Sunday 17 December 2017

"வழுக்கை'க்குள் இவ்வளவா?


பொங்கல் நாளன்று, வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்வார் காஞ்சி மகாபெரியவர். அதற்கென்ன காரணம் என பக்தர்கள் கேட்ட போது, "பல் இல்லாத கிரகம் எது என தெரியுமா?'' என்று திருப்பிக் கேட்டார்.

பக்தர்களுக்கு எதுவும் தெரியவில்லை. "அதுதான் சூரியன்' என்ற பெரியவர், பல் இல்லாதவர்களால் கடினமான தேங்காயைச் சாப்பிட முடியுமா? 

அதனால் தான் வழுக்கை தேங்காயை நைவேத்யம் செய்ய வேண்டும்,'' என்றார்.

இன்னொரு நைவேத்யமும் சூரியனுக்கு முக்கியம். அது தான் உளுந்து வடை. தீபாவளிக்கு தானே நாம் வடை செய்வோம். பொங்கலுக்கும் அது உண்டு. காரணம், பல் இல்லாத சூரியனுக்கு மெதுவடை சாப்பிட இதமாக இருக்குமே! அதற்காகத்தான். இதுதவிர வாழைப்பழமும் முக்கியம்.

பெரியவர், சங்கர மடத்தில் இருந்த காலத்தில், பொங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, மடம் சுத்தம் செய்யப்படும். அவர் பூஜித்த சந்திர மவுலீஸ்வரர் பூஜா மண்டபத்தில், சுண்ணாம்பு வெண் பட்டையும், காவியும் அடிக்கப்படும். வாழை, மாவிலை தோரணங்கள் கட்டப்படும். காட்டுப் பூக்களால் மடத்தை அலங்காரம் செய்வார்கள்.

பொங்கலன்று அதிகாலையே, பெரியவர் சூரிய நமஸ்காரம் செய்து சூரிய நாராயண பூஜை செய்வார். புதுப்பானையில் சர்க்கரை பொங்கல் இடப்படும். அதை கற்கண்டு, கனி வகை, உளுந்து வடை, வழுக்கை தேங்காயுடன் சூரியனுக்கு நைவேத்யம் செய்வார். பிறகு, அதை பக்தர்களுக்கு விநியோகிக்க உத்தரவிடுவார்.

சூரியனுக்கு நீங்கள் இதுவரை வழுக்கை தேங்காய் நைவேத்யம் செய்யாமல் இருந்தால், இனி வரும் காலங்களில் நிச்சயமாக செய்யுங்கள். வரும் ரதசப்தமியன்று (சூரியனுக்குரிய முக்கிய திதி) கூடசெய்யலாம். காரணம், இது மகாபெரியவரின் அருள்வாக்கு. நீர் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். நினைத்தது நடக்கும் என்று அவர் அருள் செய்துள்ளார். மேலும், பொங்கலன்று உணவில் பரங்கிக்காய், பூசணிக்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு ஆகியவை அவசியம் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பொங்கலன்று தன்னைத் தரிசிக்க வரும் ஆண்களிடம், "குழந்தைகளை திட்டாதீங்கோ' என்று சொல்லி ஆசி வழங்குவார். பெண்களிடம், "நாளை கணுப்பொங்கல் (மாட்டுப்பொங்கல்) கொண்டாடுங்க,'' என்பார். அத்துடன், மகாபாரத எடுத்துக்காட்டு ஒன்றும் அவர்களிடம் சொல்வார். பாஞ்சாலியை துயில் உறிந்த போது, அவளது சகோதரன் கண்ணனை எண்ணி, "கண்ணா! கண்ணா!' என கதறினாள். அவன் ஓடி வந்து காப்பாற்றினான். நீங்களும் இந்தநாளில், உங்கள் உடன் பிறந்தவர்கள் நலமாக வாழ பிரார்த்தியுங்கள் உங்கள் உடன் பிறந்த சகோதரர்கள், உங்கள் குழந்தைகைளுக்கு "மாமா' முறை வேண்டும். "மா..மா..' என்ற சொல்லுக்கே, "பெரிய.. பெரிய' என்று தானே பொருள் என்பார். இப்படியாக, பொங்கல் திருநாளை பொருள் பொதிந்ததாக கொண்டாட அறிவுறுத்தியவர் மகாபெரியவர்.

No comments:

Post a Comment