Wednesday 7 February 2018

கோவில் வாயிலை நோக்கியவாறு காட்சி தரும் நந்தி

கோவில் வாயிலை நோக்கியவாறு காட்சி தரும் நந்தி

தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் வில்வனேஸ்வரர் கோவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஆலயத்தில் தவநிதி என்ற முனிவர் தங்கி இருந்து வழிபட்டு வந்தார். அப்போது மான் ஒன்றை வேட்டையாட வேடன் ஒருவன் துரத்தி வந்தான். தப்பி ஓடிய மான் ஆலயத்திற்குள் புகுந்து தவநிதி முனிவரை தஞ்சமடைந்தது. 

முனிவர் அதற்கு அபயம் அளித்தார். இதனால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க தயாரானான். அடியாரின் துயரை நீக்க இறைவன் புலிவேடம் கொண்டு வேடனை துரத்தினார். உயிருக்கு பயந்த வேடன் அங்கிருந்த மரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டான். அவனை துரத்திய புலி மரத்தின் கீழே இருந்தது. வேடன் இரவு முழுவதும் மரத்தில் தங்கி இருந்தான். 

பசியாலும், பயத்தாலும் அவனுக்கு தூக்கம் வந்தது. கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து ஒவ்வொரு இலைகளாக பறித்து கீழே போட்டுக் கொண்டு இருந்தான். அன்று சிவராத்திரி ஆனதால் அவன் பறித்து போட்ட இலைகள் கீழே புலி வடிவில் இருந்த சிவபெருமான் மீது அர்ச்சனைகளாக விழுந்து கொண்டு இருந்தது. இதனால் தூக்கமின்றி சிவனை வழிபட்ட புண்ணியம் அவனுக்கு கிடைத்தது.

இறைவன் வேடனுக்கு மோட்சம் அளித்து அருளினார். விடிந்தால் அவனது ஆயுள் முடியும் நிலை இருந்தது. பொழுது விடிந்ததும் அவனது உயிரை பறிக்க எமன் ஆலயத்திற்குள் நுழைந்தான். உடனே தட்சிணாமூர்த்தி வடிவில் தோன்றிய இறைவன் கையில் கோலேந்தி எமனை விரட்டினார். 

எமனும் விடவில்லை. இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளான நந்தி தனது சுவாசத்தினால் எமனை உள்ளே நுழையாமல் தடுத்தார். இதை நினைவுபடுத்தும் வகையில் நந்தி வாயிலை நோக்கியவாறும், தட்சிணாமூர்த்தி கையில் கோலேந்தியும் காட்சி தருகின்றனர்.

No comments:

Post a Comment