Saturday 4 November 2017

திருமணம் குழந்தை வரம் தரும் வக்கிரகாளியம்மன்


தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் 30வது தலமாகவும் 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதும் சமயக்குறவர் நால்வரில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற சிறப்புடைய திருத்தலமாக விளங்குகிறது திருவக்கரை ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர் மற்றும் வக்கிரகாளியம்மன் கோயில். விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் திருவக்கரை கிராமத்தில் வராக நதி என்றழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் 10 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. ஆதித்யசோழன் என்னும் சோழ மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலை கட்டி உள்ளான். இங்கு இறைவன் சந்திரமெளலீஸ்வரர் கிழக்கு நோக்கி மூன்று முக லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

இது எங்கும் காணமுடியாத காட்சி. ராஜகோபுர வழியாக நுழைந்தவுடன் வக்கிரகாளியம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பொதுவாக காளிகோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் ஊரின் நடுவே ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகே வக்கிரகாளியம்மன் அமைந்துள்ளது இங்கு மட்டும்தான்.  வக்கிராசூரன் என்னும் அரக்கன் சிவபெருமானை தனது கண்டத்தில் வைத்து பூஜை செய்தான். தனது தவ வலிமையினால் தன் முன் தோன்றிய சிவபெருமானிடம் சாகா வரம் பெற்றான். தான் பெற்ற வரத்தைகொண்டு தேவர் முதலானவர்களை கொடுமை செய்துவந்தான். அவன் செய்த கொடுமைகளை தாங்கமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் வைகுண்ட வாசனான மகாவிஷ்ணுவை அழைத்து வக்கிராசூரனை வதம் செய்யும்படி கூறினார். அவரும் சிவபெருமானின் வார்த்தையை கேட்டு மகாவிஷ்ணு வக்கிராசூரனிடம் போரிட்டு தனது ஸ்ரீசக்கரத்தை பிரயோகம் செய்து அரக்கனை அழித்தார். 

இங்கு மகாவிஷ்ணு வரதராஜபெருமாளாக கோயிலின் பின்புறத்தில் மேற்குநோக்கி சங்கு சக்கரத்துடன் ஆறடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். வக்கிராசூரன் மறைவுக்கு பிறகு அவனின் தங்கையான துன்முகி தன் சகோதரனைப்போலவே கொடுஞ்செயல் புரிந்துவந்தாள். அவளை வதம் செய்யும்படி சிவபெருமான் பார்வதியிடம் கூற பார்வதிதேவியும் அரக்கி துன்முகியை வதம்செய்ய சென்றார். அப்பொழுது துன்முகி கருவுற்றிருந்தாள். சாஸ்திர முறைப்படி கர்ப்பிணியையோ, சிசுவையோ வதம் செய்யக்கூடாது. எனவே அகிலாண்ட நாயகியான பார்வதிதேவி துன்முகியின் வயிற்றைக்கிழித்து அவள் வயிற்றிலிருந்த சிசுவை தனது வலது காதில் குண்டலமாக அணிந்துகொண்டு, பின்பு அரக்கியான துன்முகியை வதம் செய்தாள். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததனால் வக்கிரகாளியாக அங்கேயே அமர்ந்துவிட்டாள். அவள் பெயராலேயே இந்த ஊர் திருவக்கரை என்று அழைக்கப்படுகிறது. 

தோஷம் நீக்கும் பிரார்த்தனை: 

வக்கிரமாக அமையப்பெற்ற கிரகங்களால் பல்வேறு பாதிப்புக்கு ஆளானவர்கள் இத்தலத்தில் வக்கிரமாக அமையப்பெற்ற தெய்வங்களை வழிபட்டு, வக்கிரமான கட்டுப்பட்டுள்ள இக்கோயிலை வலம் வந்தால் துன்பங்கள் நீங்க பெற்று வளமான வாழ்வு பெறுவார்கள். இது வக்கிரதோஷ நிவர்த்தி தலமாகும். 

திருமண தோஷம்: 

திருமணமாகாதவர்கள், பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இந்த கோயிலில் உள்ள துர்க்கை அம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் பூஜை செய்துவந்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை, நினைத்த காரியம் கைகூட பௌர்ணமி தினத்தன்று வக்கிரகாளியம்மனை தொடர்ந்து 3 மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்து வந்தால் எண்ணிய காரியம் கைகூடும். அதனாலேயே பௌர்ணமி அன்று இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஜோதி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது கர்நாடகம், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த திருக்கோயிலில் தனியாக அமைந்துள்ள தீபலட்சுமியின் கோயிலில் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இராகு காலத்தில் விளக்கேற்றி அம்மனை கும்பிட்டு, மாங்கல்யம் கட்டி பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம். 

இந்த அண்டசராசரத்தில் சுழன்று கொண்டிருக்கிற ஒன்பது கிரகங்களுக்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. அதன்படி ராகு, கேது இரண்டிற்கும் அதிதேவதை காளி. எனவே இந்தகோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலதுபக்கமாக 5 முறையும், இடது பக்கமாக 4 முறையும் வலம் வந்து தொழுது வணங்கவேண்டும். குண்டலினி சித்தர் சன்னதி: கருவறைக்கு தென்திசையில் குண்டலினி மாமுனிவர் என்னும் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. தமிழகத்தில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, மயிலம், இரும்பை, திருவக்கரை ஆகிய ஊர்களில் இவ்வகை கோயில்கள் உள்ளன. சித்தர்கள் இறைவழிபாட்டில் நமக்கு குருவாக விளங்குபவர்கள். அத்தகைய பெருமைமிக்க சித்தர்களில் ஒருவரின் ஜீவசமாதி இந்த கோயிலில் அமைந்துள்ளது சிறப்பு.

No comments:

Post a Comment