Sunday 1 April 2018

முருக வழிபாடும், நோன்புகளும்

முருக வழிபாடும், நோன்புகளும்

ஒருமுறை வசிட்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளைப் பற்றிக் கூறினார். வாரத்தின் 7 நாட்களுள் வெள்ளிக்கிழமையன்று செய்யப்படும் நோன்பு சிறப்பானது. இது முருகக் கடவுளுக்கு உரிய நோன்பாகும். இந்நோன்பை நோற்று பகீரதன் தன் அரசை மீண்டும் பெற்றான்.

முன்னொரு காலத்தில் நாரதமுனிவர் விநாயகரிடம் வந்தார். ஏழு முனிவர்களை காட்டிலும் உயர்ந்தவராக தான் ஆவதற்கு என்ன செய்யவேண்டும் எனக்கேட்டார். அதற்கு விநாயகர், முருகனுக்குரிய கார்த்திகை நோன்பினை நோற்கும்படி சொல்லியருளினார். அந்நோன்பை இயற்றுபவர் பரணிநாள் பகலில் நீராடவேண்டும். ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும். வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும். 

கார்த்திகை நாள் காலையில் நீராட வேண்டும். நாணல் புல்லில் இரவில் படுக்க வேண்டும். முருகன் திருவடிகளையே உறக்கமின்றி நினைத்திருக்க வேண்டும்.இந்த முறைப்படியே நாரத முனிவர் நோன்பிருந்தார். ரோகிணி நாள் அன்று முனிவர்களோடு சேர்ந்து உணவு உண்டார். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் நோன்பிருந்தார். முருகன் அருளால் ஏழு முனிவர்களை காட்டிலும் உயர்ந்தவர் ஆனார்.

இது போல கார்த்திகை நோன்பு இருந்தவர்கள் பலர். அவர்கள் முருகனின் அருளால் மேன்மைகள் பலவற்றை அடைந்தனர். முருகனுக்குரிய நோன்புகளும் சஷ்டியும் ஒன்று. ஐப்பசி மாதம் சுக்லபட்ச பிரதமை நாள் முதலாக ஆறு நாட்கள் முறையாக நீராட வேண்டும். உண்ணாதிருக்க வேண்டும். மோதகம் செய்து படைத்து முருகனை வழிபட வேண்டும். இதுவே சஷ்டி நோன்பு ஆகும். 

No comments:

Post a Comment