Monday 19 February 2018

புண்ணிய நதிகள் பிறந்தன


அகத்தியர் தென்திசை வரும் வழியில், விதர்ப்ப நாட்டை அடைந்தார். அந்த நாட்டு மன்னன் நடத்திய யாகத்தில் பங்கேற்றார். யாககுண்டத்தில் நெருப்பு கொழுந்து விட்டெரிந்த போது, அதில் இருந்து ஒரு பெண்மணி வெளிப்பட்டாள். அப்போது அசரீரி தோன்றி, “அகத்தியரே! நீர் இந்தப்பெண்ணை மணந்து கொள்ளும். இவளது பெயர் உலோபமுத்திரை,” என்றது. அகத்தியரும் தெய்வ வாக்கிற்கேற்ப அவளது சம்மதத்தைக் கேட்டார்.

“மாமுனிவரே! நான் இந்நாட்டில் தோன்றியதால், விதர்ப்ப தேசத்து அரசரே என் தந்தையாகிறார். அவர் சம்மதம் தெரிவித்தால், நான் உங்கள் மனைவியாகிறேன்,” என்றாள். விதர்ப்ப அரசனும் சம்மதம் தெரிவித்தான்.

அப்போது உலோபமுத்திரை,“அகத்தியரே! தாங்கள் என்னை மணம் முடிக்க வேண்டிய அவசியத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றாள்.

“உலோபா! என் முன்னோர்கள் ஆண் குழந்தை இன்மையால், இறந்தும் திதி செய்ய நாதியின்றி தவிக்கின்றனர். அவர்களால் சுவர்க்கத்தை அடைய முடியவில்லை. நானும் துறவியாகி விட்டதால், அவர்களின் நிலைமை மோசமாகி விட்டது. அவர்களின் ஆத்ம சாந்திக்காக, நான் திருமணம் முடிக்க 
வேண்டியுள்ளது. பிதுர் தர்ப்பணம் செய்யாதவன் நரகத்தை அடைவான் என்பதை நீ அறிவாய். அவர்களின் விருப்பப்படி, நான் இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு மகனை பெற்று, அவன் மூலமாக தர்ப்பணம் செய்ய வேண்டும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், நான் நரகத்தை அடைவேன் என சாபமும் இட்டுள்ளனர்,” என்றார்.

இதைக் கேட்ட விதர்ப்ப மன்னன், “அகத்தியரே! இந்த காரணத்துக்காக உமக்கு எம் மகளை தருவதற்கில்லை. அப்படி தர வேண்டுமானால், நான் கேட்கும் பொருளை நீர் எனக்குத் தர வேண்டும்,” என சொல்லி விட்டான். 

“இதென்ன சோதனை? 

துறவியிடம் ஏது செல்வம்? இந்த மன்னன் கேட்கும் பொருளுக்கு எங்கே போவேன்?” என அகத்தியர் எண்ணிக்கொண்டிருந்த போது, லோபமுத்திரையும், “முனிவரே! என்ன யோசனை? என் தந்தை சொல்வது சரிதானே! இப்பூவுலகில் இனிய இல்லறம் நடத்த பொன்னும், பொருளும் தேவை என்பதை நீர் அறிய மாட்டீரா? எனவே மிகப்பெரிய மாளிகை கட்டும் அளவுக்கு இடமும், அதை நிரப்புமளவுக்கு செல்வமும் கொண்டு வந்து என்னை மணம் முடித்துக் கொள்ளும். இல்லாவிட்டால், நீர் நரகம் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்,” என்று தீர்மானமாக சொல்லி விட்டாள். 

குள்ளமான தன்னை ஒரு பெண் மணமுடிக்க சம்மதித்ததே பெரிய விஷயம் என்ற நிலையில், அகத்தியர் பலநாட்டு மன்னர்களிடமும் யாசித்து பொருள் பெற்றார். அதை உலோபமுத்திரையிடம் தந்து திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்றார். முன்னோர்கள் சாபம் நீங்கி அவரை வாழ்த்தினர். 

பின் அகத்தியர், லோபமுத்திரையிடம், “அடங்காமல் பிரவாகம் எடுத்த நதிபோல், என்னை ஆட்டி வைத்தவளே! இனி, நீ எனக்கு அடங்கி நடக்க வேண்டும். எந்த செல்வம் உனக்கு அவசியப்பட்டதோ, அந்தச் செல்வம் உலகம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும். உலகம் செழிக்க தண்ணீர் தேவை. தண்ணீர் இருந்தால், உலகத்தின் எல்லாப்பகுதியும் தானாக செழித்து விடும். பயிர் பச்சைகள் வளரும். இந்த வேலையைச் செய்வதற்குத்தான், சிவபெருமான் என்னைத் தென்திசைக்கு அனுப்பினார். உலோபா! நீ என்கமண்டலத்துக்குள் வந்து விடு,” எனச்சொல்லி அவள் மீது தீர்த்தம் தெளித்தார். 

அவள் தண்ணீராக மாறி, கமண்டலத்தில் புகுந்தாள். பின், அகத்தியர் சிவபூஜை செய்து கொண்டிருந்த வேளையில், கமண்டலத்தை காகம் தட்டிவிட, அதிலிருந்து உலோப முத்திரை, காவிரி நதியாக பிரவாகமெடுத்தாள். மீதியிருந்த நீரை தென்திசையிலுள்ள பொதிகையில் தாமிரபரணியாக பெருக்கெடுக்கச் செய்தார். இந்த நதிகளில் தை அமாவாசையன்று நீராடி, தர்ப்பணம் செய்தால் முன்னோரின் ஆசி கிடைக்கும்.

No comments:

Post a Comment