Saturday 16 December 2017

தம்பதி ஒற்றுமை காக்கும் சனிபகவான்


தன் சகோதரியான தேவகியையும் வசுதேவரையும் கண்களில் கோபம் பொங்கப் பார்த்தான், கம்சன். சகோதரியின் வாரிசால்தான் தனக்கு மரணம் என்பதால் அதிர்ச்சியும் பயமும் அவனை சூழ்ந்திருந்தன. சகோதரியையும் மாப்பிள்ளையையும் சிறையில் அடைத்தான். அடுத்தடுத்து பிறந்த குழந்தைகளை வெட்டி எறிந்தான். சில குழந்தைகளை சுவரில் மோதி வீசினான். தேவகியின் வயிறு எரிந்தது. வசுதேவர் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்தார். ஆறு குழந்தைகளைப் பறி கொடுத்த தம்பதியர் ஏழாவதாகப் பிறந்த பெண் குழந்தையை ஆசையோடு பார்த்தனர். அதைப் பார்த்துவிட்ட கம்சன் அருகே வந்தான். சித்தத்தில் சீற்றம் அதிகரித்தது. பளிச்சென்று குழந்தையாக இருந்த சக்தியின் அம்சம் வானை நோக்கிப் பறந்தது. வானை அடைத்து பரந்து விரிந்தது. கம்சன் உற்றுப் பார்த்தான். அங்கே அழகிய விஷ்ணு துர்க்கை ஜொலித்தாள். அவனது கண்கள் இருண்டன. ‘‘கம்சா, நான் உன்னைக் கொல்ல வரவில்லை. 

அதை எட்டாவதாகப் பிறக்கும் குழந்தை பார்த்துக் கொள்ளும். அவனால் நீ வதம் செய்யப்படுவாய் என்று எச்சரிக்கவே வந்தேன்’’ என்ற அந்தப் பேரொளி, ஒடுங்கி மறைந்தது. கம்சன் தலையில் கைவைத்து அரற்றினான். கம்ச வதத்துக்கான கிருஷ்ணரின் அவதாரம் நெருங்கியது. இப்படி, கம்சனுக்கு மரண அறிவிப்பை எச்சரிக்கையாக விடுத்து மறைந்த அந்த விஷ்ணு துர்க்கை கோயில் கொண்டிருக்கும் தலம்தான் சீவலப்பேரி. வீரம் தோய்ந்த மண் என்று வரலாறு கூறும் இத்தலத்தில், பொருத்தமாக துர்க்கை வீற்றிருக்கிறாள். சிவன்பார்வதி திருமணம் கயிலையில் அரங்கேறியபோது வட பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தது. ஈசன் அகத்தியரை பார்க்க, உலகை சமன் செய்ய தெற்கு நோக்கி நகர்ந்த குறுமுனி, குற்றாலத்தை அடைந்தார். 

சிவ பூஜைக்காக சென்றபோது திருமாலை பரமசிவமாக குறுக்கினார். பூஜையை முடித்தபின் நெடுமாலான திருமாலைத் தேடினார். அவர் சீவலப்பேரியில் விஷ்ணு துர்க்கையோடு அருள் காட்டும் கோலம் பார்த்து வியந்தார். தாங்கள் எப்போதும் இவ்வாறு இத்தலத்தில் அமர்ந்து அருள வேண்டும் என்று கேட்டு நிலம்பட வீழ்ந்து வணங்கினார். இன்றும் அவரின் அன்பு வார்த்தைக்கேற்ப சீவலப்பேரியில் அருள் வழங்கி வருகிறார், திருமால். ஒருமுறை தேவஅசுரர் யுத்தத்தில், அசுரர்கள் தோல்வியடைந்தனர். அசுரர்களின் தாயான திதி கலக்கம் அடைந்தாள். குருவான சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள். அப்போது அங்கிருந்த சுக்கிராச்சாரியாரின் தாயார் காவ்யா மாதாவிற்கு கோபம் அதிகரித்தது. காவ்யா மாதா அசாத்திய சக்தி பெற்றவள். அவள் நினைத்தால் எல்லாவற்றையும் அழித்து விட முடியும். இந்திரனை ஒழித்துக் கட்டிவிட்டு திதியின் குழந்தைகளுக்கு அனைத்து பதவிகளையும் பெற்றுத் தருவதாக வாக்கு கொடுத்தாள். 

பின்னர் தேவலோகம் நோக்கி படையுடன் கிளம்பினாள். இதைக் கேள்வியுற்ற தேவர்கள் கதிகலங்கிப் போயினர். வைகுந்தவாசனை நாடினர். காத்தருளுமாறு அவன் திருவடி தொழுதனர். மகாவிஷ்ணு சுதர்சன சக்கரத்தை காவ்யா மாதாவை நோக்கி செலுத்தினார். அவளை இரண்டாகத் துண்டித்துக் கொன்றது சுதர்சன சக்கரம். ஆனால், வழக்கமாக வைகுந்தனை நோக்கித் திரும்பிவிடும் சக்கரம், சூரிய லோகம், சந்திர லோகம், துருவ மண்டலம் என்று சுழன்று திரிந்தது. 

அப்போது கபில முனிவர் அங்கு பிரசன்னமானார். ‘‘நீ நாராயணன் கட்டளையால் நல்ல காரியம் செய்தாய். ஆனால், அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? காவ்யா மாதா அசுர குலத்தவள் என்றாலும் அவள் பெண் என்பதை உணர்ந்தாயா? அந்தப் பாவம் பொல்லாதது என்பதை நீ அறியமாட்டாயா? அதனால்தான் உன்னால் நாராயணன் கையில் மீண்டும் அமர முடியவில்லை. இந்த மகாபாவம் தொலைத்து வா. 

தென்னாட்டில் புரண்டோடும் தாமிரபரணியில்  சீவலப்பேரியில் பெருமாள், விஷ்ணு துர்க்கையுடன் வீற்றிருக்கிறார். நதியில் நீராடி சீர்வளர் பெருமாளின் திருப்பாதங்களையும் துர்க்கையையும் தொழுது நில். பாவங்கள் தாமிரபரணியில் கரைந்தோடும்’’ என்று சொல்லி கபிலர் ஆசி கூறினார்.  சுழித்தோடும் தாமிரபரணியில் சக்கரம் மூழ்கி எழுந்தது. பெருமாளையும் துர்க்கையையும் தொழுது மோன நிலையில் ஆழ்ந்தது. சட்டென்று வானில் அசரீரி ஒலித்தது. ‘‘சுதர்சன சக்கரமே உமது பாவம் அழிந்தது. நீவீர் மேலும் நலம் பெற, இந்த இடத்தில் அசுவமேத யாகம் நடத்தும்’’ என்றது. சிவனும் உமையும் ரிஷிபாரூடராக வாகனமேறி தரிசனம் தந்தனர். பிரம்மனும் இந்திரனும் தேவர்கள் புடைசூழ தோன்றினர். கபிலர் வேள்வித் தீ எழுப்ப, அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினார் சுதர்சனர். அதில் தேவாதி தேவர்கள் தோன்றினர்.

மால் லட்சுமியுடன் கருட வாகனத்தில் காட்சியளித்தார். உள்ளங் குளிர்ந்தார். ‘‘நீ எப்போதுமே என்னுடனேயே இருப்பாய். என்னை நீ பூஜித்த இத்தலத்தில் இனி யார் வந்து தரிசித்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வேன். கேட்ட வரங்களை தட்டாது தருவேன்’’ என்றார். அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்தது சீவலப்பேரி துர்க்கையம்மன் கோயில். கோயிலின் பெருமையை சொல்லிக் கொண்டே போகலாம். ஆலயத்தின் முன்புறம் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். மனதைக் கொள்ளை கொள்ளும் சிற்ப நுணுக்கங்கள். நுழைந்தவுடன் இரண்டு கல் யானைகள் வரவேற்கின்றன. பலிபீடமும் கொடி மரமும் வசந்த மண்டபமும் கடந்து நகர்கிறோம். 

இடது புறம் மடப்பள்ளி. வசந்த மண்டபத்தில் பெண்கள் தங்கள் வேண்டுதலுக்காக நெய்தீபம் ஏற்றுகிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் மஞ்சள் கயிறு கட்டி வைத்துள்ளார்கள். கோயில் கருவறையில் அகிலத்தையே அசைக்கும் துர்க்கையம்மன் சாந்தசொரூபியாக தனது அண்ணனுடன் உள்ளார். 

ஒரு காலத்தில் துளசி வனமாய் காட்சியளித்த இந்த இடம் துர்க்காபுரி என அழைக்கப்பட்டது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தயாபரி இவள். கோயிலைச் சுற்றி வந்தால் இடது புறம் சிந்தாமணி விநாயகர் விக்னங்களை களைய காத்திருக்கிறார். அவருக்குப் பின்னே தியான மண்டபம். இங்கே எப்போது ‘ஓம் துர்க்கா... ஸ்ரீ துர்க்கா... ஜெய துர்க்கா...’ என்ற மந்திர உச்சாடனம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஜெய்ப்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட அம்மன் சிலை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அருகே அரசரடி விநாயகர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என உணர்த்தும் வண்ணம் நாகர்களுடன் விநாயகர் தரிசனம் தருகிறார். தியான மண்டபத்தினைக் கடந்து வலது புறம் வந்தால் அங்கே தியானேஸ்வர் எதிரே நந்தியுடன் தியான நிலையில் இருந்து அருள் பொழிகிறார். இங்கு பிரதோஷம் மற்றும் சிவராத்திரி திருவிழா மிகச் சிறப்பாக நடக்கும். அருகிலேயே குருவாயூரப்பன், தனிச் சந்நதியில் அருள்கிறார். 

அருகில் தாஸ ஆஞ்சநேயர், அருள்பொலியும் திருக்காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் மிக அற்புதமாக சனிபகவான் தனது மனைவி நீலாதேவியுடன் வீற்றிருக்கிறார். கடந்த 2005ம் ஆண்டு வன்னிமரத்தடியில் தனிச் சந்நதியாகவே இதை உருவாக்கியுள்ளனர். சனி பகவான் தன் துணைவியாருடன் இருப்பது மிகவும் அபூர்வமானதாகும். அதுவும் தாமிரபரணி மூன்று நதிகளும் கூடுமிடத்தில் திரிவேணி சங்கமத்தில் இதுபோன்ற அமைப்பிருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்தச் சந்நதி சர்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தம்பதி சமேதராக காட்சி தரும் சனிபகவானை வணங்க தம்பதியருக்குள் ஒற்றுமை கூடும். பிரச்னைகள் குறையும். வரும் சனிப் பெயர்ச்சி (19.12.2017) அன்று இங்கு சிறப்பு யாகம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள 0462  2483286, 2483256 என்கிற இந்த எண்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். சீவலப்பேரி துர்க்கை அம்மன் கோயில் நெல்லையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. நெல்லை சந்திப்பில் இருந்து அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன. பாளை மார்க்கெட் மற்றும்  நெல்லை சந்திப்பு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வாடகை ஆட்டோ மற்றும் வாகன வசதியும் உள்ளது.

No comments:

Post a Comment