Saturday 4 November 2017

சந்திரத் தலம் - சோமங்கலம்


நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பார்கள். மனதை தீர்மானிப்பதில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஜாதகத்தில் சந்திரன் சரியில்லையென்றால் அல்லது அசுப கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால் மன உளைச்சல், மனநிலை சரியில்லாதிருத்தல் போன்ற பிரச்னை உருவாகும், புலம்பும்படியான வாழ்க்கை அமையும். எனவே, சந்திரனை தரிசித்தால் மனோபலம் அதிகமாகும். அப்படிபட்ட சந்திரனுக்கான தலமே சோமங்கலம். ஏனெனில் சந்திரனே இத்தலத்திலுள்ள ஈசனை பூஜித்து தமது தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறானாம்!

தட்சன் தன் இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கு மணமுடித்தான். ஆனால், சந்திரன் ரோகிணியை மட்டும் குளுமையாய் பார்த்தான்; மற்ற பெண்களை குறையோடு நோக்கினான். அதனால் அவர்கள் மனம் குன்றிப் போனார்கள். தந்தையிடம் வந்து முறையிட்டார்கள். ‘‘உனக்கு செருக்கை அளிக்கும் உன் அழகு குலையட்டும். உன் சக்தி, உன் பிரகாசம் மங்கட்டும்’’ என்று தட்சன் கடுமையாய் சபித்தான். உடனே சந்திரன் எனும் சோமன் ஒளிமங்கி கருமையாய் தேய ஆரம்பித்தான். மிரண்டுபோய் தட்சனின் பாதம் பணிந்தான். மனமிரங்கினான் தட்சன். “தொண்டை மண்டலத்தில் சுயம்புவாய் நிற்கும் சிவனை நோக்கி தவம் செய்து வா. இந்த சாபம் தீரலாம்” என்றான். 

அப்படியே சிவனை பூஜித்தான் சந்திரன். சிவனும் காட்சி தந்தார். “தட்சன் சாபம் இட்டது இட்டதுதான். ஆகவே நீ முற்றிலும் தேயாது, தேய்ந்தும், மறைந்தும் ஒரு வட்ட சுழற்சியில் வா. அது உலக உயிர்களுக்கு நன்மை புரியட்டும்” என்றார் ஈசன். சந்திரன் அதை சந்தோஷத்தோடு ஏற்றான். அப்படி சந்திரன் பூஜித்து சாபநிவர்த்தி பெற்ற தலமே சோமங்கலம். அதனாலேயே இங்குள்ள ஈசனுக்கு சோமநாதர் என்று பெயர். அம்பிகை காமாட்சி. சந்திரன் இங்கு தனிச் சந்நதியில் அருட்பாலிக்கிறார். இங்கு ஈசன் சோமநாதரையும் சந்திரனையும் தரிசித்தாலே மனம் உறுதி பெறும்; தடுமாற்றங்கள் நீங்கும். குலோத்துங்கச் சோழன் கஜபிருஷ்ட விமான அமைப்போடு அமைத்த அற்புதமான கோயில் இது. சென்னை, தாம்பரத்திலிருந்தும், குன்றத்தூரிலிருந்தும் இக்கோயிலுக்குச் செல்லலாம். இரண்டு ஊர்களிலிருந்தும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு.

No comments:

Post a Comment