Saturday 28 April 2018

சிவனுக்கு சுடுகாட்டு சாம்பல் ஏன்?


சண்டன் என்ற வேடன், தன் மனைவி சண்டிகாவுடன் வசித்தான். ஒருமுறை வேட்டைக்கு சென்ற போது, ஒரு வில்வ மரத்தடியில், அழகிய சிவலிங்கம் ஒன்று புதிதாய் தோன்றி இருப்பதை கண்டான். பக்திப் பெருக்கில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது. அந்த லிங்கத்திற்கு எப்படி பூஜை செய்வது என அவனுக்கு தெரியவில்லை. அப்போது அங்கே சிங்ககேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்த அவன், தன் பரிவாரங்களை பிரிந்து, வழி தெரியாமல் தவித்தான். சண்டனிடம் வழி கேட்டு, காட்டிலிருந்து வெளியேறி விடலாம் என நம்பினான். லிங்கத்தின் மீது பார்வையை பதித்திருந்த சண்டன், மன்னன் வந்ததை கவனிக்கவில்லை. எனவே, அவன் முதுகில் தட்டி தன் பக்கம் ஈர்த்தான்.

உணர்வு வரப்பெற்ற சண்டன்,''அரசே, மன்னியுங்கள். பாராமுகமாய் இருந்து விட்டேன். வாருங்கள்... வழி காட்டுகிறேன்!'' என்றான். செல்லும் வழியில், ''மகாராஜா, இங்கே இருக்கும் சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும் என சொல்லுங்கள்,'' என்றான்.

வீட்டுக்கு எப்போது செல்வோம் என்ற எரிச்சலில் இருந்த மன்னன், ''உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து லிங்கத்தின் மீது ஊற்று. சுடுகாட்டில் வெந்த பிணங்களின் சாம்பலை கொண்டு வந்து லிங்கத்துக்குப் பூசு. கைக்குக் கிடைக்கிற பூக்களையெல்லாம் சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவை நிவேதனமாக வை. ஒரு கும்பிடு போடு!'' என்று அலட்சியத்தோடு கூறினான்.

இதை கவனமாக கேட்ட சண்டன், அது தான் நிஜமான பூஜை முறை என நம்பி, மன்னன் சொன்னபடியே பூஜை செய்தான். ஒரு நாள் சுடுகாட்டில் பிணம் எதுவும் எரியவில்லை. சிவபூஜை தடைபட்டது. இதனால் கவலைப்பட்ட சண்டனிடம், அவன் மனைவி சண்டிகா, ''கவலைப்படாதீர்கள். நாம் குடியிருக்கும் குடிசையைக் கொளுத்தினால், நான் அதில் விழுந்து, வெந்து சாம்பலாவேன். அதை சிவலிங்கத்திற்கு பூசுங்கள், சிவன் மகிழ்வார்,'' என்றாள்.
சிவபூஜையே பெரிது என நினைத்த சண்டனும் அப்படியே செய்தான். அன்று சிவராத்திரி என்று அவனுக்கு தெரியாது. அவனது பக்தியை மெச்சிய சிவன் அவன் முன் தோன்றினார். சண்டிகாவை உயிர்ப்பித்தார். குடிசையும் முன்பு இருந்தது போலாயிற்று. வேடனுக்கு சகல கலைகளும் தெரிய அருள்பாலித்தார். 

மரணத்துக்கு பின் சிவகணங்கள் எதிர்கொள்ள, அவன் கயிலையை அடைந்தான். வேடன் தன் மீது வைத்த அன்பை உலகிற்கு வெளிப்படுத்தவே, சிவன் சுடுகாட்டு சாம்பலை பூசினார்.

1 comment:

  1. நன்றி, சிறப்பான பதிவு.

    ReplyDelete