Wednesday 6 December 2017

மணியடிச்சா சாப்பாடு



"உனக்கென்னப்பா! மணியடிச்சா சாப்பாடு' என்று பள்ளிக்கூடம் முதல் சிறைச்சாலை வரைக்கும் உள்ளவர்களைப் பற்றி சொல்வதுண்டு. உண்மையில், "மணியடிச்சா சாப்பாடு' என்பது ஆன்மிகம் சார்ந்தது. பூஜையின் போது, இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம் அல்லது நிவேதனம் என்பர். "நிவேதனம்' என்றால் "அறிவித்தல்' என்று பொருள். இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது என்கிற அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே கோயில் மணி. அபிராமி பட்டர் அம்பிகையை,"மணியே! மணியின் ஒலியே!' என்று அபிராமி அந்தாதியில் அழைக்கிறார். சுவாமிக்கு 16 வகை தீபாராதனை எனப்படும் "சோடஷ உபசாரம்' செய்யும் போது, கண்டநாதம் என்னும் பெரிய காண்டாமணியை ஒலிப்பது வழக்கம். சிவனுக்குரிய பூஜை மணியில் நந்தியும், பெருமாளுக்குரிய மணியில் சங்கு, சக்கரம், கருடன் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். மணியடிக்கும் போது ஒரு ஸ்லோகம் சொல்வார்கள்.

"உள்ளத்தில் தூய்மையான உணர்வு எழவும், தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன்' என்பதே அந்த ஸ்லோகத்தின் பொருள். மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, அந்த இடம் முழுவதும் சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment