Monday 5 March 2018

உயிர் காத்த சக்கரம்


திருமலையில் உள்ள ஒரு குளத்தில் நீராடி, திருப்பதி வெங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதைக் பணியாகக் கொண்டவர் பத்மநாப முனிவர். பழங்கள் மட்டும் சாப்பிடுவார். ஒரு நாள் காலையில் ஒளி அவர் முன் தோன்றியது. கண் விழித்த போது, வெங்கடாஜலபதி காட்சியளித்தார்.

“பத்மநாபா! இந்த குளக்கரையில் தங்கி என்னை வழிபட்டு வா. உரிய காலத்தில் என்னை சேரும் பாக்கியம் பெறுவாய்” என்று வரம் அளித்தார்.

ஒரு நாள் மனிதர்களை கொன்று தின்னும் அரக்கன், முனிவரை நெருங்கினான். முனிவர், “வெங்கடேசா! என்னைக் காப்பாற்று” என்று கதறினார். பெருமாள் தன்னுடைய சக்கராயுதத்தை ஏவினார். சீறிப் பாய்ந்த சக்கரம் அரக்கனின் தலையைக் கொய்தது.

சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர், “என் உயிர் காத்த சக்கரமே! இன்று முதல் இந்த குளத்தில் எழுந்தருளி, நீராடுவோரின் துன்பம் தீர்க்க வேண்டும்,” என்று வேண்டினார். அந்த குளம் 'சக்கர தீர்த்தம்' என்ற பெயரில் இருக்கிறது. பத்மநாப முனிவரின் வரலாற்றை படிப்போருக்கு, இதில் நீராடிய பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment