Sunday 31 December 2017

நமக்கு எது நிகழ்ந்தாலும், அதிலும் ஒரு நன்மை இருக்கின்றது

shiva_markateyan

இரண்டு அணில்கள் நண்பர்களாக இருந்தனர். ஒருநாள் இருவரும் மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலோ சதா காலமும் கடவுளை பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கும். கடவுள் பக்தி அதிகம். 

தன் நண்பரான மற்றொரு அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே சுத்தமாக கிடையாது. திட்டமிட்டு செயல்புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணில்களைக் கேலி செய்வது வழக்கமாகக் கொண்டிருந்தது. 

அணில்களுக்கிடையே விளையாட்டு சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பக்திமான் அணில் பிடி வழுக்கி மரத்தில் இருந்து கீழே விழுந்தது. பெரிதாகக் காயம் இல்லை என்றாலும் வயிற்றில் லேசான கீறல்கள்....உடனே அந்த அணில் கடவுளே பெரிய ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி என்றது.

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணி விழுந்து விழுந்து சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதற்காக உன்னைத் கீழே தள்ளிவிட்டாரென்று கொஞ்சம் கேட்டு சொல்லேன் என்று கிண்டலடித்தது. 

பக்தியுள்ள அணில் கடவுளை முழுமையாக நம்பும் நாங்கள் எல்லாம் துன்பப்பட்டாலும் மாண்டுப்போவதில்லை. மீண்டுவருவோம். அதற்கும், ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்றது. 

ஆமாம்! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை மீண்டும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. 

பக்திமான் அணில் கண்களை மூடி மீண்டும் கடவுளை வேண்டியது இந்த அவமானத்திற்கு ஏதுவாக நான் ஏதேனும் தவறு இழைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு என்றது. கண்களைத் திறக்கும் போது காத்திருந்தது ஒர் அதிர்ச்சி. கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கிவிட்டது. 

அதற்குப் பக்கவாட்டில் ஒரு பெரிய பாம்பு ஒன்று தன் நண்பனை நெருங்கிவந்துகொண்டிருந்தது. ஹே ஹே...உன் பக்கத்தில் பாம்பு என்று கீழிருந்து கத்தியது. ஆனால் அதற்குச் சற்றும் காதில் விழவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த நண்பன் அணிலை லபக்கென்று கவிக்கொண்டது. 

தன் நண்பன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் காரணம் உள்ளது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப்பட்டிருந்தது. 

சில நேரத்தில் நாம் தடுமாறி விழும்போது உலகம் அதைக் கேலியாய் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரைக் காப்பதற்காக சிறு வலியாகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்குத் தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வாழ்க்கை என்றும் இன்பமே.....

https://play.google.com/store/apps/details?id=com.app.tntemples&hl=en

No comments:

Post a Comment