Tuesday 3 April 2018

குழந்தை பிறக்க 'டான்ஸ்'


பிரம்மச்சாரி பெருமாள், கேரளா மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் திருவல்லா திருவாழ்மார்பன் கோயிலில் இருக்கிறார். இது 108 திவ்யதேசங்களில் ஒன்று.

தல வரலாறு 

கேரளாவிலுள்ள சங்கரமங்கலம் கிராமத்தில் சங்கரமங்கலத்தம்மையார் என்னும் பெண்பக்தை வாழ்ந்தார். இவர் ஏகாதசிஅன்று விரதமிருந்து பெருமாளை தரிசிப்பார். மறுநாள் துவாதசியன்று துறவிகளுக்கு அன்னதானம் செய்வது வழக்கம். இவர் வரும் வழியிலுள்ள காட்டில் தோலாகாசுரன் என்பவன் இடையூறு செய்து வந்தான். பெருமாளிடம் முறையிட்டார் அம்மையார்.

மறுநாள் அவர் வரும்போது, பிரம்மச்சாரி இளைஞன் ஒருவன் தோலாகாசுரனுடன் போரிடக் கண்டார். அவன் அழிந்ததும் பிரம்மச்சாரி அங்கிருந்து மறைந்தார். பின், அம்மையார் கோயிலுக்கு வந்த போது, காட்டில் பார்த்த பிரம்மச்சாரி இளைஞனின் கோலத்தில் பெருமாள் இருக்க கண்டார். தனக்காக பெருமாளே அசுரனுடன் போரிட்டதை எண்ணி நெகிழ்ந்தார் அம்மையார். 

பிரம்மச்சாரி இளைஞர்கள் அங்கவஸ்திரம் அணியாததன் அடையாளமாக பெருமாளும் மேலாடை இன்றி மார்பு தெரிய காட்சியளிக்கிறார். அவரது மார்பில் திரு (லட்சுமி) குடியிருப்பதால் 'திருவாழ்மார்பன்' என அழைக்கப்படுகிறார். பெருமாளின் திருவடி தரிசனம் போல இத்தலத்தில் மார்பு தரிசனம் சிறப்பாக கருதப்படுகிறது.

உப்பு மாங்காய் 

சங்கரமங்கலத்தம்மையார் தானம் அளித்த போது, பெருமாளும் பிரம்மச்சாரியாக உணவை ஏற்று மகிழ்ந்தார். அம்மையார் ஏகாதசி விரதம் முடித்து சாப்பிட வைத்திருந்த உப்பு மாங்காயை கேட்டார். அதை கமுகு இலையில் வைத்து அளித்தார் அம்மையார். இதனடிப்படையில், தினமும் கமுகு இலையில் சாதம், உப்புமாங்காய் நைவேத்யம் இங்கு படைக்கப்படுகிறது. 

சிறப்பம்சம் 

மார்கழி திருவாதிரை, சித்திரை விஷு ஆகிய இருநாட்கள் தவிர மற்ற நாட்களில் கருவறையில் பெண்களுக்கு அனுமதியில்லை. மார்கழி திருவாதிரையன்று சிவன் இவரைக் காண வந்ததன் அடிப்படையில், சந்தனம், விபூதி பிரசாதம் தரப்படுகிறது. இவரை வழிபட்டால் செல்வம் பெருகும்.

பறக்கும் கருடாழ்வார் 

பெருமாளுக்கு எதிரில் கருடாழ்வார் 50 அடி உயர கல் துாணின் மீது பறக்கும் நிலையில், தங்க கவசத்துடன் காட்சியளிக்கிறார். பக்தர்கள் தங்களின் வேண்டுகோளை சொன்னவுடன், கருடன் பெருமாளை ஏற்றிச் செல்ல தயார் நிலையில் இருப்பதாக ஐதீகம்.
கேரளாவின் நடனம் கதகளி. குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்நடனத்தை தங்களின் குறை தீர கோயிலில் நடத்துவதாக வேண்டிக்கொள்வர். இதற்காக 'கலாக்ஷேத்ரா' என்ற நடனக்குழு உள்ளது.

எப்படி செல்வது

பத்தனம்திட்டையில் இருந்து 27 கி.மீ., துாரத்தில் திருவல்லா 

விசேஷ நாட்கள் 

மாசியில் பிரம்மோற்ஸவம், உத்திரட்டாதியில் கொடியேற்றி பூசத்தில் ஆறாட்டு

நேரம் 

காலை 4:00 - 11:30 மணி 
மாலை 5:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 0469 - 270 0191

No comments:

Post a Comment