
அன்று தொடங்கி இன்று வரை அண்ணாமலையார் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் தினத்தன்று பள்ளி கொண்டாபட்டு கிராமத்துக்கு சென்று வல்லாள மகாராஜாவுக்கு மகனாக இருந்து திதி (தர்ப்பணம்) கொடுத்து வருகிறார். 

இந்த ஆண்டுக்கான இந்த வைபவம் மார்ச் 1-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த ஆண்டு (2018) 677-வது ஆண்டாக அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மையுடன் பள்ளிகொண்டாபட்டுக்கு சென்று திதி (தர்ப்பணம்) கொடுக்க உள்ளார். அன்றைய தினம் காலை அண்ணாமலையார், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிகொண்டாபட்டு கவுதம நதிக்கரைக்கு வருவார். அங்கு திதி கொடுப்பார். 

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பள்ளிகொண்டாபட்டுக்கு திரண்டு வந்து தம் மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். ஈசன் திதி கொடுக்கும் போது, தாங்களும் அவ்வாறு செய்தால் தங்கள் மூதாதையர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். 

இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் முறை நடைபெறும். அதாவது அண்ணாமலையாரை தங்கள் ஊர் சம்மந்தியாக ஏற்று பட்டாடை சாத்துவார்கள். பள்ளிகொண்டாபட்டு அருகில் உள்ள சம்மந்தனூரை சேர்ந்தவர்களே இதை ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊருக்கு ‘‘சம்மந்தனூர்’’ என்ற பெயர் ஏற்பட்டது. 

வல்லாள மகாராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுத்து முடிந்ததும், சம்மந்தி முறையில் உள்ளவர்கள் எல்லாரும் வாங்கப்பா... என்று அழைப்பார்கள். அதற்கு சம்மந்தனூர்காரர்கள், ‘‘மாப்பிள்ளையை (அண்ணாமலையாரை) கொஞ்ச நேரம் காத்திருக்க சொல்லுங்கள்’’ என்று உரிமையோடு சொல்வார்களாம். இப்படி பலவிதமான சடங்குகளுடன் அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு வழி நெடுக மண்டக பூஜைகளை ஏற்றுக் கொண்டு அண்ணாமலையார் ஆலயத்துக்கு திரும்புவார். 

அரசன் இறந்து விட்டால், அவனது மகனைத்தானே அடுத்த மன்னனாக முடிசூட்டுவார்கள். அந்த மரபின்படி மறுநாள் (இந்த ஆண்டு 2-3-18) அண்ணாமலையாருக்கு அரசராக முடிசூட்டும் விழா ஆலயத்தில் நடைபெறும். இதன் மூலம் அண்ணாமலையார் ஆண்டவனாகவும், அரசனாகவும் இருந்து தங்களை காப்பதாக திருவண்ணாமலை சுற்று வட்டாரப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

உலகில் எந்த மன்னனுக்கும் இத்தனை ஆண்டுகளாக இறைவனே திதி (தர்ப்பணம்) கொடுக்கும் சிறப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வல்லாள மகாராஜா மிக, மிக கொடுத்து வைத்தவர். அவரது சேவையைப் போற்றும் வகையில் திருவண்ணாமலை ஆலயத்துக்குள் அவர் உருவச்சிலை உள்ளது. அதோடு கோபுரத்திலும் சிலை வடித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் சிவபெருமான், யாருக்காகவும் இப்படி ஆலயத்தை விட்டு வெளியில் வந்து திதி கொடுப்பதில்லை. திருவண்ணாமலை ஆலயத்தில் மட்டுமே ஆண்டு தோறும் இந்த அதிசயம் நடக்கிறது. 

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் ராஜகோபுரத்தை கடந்து சென்றதும் வரும் வல்லாள மகாராஜன் கோபுரத்தை பார்க்கும் போதெல்லாம், இந்த அதிசயம்தான் ஆன்மிகவாதிகளுக்கு நினைவுக்கு வரும். வல்லாள மகாராஜன் கோபுரம் போன்று, அந்த ஆலயத்தின் ஒவ்வொரு அமைப்புமே அதிசயம்தான். தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயத்தில் 142 தனி தனி சன்னதிகள் இருக்கின்றன. இதுவும் திருவண்ணாமலை ஆலயத்தின் அதிசயங்களில் ஒன்றாகும். 

மகாலட்சுமியின் பொருள்


செல்வம் பெருக செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வணங்குவர். 'லக்ஷ்மி' என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சுயநிலை, லட்சியம், லட்சம்(பணம்) என பொருள் உண்டு. அலைபாயும் மனதை சுயகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, லட்சியத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்தப் பயணத்தின் போது பணம் தானாக சேர்ந்து விடும். இதைத்தான் 'லட்சுமி கடாட்சம்'என்பர்.

திருப்பதி போறீங்களா... மறக்காம வேண்டுங்க!


திருப்பதி, காசி, ராமேஸ்வரம் கோவில்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தரிசிக்கலாம். ஒவ்வொரு முறை இங்கு செல்லும் போதும்,''சுவாமி. உம்மை மீண்டும் தரிசிக்கும் வாய்ப்பை எனக்கு தந்தருள்க'' என பிரார்த்திக்க வேண்டும். 'புனர் தரிசனம் பிராப்தி ரஸ்து' என்பர். அப்போது சுவாமியிடம் இன்னொரு கோரிக்கையையும் வைக்க வேண்டும். ''நானும், என் குடும்பமும் நலமோடு இருப்பது போல, உலகிலுள்ள அனைவரும் நலமாக வாழ வேண்டும்,'' என பிரார்த்திக்க வேண்டும். இதையே 'ஸர்வ ஜன சுகினோ பவந்து' என வேதம் குறிப்பிடுகிறது.

பெண்களே! உங்கள் பாதுகாப்புக்கு...


ராம, கிருஷ்ண அவதாரங்கள் ராவணனையும், துரியோதனனையும் தண்டிக்க ஏற்பட்டவை. ஒருவன் இன்ப நுகர்ச்சிக்காகவும், மற்றொருவன் காரணமே இல்லாமலும் சீதை, திரவுபதியைத் துன்புறுத்தினர். ராம கிருஷ்ணர்கள் இவர்களைக் காப்பாற்றினர். 

திரவுபதியை தங்கையாகவும், சீதையை மனைவியாகவும் கொள்கிறார் திருமால். இந்த இரண்டு நிலையிலும் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பளிப்பது மனிதனின் கடமை என்பதை அறிவுறுத்தும் வகையில் இந்த லீலைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்த இந்த நேரத்தில் இந்த தெய்வங்களை வணங்கி, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற மந்திரத்தை தினமும் சொன்னால், ராமருக்கு அனுமன் உதவ வந்தது போல், தக்க உதவி கிடைக்கும்.

தெரியாமல் சொன்னாலும் பலன்


தெரிந்தோ, தெரியாமலோ கடவுளின் பெயரை எப்படி சொன்னாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள் அருளாளர்கள். உதாரணமாக, ''ஐயா வந்தாரா... தெரியுமா?'' என்று ஒருவரிடம் கேட்டால்,''அவர் வந்தாராம், நடந்ததைக் கேட்டாராம். கொஞ்ச நேரம் காத்திருந்தாராம். அப்புறம் சாப்பிட்டாராம், கிளம்பிட்டாராம்'' என்று பதில் சொல்வதாக வைத்துக் கொள்வோம். இப்படி வார்த்தைக்கு வார்த்தை 'ராம்' என்றதால் சொன்னவர், கேட்டவர் இருவருக்கும் ராம பக்தரான ஆஞ்சநேயரின் அருள் கிடைக்கும் என்கிறார் வாரியார்.

இந்தியாவின் பொக்கிஷமாக விளங்கும் பணக்கார கோயில்கள்!

temple

இந்தியாவில் புகழ்பெற்ற இந்து கோயில்கள் பல உள்ளன. அதில் ஒரு சில கோயில்கள் மிகவும் பிரபலமாகவும், இந்தியாவின் பொக்கிஷமாகவும் விளங்குகின்றன. 

பெரும்பாலான கோயில்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அறக்கட்டளைகள் மூலமாகவும், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மூலமாகவும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்தியாவின் பொக்கிஷமாக விளக்கும் 10 புகழ்பெற்ற பணக்கார கோயில்களைப் பற்றி பார்ப்போம். 

1. பத்மநாபசுவாமி திருக்கோயில், திருவனந்தபுரம் 

பத்மநாபசுவாமி  திருக்கோயில் இந்தியாவில் இல்லையென்றாலும், உலகில் பணக்காரக்கார கோயில்களில் முதலாவதாக விளங்குகின்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். இந்தக் கோயில் பகவான் விஷ்ணுவைப் பிரதானமாக கொண்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 

இக்கோயில் மூலநாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார். பழமையான இக்கோயில் திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் பெரும் புகழுடன் விளங்கியது. அச்சமயத்தில் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு 12000 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்டது. 

இக்கோயிலில் பாதாள ரகசிய அறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த அறைக்குள் விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள், கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும்,  அதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

2. திருப்பதி வெங்கடேஸ்வரர் திருக்கோயில், ஆந்திர பிரதேசம்

இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இத்தலம் 108 திவ்ய தேசங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. 

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் 650 கோடி வருமானம் வரும் இந்தியாவின் பணக்கார கோயில்களில் இரண்டாவதாகும். இந்தக் கோயிலின் சொத்து மதிப்பு 50 ஆயிரம் கோடியாகும். 

3. ஷீரடி சாய்பாபா திருக்கோயில், மகாராஷ்டிரா 

இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் பணக்காரக் கோயிகளில் ஷீரடி சாய்பாபா கோயிலும் ஒன்று. இந்துக்கள் இவரைக் கடவுளாகவும், குருவாகவும் போற்றுகின்றனர். 

சிலர் இவரை தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். சீரடியில் இவர் ஜீவசமாதி அடைந்ததால் இந்துக்கள் புண்ணியத் தலமாக கருதுகின்றனர். 

தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். இந்தக் கோயிலில் உள்ள ஆபரணங்களின் மதிப்பு சுமார் 50 கோடியாகவும், வங்கி சேபிப்பு 627 கோடியே 56 லட்சம் வரை உள்ளது. ஆண்டு வருமானம் 450 கோடியாகவும் உள்ளது. 

4. பூரி ஜெகன்நாதர் திருக்கோயில், ஒடிசா

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலத்தில், பூரி நகரத்தில் அமைந்துள்ள வைணவத் திருத்தலமாகும். இக்கோயில் ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். 

உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆஷ்டுதோறும் 9 நாட்கள் நடைபெறும். இந்தடி தேரோட்டத் திருவிழாவைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்கின்றனர். 

இந்தக் கோயிலில் விலை மதிக்கத்தக்க தங்கம், வைரம் வைடூரியங்கள் உள்ளதாக கூறுப்படுகிறது. வட-கிழக்கில் அமைந்துள்ள பணக்கார கோயில்களில் சிறப்பு வாய்ந்தவை என்று அழைக்கப்படுகிறது. 

5. சித்தி விநாயகர், மும்பை

மும்பையில் உள்ள மிகப்பெரிய கோயில் சித்தி விநாயகர் கோயில். பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சினிமா துறையில் உள்ள பாலிவுட் நடிகர், நடிகளைகள் விநாயகரின் ஆசியைப் பெற வருவதோடு, உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர். 

சித்தி விநாயகரின் விக்ரகத்தில் தும்பிக்கை வலதுபுறமாக வளைந்திருப்பது தனிச் சிறப்பு வாய்ந்தது. 

இந்தக் கோயிலில் எலக்ட்ரானிக் தளத்தின் மூலம் நன்கொடைகளைப் பெற 2016-ல் கோயில் நிர்வாகம் டீடேட் கணக்கு ஒன்றை துவக்கியுள்ளது. இதன் மூலம் கடந்த 2009 வரை கணக்கிட்ட போது சுமார் 140 கோடி சொத்துகள் இருந்தது. வருடத்திற்கு 10 முதல் 15 கோடி வரை நன்கொடையாக வசூலிக்கப்படுகிறது. மும்பையில் பணக்கார கோயில்களில் ஒன்றாக திகழும் இது உலகில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

6. வைஷ்ணவ தேவி திருக்கோயில், ஜம்மு - காஷ்மீர் 

புனிதமான இந்து சமயக்கோயில்களில் ஒன்றாக திகழ்வது வைஷ்ணவ தேவி திருக்கோயில். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த கோயில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணவ தேவி மலையில் அமைந்துள்ளது. 

வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயில் 5200 அடிகள் உயரத்திலும் கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வருகின்றனர். திருமலை வெங்கடேஸ்வர கோயிலுக்கு அடுத்து அதிகமான பக்தர்கள் திரளாக வந்து வழிபடும் கோயில்களில் இது 2-வது இடத்தைப் பெற்றுள்ளது. 

இந்தக் கோவில் மிகவும் பழமையானது மட்டுமல்ல, செல்வம் அதிகம் நிறைந்துள்ள பணக்கார கோயில்களில் ஒன்றாகும். இங்கு வருடத்திற்கு 500 கோடி மதிப்பீட்டில் வருமானம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

7. சோம்நாத் கோயில், குஜராத்

குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் சோம்நாத் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் முதன்மையானதாகத் திகழ்கிறது. 

இங்கு ஜோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி ம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். சாளுக்கியர் கட்டிடக்கலை வடிவத்தில் கட்டப்பட்ட சோம்நாதர் கோயில் பிரமிடு வடிவத்தில் விசாலமாகக் கட்டப்பட்டுள்ளது. 

இக்கோயிலுக்கு தினமும் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சோம்நாத் கோயிலின் சொத்து மதிப்பு 1,639.14 கோடியாகும். இந்தியாவின் பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்று. 

8. மீனாட்சியம்மன் திருக்கோயில், மதுரை

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்று. மீனாக்ஷி என்றும் அங்கயற்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது மீன் போன்ற கண்களை உடையவள் என்று பொருள். 

இந்தக் கோயில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஏப்ரல்-மே மாதங்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா மிக விமர்சையாக நடைபெறுகிறது. அப்போது பல மாவட்டங்களில் இருந்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள். 

தினமும் இக்கோயிலுக்கு 15 ஆயிரம் முதல் வெள்ளிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தியாவில் 33 ஆயிரம் சிற்பங்கள் உள்ள ஒரே கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில். இந்தியாவில் தெற்கு பகுதியில் பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்று. 

9.ஹர்மந்திர் சாஹிப் (தங்க கோயில்), அம்ரித்சர் 

சீக்கிய மக்களின் முக்கிய கோயிலாக ஹர்மந்திர் சாஹிப்பின் தங்க கோயில் உள்ளது. சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. 

ஹரிமந்திர் சாஹிப் சீக்கியர்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. சீக்கிய புனித நூலான குரு கிரந்த் சாகிப் எப்போதும் குருத்வாரா உள்ளே இருக்கும். இதன் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் வாழ்வின் அனைத்து மதங்களை சார்ந்த ஆண்கள் பெண்கள் சமமாக வந்த கடவுளை வழிபடுவதற்காக உருவாக்கப்பட்டதேயாகும். இங்குத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இந்தக் கோவிலின் விதானம் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டது. இதன் மேல் விலையுயர்ந்த கற்கள், வைரம் மற்றும் இரத்தினங்களைப் பதிக்கப்பட்டுள்ளது. பணக்கார கோயில்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது. 

10. காசி விசுவநாதர் கோயில், உத்திப்பிரதேசம் 

உத்திரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசி எனும் இடத்தில் உள்ள பழமையான மற்றும் புகழ்வாய்ந்த கோயிலாக காசி விசுவநாதர் கோயில் விளங்குகிறது. ஜோதிர் லிங்கங்களில் பன்னிரண்டாவதாகும். 

பிரதான தெய்வமாக சிவபெருமான் விளங்குகிறார். வாரணாசி என்று அழைக்கப்பட்டாலும் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என்றே அழைக்கப்படுகின்றது. விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருள். 

வாரணாசியில் கங்கை ஆற்றின் கரையில் தினமும் கங்கை ஆறுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். இந்நிகழ்வை காங்கா ஆர்த்தி என்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கங்கா ஆர்த்தியை ஆர்வமுடன் பார்க்க வருகின்றார்கள். இங்குத் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். பணக்காரக் கோயில்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

சகல பாக்கியங்களையும் தரும் ஆனி உத்திர விரதம்

சகல பாக்கியங்களையும் தரும் ஆனி உத்திர விரதம்

ஆனி உத்திரம் விரதம் இருந்து சிவனை வழிபாடு செய்தால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

உலகெங்கிலும் வாழும் இந்துப் பெரு மக்களுக்கெல்லாம் மூலப்பரம்பொருளாக இருந்து இந்த உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்தரம், ஆனி திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.

ஒரு வருடத்தில் சிவபெருமானுக்கு 6 நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்ய மிக சிறப்பு வாய்ந்த நாட்களாக, அதாவது அபிஷேகத்திற்கும் சிவதரிசனத்திற்கும் உகந்த நாட்களாக சொல்லப்படுகின்றன.

இதில் ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது என ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.

நாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரதக்கதாக அபிஷேகங்களை சிவாலயங்களில் செய்ய வேண்டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.

அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்

அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்

எந்த விதமான பிரச்சனைகள், கஷ்டங்களையும் போக்கும் எளிய, விரைவில் பலன் தரக்கூடிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

* ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை (கண்திருஷ்டி) விரட்டும் ஆற்றல் உண்டு. 

* வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

* கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன்தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தையும் மாட்டி வைக்கலாம்.

* வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள்அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

* வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

* வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

* அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

* முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.

* கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணெயையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.

* வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.