Tuesday 24 April 2018

நட்சத்திர நாயகன்


உத்தான பாதன் என்ற மன்னருக்கு சுநீதி, சுருசி என்ற இரு மனைவியர். சுநீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். இரண்டாம் மனைவியான சுருசி, அவளது மகன் உத்தமன் மீது மன்னர் பாசம் கொண்டிருந்தார். தந்தையின் அன்பு கிடைக்காமல் மூத்த மகன் துருவன் ஏங்கினான்.

ஒருநாள் மன்னரும், சுருசியும் பேசிக் கொண்டிருந்தனர். மன்னரின் மடியில் உத்தமன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட சிறுவனான துருவன், தானும் தந்தையின் மடியில் உட்கார முயன்றான். சுருசி அவனை தடுத்ததோடு, கடுமையாகத் திட்டினாள். சித்தியின் கோபம் கண்டு அழுதபடி தாயிடம் ஓடி வந்தான். பெற்ற வயிறு அல்லவா... பிள்ளையை அணைத்தபடி கதறினாள்.

''மகனே! பாவியான என் வயிற்றில் பிறந்து விட்டாயே! உயிர்களுக்கெல்லாம் தந்தையான மகாவிஷ்ணுவின் திருவடிகளை பிடித்துக் கொள். நிச்சயம் நல்வழி கிடைக்கும்'' என்றாள்.

துருவன், ''இந்த அரச பதவியை விட மேலான பதவியை அடைந்து, அனைவரும் போற்றும்படி வாழ்வேன்'' என சபதமிட்டு காட்டுக்கு புறப்பட்டான். அவனைக் கண்ட நாரதர், 'ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன் பின் நாரதர், உத்தான பாதனைக் காண அரண்மனைக்கு வந்தார். 

துருவனின் தெய்வபக்தி, மனஉறுதியை மன்னருக்கு எடுத்துச் சொன்னார். 'இளைய மனைவிக்காக, பெற்ற பிள்ளையிடம் அன்பு காட்டாமல் இருந்து விட்டேனே' என மன்னரின் மனம் உறுத்தியது. துருவன் காட்டில் உணவு, உறக்கம் இல்லாமல் தவத்தில் ஆழ்ந்தான். 

அவனது தவக்கனல் தேவலோகத்தை எட்டியது. துருவனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட வைகுண்டம் விரைந்தனர். ''சுவாமி... பச்சிளம் பாலகன் துருவனின் தவ ஆற்றலை எங்களால் தாங்க இயலவில்லை. அவனது விருப்பம் அறிந்து வரங்களை அளித்து எங்களை காத்தருள வேண்டும்'' என்றனர்.

பூலோகம் புறப்பட்ட விஷ்ணு துருவனுக்கு காட்சியளித்தார். ''குழந்தாய்! தேவர்களுக்கும் கிடைக்காத அரிய பேற்றினை உனக்கு அளித்தேன். நீ இந்த உலகில் பலகாலம் நல்லாட்சி புரிவாய். பின் வான மண்டலத்தில் நட்சத்திரங்களை ஆட்சி புரியும் 'துருவபதம்' என்னும் உயர்நிலை அடைவாய்'' என்று வரம் கொடுத்தார். 

விஷ்ணுவின் அருள் பெற்ற துருவன், பெற்றோரை காண அரண்மனை திரும்பினான். மகனைக் கண்ட தாய் சுநீதி எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டாள். தவறை உணர்ந்த மன்னரும், அவனை கட்டித் தழுவினார். பிள்ளையின் வருகையை மக்கள் அறியும் விதத்தில் விழாவாக கொண்டாடினார். 

மன்னருக்கு பிறகு, துருவனின் நல்லாட்சி தொடர்ந்தது. துருவனின் ஆயுள் முடிந்ததும், வான மண்டலத்தில் துருவ நட்சத்திரம் ஆனான். நட்சத்திர நாயகனான துருவன் இன்றும் நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறான். 

No comments:

Post a Comment