Monday 22 January 2018

நெற்றியில் குங்குமம் இடுவதில் உள்ள அறிவியல் உண்மைகள்

நெற்றியில் குங்குமம் இடுவதில் உள்ள அறிவியல் உண்மைகள்

நெற்றியில் அணியக்கூடிய சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. பொதுவாக சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும். குங்குமம் இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அவற்றை புருவ மத்தி மற்றும் நெற்றி உள்ளிட்ட உடலின் பகுதிகளில் பூசுவதன் பின்னணியில் எளிய அறிவியல் மற்றும் உடற்கூறு இயல் காரணிகள் இருப்பதை ஆன்றோர்கள் அறிந்துள்ளார்கள்.

பொதுவாக, சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அங்கு இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய ‘பிட்யூட்டரி சுரப்பி’ குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமாக இயங்கும் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை சிறப்பாக அனுப்ப உதவுகிறது.

நெற்றியிலுள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருப்பதால் அங்கு, மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக உள்ளது. மேலும் மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு ஆகியவற்றிற்கு அந்த நிலை ஏதுவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. சந்தனம் இடுவதால் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவதன் மூலம், குறிப்பிட்ட கால அளவு வரையிலும் மன ஒருமைக்கு உதவி புரிவதாக அறியப்பட்டுள்ளது.

பெண்களால் தலை வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் அணியப்படுகிறது. ஆண்கள் புருவ மத்தியில் அணிவது வழக்கம். மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும்.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதி நெற்றிக்கண் அதாவது, புருவத்தின் மத்திய பகுதி ஆகும். மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளும் அங்கு வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்கப்படும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதி மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment