Saturday 28 April 2018

ஸ்ரீ ராமானுஜ ரகசியம்

Image result for ramanuja

புரட்சித் துறவி ராமானுஜர் திருக்கோஷ்டியூர் திவ்ய தேசத்தில், இதே ஊரில் வாழ்ந்திருந்த திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உபதேசம் பெற்றார்.  அப்போது திருவரங்கத்தில் அரங்கனுக்கு சேவை செய்து கொண்டிருந்த அவர், இப்படி உபதேசம் பெற பெரிதும் துன்பப்பட வேண்டியிருந்தது. ஆமாம், அவ்வளவு சுலபத்தில் மந்திரோபதேசம் கிடைத்துவிடவில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்கு ராமானுஜரும் சளைக்காமல் பதினேழு முறை நடந்து, நடந்து சென்று  முயற்சிக்கவும் தயங்கவில்லை. அப்படி 17 முறை நடந்து வந்ததில் ராமானுஜரைப் பொறுத்தவரை ஓர் அனுபவம் கிட்டியிருக்கும். வழியில் தன்னைக் காணும்  தாழ்குல மக்கள் பலர் கைக்கட்டி, வாய்பொத்தி, சற்று விலகிப்போய் அவருக்கு வழிவிட்டு ‘ஒதுங்கும்’ முறை கண்டு மனம் வெதும்பியிருப்பார். நம்மைப் போல  இவர்களும் மனிதர்கள்தானே, இப்படி இவர்கள் ஒதுங்கிப் போய், நம்மை ஏன் ஒதுக்குகிறார்கள் என்று குமுறியிருப்பார். 

இப்படி மரியாதை, தாழ்வு மனப்பான்மை அல்லது பயம் காரணமாக ஒதுங்கிச் செல்லும் மனிதர்கள் தன் நடைவழியில் மட்டு மல்லாமல், இந்த பாரத தேசமெங்கும்  பரவியிருக்கவேண்டும் என்றே அவர் கருதினார். ‘நாராயணன் படைப்பில் இப்படி ஒரு பேதமா, இது தவறாயிற்றே’ என்று கருதியிருப்பார். இந்த இவருடைய  எண்ணத்தை மேன்மேலும் வலியுறுத்தவும், வலுப்படுத்தவும்தான் திருக்கோஷ்டி நம்பி அவரை பதினேழு முறை அலைக்கழித்தார் போலிருக்கிறது! பதினெட்டாம்  முயற்சியில் குருவின் திருவருள் கிட்டியது. அப்போதும் நம்பிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும். ‘இத்தனை முயற்சித்து இவன் மந்திரோபதேசம் பெற  வருகிறானென்றால், இதில் ஏதோ சுயநலம் இருக்க வேண்டும். அந்தமந்திரத்தின் பலனை ஏதேனும் சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள  நினைக்கிறானோ’ என்றும் யோசித்தார். 

அதனாலேயே, உபதேசம் செய்த பிறகு, ‘‘இந்த உபதேசம் உனக்கு, உனக்கே உனக்கு மட்டும்தான். இதனை நீ துஷ்பிரயோகம் செய்தாயானால், உனக்கு  மறுமையில் நரகவாசம்தான்’’என்று பயமுறுத்தி வைத்தார். இந்த பயமுறுத்தலுக்குப் பின்னாலும் ஒரு தந்திரம் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  வெறுமே மந்திரோபதேசம் மட்டும் பெறுவது ராமானுஜரின் நோக்கமாக இருக்காது; பதினேழு முறை புறக்கணிக்கப்பட்டு அவமானமடைந்தாலும் மீண்டும் வந்து  உபதேசம் அளிக்குமாறு இறைஞ்சும் இந்த மனோதிடம், வேறு எதையோ திட்டமிட்டிருக்கிறது என்று நம்பி உணர்ந்திருப்பார். அதனாலேயே அந்தத் திட்டம்  நிறைவேறட்டும் என்று கருதியே போலியாக பயமுறுத்தியிருக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் தனித்தனியே ரகசியம் பாராட்டினாலும் பொதுநோக்கு  ஒன்றாகவே இருந்தது!

ஒற்றை மனிதராக ராமானுஜர் அந்த மந்திரோபதேசத்தைப் பெற்று, பிறகு தான் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்கும், அவருக்கு அடுத்தவருக்கும் என்று சராசரியாக ஒரு பரம்பரைக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அந்த உபதேசத்தை வழிமொழிவது என்ற வாழையடி வாழை கருத்து, கொள்கையை நம்பிக்கொண்டிருந்தார்,  நம்பி. ஆனால் ராமானுஜரோ மரம் ஒன்றானாலும், விழுதுகள் ஆயிரம் என்ற ஆலமரக் கருத்து, கொள்கையைக்கொண்டிருந்தார். அதனால்தான் குரு  பயமுறுத்தினாலும் ஒரு தனி மனிதரை இழப்பதால் பல்லாயிர மக்கள் நலம்பெற முடியுமானால், அந்த மனிதர் தானாகவே இருக்கட்டும் என்று உறுதி  பூண்டிருந்தார் ராமானுஜர். நிதானமாக குருவின் உபதேசத்தை செவிமடுத்தார். மந்திரத்தையும் அதன் பொருளையும் உள்வாங்கிக்கொண்டார். இதயக் கோயிலில்  திருமாலை இருத்தி, அந்த மந்திரத்தால்பல நூறுமுறை அர்ச்சித்தார். பிறகு திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோயில் கோபுரத்தின் மீது ஏறினார்.

அங்கிருந்தபடியே ஊர் மக்களை எல்லாம் அழைத்தார். கோபுர உச்சியிலிருந்து ராமானுஜர் கூவி அழைப்பதை அறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே உடனேயே  கூடிவிட்டார்கள். விபரீத கற்பனையுடன் அண்ணாந்து பார்த்த அவர்கள் மீது ‘‘ஓம் நமோ நாராயணாய’’ என்ற அஷ்டாக்ஷர மந்திரம் பூத்தூவலாக விழுந்தது.  ஒரு துளி பட்டவுடன் சிலிர்ந்துக்கொண்ட அவர்கள், அதுவே மழையாகப் பொழிந்தபோது அப்படியே பரவசப்பட்டனர். மந்திரத்தையும் அதன் பொருளையும் நன்கு  கேட்ட அவர்கள், அதைத் திரும்பத் திரும்பச் சொல்லி தங்களுக்குள் ஓர் உயர்வை வளர்த்துக் கொண்டனர். ‘நமக்கும் இறையருள் உண்டு’ என்ற நம்பிக்கை  துளிர்த்தது. இருகரம் கூப்பி மேலே நின்று கொண்டிருந்தராமானுஜரைத் தொழுதார்கள். எதிர்பார்த்தது போல நம்பி போலியாக வெகுண்டார். ‘‘என் நம்பிக்கைக்கு  துரோகம் இழைத்துவிட்டாய். உனக்கு நரகம்தான்’’ என்று சபிப்பது போல நடித்தார். 

ராமானுஜருக்குத் தான் தனிச் சலுகை அளிக்கவில்லை என்று தன்கூட இருந்தவர்களுக்கு ‘ஆறுதலும்’ அளித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரே  உணர்ச்சிவசப்பட்டவராக, ‘‘நீர்தான் எம்பெருமானாரோ!’’ என்று கூறி ஆரத் தழுவிக்கொண்டார். அப்போதே மானசீகமாக அவர் நாராயணனிடம்  வேண்டிக்கொண்டிருந்திருப்பார்: ‘பகவானே, இந்தப்பிள்ளைக்கு தீர்க்காயுசு கொடு.’இதனால்தான் ‘நரகம்தான்’ என்று சபிக்கப்பட்டவரால், ஒரு முழு மனித  ஆயுளை வாழ்ந்து  120 ஆண்டுகள்  சமூகத்துக்கும் இறைவனுக்கும் தன் நிறைவுநாள்வரை ராமானுஜரால் உழைக்க முடிந்திருக்கிறது. இந்தப் பெருமை  ஸ்ரீராமானுஜருக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த மனிதப் பிறவியும், சமுதாய நன்மைக்காக, இப்படி முழு வாழ்க்கையை, உலகத்தின் எந்தப் பகுதியிலும்  வாழ்ந்ததில்லை என்று உறுதியாகக் கூறலாம்!

No comments:

Post a Comment