Monday 11 December 2017

பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்


பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தீபாவளியன்று, காஞ்சி சங்கரமடத்தில் மகாபெரியவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். அந்த வரிசையில், ஒன்பது வயது மதிக்கத்தக்க சிறுமியும் நின்றாள். நீலநிற பட்டுப்பாவாடை, பச்சை நிற சட்டையுடன், நெற்றியில் திலகமிட்டு, தலை நிறைய பூச்சூடி "பால திரிபுரசுந்தரி' போல், அவள் தோற்றமளித்தாள். அவளது கையில் மூன்று டப்பாக்கள் இருந்தன.

வரிசையில் நின்ற பக்தர்களின் பார்வை அந்தச்சிறுமியின் மீது பதிந்திருந்தது. எல்லாரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ""இப்படிக்கூட திவ்ய அழகுடன் ஒரு பெண் இருப்பாளா!'' என்பதே அவர்களின் ஆச்சரியப் பார்வைக்கு காரணம். திடீரென, பெரியவர் அந்தச் சிறுமியை அழைத்தார். ""உன் பெயர் என்னம்மா? எங்கிருந்து வருகிறாய்? உன் பெற்றோர் வந்திருக்கிறார்களா?'' என்று பரிவுடன் கேட்டார். 

தீபாவளிக்கு என்னென்ன பட்சணம் சாப்பிட்டாய்?'' என்று கேள்விகளை அடுக்கினார். அவள், ""ஒக்காரை, பஜ்ஜி, வடை... என தான் சாப்பிட்ட பலகார வகைகள் பற்றி பெரியவரிடம் சொன்னாள். ""சரி... நிறைய டப்பா வச்சிருக்கியே! அதில் என்ன இருக்கு?'' என்று கேட்டார் பெரியவர்.

அவள் அதற்கு, ""உம்மாச்சி தாத்தாவுக்கு பிடித்தமான கோதுமை அல்வாவும், பால்கோவாவும் வச்சிருக்கேன்,'' என்று சொல்லி, இரண்டு டப்பாக்களை மட்டும் பெரியவர் முன் வைத்து, அவரை வணங்கி எழுந்தாள்.

தன் மடியில், ஒரு சிறிய டப்பாவை வைத்திருந்த அந்த சிறுமியை நோக்கி,""சரி...இரண்டு டப்பா நிறைய பட்சணம் கொண்டு வந்து தந்திருக்கியே! இன்னொரு டப்பாவிலே என்ன வச்சிருக்கே! அதை ஏன் தரலை!'' என்றார்.

""இதிலா....இதிலே தீபாவளி மருந்து வச்சிருக்கேன். உம்மாச்சி தாத்தா பட்சணத்தை சாப்பிட்டதும், இதையும் கொடுத்துட்டு போகலாமுனு இருக்கேன்,'' என்று மழலை மொழியில் பதிலளித்தாள் குழந்தை. பிறகு என்ன நினைத்தாளோ! அந்த டப்பாவையும் பெரியவர் முன் வைத்து விட்டு, அவரை வலம் வந்து வணங்கினாள். பிறகு அங்கிருந்து எழுந்து போய்விட்டாள். அவளுக்கு எந்த ஊர்? தாய் தந்தை யார்? என்ற விபரத்தை மட்டும் அவள் கடைசி வரை சொல்லவே இல்லை. 

அந்தச் சிறுமியை பக்தர்கள் மடம் முழுவதும் தேடியலைந்தனர். உஹூம்... யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்னை பாலதிரிபுர சுந்தரியே அங்கு வந்து, பெரியவருக்கு பட்சணம் அளித்ததாகத்தான் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். பெரியவருக்கு அம்பாளின் வடிவான பாலதிரிபுர சுந்தரி என்றால் மிகவும் பக்தி. அவளே நேரில் வந்ததாகத்தான் அவரும் கருதியிருப்பார்.

"உம்மாச்சி தாத்தா' என்றால், "அம்மாவைப் பெற்றவர்' என்று பொருள். ஆம்...அந்த அம்பாளே மகாபெரியவரை தன் தந்தையாக ஏற்றிருக்கிறாள் என்று தான் இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும்! ஆம்...நம்மைப் பெற்றது ஒரு தந்தை. நம் எல்லோருக்கும் தந்தை, நடமாடும் தெய்வமாய் விளங்கிய காஞ்சி மகாசுவாமிகள்.

No comments:

Post a Comment