Monday 2 April 2018

ராகுதோஷம் போக்க குன்றத்தூர் போங்க


கும்பகோணத்தை போலவே சென்னை குன்றத்துாரிலும், திருநாகேஸ்வரம் என்னும் பெயரில் கோயில் உள்ளது. இங்கு வழிபட ராகு தோஷம் நீங்கும். 

தல வரலாறு 

சிவபக்தரான 'சேக்கிழார்' தமிழ்ப்புலமையில் சிறந்தவராக இருந்தார். அவரை அனபாயச்சோழன் தலைமை அமைச்சராக நியமித்தார். திருநாகேஸ்வரம் நாகேஸ்வரர் மீது ஈடுபாடு கொண்ட சேக்கிழார் தினமும் தரிசித்து வந்தார். இந்நிலையில் தன் சொந்த ஊரான சென்னை குன்றத்துாரில் நாகேஸ்வரர் என்னும் பெயரில் புதிய கோயிலை கட்டினார். இத்தலம் 'வடநாகேஸ்வரம்' என அழைக்கப்படுகிறது.

நாகதோஷ பரிகாரம்

ராகுவின் அம்சமான நாகேஸ்வரருக்கு தினமும் காலை 6:30, 10:00, மாலை 5:00 மணிக்கு பாலபிஷேகம் நடக்கிறது. நாக தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள், ராகுகாலத்தில் அபிஷேகம் செய்து, உளுந்து சாதம் படைத்து வழிபடுகின்றனர். மூலவருக்கு எதிரில் காமாட்சியம்மனின் தனி சன்னதி உள்ளது. நினைத்தது நிறைவேற, அம்மனுக்கு தை வெள்ளிக்கிழமைகளில் பன்னீர் அபிஷேகம் செய்கின்றனர். சித்ரா பவுர்ணமியன்று நாகேஸ்வரர், காமாட்சி அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கிறது.

வைகாசி பூசவிழா 

சேக்கிழார் சிவனை தரிசித்தபடி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். வலது கையால் சின்முத்திரை காட்டும் இவர், இடது கையில் ஏடு வைத்திருக்கிறார். இவருக்கு பூசம் நட்சத்திரத்தன்று அபிேஷகம் செய்கின்றனர். வைகாசி பூசத்தை முன்னிட்டு 10 நாள் குருபூஜை நடக்கும். சேக்கிழார் பிறந்த இடத்தில் தனி கோயிலும் உள்ளது. 

கனவில் வந்த சிவன் 

சேக்கிழார் பிரதிஷ்டை செய்த நாகேஸ்வரர் சற்று சேதம் அடைந்ததால், பக்தர்கள் அதை கோயிலிலுள்ள சூரிய தீர்த்தத்தில் மூழ்கடித்தனர். புதிதாக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தனர். துறவி ஒருவரின் கனவில் தோன்றிய சிவன், மீண்டும் பழைய லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். பின், தீர்த்தத்தில் மூழ்கிய லிங்கத்தை எடுத்து பிரதிஷ்டை செய்தனர். புதிய லிங்கம் கருவறைக்கு பின்புறம் வைக்கப்பட்டது. இதை 'அருணாச்சலேஸ்வரர்' என்கின்றனர். கற்பக விநாயகர், காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, முருகனின் தளபதி வீரபாகு, வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.

எப்படி செல்வது

* சென்னை தாம்பரத்தில் இருந்து 12 கி.மீ., 
* பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ.,

விசேஷ நாட்கள் 

சித்ராபவுர்ணமி 10 நாள் பிரம்மோற்ஸவம், வைகாசி பூசத்தில் சேக்கிழார் குருபூஜை, தைப்பூசம், ஆடிப்பூரம், மாசிமகம்.

நேரம்

காலை 6:30 - 12:00 மணி 
மாலை 5:00 - 09:00 மணி

தொடர்புக்கு 

044 - 2478 0436, 93828 89430

No comments:

Post a Comment