Monday 30 April 2018

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கான புராணக்கதைகள்

கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்கான புராணக்கதைகள்

கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு இரு விதமான புராணக்கதைகள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:-

மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காணவும், சீதனம் கொடுப்பதற்காகவும் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். 

ஆனால் அவர் வந்து சேரும்முன்பே திருக்கல்யாணம் நடந்து முடிந்து விடுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது, மீனாட்சி அம்மனுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. இதனால் கோபம் கொள்ளும் கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வராமல் வண்டியூர் வழியே மீண்டும் அழகர்மலைக்கு திரும்பிச் சென்று விடுகிறார். இது ஒரு புராணக்கதை.

மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவிலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மன்னனும் சம்மதித்தார். உடனே மகாவிஷ்ணு, விசுவ ரூபம் எடுத்து ஒரு அடியை பூமியிலும், இன்னொரு அடியை விண்ணிலும், மூன்றாவது அடியை மன்னனின் தலையிலும் வைத்தார். இதில் 2-வது அடியை விண்ணுக்கு கொண்டு செல்லும்போது அங்கிருந்த பிரம்மா அது தன் தந்தையின் கால் என்பதை அறிந்து அதற்கு பாதபூஜை செய்கிறார். 

பாத பூஜை செய்யும் தண்ணீரில் ஒரு துளி மகாவிஷ்ணுவின் சிலம்பில் பட்டு அழகர்மலையில் விழுகிறது. அதுவே சிலம்பாறு (நூபுரகங்கை) என வர்ணிக்கப்படுகிறது. அழகர்மலை உச்சியில் தண்ணீர் வற்றாத நூபுர கங்கை உள்ளது. நூபுர கங்கை தீர்த்தம் தனிச்சுவையும், வினைதீர்க்கும் மருந்துமாக சிறந்து விளங்குகிறது என்று புராதனப்பாடல்கள் கூறுகின்றன. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 

இத்தகைய புகழ்மிகு நூபுர கங்கையில் ஒரு நாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடியபடி மந்திரங்களை சொல்லிக்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அங்கே நீராடிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவர் அவரை கவனிக்கவில்லை. அவர் குளித்து முடித்து பூஜை செய்துவிட்டு சற்று நேரம் கடந்து வந்து துர்வாச முனிவரை வரவேற்றார். அதனால் துர்வாச முனிவர் கோபம் அடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம்(தவளை) ஆகும்படி சாபமிட்டார்.

உடனே சுதபஸ் முனிவர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமி (சித்ரா பவுர்ணமி) தினத்திற்கு மறுநாள் வரும் கிருஷ்ணபட்ச பிரதமை திதியில் சுந்தரராஜப்பெருமாள் உமக்கு சாபவிமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தால் தவளையாக மாறிய சுதபஸ்முனிவர், சுந்தரராஜப்பெருமாளை நினைத்து வைகை கரையில் தவம் இருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜப்பெருமாள் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு (சுதபஸ்முனிவர்) சாபவிமோசனம் அளித்தார் என்பது மற்றொரு புராணக்கதை.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில் சார்பாக தனித்தனியாக சித்திரைத்திருவிழா கொண்டாடப்பட்டு வந்துள்ளது. பின்னர் சித்திரை திருவிழாவை சைவ-வைணவ சமயங்களின் ஒற்றுமையை காத்திடும் வகையில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலைநாயக்கர் ஒரே விழாவாக இணைத்து நடத்தினார். அதைத்தொடர்ந்து மன்னர் திருமலை நாயக்கர் காலம் முதல் தொன்று தொட்டு, சித்திரைத் திருவிழா ஒரே விழாவாக வரலாற்று பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளழகரின் சக்கரம், பஞ்சாயுதங்கள்

அழகர்கோவிலில் எங்கும் இல்லாத சிறப்பாக கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடம் இருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள். 

புராண பெருமை வாய்ந்த அழகர்மலை

புராண பெருமை வாய்ந்த அழகர்மலை

“அழகர் மலை” என்பது மதுரைக்கு வடக்கே 21 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோவில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ் சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு. 

பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோவில் உள்ளது. இம் மலையில் பலவகை மரங்களும், செடிகளும், கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சி அளிக்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதை சோலைமலை, திருமாலிருஞ்சோலை, வனகிரி, முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள். 

இச்சோலைகளில் பூக்களும் காய்களும், கனிகளும் மிகுதியாக உண்டாகிப் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பம் ஊட்டுகிறது. இங்கு கோவில் கொண்டு உறைகின்ற இறைவன் “அழகர்” என்று போற்றப்படுகிறார்.இவரே வடமொழியில் “ சுந்தரராஜன்” என்று சொல்லப்படுவர். திருமாலுக்கும் அவருடைய அவதார மாகிய ராமபிரான் முதலானவர்களுக்கும் அழகர் என்னும் பெயர் பழைய தமிழ் நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கிறது. 

அழகர் என்பதற்கு அழகுடையவர், அழகானவர் என்று பொருள். மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத்தலத்தில் எழுந் தருளியுள்ள மூர்த்திக் கும் கூடலழகர் என்னும் பெயர் ஏற்பட்டி ருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத்தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை (நாகப்பட்டினம்) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல் (மதுரை) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இந்த திருத்தலம் மிகவும் பழமையானது. இது எப்பொழுது தோன்றியது என்று சொல்ல முடியாத பழமை உடையது. மிகவும் பழைய தமிழ் நூல்களிலும் வடமொழிப் புராணங் களிலும் கூட இதன் பெருமை பேசப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள மூர்த்தி தலம், தீர்த்தம், ஆகியவை பற்றிய புராணம், பிரம்மாண்டமான புராணம், வாமன புராணம், ஆக்நேய புராணம் முதலியவற்றில் மிகவும் சிறப்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து “விருஷ பாத்திரி மகாத்மியம்” என்ற ஸ்தல புராணத்தின் தமிழாக்கம் தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்நூலில் இத் தலத்தின் புராணப் பெருமைகளை அறிந்து கொள்ளலாம். 

அபரஞ்சி தங்கத்தில் அழகர்

மதுரைக்கு அருகில் உள்ளது அழகர்மலை. இத்தலத்து பெருமாளுக்கு கள்ளழகர் என்று பெயர். இவரது உற்சவமூர்த்திக்கு அழகர் என்றும், சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது.’அபரஞ்சி’ என்பது தேவ லோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பக்தர்கள் வணங்குகிறார்கள்.

உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோவிலில், இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவிலில். அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும் என்று கூறப்படுகிறது. 

எந்த ராசிக்காரர் இந்த விஷயத்தில் உஷாரா இருப்பாங்க

எந்த ராசிக்காரர் இந்த விஷயத்தில் உஷாரா இருப்பாங்க

மேஷ ராசி

இந்த ராசி இயற்கையிலே யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர தன்மையும், வைராக்கியமும் மிக்கது. எதையும் தைரியத்தோடும் நம்பிக்கையுடனும் செய்து முடிப்பர். வெற்றி பெறுவது ஒன்றையே லட்சியமாக கொண்டிருப்பவர்கள். அவசரக்காரர்கள் என்று உலகத்தால் சொல்வார்கள். அது நூற்றுக்கு நூறு உண்மை. எப்படித்தான் தாயின் வயிற்றில் இருந்தீர்கள் என்று சொல்லித்திரிவார்கள்.

இவர்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யாவிட்டால் தூக்கம் வராது, மூக்கிற்கு மேல் கோபம் தான் வரும். தந்திரசாலிகள் மட்டுமல்ல, தைரியசாலிகளும் கூட இவர்கள்.

ரிஷபம்:

இந்த ராசிக்காரர்கள் அமைதியானவர்கள். ஆர்ப்பாட்டம் செய்ய ஆசை இருந்தாலும் செய்ய துணிவில்லாதவர்கள். தோற்றத்தால் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றம் காணச் செய்யும் ரிஷப ராசிக்காரா்கள் சீற்றம் இல்லாமல் பேசும் தன்மை பெற்றவர். கூட்டங்களுக்கு மத்தியில் இவர்கள் நிற்கும் பொழுது இவர்களை கோட்டீஸ்வரர் என்றே மதிக்கும் அளவிற்கு தோற்றப் பொழிவு இருக்கும். எடுக்கும் முயற்சியில் பின் வாங்கமாட்டார்கள்.

வாகன யோகம் அதிகம் பெற்றவர்கள். ஆடை அணிகலன் அணிவதில் அதிகம் பிரியம் உள்ளவர்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகம் இருக்கும். உறவினர்களைவிட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எல்லாம் விதிப்படி நடக்கிறது என்று சொல்வார்கள். இவர்களின் நட்பு விட்டம் பெரியதாக இருக்கும். தலைமை பதவி தக்க சமயத்தில் வந்து சேரும். இவர்கள் வாழ்க்கை ஏற்றம் இறக்கமாகவே இருக்கும்.

மிதுனம்:

இந்த ராசிக்காரர்கள் அதிக அளவு மூளை பலம் உள்ளவர்கள். அதிக புத்திசாலித்தனத்தையும், மிகச்சிறந்த நிர்வாகம் தன்மையும் உடையவர்கள். சங்கீதம், ஆடல் பாடல் ஆகியவற்றில் விருப்பமும் நல்ல மனோசக்தியும் உடையவர்கள். புதுமை செய்வதிலும் புரட்சி செய்வதிலும் புகழ் கொடி நாட்டும் இவர்கள் மிகப்பெரிய காரியங்களைக்கூட மிக எளிதாகச் செய்து முடிப்பார்கள். இவர்கள் மூளை மின்னல் வேகத்தில் செயல்படும். அடுத்தவர்களுக்கு யோசனை சொல்லும் இவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திப்பதில்லை.

உடல் பலத்தை காட்டிலும் இவர்களுக்கு மூளை பலமே உறுதுணை புரியும். ஆன்மீகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களிடம் காரியம் சாதித்துக் கொள்ள வேண்டுமானால் இவர்களைப் போற்றி புகழ்ந்து பேசினாலே போதும்.

கடகம்:

இவர்கள் மற்றவர்களின் மனமறிந்தும், குணமறிந்தும் பேசுவதில் வல்லவர்களாகவும், யாரையும் நம்பாதவர்களாகவும், நம்பியவர்களை நாளும் கைவிடாதவர்களாகவும் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதற்காக எள்ளளவும் கலங்காதவர்களாகவும், ஆயுதங்கள் இல்லாமல் இவர்கள் பேச்சையே ஆயுதமாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். வைராக்கிய மனம் பெற்ற இவர்கள் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள்.

பணபலம் பெற்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களைச் சுற்றி ஒரு படை பலம் எப்பொழுதும் இருக்கும். பொது நலத்தில் ஈடுபாடு கொண்ட இவர்களை மக்கள் போற்றி கொண்டாடுவார்கள். வயது கூட கூட இவர்கள் வாழ்க்கை வளம் பெருகும். வாழ்வில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்ற ஆவலில் மின்னல் வேகத்தில் செயல்படுவார்கள். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த குணங்களை பெற்றவர் இவர்கள்.

சிம்மம்:

இவர்கள் அதிக துணிவும், தலைமை பதவி ஆசையும் உடையவர்கள் எவருக்கும் அடங்காத தன்மையும், அடக்க வேண்டும் என்கிற சர்வதிகார போக்கும் உடையவர்கள். சீறும் குணத்தை பெற்றிருந்தாலும் மக்களைச் சீர்தூக்கி எடைபோடும் ஆற்றலும் அதனை செயல்படுத்தும், விதமும் அருமை. இவர்கள் அதிகாரத்தை உபயோகித்து காரியம் சாதிப்பதை விட அன்பை உபயோகித்தால் அதிகம் சாதித்து காட்டுவார்கள்.

நிர்வாகத் திறமையினால் எண்ணற்ற நெஞ்சங்களின் மனதில் இடம் பிடித்து, கொடுத்து உதவும் தன்மை கொண்ட இவர்கள் கோபம் கொள்வதற்கும் தயங்கமாட்டார்கள். வெளி வட்டாரத்தில் வியக்கும் விதத்தில் செல்வாக்கு பெற்றிருந்தாலும் வீட்டிற்குள் இவர்களுக்கு போராட்டம் தான். மனைவியும் மக்கள் செல்வங்களும் இவர்களை அனுசரித்து செல்வது அரிது.

கன்னி:

இவர்கள் மற்றவர்களின் பாராட்டுதல்களைக் காட்டிலும் பாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்கள் புதுமையாகவும், புத்தி சாலித்தனமாகவும் பதில் கூறும் ஆற்றல் பெற்றவர்கள். இவர்களுக்கு ஆத்ம பலத்தை விட அறிவு பலம் அதிகம். பார்த்த மாத்திரத்தில் இவர்களைப் புரிந்து கொள்வது என்பது அரிது. ஏனென்றால் அமைதி இவர்கள் முகத்தில் இருக்கும். ஆக்ரோஷம் இவர்கள் மனதில் இடம் பிடிக்கும். ஒருவரைப் பார்த்தால், பார்த்த உடனேயே இவர்கள் இப்படித்தான் என்று கணித்து விடுவார்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள்.

வாழ்க்கை ரகசியங்களையும் மனதிலேயே வைத்துக் கொள்வார்கள். இவர்கள் புத்திசாலித்தனத்திற்கும் வாழ்வில் நடுப்பங்கில் புகழ் கூடும். மதிப்பும் மரியாதையும் உயரும். கன்னியர்களை தேர்ந்தெடுத்து மணம் முடிக்கும் போது கவனமாகப் பொருத்தம் பார்த்து செய்தால் புகழோடும், பொருளோடும் வாழ இயலும்.

துலாம்:

இவர்கள் கைராசி மிக்கவர்களாகவும், கடமை தவறாதவர்களாகவும், இரக்க சுபாவமும், அரக்க சுபாவமும் கலந்த மனோபாவம் பெற்றிருப்பார்கள். மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். குசேலரும் குபேரர் ஆகும் வாய்ப்பை வழங்குபவர் இவர்கள் ராசி நாதன். எனவே சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். கோபம் இவர்கள் உடன்பிறப்பு, கொஞ்சம் குறைத்துக் கொண்டால் மனிதருள் மாணிக்கம்.

வசீகர பார்வையும் கவர்ச்சியான முகத்தோற்றமும் பெற்ற இவர்கள் சமூகத்தில் தனி அந்தஸ்து பெற்று விளங்குபவர்கள். மற்றவர்கள் தொடங்கும் புதுத் தொழிலுக்கு கைராசி மிக்கவர்கள் இவர்கள் என்ற முறையில் குத்துவிளக்கு ஏற்றவும் புது கணக்கு போடவும் இவர்களை அழைப்பர். இவர்கள் தொழிலுக்கு இவர்களே புதுகணக்கு போட்டால் உயர்வான லாபம் ஏற்படும். மனைவி மக்கள் பேரில் இவர்கள் தொழில் செய்யும்போது மகத்தான பலன்களைக் காண்பார்கள்.

விருச்சிகம்:

இவர்கள் விறுவிறுப்பாக செயல்பட்டு காரியத்தில் வெற்றிகளைக் குவிக்கும் கூர்மையான புத்தியும், குணத்தில் இமயமாக விளங்குவார்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஈடு இணையற்றவர்களாகவும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். இவர்களிடம் ஓர் தெய்வீக சக்தி உள்ளதால் இவர்களை யாரம் எளிதில் அசைக்க முடியாது. விருப்பங்களை நிறைவேற்ற நண்பர்கள் மட்டமல்லாமல் தெய்வங்களும் இவர்களுக்கு ஆதரவு புரியும். இரவு நேரத்தில் எந்த செயலையும் ஆர்வத்தோடு செய்வார்கள்.

கற்பனை வளத்தாலும் காரியங்களை எளிதில் முடிக்கும் திறத்தாலும் மக்களைக் கவர்ந்திருப்பார்கள். வாக்கு பலிதமும், கனவு பலிதமும் இவர்கள் வாழ்க்கையை வழி நடத்திச் செல்ல வழிகாட்டியாக விளங்கும், தவறு செய்தவர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் தட்டி கேட்க தயங்க மாட்டார்கள். பத்திரிக்கை, ஆன்மீகம், கலைத்துறை, ஜோதிடம், எழுத்து, விஞ்ஞானம் போன்ற துறைகளெல்லாம் இவர்களுக்கு பொருத்தமான துறைகளாகும்.

தனுசு:

இவர்கள் உதவும் மனதாலும் உழைக்கும் திறத்தாலும், உயர்ந்த நிலையை அடைய முடியும். தெய்வ பக்தியோடு தேச பக்தியும் அதிகம் இருக்கும். அன்பு, பொறுமை, பக்தி, நாணயம் அனைத்தும் இவர்கள் கவரிமான் பரம்பரை என்று தான் சொல்ல வேண்டும். வீரமும், விவேகமும் கொண்டு செயல்படுவதோடு உறுதியோடு நின்று இறுதிவரை போராடுவார்கள். வெளியில் சுதந்திர பறவைகளாகத் திரியும் இவர்களுக்கு வீட்டில் ஏதாவது ஒரு வகையில் நிம்மதியின்மை ஏற்படும். தாரத்தாலும், தனயனாலும் நிம்மதி இழக்காதிருக்க வேண்டுமானால் நல்ல பொருத்தம் பார்த்தே மனம் முடிப்பது அவசியமாகும்.

மகரம்:

இனிமைக் குணத்தோடும் காட்சியளிக்கும் இவர்கள் வைராக்கிய மனம் பெற்றவர்கள். நண்பர்கள் வட்டாரத்தில் ஒர் தனி முத்திரையைப் பதித்து விடுவார்கள். இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அது அப்படியே நிகழும் என்பதால் நல்ல சிந்தனையாக இருந்தால் தான் அது நற்பலன்களைக் கொடுக்கும். இவர்களுக்கு உறவும் பகையும் தற்காலிகமானது தான். மந்தனுக்குரிய மகர ராசிக்காரர்களாகிய இவர்களுக்கு குடும்பத்திற்குள்ளேயே பகை குடி கொண்டிருக்கும்.

வெளிவட்டார நட்பு வியக்கும் விதம் அதிகரிக்கும் பொறுமைசாலிகளாக விளங்கும் இவர்கள் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்ட பிறகு தான் சாதனை உருவாகும். மேதினி போற்றும் வாழ்க்கை பிற்பகுதியில் தான் காணமுடியும். தாரத்தை தேர்ந்தெடுக்கும் போதும், தொழில் அமைக்கும் போதும் ஜாதக பலம் அறிந்து செயல்பட்டால் தான் சாதகம் பெறமுடியும். இவர்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மையை அகற்றினால் வாழ்வில் உயர்நிலை அடைய முடியும்.

கும்பம்:

செய்யும் தொழிலே தெய்வமாகக் கருதும் இயல்புடையவர். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க மாட்டார்கள். கொடுத்தால் அதை நிறைவேற்றாமல் இவர்களுக்கு தூக்கம் வராது. சனியின் ஆதிக்கத் பெற்ற இவர்கள் சமுதாயத்தில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்ற பட்டத்தையும் பெற்று வாழ்வார்கள். தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்க தயங்கமாட்டார்கள். தாராள மனப்பான்மை கொண்ட இவர்களுக்கு ஒரு பகை நட்பாகும் பொழுது மற்றொரு நட்பு பகையாகிவிடும். எனவே அதைப் பற்றி இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

எவ்வளவு உயர்ந்த நிலையில் இவர்கள் இருந்தாலும் நீங்காத மனக்குறை ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். தன் வாழ்வில் வரும் சந்தோஷமானாலும் சரி, சங்கடமானாலும் சரி பிறரிடம் சொல்லாமல் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறி தேற்றிக் கொள்வார்கள். படிப்பை விட அனுபவத்தால் உயர்நிலை அடைந்தவர்கள் பலர். பலரையும் ஏற்றிவிடும் ஏணியாக விளங்கும் இவர்கள் பெற்றோர் வழியில் பிரச்சினைகளை சந்திப்பார்கள். பெற்றோர்கள் தங்களைவிட சகோதர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

மீனம்:

இவர்கள் இல்லம் தேடி வருபவர்களுக்கு உள்ளம் மகிழ கொடுத்து உதவும் இவர்கள் மற்றவர்கள் செய்ய முடியாத காரியத்தை எளிதில் செய்து முடிக்கும் திறமை பெற்றிருப்பார்கள். பிறரது மனநிலையை அறிந்து கொண்டு அதற்கேற்றார்போல் செயல்படுவார்கள்.வாழ்க்கையில் படிப்படியான வளர்ச்சியை காண்பார்கள். இவர்கள் தவறு செய்தாலும் அதை ஒப்புக் கொள்வார்கள். இவர்களுக்கு பதவி தானே தேடிவரும்.

அதுதான் இவர்களின் தனித்தன்மை. வெளியூருக்கு செல்லுவது அதிக நாட்டம் கொள்வார்கள். அன்னதானம் முதல் ரத்ததானம் வரை செய்யும் மனப்பான்மை பெற்ற இவர்கள் நிதானம் மட்டும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள். பிறருடைய சொத்துக்காகவோ, பொருளுக்காகவோ ஆசைப்பட மாட்டார்கள்.

நல்லதை நினை மனமே!


புத்தர் ஒரு கிராமத்துக்கு சென்றார். அவருடைய போதனைகளை கேட்ட மக்கள், “இந்த மனுஷன் செய்யும் போதனைகளை கேட்டால் இல்லற எண்ணம் மாறி, துறவற வாழ்க்கை மீது பற்று வந்து விடும் போல் இருக்கிறதே,” என கருதினர். இனிமேல் இவருக்கு மரியாதை தரக் கூடாது என்று தீர்மானித்தனர்.

புத்தர் மீது களங்கம் சுமத்தி பலவகையில் இழிவான சொல்லாலும், தீய வார்த்தைகளாலும் திட்டினர். புத்தர் பொறுமையுடன் அதை ஏற்றார். இவ்வளவு செய்தும், அவர் எதிர்ப்பு காட்டாதது மக்களுக்கு வியப்பாக இருந்தது. குழம்பிப் போன மக்கள் அவரிடமே விளக்கம் கேட்டனர்.

எந்தவித சலனமும் இல்லாமல் புத்தர் சொன்னார். “நான் ஒரு கிராமத்திற்கு நேற்று சென்றிருந்தேன். அங்கே உள்ள மக்கள் என்னை அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். என் பசியை போக்க நிறைய பழம் கொடுத்தனர். ஆனால், அவற்றை நான் ஏற்று கொள்ளவில்லை. அவர்களிடமே கொடுத்து விட்டேன். அதே போல நீங்கள் பேசிய இழிவான பேச்சையும், உங்களிடமே திருப்பி கொடுத்து விட்டேன். எனக்கு சுவையான பழங்களும் ஒன்று தான், பழிச்சொல்லும் ஒன்று தான்,” என்றார். மக்கள் பதிலளிக்க முடியாமல் மவுனமாகி விட்டனர். 

மற்றவர்களிடம் இருந்து நம் செயல்களுக்கு பாராட்டும் கிடைக்கும், அவமதிப்பும் உண்டாகும். ஆனால், அதை பெரிதுபடுத்தக்கூடாது. அது மட்டுமல்ல! 

நாம் என்ன செய்கிறோமோ, அதுவே நம்மை திரும்ப வந்தடையும். எனவே, நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். மனதால் நல்லதையே நினைக்க வேண்டும்.

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும் - அதற்கான பரிகாரம்

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும் - அதற்கான பரிகாரம்

ஒருவர் ஜாதகத்தில், சனி, குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர், பார்த்து இருந்தாலோ 99 % அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் இருப்பதாக அர்த்தம். நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும், இது பொருந்தும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால், ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள்.

* வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

* தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

* மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய் வரும்

* தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

* திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

* குழந்தைப் பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்

பரிகாரம்: தமிழ்நாடு, கும்பகோணம் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் கோவிலுக்குச் சென்று, பிரம்மஹத்தி தோஷ நிவாரணம் செய்து, ஒரு வாசல் வழியே நுழைந்து வேறொரு வாசல் வழியே வெளியேறுதல். அங்கே அதற்குரிய யாகம் நடத்துதல். இதுவே மிகவும் சிறந்த பரிகாரமாகும். இதனை செய்தால் 6 மாதத்திற்குள் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். 

ஆயிரம் ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரியகோவில்

ஆயிரம் ஆண்டுகளை கடந்த தஞ்சை பெரியகோவில்

ராஜராஜ சோழன் உலகிற்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து ‘தஞ்சை பெரிய கோவில்’. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில், வலது புறம் கல்லணைக் கால்வாய், இடதுபுறம் சிவகங்கை பூங்கா, முன்புறம் ராஜா மிராசுதார் மருத்துவமனை இவைதான் பெரிய கோவிலின் தற்போதைய எல்லைகள். “பிரகதீஸ்வரர் கோவில்“ என வடமொழியிலும், “பெருவுடையார் ஆலயம்“ என தமிழிலும் அழைக்கப்படும்.

இக்கோவில் கட்டப்படும் முன்பு இந்த இடத்தில் நைமி சாரண்ய முனிவர்கள் வாழ்ந்து வந்ததாக புராண வரலாறு கூறுகிறது. சுற்றுப்புறத்தில் மலைகளே இல்லாத நிலையில் முழுக்க முழுக்க கருங்கல்லால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது இந்த கோவிலின் சிறப்புகளில் ஒன்று. ராஜராஜன் இந்த கோவிலை கி.பி.1004-ல் தொடங்கி 6 ஆண்டுகளில் கட்டி முடித்துள்ளான். 1010-ம் ஆண்டு முதல்முறையாக இந்தகோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

மகாமேரு மலை

உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக தஞ்சை பெரிய கோவில் திகழ்கிறது. இந்த கோவில் வானில் உள்ள கயிலாய மலையின் அமைப்பை ஒத்து கட்டப்பட்டுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். 216 அடி உயரமுள்ள விமானம் மகாமேரு மலையாக வடிக்கப் பட்டுள்ளது. அதன் கீழ் திசை சிகரத்தில் சிவபெருமான், உமாதேவி, குமாரர்கள், பிறதெய்வங் களின் சிற்பங்கள் உள்ளன.

தஞ்சை பெரிய கோவிலை உருவாக்கிய தலைமை தச்சன் ‘குஞ்சரமல்லன்‘. ராஜராஜன், இந்த சிற்பிக்கு “ராஜாராஜப் பெருந்தச்சன்“ என்ற விருது வழங்கி சிறப்பித்துள்ளான். பெரிய கோவிலின் வரலாற்றில் தொடர்புடைய வேறு பலரும் உள்ளனர். ராஜராஜன் பெரிய கோவிலைக் கட்டி முடித்துவிட்டு அதன் திருச்சுற்று மாளிகையின் பெரும்பாகத்தை எழுப்பும் பொறுப்பை தனது தளபதியான கிருஷ்ணன் ராமன் என்பவரிடம் ஒப்படைத்தான்.

கேரளாந்தகன் கோபுரம்

தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரமாகும். இதன் வாயிலில் நிறுத்தப்பட்டுள்ள 2 நிலைக் கால்கள் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. 4 அடி நீளம், 3 அடி அகலம், 40 அடி உயரத்தில் ஒரே கல்லிலான இந்த 2 நிலைக்கால்களும் தஞ்சையில் இருந்து குறைந்த பட்சம் 80 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. ராஜராஜன், கேரள மன்னன் பாஸ்கர ரவிவர்மனுடன் போர் தொடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக இந்த வாயிலுக்கு ‘கேரளாந்தகன் வாயில்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் இரண்டாவது கோபுரம் ‘ராஜராஜன் கோபுர வாயில்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திலும் 40 அடி உயரமுள்ள 2 நிலை கால்கள் உள்ளன.

மகாநந்தி

ராஜராஜன் வாயிலுக்கு எதிரே உள்ள 16 கால்மண்டபத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட மிகப்பெரிய நந்தி உள்ளது. இந்த நந்தி கி.பி. 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் காலத்தில் நாயக்க மன்னர்களால் உருவாக்கபட்டதாகும். இந்த மண்டபத்துக்கு தென்புறம் திருச்சுற்று மாளிகையில் வடதிசை நோக்கியவாறு காணப்படும் நந்தியே ராஜராஜன் காலத்தில் கோவிலுக்காக வடிக்கபட்டது.

கோவில் கருவறையில் பிரகதீஸ்வரர் என்ற பெரிய லிங்கம் இடம்பெற்றுள்ளது. கருவறையைச் சுற்றி 6 அடி அகலத்தில் சாந்தாரம் என்ற சுற்று அறை உள்ளது. இந்த அறைக்கு தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று திசைகளிலும் மிகப்பெரிய வாயில்கள் உள்ளன. இங்கு படிக்கட்டுகள் கிடையாது. காற்று இவ்வறைக்குள் புகுவதற்கு இவை அமைக்கப்பட்டுள்ளன. கடுங்கோடையிலும் இச்சுற்று அறையில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருக்கும். இந்த அறையின் கட்டுமான அமைப்பு ஐம்பூதங்களுள் ஒன்றான காற்று இறைவனை ஆராதிக்கும் வகையில் அமைந்துள்ளது. கருவறையினுள் 13 அடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது. சிவலிங்கத்தின் கீழ் 55 அடி சுற்றளவு உடைய வட்ட பீடமும், 6 அடி நீள கோமுகமான நீர்த்தூம்பும் அமைந்துள்ளன.

சிற்பங்கள்

கருவறையில் உள்ள லிங்க வடிவத்துக்கு மேலாக விமானத்தின் உச்சியில் திகழும் கலசத்தின் பீடம் வரை இக்கட்டிடம் உட்புறம் முழுக்கூடாக அமைந்துள்ளது. பிரபஞ்சம் பெருவெளியாகவும், ஆடவல்லான் என்னும் வடிவமாகவும் அந்த இடத்தை கருதியதால் சிவபெருமான் ஆடிக்காட்டும் 108 கரண சிற்பங்கள் செதுக்கப்பட வேலை தொடங்கப்பட்டது. இவற்றுள் 80 கரண சிற்பங்கள் மட்டுமே முழுமை அடைந்துள்ளன. ( இந்த சிற்பங்களை செதுக்கும் போது ஏற்பட்ட சில சம்பவங்களால் இப்பணி தடைப்பட்டதாக சில செய்திகள் கூறுகின்றன)

பொற்கோவில்

தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜன் கட்டியபோது விமானத்தின் மேல் செப்புத் தகடுகளைப் போர்த்தி, அவற்றின்மேல் பொன் பதித்ததாக அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் தங்கியுள்ள மேருமலை எவ்வாறு பொன்மலையாக விளங்குகிறதோ அதைப்போல தஞ்சை பெரியகோவிலும் பொன்மலையாக விளங்குகிறது’ என்று ஒட்டக்கூத்தர் தன் நூலில் எழுதி உள்ளார். விமானத்தின் மேல் பதிக்கப்பட்ட பொன் பிற்காலத்தில் படையெடுப்புகளில் சூறையாடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய மண்ணில் திகழ்ந்த ஒரே பொற்கோவில் தஞ்சை பெரிய கோவில்தான் என்பது வரலாற்று உண்மை. 

செல்வம், கடன் தொல்லை தீரும் பரிகாரம்

செல்வம், கடன் தொல்லை தீரும் பரிகாரம்

முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, நிலை வாசலில் மற்றும் கிணறு தோண்டும் சமயம் மற்றும் வேறு சில சூட்சுமமான இடங்களில் ஓட்டை காலணா, வசதி உள்ளோர் வெள்ளி நாணயம், அரச குலத்தோர் தங்க நாணயம் போன்றவை அவ்விடம் புதைத்து வைப்பது வழக்கம். இவை அந்த இடம்/மனை பல காலங்கள் செல்வ செழிப்புடன் இருக்க உதவும் ஒன்று. தற்காலங்களில் இவை காணப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, அதே வீரிய சக்தியை கொண்ட மற்றும் அனைவரும் எளிதாக செய்ய கூடிய ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து 'ஸ்ரீம்' என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.

குறிப்பு : வடகிழக்கில் மண் இல்லாதோர், அபார்ட்மெண்ட்களில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.

'ஸ்கூல் அட்மிஷனா...' இங்கே வாங்க...


பள்ளியில் சேர்க்க தயாராக இருப்பீர்கள். அதேநேரம் பிள்ளைகளை படிக்கவும் தயாராக்க வேண்டாமா... அதற்கு நீங்கள் அனுமதி பெற வேண்டிய தலம் தஞ்சை மாவட்டம் இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில். 

அரண்மனை கணக்கராக இருந்த சுதன்மன் எழுதிய கணக்கில், சோழ மன்னருக்கு சந்தேகம் எழுந்தது. கணக்கை சரியாக காண்பித்தும், மன்னர் ஏற்கவில்லை. 

கவலைப்பட்ட சுதன்மன், சிவபெருமானிடம் முறையிட்டார். இரக்கம் கொண்ட சிவன், கணக்கரின் வடிவிலேயே அரண்மனைக்கு சென்றார். மன்னரின் சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டு மறைந்தார். இதை அறியாத சுதன்மன், மன்னரைக் காண வந்தார். 

மீண்டும் கணக்கர் ஏட்டுடன், வருவதைஅறிந்த மன்னர், '' சுதன்மரே! கணக்கு தான் சரியாகி விட்டதே, மீண்டும் ஏன் வந்தீர்கள்?'' எனக் கேட்ட பிறகே உண்மை புரிந்தது. கணக்கர் வடிவில் இறைவனே வந்து சந்தேகம் தீர்த்ததை எண்ணி மன்னர் நெகிழ்ந்தார். சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டார். 

இதன் பின்னணியில், சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டு, 'எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்' என திருநாமம் சூட்டப்பட்டது. 'அட்சரம்' என்றால் 'எழுத்து'. சுவாமிக்கு 'தான்தோன்றீயீசர்' என்றும் பெயருண்டு. அகத்திய முனிவருக்கு சிவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. சுகந்த குந்தலாம்பாள், நித்திய கல்யாணி என இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. சூரியனுக்கு 'இனன்' என்று பெயருண்டு. அவர் சிவனை நம்பி வழிபட்ட தலம் என்பதால், 'இனன் நம்பு ஊர்' என்று பெயர் ஏற்பட்டு, 'இன்னம்பூர்' என மாறியது.

பள்ளியில் சேர்க்கும் முன், குழந்தைகளுடன் பெற்றோர் வழிபாட்டால் கல்வியில் வெற்றி பெறுவர். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, நெல்லில் எழுதும் சடங்கான 'அட்சர அப்யாசம்' நடத்தப்படுகிறது. பேச்சுத்திறமை, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நெல்லால் நாக்கில் எழுத அறிவுக்கூர்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் பெற இங்கு அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யலாம்.

சிவனை வழிபடும் விதத்தில், மார்ச் 26, - 28, செப்.16-18 ஆகிய நாட்களில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன. சிவன் நிகழ்த்தும் ஐந்து தொழில்களை குறிக்கும் விதத்தில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் அருளல் என கலசங்கள் உள்ளன.

எப்படி செல்வது: கும்பகோணம் - திருப்புறம்புயம் செல்லும் சாலையில் 8 கி.மீ.,யில் இன்னம்பூர்.
விசேஷ நாட்கள்: சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, சிவராத்திரி 
நேரம்: காலை 7:00 - 12:00 மணி - மாலை 4:00 - 08:00 மணி

Sunday 29 April 2018

மீன் தூண்டில்


ஒரு குளக்கரையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் சென்று கொண்டிருந்தார். அவரைக் கண்ட ஒரு பக்தர்,''குருதேவா! பக்தி மார்க்கத்தில் வெற்றி பெற விரும்புகிறேன். வழிகாட்டுங்கள்'' என்றார். 

''இதோ... இங்கு மீன் பிடிக்க துாண்டில் போடுபவனைப் பார். தினமும் இங்கு வந்து என்ன நடக்கிறது என்று கவனி'' என்று சொல்லி விட்டுப் போனார். நான்கு நாளாக தொடர்ந்து வந்த பக்தர், துாண்டில் போடுவதை உன்னிப்பாக கவனித்தார். பின் ராமகிருஷ்ணரைக் காணச் சென்றார். ''குருதேவா... துாண்டில் போடுவதை பார்த்து விட்டேன். 

இப்போதாவது வழி சொல்லுங்கள்'' என்றார். ''அது தான் வழி கிடைத்திருக்குமே.... இனி நான் சொல்ல என்ன இருக்கிறது?'' என்றார் ராமகிருஷ்ணர் புரியாமல் விழித்தார் பக்தர். 

அவரிடம் ராமகிருஷ்ணர், ''யார் பேச்சு கொடுத்தாலும், மீன் பிடிப்பவனின் கவனம் துாண்டில் மீதே இருக்கும். வெயிலில் காய்ந்தாலும் அவன் சிறிதும் கவலைப்பட மாட்டான். மீன் சிக்கியதும் சந்தோஷப்பட்டிருப்பான் இல்லையா....” என்றார். ''ஆமாம்....குருதேவா... அது தான் நடந்தது'' என்றார் பக்தர். 

''குடும்ப வாழ்வில் ஈடுபட்டாலும், கடவுள் சிந்தனையில் மனம் ஈடுபடட்டும். பக்தியை வெல்ல இதுவே வழி'' என்றார் ராமகிருஷ்ணர். 

இவரே நிரந்தர நீதிபதி


அழகர்கோவிலில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிக சக்தி வாய்ந்தவர். 'பதினெட்டாம்படியான்' என அழைக்கப்படுகிறார். இவரை வணங்கினால் நினைத்தது கைகூடும். இவரது சன்னதி நீதிமன்றம் போல விளங்குகிறது. இவரை சாட்சியாக வைத்து முக்கிய விவகாரங்களை கிராமமக்கள் பேசித் தீர்க்கின்றனர். இந்த வகையில் இவர் நிரந்தர நீதிபதியாக விளங்குகிறார்.

சக்கரத்தாழ்வாரை சரணடைவோம்


உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் போவதற்கு காரணம் பிரம்மஹத்தி தோஷம். தாய்க்கு உணவளிக்காமல் இருப்பது, பசுவை கொல்வது, ஆசிரியரை அலட்சியப்படுத்துவது, நன்றி மறப்பது, கோயில் சொத்தை திருடுவது போன்றவற்றால் இந்த தோஷம் உண்டாகும். 

இதற்கு பரிகாரமாக சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். திருமாலின் வலக்கையில் இருக்கும் சக்ராயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர். 

திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என பலபெயர்களில் இவரை அழைப்பர். சனிக்கிழமையில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் தீபம் ஏற்றி, 'ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம' என்ற மந்திரம் சொல்லி 12 முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். வியாழன் அல்லது சனிக்கிழமையில் சிவப்பு மலர்களால் ஆன மாலை சூட்டி வழிபட, நினைத்தது நிறைவேறும். தினமும் கைப்பிடி அரிசியை தானம் செய்யலாம். எள்சாதம் நைவேத்யம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பானகம் குடிக்கும் மங்களகிரி நரசிம்மர்


பானகம் குடிக்கும் நரசிம்மர் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகிலுள்ள மங்களகிரி மலையில் கோயில் கொண்டிருக்கிறார்.

தல வரலாறு: நமுச்சி என்ற அசுரன், பிரம்மாவை வேண்டி ஈரமான அல்லது காய்ந்த பொருட்களால் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது என்று வரம் பெற்றான். இதன் காரணமாக ஆணவத்துடன் அலைந்தான். தேவர்களுக்கு தொல்லை கொடுத்தான். தேவர்களின் தலைவனான இந்திரன் விஷ்ணுவைச் சரணடையவே, அவர் சக்கராயுதத்தை ஏவினார். அது கடலில் மூழ்கி நுரையில் புரண்டு ஈரம் போலவும், காய்ந்தது போலவும் காட்சியளித்தது. அது சீறிப் பாய்ந்து அசுரனின் தலையை அறுத்துச் சென்றது. அவரது உக்கிர சக்தி மங்களகிரி மலையை அடைந்தது. அங்கு கோயில் கட்டப்பட்டது. ஆஞ்சநேயரின் வழிகாட்டுதலின்படி, ராமர் இந்த மலைக்கு வந்தார்.

பானக பிரசாதம்: நரசிம்மரின் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பானகம் தயாரித்து, அதை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றியதும், 'மடக் மடக்' என்னும் சப்தம் கேட்கும். குறிப்பிட்ட அளவு குடித்ததும், சத்தம் நின்று விடும். பின் பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். சில சமயத்தில் நரசிம்மரின் வாயில் இருந்தும் பானகம் வெளியே வரும். 

குகையில் ரங்கநாதர்: கோயிலின் பின்புறம் லட்சுமி தாயாருக்கு சன்னதி உள்ளது. நரசிம்மர் சன்னதிக்கு வெளியே உள்ள குகையில் விஷ்ணுவுக்கு சிலை இருக்கிறது. இங்கு 25 அடி நீள ரங்கநாதர் சிலை உள்ளது. பாதுகாப்பு கருதி குகை வாசல் மூடப்பட்டுள்ளது. இங்கு மலையடிவாரத்தில் லட்சுமி நரசிம்மருக்கு கோயில் உள்ளது. 

எப்படி செல்வது: குண்டூரிலிருந்து விஜயவாடா செல்லும் வழியில் 21 கி.மீ., 
விசேஷ நாட்கள்: நரசிம்ம ஜெயந்தி, பங்குனி உத்திரம்
நேரம்: மலைக்கோயில்: காலை 6:00 - 2:00 மணி
அடிவாரக் கோயில்: காலை 6:00 - 12:30 மணி மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு : மலைக்கோயில்: 08645 - 233 174
அடிவாரக் கோயில்: 08645 - 232 945

வைகையில் இறங்குவது ஏன்?


ஏப்.30 அழகர் எழுந்தருளல்

வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த மலர்களெல்லாம் உதிர்ந்து வைகை வெள்ளத்தில் மிதந்து செல்லும் காட்சியே அழகு. இதற்கு சாட்சி பரிபாடல் போன்ற இலக்கியங்கள்.

அப்படிப்பட்ட இயற்கை வளம் மிக்க வைகை, சிவனால் உருவாக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்துக்கு வந்தவர்கள் தாகம் தீர்க்க, இந்த நதியை அவர் உருவாக்கினார். தன் சிரசை சற்றே கவிழ்த்து கங்கையை இங்கே விட்டார். சிவனின் நேரடிப் பார்வையில் உருவான நதி இது. 

தென்னக கங்கை என்று கூட இதற்கு பெயர். கங்கை என்றாலே பாவம் போக்குவது. இப்படிப்பட்ட நதியில் மூழ்கி எழ யாருக்கு தான் ஆசை வராது! பாவம் தீர்ந்தால் பிறவி இல்லையே! இப்படிப்பட்ட ஆசை தான் சுதபஸ் என்ற முனிவருக்கு எழுந்தது.

வைகையில் ஒருமுறை மூழ்கி எழுந்தாலே, செய்த பாவம் நீங்குமென்றால், அங்கேயே பலநாள் மூழ்கிக் கிடந்தால், பிறவியே இல்லாமல் செய்து விடலாமே! நதியில் மூழ்கினால், பிறவிக்கடலையே கடக்கலாமே என எண்ணினார். அதற்கேற்ப துர்வாச முனிவர் அருகே வர, இவர் கண்டும் காணாதது போல் இருந்தார். வந்தவருக்கு கோபம் வந்தது. ''ஏ! சுதபஸ், நீ மண்டூகமாகப் போ (தவளையாய் மாறு). வைகை நதியில் மூழ்கிக்கிட,” என்று சாபமிட்டார். சுதபஸ் நினைத்தது நடந்து விட்டது.

சுதபஸ் அன்று முதல் மண்டூகர் ஆனார். தவளையாக மாறி ஆற்றில் வசித்தார். மிக நீண்ட காலம் தென்னக கங்கையில் கிடந்தார். அவ்வப்போது தரைக்கு வருவார். காரணம் என்ன!

எம்பெருமானான சுந்தரராஜர் அழகர் மலையில் இருந்து என்று வைகைக்கு எழுந்தருளுகிறாரோ அன்று சாப விமோசனம் கிடைக்கும் என்பது துர்வாசர் கொடுத்த சாப விமோசனம். பெருமாளின் திருவடியைப் பார்த்தாலே சொர்க்கம்....

ஸ்ரீரங்கத்திற்கு செல்கிறோம். பெருமாளின் திருவடியைத் தான் முதலில் பார்க்கிறோம். பிறகு தான் கமலம் போன்ற முக அழகைத் தரிசிக்கிறோம். அந்தத் திருவடி நம்மை மோட்சத்திற்கே கொண்டு சென்று விடுமாம். பார்த்தாலே இப்படி என்றால்....திருவடி பட்டால் என்னாகும்!

அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் குதிரையில் வந்தார். வைகையைக் கடக்கும் போது, அவரது திருவடி மண்டூகர் மீது பட்டு சுயஉருவைப் பெற்றார். ஆகா...பெருமாளே! இனி எனக்கு மோட்சம் தானே!

“அடேய்! இப்போதே நீ மோட்சத்தில் தானே இருக்கிறாய். மண்டூகர் சுற்றுமுற்றும் பார்த்தார். ஆம்...திருவடி பட்ட அந்த நொடி, அவர் மோட்சத்திற்கு போய் விட்டார். நமக்கும் அதே நிலை தான்! ஆற்றில் இறங்கும் அழகரை தரிசித்தால் போதும். நல்வாழ்வு அமைவதோடு, மோட்சமும் கிடைக்கும்.

சர்க்கரை வழிபாடு 

அழகர் தரிசனம் நம் வாழ்வில் இனிமையைக் கொடுக்கும். அதனால் தான் அவர் ஆற்றில் இறங்கும் போது பக்தர்கள் செம்பில் சர்க்கரை நிரப்பி நிவேதனம் செய்து அனைவருக்கும் தானம் அளிப்பர். “இனிக்கும் சர்க்கரை போல் எங்கள் வாழ்வையும் இனிமையாக்கு அழகர் பெருமானே!” என்று அப்போது வேண்டுவர். தற்காலத்தில் சர்க்கரைக்கு பதிலாக சாக்லேட் வைப்பதும் வழக்கத்தில் உள்ளது. 

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்


* உலகத்தை அறியும் முன் மனிதன் தன்னை அறிய வேண்டும். அந்நிலையில் வெற்றி, தோல்வி எது வந்தாலும் யாருக்கும் தலை வணங்காமல் வாழ முடியும். 
* பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.
* மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே வழி.
* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சிக்கு அசையாதவனே அறிஞன்.
* ஆசையை ஒழித்தால், தாமரை இலை தண்ணீர் போல துன்பம் மனிதனை தீண்டுவதில்லை. 
* எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பது தான் பண்பட்ட மனிதனின் அடையாளம்.
* தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாக நேரிடும்.
* உடல், நாக்கு, மனம் மூன்றையும் அடக்கியாள்பவனே உண்மையான அடக்கம் கொண்டவன். 
* ஒருவனுக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் அவனவன் செயல்களே காரணம். 
* அன்பே உலகின் மகாசக்தி. இதை அறிந்தவன் வாழ்வே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். 
* அடக்கம் இன்றி நுாறு ஆண்டு வாழ்வதைக் காட்டிலும், ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.
* உதடுகள் கதவு போல பாதுகாப்பாக இருக்க வேண்டும். வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் அமைதியை தருவதாக இருக்க வேண்டும்.
*நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம். நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர். 
* மலர்களின் மணம் காற்றடிக்கும் திசை எல்லாம் பரவும். ஆனால் நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.
* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் கொண்டவர்கள் உடல் அழகாலும், பேச்சாலும் மட்டும் நல்லவர்களாகி விட முடியாது.
* பிறருக்கு கொடுப்பதே உண்மையான இன்பம். அதுவே ஆன்மிக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
* உங்களுடைய வார்த்தைகளைக் கொண்டு ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல. உங்களின் பேச்சு சமாதானத்திற்கு துணை நிற்கட்டும்.
* பொய்யை உண்மையாக திரித்து கூறி பிறர் மனம் நோகும் விதத்திலும் பேச வேண்டாம். 
* தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து கவலைப்படுவது அறிவுடைமையாகாது.
* துன்பத்தின் தன்மை அறிந்து அதை ஒழிக்கும் வழியை காண்பவரே நல்ல அறிஞர்.
* தீமைகளில் இருந்து விடுவிப்பதோடு, நன்மை அளிக்கும் உண்மையை பரப்ப உறுதி கொள்ளுங்கள்.
* மூடத்தனமான சடங்குங்களில் நம்பிக்கை வேண்டாம். நல்லொழுக்கம், நற்பண்புகள் மட்டுமே வாழ்வை மேம்படுத்தும்.

சூரியன் தரக்கூடிய நோய்கள்

சூரியன் தரக்கூடிய நோய்கள்

சூரியனோடு, ராகு, கேது, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணையும் காலகட்டத்தில், பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற நாடுகளுக்கு தீவிரவாதம் மற்றும் இயற்கை பேரிடர்களால் பல தொல்லைகள் ஏற்படக்கூடும். படுபாதகச் செயல்கள் தலைவிரித்தாடும். அங்குள்ள மக்கள் பெரும் பயத்தில் வாழும் சூழ்நிலை உருவாகும். அங்குள்ள ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி உண்டாகும். நிர்வாகத்தன்மை சீர்குலையும்.

அதேபோல் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில், ஆட்சி குழப்பம், முக்கிய தலைவர்களின் இறப்பு, ஆட்சி கவிழ்ப்பு, கட்சி களின் மோதல், பொதுமக்கள் குழப்பம், உலகையே அச்சப்படுத்தும் புதிய நோய்கள், தொற்று நோய்களால் பொதுமக்கள் பாதிப்பு, அரசு மீது பொதுமக்கள் கோபம் கொள்ளுதல், பொதுமக்கள் புரட்சிகளில் இறங்குதல் போன்வை ஏற்படக்கூடும்.

ஜாதகத்தில் சூரியன் யோகம் தரக்கூடிய நிலையில் இருந்தால் பல நன்மைகளும் உண்டாகும். சூரியன் யோகம் ஒருவரை உலகமே திரும்பி பார்க்க வைக்கும். தீராத நோய்கள் அனைத்தும் தீரும். மன தைரியம், உடல் வலிமை, நோயைத் தாங்கும் சக்தி வந்து சேரும். அரசியல் அதிகாரம் தானாக தேடி வரும். நற்பெயர் எடுப்பார்கள், தலைவர் பதவி தேடி வரும். மிகப்பெரிய தொழிற்சாலைக்கு முதலாளி மற்றும் நிர்வாகியாக வரக்கூடும். வேலைக்காரர்கள் விசுவாசமாக இருப்பார்கள். 

தந்தை வழி உதவிகள், தந்தைக்கு உயர்வுகள், வெற்றிகள் வரக்கூடும். தந்தை வழி சொத்துகள் கைக்கு வரலாம். மனதில் நினைத்ததை நடத்திக் காட்ட போதிய மன ஆற்றல், அறிவும், திறமையும் வெளிப்படும். தெளிவான மனநிலை பிறருக்கு அறிவுரை கூறி வழி நடத்தும் சக்திகள் வரக்கூடும். அரசனையே எதிர்த்து நிற்கும் மனத்துணிவை பெறுவீர்கள். எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு திடமான முடிவெடுக்கும் சக்தியை தருவதும், பிரச்சினைகளில் இருந்து விடுபட வைக்கும் சக்தியும் சூரியனுக்கு உண்டு.

சூரியனால் வரக்கூடிய நோய்கள்

மனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். பலம் குறைந்து காற்று போன்ற உடலை தருவதும் சூரியனே. உடல் உஷ்ணம், முதுமையில் வரும் தளர்வு உள்ளிட்ட நோய்கள், நாக்கு ருசியை மறந்துபோவது, தெளிவான மனநிலை இல்லாமல், தன்னம்பிக்கை குறைந்து சோர்வான உடலைத் தருவது, எந்த நேரமும் அலைந்து திரிந்தபடி உடலை வருத்திக் கொள்வது, வலுவான எலும்புகள் இல்லாமல் இருப்பது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் பார்வைக் கோளாறு, தலைவலி, தலைசுற்றல், சிறுசிறு பிரச்சினைகளுக்கு கடும் கோபம் கொள்ளுதல் உள்ளிட்ட நோய்களுக்கு சூரியனே காரணமாக இருக்கிறார்.

* ரிஷபம், மகரம், கும்பம் ஆகியவை சூரியனுக்கு பகை ராசிகளாகும். இந்த ராசிகளில் சூரியன் நின்றால், அந்த நபருக்கு வயிற்றுக் கோளாறு, மூலநோய் ஏற்படும். மேலும் உங்களது திறமைக்கு சோதனைகள் வரக்கூடும். தந்தைக்கு பல சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கும்.

* சூரியன் தனக்கு நீச்ச ராசியான துலாம் ராசியில் நின்று இருந்தால், மன தைரியம் குறையும். தலையில் ஏதாவது பிரச்சினை வந்து கொண்டே இருக்கும். நெஞ்சு வலி, இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். தந்தை இல்லாமல் இருக்கலாம் அல்லது உயிரோடு இருந்தும் எவ்விதமான பயன் இல்லாமல் இருக்கலாம்.

* சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் சரி... அந்த நபர்களுக்கு எலும்பு முறிவு, தலையில் ரத்தம் கசிவு ஏற்படக்கூடும். தந்தை சுயநலமாக இருப்பார். தந்தையின் மரணத்திற்கு ஜாதகர் ஒரு வகையில் காரணமாக இருப்பார்.

* சூரியன் தனது பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், நோயை தீர்ப்பதில் போதிய அக்கறை காட்டாமல் இருப்பார்கள். நோய்களை பெருக்கிக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வார்கள்.

* சூரியன் லக்னத்திற்கு 6,8,12-ம் ராசியில் மறைவு பெற்று நின்றால், பரம்பரை வியாதி வரக்கூடும். நோய்க்கு தவறான மருந்துகள் எடுத்து அவதிப்படுவார்கள். தந்தைக்கு கண்டங்கள் வரக்கூடும் அல்லது சிறு வயதில் தந்தையை இழந்து இருப்பார்கள்.

* சூரியன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, நோய்கள் அகல அவ்வப்போது மாத்திரை எடுத்துக் கொள்வீர்கள். அதனால் நிரந்தர தீர்வு காண முடியாத நோய்கள் வரலாம். இந்த நபரின் தந்தைக்கு ஆயுள் குறைவதும், தந்தையால் எவ்விதமான நன்மைகள் இன்றியும் இருப்பார்.

* சூரியனே லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் பாவியாகவும் இருந்தால், அந்த ஜாதகருக்கு நன்மைகள் பலவும் தடைபடும். கண் பார்வை குறையும். தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு உதவாத ஜாதகராக அவர் இருப்பார்.

* சூரியனை பகை கிரகங்கள் பார்வை செய்தால், புதுவகையான நோய்கள் வரக்கூடும். தந்தைக்கு பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.

* சூரியன் அஷ்டவர்க்கத்தின் 4 பரல்களுக்கு கீழ் இருந்தால், சூரிய கிரகத்தால் வரக்கூடிய நோய்களில் ஏதாவது ஒன்று ஜாதகருக்கு வரக்கூடும். நெஞ்சு பதறக்கூடிய பல சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். தந்தைக்கு வளர்ச்சி தடைபடும். 

சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும்.

பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தப்படி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும். 

குறிப்பாக சித்தர்களின் அருளை நாம் கிரிவலத்தில் பெற முடியும். சித்ரா பவுர்ணமி வழிபாட்டின் மிக முக்கிய அம்சமாக சித்தர்களின் அருளை பெறுவது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நமக்கு மட்டுமல்ல சித்தர்களுக்கும் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூமி யில் இருந்து ஒருவித உப்பு கிளம்பும். அந்த உப்புக்கு பூமிநாதன் என்று பெயர். இந்த உப்பு அதிக சக்தி தரக்கூடியதாகும். இதை சித்தர்கள்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு தெரிவித்தனர்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று அந்த உப்பு சக்தி பெறுவதற்காகவே சித்தர்கள் பல இடங்களில் தோன்றுவது உண்டு. மேலும் பல முக்கிய தலங்களில் உள்ள இறைமூர்த்தங்களை வழிபடுவதற்காக சித்தர்களும் வருவார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை, சதுரகிரி மலை, பொதிகை மலை உள்பட பல்வேறு மலைகளில் சித்தர்களும் வலம் வருவார்கள்.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரரின் அருளை பெறுவதற்காக சித்தர்கள் பல்வேறு வடிவங்கள் எடுத்து கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது. வண்ணத்துப்பூச்சியாக, ஏதோ விலங்காக அல்லது மனிதர்கள் போலவே சித்தர்கள் வலம் வருவார்கள். அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் சென்றால் நமக்கு அண்ணா மலையாரின் அருளுடன் சித்தர்களின் அருள் ஆசியும் கிடைக்கும்.

எனவேதான் கிரிவல தலங்களில் உள்ள சித்தர்களின் ஜீவ சமாதியை சித்ரா பவுர்ணமி தினத்தன்று தவறாமல் வழிபட வேண்டும் என்று நமது மூதாதையர்கள் அறிவுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலையில் ஏற்கனவே நிறைய சித்தர்களின் அருள் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று மற்ற இடங்களில் உள்ள சித்தர்களும் திருவண்ணாமலைக்கு வந்து விடுவார்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆகையால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்பவர்கள் ஈசன் பெயருடன் சித்தர்களையும் நினைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.

பொதிகை மலையில் அகத்தியரை வழிபட்டால் சிவபெருமானின் திருவடியை மிக எளிதாக சென்றடைய முடியும் என்பார்கள். அதுபோல மதுரையில் ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி தினத்தன்றும் இந்திரனே நேரில் வந்து சொக்கநாதரை பூஜித்து வழிபடுவதாக சொல்வார்கள். அந்த சமயத்தில் மதுரை சொக்கநாதரை நாமும் வழிபட்டால் இந்திரனின் அருள்ஆசி பெற முடியும்.

சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திரை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் சேர்வதால் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கணித்து உள்ளனர். கடலில் நீராடினால் இதுவரை சம்பாதித்த பாவங்கள் அனைத்தையும் கரைத்து விடலாம் என்பது ஐதீகம். கடலில் புனித நீராட வருபவர்களுக்காக சித்தர்கள், ரிஷிகள் தயாராக காத்து இருப்பார்கள் என புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே கடலில் புனித நீராடினால் சித்தர்களின் ஆசி பரிபூரண மாக நமக்கு கிடைக்கும்.

தஞ்சை பெரிய கோவிலில் சித்ரா பவுர்ணமி விழாவை “சித்தர் பெருவிழா” என்றே நடத்துவார்கள். இதையட்டி நந்தி எம்பெருமானுக்கும், கருவூராருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்னதானமும் செய்வார்கள். இதில் பங்கேற்றால் சித்தர் பெருமான் கருவூராரின் அருளை பெறலாம்.

சித்தர்கள் பெரும்பாலும் ஏழை எளியவர்களின் பசியை போக்க அன்னதானம் செய்யுங்கள் என்பதையே வலியுறுத்தி உள்ளனர். எனவே முடிந்தால் அன்னதானம் செய்யுங்கள். இல்லையெனில் அன்னதானத்துக்கு உதவி செய்யுங்கள்.

சதுரகிரியில் இதை கருத்தில் கொண்டே 24 மணி நேரமும் அன்னதானம் கொடுக்கிறார்கள். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் கணக்கில் அடங்காத சித்தர்களை தரிசனம் செய்ய முடியும். குறிப்பாக கோரக்கர் சித்தரை நினைத்து தியானம் செய்தால் நிச்சயமாக அவரது தரிசனத்தை சதுரகிரியில் பெற முடியும்.
சதுரகிரியில் சித்தர்களின் முக்கிய ஆசியாக நமக்கு நல்ல உடல்நலம் கிடைக்கும். 

16 வகை பேறுகளில் ஒன்று நோயின்மை. சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்கும் நோயின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சித்தர்கள் கண்டுபிடித்து கூறி உள்ளனர். எனவே சதுரகிரியில் எந்த அளவுக்கு நாம் முழு மனதுடன் சித்தர்களை வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு நன்மைகள் கிடைக்கும். சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் அருகே 18 சித்தர்களின் சன்னதி உள்ளது. அந்த பகுதியில் அமர்ந்து தியானம் செய்தாலே போதும், சித்தர்கள் உங்களுக்குள் ஊடுருவுவார்கள்.

அதுபோல திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலும் கிரிவலத்தின்போது சித்தர்களின் அருளை பெறலாம். திருச்செங்கோடு மலையானது ஓங்கார வடிவில் அமைந்தது. எனவே அங்கு சித்தர்கள் அருள் அதற்கேற்ப கிடைக்கும். 

நாகை மாவட்டம் எட்டுக்குடி முருகன் கோவி லில் பதினெண் சித்தர்களில் ஒருவரான வால்மீகி சித்தர் அடங்கியுள்ளார். சித்ரா பவுர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதில் பங்கேற்றால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆலயங்களில் மட்டுமின்றி ஜீவ சமாதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு சித்தரின் ஜீவ சமாதிக்கு சென்று வழிபாடு செய்தால் சித்ரா பவுர்ணமி வழிபாட்டுக்குரிய அனைத்து பலன்களையும் நிச்சயம் பெற முடியும்.

சிங்கம்புணரியில் புகழ்பெற்ற முத்து வடுகநாதர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அந்த ஜீவ சமாதி தலத்தில் சித்தரின் திருஉருவ சிலையை தேரில் வைத்து நகர் வலமாக எடுத்து செல்வார்கள். அப்போது சித்தரை வழிபட்டால் நாம் கேட்டது எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்தர்களை வழிபடச் செல்லும் முன்பு காலை வீட்டில் குளித்து முடித்து விட்டு உங்களது குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். முடிந்தவர்கள் சக்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது நல்லது. மாலையில் சந்திரனை பார்த்து விட்டு ஜீவ சமாதிக்கு சென்று வழிபடுங்கள் அல்லது சித்தர்களை நினைத்தப்படி கிரிவலம் வாருங்கள்.

உங்களது தேடல் உண்மையாக இருந்தால் நிச்சயம் சித்தர்களின் அருளை பெற முடியும்.

வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி

வாழ்வில் சிறப்பு சேர்க்கும் சித்ரா பவுர்ணமி

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.

மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்-நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள். சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது.

கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப்பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும்படியும் வேண்டினான்.

அப்போதுதான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் ‘சித்ர குப்தன்’ எனப்பெயர் பெற்று ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங் களைப் பெற்று வளர்ந்தது.

கல்வி வேள்விகளில் சிறந்தவன் ஆன சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம்.

‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.

மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.

சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ர குப்தனை மனதார வழிபட வேண்டும்.

சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த ‘சித்ரா அன்னம்’ எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.

சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்யாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.

இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும்.

அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம். 

Saturday 28 April 2018

கிருஷ்ணசாமி திருக்கோவில் தல வரலாறு

கிருஷ்ணசாமி திருக்கோவில் தல வரலாறு

கி.பி.13-ம் நூற்றாண்டில் கேரளா வயநாடு பகுதியை ஆண்டு வந்த வர்மா மன்னரால் கட்டப்பட்டது கிருஷ்ணசாமி திருக்கோவில். இவர் சிறந்த கிருஷ்ண பக்தர் ஆதலால் சர்வாங்கநாதன் என்று அழைக்கப்பட்டவர். இச்செய்தி திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் வரலாற்றிலும் திருவிதாங்கூர் வைக்கம் கருவூல ஆவணத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. இம் மன்னர் திருக்குறுங்குடி கோயிலில் புகழ் வாய்ந்த மணி ஒன்றையும் தானமாக வழங்கியுள்ளார்.

கி.பி.15-ம் நூற்றாண்டு காலத்தில் இருந்து வைஷ்ணவ யாத்ரீகர்கள் வட இந்தியாவிலிருந்து இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்துள்ளனர். கங்கை மற்றும் யமுனா எனும் பகுதிகளின் இடையே இருக்கும் தீர்க்கப்பட்டர் என்னும் வைஷ்ணவ பக்தரால் பல்வேறு பொருள்கள் இத்திருக்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை ஆராய்ச்சியின்படி இச்சம்பவம் கி.பி.1464-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதுர்வேதி மங்கலத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோவிலுக்கு 2 அந்தண பெண்களையும், சிறிய அளவில் நிலங்களும் மன்னர் ஆதித்ய வர்மாவால் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதை திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் வைஷ்ணவ அடையாளத்துடன் கூடிய செம்புபட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் வடசேரி மற்றும் கிருஷ்ணன் கோவில் பகுதியே அன்றைய சதுர்வேதி மங்கலம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நாகர் கோவில் நகரத்திற்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் அமைந்திருப்பதால் இத்தலத்திற்கு கிருஷ்ணன் கோவில் என்ற பெயர் அமைந்தது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நவநீத கிருஷ்ண மூர்த்தி தனது இருகரங்களிலும் வெண்ணெய்யை ஏந்தி நின்ற கோலத்தில் அழகுற காட்சி தருகிறார்.

இத்தலத்தை குமரியின் குருவாயூர் என்று சிறப்பாக அழைப்பர். தினந்தோறும் கிருஷ்ணசாமியின் முகத்தில் சந்தனம் அல்லது வெண்ணெயால் அலங்காரம் செய்யப்படுகிறது. இது அவரது பக்த கோடிகளுக்கு ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாள் இரவும் பாலகிருஷ்ண சாமி நித்திரைக்கு செல்லும் முன் ஊஞ்சல் சேவையுடனும், பாராயணத்துடனும் செல்வதை காண கண்கோடி வேண்டும். இக்காட்சியை கண்டு நெய்வேத்திய பிரசாதம் அருந்தி வருபவர்களுக்கு சந்தான வரம் கிடைக்கும் என்பதும் இத்தலச் சிறப்பாகும்.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இடைவெளிக்குப் பிறகு இக்கோவிலில் புனரமைக்கப்பட்டு புதியதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்துடன் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் வடசேரியை சார்ந்த கே.கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் கமிட்டி மூலமாக சிறப்புற கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் சித்ரா பௌர்ணமி

sivan_par

இறைவனது திருநாம கீர்த்தனம் உள்ளிட்ட புண்ணியச் செயல்களால் பாவங்கள் நசித்துவிட, செய்த புண்ணியங்களும் இறைவனிடம் சேர்ந்துவிட, "இருவினை' என்னும் மாயையினை அந்த ஜீவன் எளிதில் கடந்து, உடலை விட்டு உயிர் நீங்கும் கட்டத்தில் மோட்ச நிலையைப் பெற்றுவிடுகிறது.

இந்தப் பேரின்ப நிலையை அடையத்தான் பலவிதமான புண்ணியங்களை ஆற்றுமாறு நமது பெரியோர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் முக்கியமானது அன்னதானம். வறுமை நோயால் பீடிக்கப்பட்டு பசித்தவர்களுக்கும், உடலால் உழைத்து உண்ண முடியாதவர்களுக்கும், ஆதரவற்றோர்க்கும், குறிப்பாக இறையடியார்களுக்கும் செய்யப்படும் அன்னதானம் பெரும் புண்ணியச் செயலாகும். இதனால் ஏற்கெனவே நாம் செய்த பாவங்களும் தீரும். "அன்ன தானம்' என்றால் நூற்றுக் கணக்கானவர்களுக்கோ, ஆயிரமாயிரம் பேருக்கோ சோறிட வேண்டுமென்பது இல்லை. உள்ளார்ந்த அன்போடு நமது வசதிக்கேற்ப ஒரு கைப்பிடி சோறோ- அரைக் குவளைக் கஞ்சியோ கொடுத்தாலும் அது உயர்ந்த தானமே! இதில் ஐயம் வேண்டாம்.

ஆனால் இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், "பாத்திரமறிந்து பிச்சையிடு' என்பதைத்தான். "அன்ன தானம்' என்று தம்பட்டம் அடித்து, தகுதியற்றவர்களுக்கு (மதுவருந்துபவர்கள், அங்கஹீனம் இல்லாதிருந்தும் உழைக்கப் பிடிக்காத சோம்பலுடையோர், சாப்பிட்ட தெம்பில் திருடப் போகிறவர்கள், இறைவனை ஏசுபவர்கள் போன்றோருக்கு) செய்கின்ற அன்னதானத்தினால் எந்தப் பயனும் இல்லை. தகுதியான மனிதர்களுக்கு பணிவோடு அன்னதானம் செய்தால் முழுப் பயனையும் பெறலாம். மனிதர்கள் என்றில்லை... எறும்புகளுக்கு சர்க்கரை இடுவது, காகம் உள்ளிட்ட பறவைகளுக்குச் சோறிடுவது, மாடுகளுக்கு தீவனம் அளிப்பது போன்றவையும் மனித குலத்துக்குச் செய்கின்ற அன்னதானத்துக்கு இணையானவையே!

புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனினும் சில நற்காரியங்களைச் சில புண்ணிய தினங்களில் செய்வது சிறப்பென்று வகுத்துள்ளது இந்து தர்மம். அதற்கு சூட்சுமமான காரணத்தையும் வைத்துள்ளது. அவற்றிலொன்றுதான், சித்ரா பௌர்ணமியன்று அன்னதானம் செய்வது!

அன்னதானத்துக்கு ஏன் "சித்ரா பௌர்ணமி' திருநாளை தேர்ந்தெடுக்க வேண்டும்...? காரணம் உள்ளது. அது "சித்திரகுப்தன்' என்ற தேவனின் பிறந்த நாள். "படங்களைச் சேகரிப்பவன்' என்பது இப்பெயருக்கான நேரடிப் பொருள். விஷயம் என்னவெனில் நாம் செய்கிற பாவ, புண்ணியங்களைச் சித்திரங்கள்போல் மனதில் பதித்து வைத்துக் கொண்டு உடலை விட்டு உயிர் நீங்கிய பின் அவற்றை ஜீவனின் முன் பட்டியலிடும் பணியைச் செய்பவன் இந்தத் தேவன்.

சித்திரகுப்தன் வெளியிடும் தகவல்களுக்கேற்ப, அவனது தலைவனாகிய யமன், அந்த ஜீவனுக்கு தண்டனைகளை விதிப்பான்; ஏனைய யம கிங்கரர்கள் அவற்றை நிறைவேற்றுவார்கள். "சித்ரா பௌர்ணமி' என்றாலே சித்திர குப்தனின் நினைவும், "பாவங்கள் செய்தால் நரக தண்டனை நிச்சயம்' என்ற உணர்வும் அனைவர்க்கும் ஏற்பட்டுவிடும். அந்த நினைவில், பண்ணிய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக "அன்ன தானம்' செய்ய வேண்டுமென்ற எண்ணமும் உருவாகும். அதற்காகத்தான் "சித்ரா பௌர்ணமி' தினத்தை, "அன்ன தானத்துக்கு உகந்த நாள்' என்று அறிவித்தனர் நமது மூதாதையர்கள்.

"ராஜ சேகரன்' என்ற சோழ மன்னன், சித்ரா பௌர்ணமி தினத்தில் சிவனடியார்களுக்கு அன்னதானம் அளிக்க "பூதானம்' செய்த விவரங்களை திருச்சி நெடுங்களத்திலும், மலைக்கோட்டையிலும் உள்ள கல்வெட்டுகளில் காணலாம். இது, அன்னதானத்துக்கும் சித்ரா பௌர்ணமிக்கும் உள்ள தொன்மைத் தொடர்பை உணர்த்துகின்ற சான்றுகளில் ஒன்றாகும்.

தனது குருவான பிரஹஸ்பதியை அவமதித்த பாவத்தை நீக்கிக்கொள்ள பூவுலகு வந்த தேவேந்திரன், சித்ரா பௌர்ணமி இரவில்தான் ஒரு கதம்ப வனத்தில் சொக்கலிங்க மூர்த்தியை தரிசனம் செய்தான். அந்தச் சிவலிங்கத்துக்கு பொற்றாமரையால் அர்ச்சனை செய்து, நிவேதனம் படைத்து, சிவ தியானத்தில் மூழ்கியிருந்ததால் அவனது பாவங்கள் நீங்கின; அவனது உடலும் முன்புபோல் பொன்னிறம் பெற்றது! இந்தத் தலமே தற்போது "மதுரை' எனப்படுகிறது. ஆக அன்னதானத்தோடு, சிவ பூஜையையும் சித்ரா பௌர்ணமியன்று செய்வதால் மகா பாதகங்களும் தீரும் என்பது தெளிவாகிறது.

ஆனால் காலப் போக்கில் "சித்ரா பௌர்ணமி' என்பது சுற்றமும் நட்பும் சேர்ந்து கொண்டு, விதம் விதமாகச் சமைத்து, கடற்கரை, ஆற்றங்கரையோரம், எதுவுமில்லையென்றால் வீட்டு மொட்டை மாடியில் "நமக்கு நாமே' தின்று மகிழும்படி திரிந்துவிட்டது. இதையொட்டி புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு "சித்ரான்னம்' என்று பெயரும் சூட்டிவிட்டோம். ஆனால் உண்மையான சித்ரா பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கும், அன்னதானத்துக்கும் உரியது. அதற்கான வாய்ப்பை நமக்கு உருவாக்கித் தருவதற்காகவே சித்ரா பௌர்ணமியை ஒட்டி பல ஆலயங்களில் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.

இப்புண்ணிய நாளின் பொருளை உணர்ந்து அன்னதானத்திலும், இறைவனது திருநாம கீர்த்தனத்திலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டால் சித்திரகுப்தன் முன் கை கட்டி நிற்கும் நிலைமையே நமக்கு ஏற்படாது. எதற்குக் கை கட்டுவானேன்? மாறாக, "சிவ, சிவ' என்று கை தட்டிப் பாடிக்கொண்டே சிவலோகம் சேர வழி பார்ப்போமே! நாம் சிறிது முயற்சித்தாலும் போதும்! "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலவன்' ஆதரவுக் கரம் நீட்டாமலா போய்விடுவான்?

இந்தாண்டு சித்ரா பௌர்ணமி நாளை 29.04.2018 அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 

சித்ரா பௌர்ணமியும், சித்ரான்ன ரகசியமும்..

amman

மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

ஆன்மிக ரீதியாக இந்த நாளை சித்திரகுப்தன் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

ஒருநாள் கையிலாயத்தில் பார்வதி தேவி அழகான உருவத்தை ஓவியமாக வரைந்துகொண்டிருந்தார். அந்த உருவம் பார்ப்பதற்கு மிகவும் தத்ருபமாக இருந்தது. இதைப் பார்த்த சிவபெருமான் அதற்கு உயிர் கொடுக்க நினைத்தார். உடனே ஈசன் தனது வாயினால் ஊத அந்த உருவம் உயிர்பெற்றது. 

சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தைகாக்கும் சக்தியைக் கொடுத்து யமதர்மராஜனுக்கு உதவியாக இருக்கப் பணித்தார். அவரும் மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார்.

சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தைக் காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் (குப்தன் என்றால் ரகசியத்தைக் காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார்.

ஜோதிட ரீதியாக சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைகிறார். மேஷம் என்பது சித்திரை என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் உச்சமடைக்கூடிய சூரியன் அதன் 7-ம் இடத்தில் சந்திரனும் ஒன்றாக இருப்பதால், சூரியனும், சந்திரனும் சமசப்தமான பார்வை பார்த்துக்கொள்வதால் அந்தப் பௌர்ணமிக்கு அளவுகடந்த சக்தி கிடைக்கிறது. இந்த நாளில் நாம் கடவுளை பிரார்த்தனை செய்யும் போது, வழக்கத்தை விட அதிக பலன் கிடைக்கும் என்று ஜோதிட ரீதியாகக் கூறப்பட்டுள்ளது. 

அந்த காலத்தில் கிராம மக்கள் சித்ரா பௌர்ணமி அன்றிரவு (வீட்டில் இருப்பவர்கள், அக்கம் பக்கத்தினர்) அவரவர்கள் செய்த உணவினை நிலவொளியில் வைத்து, சில நாட்டுப்புறப் பாடல்களை பாடி, மகிழ்ச்சியுடன் தாங்கள் கொண்டுவந்த உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள். அப்போது சந்திரனுடைய காந்தசக்தியை அந்த உணவு மூலமாகப் பரவும் என்பது ஐதீகம். அதை உட்கொண்டால், உடலுக்கும், மனதுக்கும் நன்மையைத் தரும் என்று மக்களின் நம்பிக்கை. இந்த முறையே சித்ரான்னம் என்று கூறுவர். 

செய்! நல்லதை செய்!


''சிவபெருமானே! பக்தர்களில் சிலர் வாழ்வில் ஒரு முறையாவது, கைலாய யாத்திரை வந்து புண்ணியம் தேடுகின்றனர். சிலர், காசி வந்து கங்கையில் நீராடி, உன்னை தரிசித்து நன்மை அடைகின்றனர். ஆனால், இப்படி ஏதும் செய்ய முடியாத நிலையில் உலகில் பலர் இருக்கிறார்களே.... அவர்களின் கதி என்னவாகும்?'' என கேட்டாள் பார்வதி.

''பூலோகத்திற்கு போனால் தான் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்,'' என்ற சிவன், அவளுடன் காசி வந்தார். இருவரும் தங்களை முதியவர்களாக உருமாற்றி கொண்டனர். தள்ளாடியபடி, விஸ்வநாதர் கோயில் முன் குறுகலான சந்தில் நின்றனர்.

கிழவருக்கு மூச்சு இறைக்க கண்கள் படபடத்தன. தடுமாறி கீழே விழுந்தார். மூதாட்டி அவரை தாங்கி பிடித்து, மடியில் படுக்க வைத்து, போவோர் வருவோரிடம், ''என் கணவர் உயிர் பிரியும் நிலையில் இருக்கிறார். தவிக்கும் அவருக்கு கொஞ்சம் கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ஊற்றுங்களேன். வயதான என்னால் எழுந்து போக முடியவில்லை...'' எனக் கெஞ்சுவது போல நடித்தாள்.

யாரும் உதவவில்லை. சூரியன் மறைந்து இருள் பரவியது. கங்கையில் நீராடுவோர் எண்ணிக்கை குறைந்தது. திருடன் ஒருவன் தன் களைப்பு தீர கங்கையில் நீராட வந்தான். முதியவரின் நிலை கண்டு இரக்கம் கொண்டான். இருப்பினும் மனதிற்குள், 'காவலர்கள் தன்னை அடையாளம் கண்டு, கைது செய்து விடுவார்களே' என்ற பயம் மேலிட்டது. இருந்தாலும், தன் கைகளால் கங்கை தீர்த்தத்தை மொண்டு வந்து, முதியவரின் வாயில் ஊற்றப் போனான்.

''தம்பி.... என் கணவரின் உயிர் பிரியப் போகிறது. அதனால், உன் வாழ்வில் செய்த நற்செயல் ஏதேனும் ஒன்றை எண்ணியபடி, இந்த தீர்த்தத்தை விடு!” என்றாள் மூதாட்டி. நற்செயல் ஏதும் அவன் வாழ்வில் செய்யாதவன் என்பதால், எதுவும் நினைவுக்கு வரவில்லை. அதே சமயம் பொய் சொல்லவும் அவன் விரும்பவில்லை.

“அம்மா! நான் இதுவரை நற்செயல் செய்தது கிடையாது. தீமை நிறைந்த என் வாழ்வில், முதல் முறையாக இன்று தான் இரக்கம் கொண்டு நற்செயல் செய்ய வந்தேன். இதை நினைத்தபடியே தீர்த்தம் கொடுக்கிறேன்,'' என்று ஊற்றினான். அடுத்த நொடியில் இருவரும் சிவபார்வதியாக உருமாறி நின்றனர்.

'' இளைஞனே! இன்று முதல் உனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. வாழ்வின் இறுதியில் நீ மோட்ச கதியும் பெறுவாய். மனதில் இரக்கமும், கையில் புனித தீர்த்தமும், நாவில் சத்தியமும் கொண்ட உனக்கு எப்போதும் இறையருள் துணை நிற்கும்'' என கூறி மறைந்தனர். காசி போவதை விட, கைலை தரிசனத்தை விட, ஒரே ஒரு நல்ல செயல் செய்தால் சிவபார்வதி அருள் கிடைக்கும்.

படியேறி தரிசித்தால் வளம்தரும் நைனாமலை வரதராஜப்பெருமாள்


சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் பிரதான சாலையில் இருக்கும் புதன்சந்தை, நாமக்கல் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பகுதி. இங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது நைனாமலை வரதராஜப்பெருமாள் கோயில். திரும்பிய திசையெல்லாம் பசுமை மிளிர, இயற்கை எழில் கொஞ்சும் மலையின் உச்சியில்2,600 அடி உயரத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் வரதராஜப்பெருமாள். குவலயவல்லித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்தில் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. ‘‘நைனாமலை இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே இருந்துள்ளது. எம்பெருமாள் தங்கியிருந்து அருள்பாலித்து வரும் திருத்தலங்களுள்  முதன்மையானது என்றும் புராணக்குறிப்புகள் கூறுகிறது. 

பிரம்மாவால் பாடப்பெற்ற பிரமாண்ட புராணத்தில் பதினாறாவது அத்தியாயத்தில் இந்த மலையின்  சிறப்பு தெளிவாக விளக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. பின்னர் திருமலை நாயக்கமன்னரின் தம்பியான கோவிந்தப்ப நாயக்கரால் சில பகுதிகள் கட்டப்பட்டது’’ என்கிறது தலவரலாறு. மலையடிவாரத்தில் பாதமண்டபத்திலிருந்து மலையின் படிகள் தொடங்குகின்றன. 

உச்சிக்கு சென்று வரதராஜரை வழிபட 3360 படிகளை கடந்து செல்ல வேண்டும். பாத மண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் பக்தர்களின் நலனுக்காக இறைவனை வேண்டி வணங்கி நிற்கிறார் ஆஞ்சநேயர். அவரை வணங்கிய பின்னரே பக்தர்கள் படியேற துவங்குகின்றனர். மலைஉச்சியின் முகப்பில் கோயிலின் பெரிய மண்டபமும், திருமடைப் பள்ளியும் கட்டப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்துச் செல்லும் வகையில், மண்டபம்  விசாலமாக பரந்து கிடக்கிறது. 

திருமடைப்பள்ளியை தாண்டியதும் கோயில் படிகள் தொடங்குகின்றன. உபய வரதராஜ பெருமாளின் கோயிலுக்கு வலப்புறம், பாறையில்  வாலி சுக்ரீவர் திருவுருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. அதை தாண்டி சென்றதும், கோயிலின் தல விருட்சமான நெல்லி மரம் உள்ளது. அதனையடுத்து கம்பீரமான எம்பெருமாள் வரதராஜ பெருமாள் சன்னதியை மலையின் உச்சியில் காணலாம். 

மூலவராக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழில்கோலம் தாங்கி அருள்பாலித்து வருகிறார். கோயிலில் கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா  மண்டபம் என மூன்று மண்டபங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் ராம லட்சுமணர், சீதாதேவி, நவநீத கிருஷ்ணர், ராதா ருக்மணி வேணுகோபால், துவார  பாலகர்கள் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன. கருடாழ்வார் கோயிலின் எதிரில் உள்ளார். கல்லால் செய்யப்பட்ட தீபஸ்தம்பமும் உள்ளது. 

தீபஸ்தம்பத்தில் பெருமாளுக்கு  திருமஞ்சனம் செய்யும் போதெல்லாம் திருக்கோடி தீபம் ஏற்றப்படுகிறது. பெருமாளின் வலது புறத்தில் குவலய வல்லி தாயாரின் தனி சன்னதி அமைந்துள்ளது. தமிழ் வருடம் ஆனி முதல் தேதியிலிருந்து, ஆடி மாதம் 30ம் தேதி முடிய  இரண்டு மாதங்களும் கதிரவன் உதிக்கும் போது கதிரவனின் கதிர்கள் சுவாமியின் மீது நேரே விழுந்து பிரகாசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

தற்போது அரிவாள் பாழி, பெரியபாழி, இடுக்கு பாழி, அம்மம்பாழி, பாண்டவ தீர்த்தம் அல்லது ஐந்தாம் பாழி என்று 5 தீர்த்தங்கள் உள்ளன. திருப்பதியை போன்றே பெருமாளுக்கு வாய்ப்பூட்டு பாதுகையுடன், கோமாளி வேஷம் ஆகியவை செலுத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்  பெருமாளை தரிசனம் செய்கின்றனர். திருப்பதிக்கு இணையான வரதராஜப் பெருமாளை படியேறி வழிபட்டால் வளமும், நலமும் பெருகும். மனித வாழ்க்கை சுபிட்சமாகும் என்பது ஆண்டாண்டு காலமாய் பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கை.

சிவனுக்கு சுடுகாட்டு சாம்பல் ஏன்?


சண்டன் என்ற வேடன், தன் மனைவி சண்டிகாவுடன் வசித்தான். ஒருமுறை வேட்டைக்கு சென்ற போது, ஒரு வில்வ மரத்தடியில், அழகிய சிவலிங்கம் ஒன்று புதிதாய் தோன்றி இருப்பதை கண்டான். பக்திப் பெருக்கில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அந்த லிங்கத்திற்கு எப்படி பூஜை செய்வது என அவனுக்கு தெரியவில்லை. அப்போது அங்கே சிங்ககேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்த அவன், தன் பரிவாரங்களை பிரிந்து, வழி தெரியாமல் தவித்தான். சண்டனிடம் வழி கேட்டு, காட்டிலிருந்து வெளியேறி விடலாம் என நம்பினான். லிங்கத்தின் மீது பார்வையை பதித்திருந்த சண்டன், மன்னன் வந்ததை கவனிக்கவில்லை. எனவே, அவன் முதுகில் தட்டி தன் பக்கம் ஈர்த்தான்.

உணர்வு வரப்பெற்ற சண்டன்,''அரசே, மன்னியுங்கள். பாராமுகமாய் இருந்து விட்டேன். வாருங்கள்... வழி காட்டுகிறேன்!'' என்றான். செல்லும் வழியில், ''மகாராஜா, இங்கே இருக்கும் சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும் என சொல்லுங்கள்,'' என்றான்.

வீட்டுக்கு எப்போது செல்வோம் என்ற எரிச்சலில் இருந்த மன்னன், ''உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து லிங்கத்தின் மீது ஊற்று. சுடுகாட்டில் வெந்த பிணங்களின் சாம்பலை கொண்டு வந்து லிங்கத்துக்குப் பூசு. கைக்குக் கிடைக்கிற பூக்களையெல்லாம் சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவை நிவேதனமாக வை. ஒரு கும்பிடு போடு!'' என்று அலட்சியத்தோடு கூறினான்.

இதை கவனமாக கேட்ட சண்டன், அது தான் நிஜமான பூஜை முறை என நம்பி, மன்னன் சொன்னபடியே பூஜை செய்தான். ஒரு நாள் சுடுகாட்டில் பிணம் எதுவும் எரியவில்லை. சிவபூஜை தடைபட்டது. இதனால் கவலைப்பட்ட சண்டனிடம், அவன் மனைவி சண்டிகா, ''கவலைப்படாதீர்கள். நாம் குடியிருக்கும் குடிசையைக் கொளுத்தினால், நான் அதில் விழுந்து, வெந்து சாம்பலாவேன். அதை சிவலிங்கத்திற்கு பூசுங்கள், சிவன் மகிழ்வார்,'' என்றாள்.
சிவபூஜையே பெரிது என நினைத்த சண்டனும் அப்படியே செய்தான். அன்று சிவராத்திரி என்று அவனுக்கு தெரியாது. அவனது பக்தியை மெச்சிய சிவன் அவன் முன் தோன்றினார். சண்டிகாவை உயிர்ப்பித்தார். குடிசையும் முன்பு இருந்தது போலாயிற்று. வேடனுக்கு சகல கலைகளும் தெரிய அருள்பாலித்தார். 

மரணத்துக்கு பின் சிவகணங்கள் எதிர்கொள்ள, அவன் கயிலையை அடைந்தான். வேடன் தன் மீது வைத்த அன்பை உலகிற்கு வெளிப்படுத்தவே, சிவன் சுடுகாட்டு சாம்பலை பூசினார்.

ஸ்ரீ ராமானுஜ ரகசியம்

Image result for ramanuja

புரட்சித் துறவி ராமானுஜர் திருக்கோஷ்டியூர் திவ்ய தேசத்தில், இதே ஊரில் வாழ்ந்திருந்த திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உபதேசம் பெற்றார்.  அப்போது திருவரங்கத்தில் அரங்கனுக்கு சேவை செய்து கொண்டிருந்த அவர், இப்படி உபதேசம் பெற பெரிதும் துன்பப்பட வேண்டியிருந்தது. ஆமாம், அவ்வளவு சுலபத்தில் மந்திரோபதேசம் கிடைத்துவிடவில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு ராமானுஜரும் சளைக்காமல் பதினேழு முறை நடந்து, நடந்து சென்று  முயற்சிக்கவும் தயங்கவில்லை. அப்படி 17 முறை நடந்து வந்ததில் ராமானுஜரைப் பொறுத்தவரை ஓர் அனுபவம் கிட்டியிருக்கும். வழியில் தன்னைக் காணும்  தாழ்குல மக்கள் பலர் கைக்கட்டி, வாய்பொத்தி, சற்று விலகிப்போய் அவருக்கு வழிவிட்டு ‘ஒதுங்கும்’ முறை கண்டு மனம் வெதும்பியிருப்பார். நம்மைப் போல  இவர்களும் மனிதர்கள்தானே, இப்படி இவர்கள் ஒதுங்கிப் போய், நம்மை ஏன் ஒதுக்குகிறார்கள் என்று குமுறியிருப்பார். 

இப்படி மரியாதை, தாழ்வு மனப்பான்மை அல்லது பயம் காரணமாக ஒதுங்கிச் செல்லும் மனிதர்கள் தன் நடைவழியில் மட்டு மல்லாமல், இந்த பாரத தேசமெங்கும்  பரவியிருக்கவேண்டும் என்றே அவர் கருதினார். ‘நாராயணன் படைப்பில் இப்படி ஒரு பேதமா, இது தவறாயிற்றே’ என்று கருதியிருப்பார். இந்த இவருடைய  எண்ணத்தை மேன்மேலும் வலியுறுத்தவும், வலுப்படுத்தவும்தான் திருக்கோஷ்டி நம்பி அவரை பதினேழு முறை அலைக்கழித்தார் போலிருக்கிறது! பதினெட்டாம்  முயற்சியில் குருவின் திருவருள் கிட்டியது. அப்போதும் நம்பிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும். ‘இத்தனை முயற்சித்து இவன் மந்திரோபதேசம் பெற  வருகிறானென்றால், இதில் ஏதோ சுயநலம் இருக்க வேண்டும். அந்தமந்திரத்தின் பலனை ஏதேனும் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள  நினைக்கிறானோ’ என்றும் யோசித்தார். 

அதனாலேயே, உபதேசம் செய்த பிறகு, ‘‘இந்த உபதேசம் உனக்கு, உனக்கே உனக்கு மட்டும்தான். இதனை நீ துஷ்பிரயோகம் செய்தாயானால், உனக்கு  மறுமையில் நரகவாசம்தான்’’என்று பயமுறுத்தி வைத்தார். இந்த பயமுறுத்தலுக்குப் பின்னாலும் ஒரு தந்திரம் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  வெறுமே மந்திரோபதேசம் மட்டும் பெறுவது ராமானுஜரின் நோக்கமாக இருக்காது; பதினேழு முறை புறக்கணிக்கப்பட்டு அவமானமடைந்தாலும் மீண்டும் வந்து  உபதேசம் அளிக்குமாறு இறைஞ்சும் இந்த மனோதிடம், வேறு எதையோ திட்டமிட்டிருக்கிறது என்று நம்பி உணர்ந்திருப்பார். அதனாலேயே அந்தத் திட்டம்  நிறைவேறட்டும் என்று கருதியே போலியாக பயமுறுத்தியிருக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் தனித்தனியே ரகசியம் பாராட்டினாலும் பொதுநோக்கு  ஒன்றாகவே இருந்தது!

ஒற்றை மனிதராக ராமானுஜர் அந்த மந்திரோபதேசத்தைப் பெற்று, பிறகு தான் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கும், அவருக்கு அடுத்தவருக்கும் என்று சராசரியாக ஒரு பரம்பரைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அந்த உபதேசத்தை வழிமொழிவது என்ற வாழையடி வாழை கருத்து, கொள்கையை நம்பிக்கொண்டிருந்தார்,  நம்பி. ஆனால் ராமானுஜரோ மரம் ஒன்றானாலும், விழுதுகள் ஆயிரம் என்ற ஆலமரக் கருத்து, கொள்கையைக்கொண்டிருந்தார். அதனால்தான் குரு  பயமுறுத்தினாலும் ஒரு தனி மனிதரை இழப்பதால் பல்லாயிர மக்கள் நலம்பெற முடியுமானால், அந்த மனிதர் தானாகவே இருக்கட்டும் என்று உறுதி  பூண்டிருந்தார் ராமானுஜர். நிதானமாக குருவின் உபதேசத்தை செவிமடுத்தார். மந்திரத்தையும் அதன் பொருளையும் உள்வாங்கிக்கொண்டார். இதயக் கோயிலில்  திருமாலை இருத்தி, அந்த மந்திரத்தால்பல நூறுமுறை அர்ச்சித்தார். பிறகு திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோயில் கோபுரத்தின் மீது ஏறினார்.

அங்கிருந்தபடியே ஊர் மக்களை எல்லாம் அழைத்தார். கோபுர உச்சியிலிருந்து ராமானுஜர் கூவி அழைப்பதை அறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே உடனேயே  கூடிவிட்டார்கள். விபரீத கற்பனையுடன் அண்ணாந்து பார்த்த அவர்கள் மீது ‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்ற அஷ்டாக்ஷர மந்திரம் பூத்தூவலாக விழுந்தது.  ஒரு துளி பட்டவுடன் சிலிர்ந்துக்கொண்ட அவர்கள், அதுவே மழையாகப் பொழிந்தபோது அப்படியே பரவசப்பட்டனர். மந்திரத்தையும் அதன் பொருளையும் நன்கு  கேட்ட அவர்கள், அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி தங்களுக்குள் ஓர் உயர்வை வளர்த்துக் கொண்டனர். ‘நமக்கும் இறையருள் உண்டு’ என்ற நம்பிக்கை  துளிர்த்தது. இருகரம் கூப்பி மேலே நின்று கொண்டிருந்தராமானுஜரைத் தொழுதார்கள். எதிர்பார்த்தது போல நம்பி போலியாக வெகுண்டார். ‘‘என் நம்பிக்கைக்கு  துரோகம் இழைத்துவிட்டாய். உனக்கு நரகம்தான்’’ என்று சபிப்பது போல நடித்தார். 

ராமானுஜருக்குத் தான் தனிச் சலுகை அளிக்கவில்லை என்று தன்கூட இருந்தவர்களுக்கு ‘ஆறுதலும்’ அளித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரே  உணர்ச்சிவசப்பட்டவராக, ‘‘நீர்தான் எம்பெருமானாரோ!’’ என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டார். அப்போதே மானசீகமாக அவர் நாராயணனிடம்  வேண்டிக்கொண்டிருந்திருப்பார்: ‘பகவானே, இந்தப்பிள்ளைக்கு தீர்க்காயுசு கொடு.’இதனால்தான் ‘நரகம்தான்’ என்று சபிக்கப்பட்டவரால், ஒரு முழு மனித  ஆயுளை வாழ்ந்து  120 ஆண்டுகள்  சமூகத்துக்கும் இறைவனுக்கும் தன் நிறைவுநாள்வரை ராமானுஜரால் உழைக்க முடிந்திருக்கிறது. இந்தப் பெருமை  ஸ்ரீராமானுஜருக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த மனிதப் பிறவியும், சமுதாய நன்மைக்காக, இப்படி முழு வாழ்க்கையை, உலகத்தின் எந்தப் பகுதியிலும்  வாழ்ந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம்!

நரசிம்ம ஜெயந்தி விரத வழிபாடு

நரசிம்ம ஜெயந்தி விரத வழிபாடு

இறைவன் எங்கும் நிறைந்துள்ளார் என்பதையும், தூய பக்தி கொண்டவர்கள் அசுரர்கள் என்றாலும், அவர்களைக் காப்பது இறைவனின் கடமை, அப்படி தன்னை நம்பும் பக்தனைக் காக்க இறைவன் தாமதிக்காமல் வருவார் என்பதையும் பறைசாற்றும் அவதாரம், நரசிம்மர் அவதாரம் ஆகும்.

யோக நரசிம்மர், வீர நரசிம்மர், உக்கிர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், கோப நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் இருக்கின்றன. இவைத் தவிர பஞ்சமுக நரசிம்மர், விஷ்ணு நரசிம்மர், ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங் களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாலிப்பதைப் பார்க்கலாம்.

நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்த நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நரசிம்ம ஜெயந்தி (28-4-2018) இன்று விரதமிருந்து இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும். 

நரசிம்மருக்கு செவ்வரளி போன்ற சிவப்பு வண்ண மலர்கள், சர்க்கரைபொங்கல், பானகம் மற்றும் நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம். மேலும் நரசிம்மர், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், விஷ்ணுவுக்கு ஏற்ற மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றையும் நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம். 

Friday 27 April 2018

சரியான தண்டனை



மாணிக்கத்திற்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. திருநீறை சாம்பல் என கேலி செய்வான். ஒருநாள் இரவு காவலாளி இல்லாத மாந்தோப்பில் பழங்களை பறித்து, அதை விற்று விட்டான்.

பழங்கள் காணாதது கண்ட தோட்டக்காரன், காவலர்களை நியமித்தான். இதைஅறியாத மாணிக்கம் மீண்டும் தோட்டத்தில் நுழைந்தான். சத்தம் கேட்ட காவலர்கள் மெதுவாக அவனை நோக்கி வர, அதை கவனித்த மாணிக்கம் உஷாரானான்.

மறைந்து நின்று, அங்கு குவிந்து கிடந்த சாம்பலை நெற்றியிலும், உடலிலும் பூசிக்கொண்டான். தியானத்தில் இருப்பது போல் நடித்தான். காவலர்கள் திருடன் யாரையும் காணாமல், யாரோ சாமியார் இருப்பதை கண்டனர். 

மறுநாள், ஊருக்குள் இந்த தகவல் செல்ல, மக்கள் பழம், தேங்காய், கற்பூரம், காணிக்கை பணத்துடன் தோட்டத்தில் இருந்த சாமியாரை தரிசிக்க வந்தனர். மாணிக்கம் அவர்களை ஆசிர்வதிப்பது போல நடித்து, கிடைத்ததை சேமித்தான். ஆனால் ஒருநாள் அவனது குட்டு வெளிப்பட்டு சிக்கினான். சிறையில் சித்ரவதைகளை அனுபவித்தான். 

தெய்வத்தின் பெயரால் மோசடி செய்ததால் என்னாகும் என புரிந்து கொண்டு, ''சிவனே! எனக்கு சீக்கிரம் விடுதலை கொடு,'' என பிரார்த்திக்க ஆரம்பித்தான்.

கேட்டவரம் தரும் காணியாளம்மன்


குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்கள் உள்ளன. அந்த வகையில் பல நூறு ஆண்டுகளுக்கு பழமையான காணிகாரர்களும், அந்த காலத்து மன்னர்களும் வந்து வணங்கியதாக கூறபடுகின்ற கோவில் ஆரல்வாய்மொழி, நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழிக்கும், செண்பகராமன்புதூருக்கும் இடையே சாலை ஓரமாக உள்ளது. இந்த கோவிலில் விநாயகர்,காணியாளம்மன், சாஸ்தா, பூதத்தார் மற்றும் பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவிலில் உள்ள பூதத்தார் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மலை வழியாக இங்கு வந்து தங்கியதாகவும், திருச்செந்தூர், திருக்கணங்குடி, நம்பி கோவில், பின்னர் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

காணியாளம்மனை வேண்டி வருகின்ற பக்தர்கள் எந்த வித வேண்டுதலுடன் வந்தாலும் உடனே முடித்து கொடுக்கின்ற சக்தி வாய்ந்த அம்மனாகவும் கருதப்படுகின்றது. இந்த பகுதி முழுவதும் முன்பு விளைநிலங்கள் நிறைந்த பகுதியாகவும், காடுகள் போன்று அடர்ந்து காணப்படுவதாகும். அப்போது விளைநிலங்களை வன விலங்குகள் வந்து நாசம் செய்கின்ற சூழ்நிலையில் விவசாயிகள் இந்த கோவிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் நடத்தி வேண்டுதல் வைத்ததால் விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் வருவது இல்லை என கூறப்படுகிறது. இதே போல் இந்த பகுதிகளில் தொழில் நடத்துகின்றவர்கள் தங்களது தொழில்களில் ஏற்படுகின்ற சிக்கல்களை நீக்க மனம் உருகி வேண்டினால் எந்தவித சிக்கல்களையும் தீர்த்துவிடுகிறாள் காணியாளம்மாள். 

இதனால் காணியாளம்மாளை நாடி வருகின்ற பக்தர்களின் கூட்டம் அதிகம். பிரச்னைகளோடு தன்னை நாடி வருகின்ற பக்தர்களுக்கு கேட்டவரம் தருகிறாள் காணியாளம்மன். கோவிலுக்கு அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயில் அமைந்துள்ள சாலையில் தனியாகவோ, புது தம்பதியாகவோ செல்கின்றவர்கள் எந்த வித பயமுமின்றி செல்வதற்காக காணியாளம்மன் பெண் உருவில் தோன்றி அவர்களுடன் சென்று பாதுகாப்பாக செல்கின்ற அளவுக்கு துணையாக செல்வாளாம். பங்குனி உத்திர நட்சத்திரத்திற்கு மன்னர் காலத்தில் இருந்தே கோவிலுக்கு பாத்தியப்பட்ட குடும்பத்தார்கள், தங்களின் குடும்பகோவிலாக கொண்டு ஒன்று கூடி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்து வருகின்றனர்.

பாபாவின் நாமம் சக்தி வாய்ந்தது

Image result for sai baba

ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப் போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும். சாயி நாமம் நம்முள் எப்போதும் எதிரொலித்துக் கொண்டிருக்க நாம் எப்போதும் முயற்சி செய்ய வேண்டும். அதாவது இறைவனின் நாமத்தை நம் மூச்சுடன், நாம் உணராவிட்டாலும் கூட, நமக்குள் தொடர்ச்சியாகவும் இயல்பாகவும் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சுவிடுவதற்கு நாம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. அது தன்பாட்டிற்கு ஒரு சீரான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. 

அது போல சாயின் நாமத்தை நாமும் நம்பிக்கையோடு மனதுக்குள் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். இறைவனின் நாமத்தை சுவாசத்துடன் இணைக்கும் போது அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. நம்மால் முடிந்த போதெல்லாம் ஒவ்வொரு மூச்சுக்கும் 'சாயி சாயி' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருப்பது அல்லது நாமத்தை ஜெபிக்காமல் சாயியின் நினைவை மனதில் கொள்வது இவையும் நல்லதே. மெல்ல மெல்ல நமக்குள், நம்மையறியாமலேயே, உள்ளுக்குள் நிகழும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இது மாறிவிடும். ஒவ்வொரு செயலும், எண்ணமும் பாபாவின் நினைவுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.