Sunday 22 April 2018

நானே பாக்கியசாலி


அன்று அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. 'என் நான்காவது தம்பி' என ராமனால் புகழப்பட்ட குகன், கங்கையில் வழக்கம் போல படகோட்டிக் கொண்டிருந்தான். படகில் வந்தவர்கள் பேச்சு கொடுத்தனர். 

''என்ன குகா... அரண்மனையே பட்டாபிஷேக விழாவால் அமர்க்களப்படுகிறது. ஆனால், நீ படகு ஓட்டுகிறாயே! ராமர் உன்னை அழைக்கவில்லையா? இல்லை அதில் பங்கேற்க உனக்கு தகுதியில்லையா?'' என்றனர். புன்னகைத்த குகன், '' ராமபிரானுக்கு என் நினைவு இல்லாமல் போகுமா...?''  ''அப்படியென்றால் ஏன் செல்லவில்லை?''

சிரித்தபடி, ''நான் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன். உங்களுக்கு தெரியவில்லையா..?'' வந்தவர்களுக்கு ஏதும் புரியவில்லை. குகன் சொன்னான், '' விழா சமயத்தில் நெருங்கியவர்களுக்கு பொறுப்புகளை ஒப்படைப்பது வழக்கம் தானே! 

பட்டாபிஷேகத்துக்கு வருவோரை கங்கையின் அக்கரையில் சேர்க்கும் பொறுப்பு என்னுடையது. அரண்மனையில் இல்லா விட்டாலும், மனதால் ராமர் பட்டாபிஷேகத்தை தரிசித்துக் கொண்டு தானிருக்கிறேன். ராமரும் என்னைப் பார்த்து புன்னகைத்தபடி இருக்கிறார். நான் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்திருக்கிறேன் பாருங்கள்...'' என்றான். இதையறிந்த ராமரும், ' நீ இல்லை குகா.... நானே பாக்கியசாலி!' என மகிழ்ந்தார். 

No comments:

Post a Comment