Thursday 19 April 2018

குரு தனியாக இருந்தால் என்ன செய்வார்?

Image result for guru lord

அந்தணன் என்று சொல்லக்கூடிய குரு தனித்து இருந்தால் அவர் இருக்கும் இடத்தின் தன்மையை கெடுப்பார் என்பது ஜோதிட பொது விதி. எல்லா கிரகங்களுக்கும் நிறைகுறைகள் இருக்கும். குரு முழு சுப கிரகமாக இருப்பதால் அவர் தனியாக இருந்தால் அந்த ஸ்தான பலனை சிதைப்பார். உதாரணமாக 5ல் குரு தனித்து இருந்தால் புத்திரதோஷத்தை தருவார். அதேநேரத்தில் கௌரவம், செல்வாக்கு உயரும். குரு லக்னத்திற்கு 7ல் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, வர்கோத்தமம் பெற்று இருந்தால் சில பல குறைகள் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு நல்ல யோக வாழ்க்கை அமையும். மனைவி வகையில் சொத்து சேரும்.

முக்கூட்டுக் கிரகங்கள்

லக்னத்திற்கு 10ம் வீட்டில் குறைந்தது மூன்று கிரகங்கள் சேர்ந்து இருந்தால் மந்திரம், தந்திரம், சாஸ்திர விற்பன்னர், தவசித்தி, ஆன்மிக சாதனைகள், ஞானமார்க்கம், ஜோதிடம், குறி சொல்வது, வாக்கு பலிதம் உண்டாகும். இவர்கள் ஒரு இடத்தில் நிலையாக தங்க முடியாத சூழ்நிலைகள் உருவாகும். அடிக்கடி ஊர் மாற்றம், பிரயாணம் செய்து கொண்டே இருப்பார்கள். வயது ஆக ஆக உடலில் ஏதாவது உபாதைகள் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக வயிற்று உபாதைகள், ஜீரண கோளாறுகள், மூலம் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு திருமண பாக்கியம் அமைவதும் கடினம், அப்படி அமைந்தாலும் 
இல்லற வாழ்க்கை சுகப்படாது.

சுக்கிரன் சந்திரன் புதன்

சுக்கிரன், சந்திரன், புதன் இந்த மூன்று கிரகங்களுக்கும் ஜாதகத்தில் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு ஏற்பட்டால் பல்கலை வித்தகர்களாக இருப்பார்கள். எந்த வித்தையும் இவர்களுக்கு சுலபத்தில் வரும். பெரிய கலா ரசிகர்களாக இருப்பார்கள். இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம், கலை, காவியம், படைப்பு, கணக்கு சம்பந்தமாக நிபுணர்களாகத் திகழ்வார்கள். சஞ்சலம், சபலம் அதிகம் இருக்கும். பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்வதில் திறமை மிக்கவர்கள். பேச்சு மற்றும் வார்த்தை ஜாலங்களால் பிறரை வசீகரம் செய்து மயக்கி விடுவார்கள். சில நெறிமுறை தவறிய வாழ்க்கை காரணமாக அவமானங்களை சந்திக்க வேண்டி வரலாம். ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கை பெற்றோ அல்லது ஏதாவது வகையில் சம்பந்தப்பட்டோ இருந்தால் இந்த இரு கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் ஏதாவது வம்பு, வழக்கு, கோர்ட், போலீஸ், பஞ்சாயத்து போன்ற சிக்கல்கள் உண்டாகும். 

சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருந்தால் கையில் காசு, பணம் புரளும். வெள்ளி, தங்கம், வைர நவரத்தின அணிகலன்கள் அணியும் பாக்கியம் உண்டு. அதேநேரத்தில் காம சுகம் மிகுந்து இருக்கும். சிற்றின்பத்திற்காக எவ்வளவு தரம் தாழ்ந்த செயல்களிலும் ஈடுபடுவார்கள். இவர்களின் ஒரு பகுதி வாழ்க்கை ரகசியம் நிறைந்ததாக இருக்கும். கண் சம்பந்தமாக பல பிரச்னைகள் ஏற்படும். பார்வைக் குறைபாடு, நிறபேதக் குறைபாடு இருக்கும். ஆண், பெண் குறிகளில் நோய்கள் வர வாய்ப்புள்ளது. செவ்வாய் இருக்கும் ராசிக்கு கேந்திரத்தில் அதாவது செவ்வாய்க்கு 4, 7, 10ஆகிய  இடங்களில் சுக்கிரன் இருந்தால் பிருகு மங்கள யோகமாகும். இந்த அமைப்புள்ள ஜாதகர்கள் பெண்கள் மூலம் யோகம் அடைவார்கள். 

சொத்து, செல்வாக்கு உள்ள மனைவி அமைவார். வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட், தோப்பு என மண் மனை யோகம் உண்டு. செவ்வாய், புதன் இருவரும் சேர்ந்திருந்தால் நிறைகுறைகள் உண்டு. செவ்வாய்க்கு வாக்குகாரகன் என்ற ஸ்தான பலம் உண்டு. ஆகையால் இவர்களின் குணாதிசயங்களை கணிப்பது கடினம். எந்த நேரத்தில் எப்படி பேசுவார்கள், எப்படி மாறுவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது, திடீரென்று கடும் சொற்களை பயன்படுத்துவார்கள். தன் காரியங்களை சாதித்துக் கொள்ள எந்த கீழ்நிலைக்கும் இறங்கி வருவார்கள். தகாத சேர்க்கை, கூடா நட்பு ஏற்படும். ஸ்திர புத்தி இருக்காது. உடலில் வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

No comments:

Post a Comment