
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் பிரசன்னவெங்கடாஜலபதி கோயிலில், பதினாறு கரங்களுடன் புடைப்புச் சிற்பமாக நரசிம்மர் உள்ளார். கஷ்யபமுனிவர், வருணன், சுகோஷ முனிவர் ஆகியோரின் தவத்தை ஏற்ற விஷ்ணு இங்கு இரண்யனை மடியில் கிடத்தி வதம் செய்த கோலத்தில் தரிசனம் அளித்தார். சூரியன், சந்திரன் வெண்சாமரம் வீசி பெருமாளை சாந்தப்படுத்தும் நிலையில் உள்ளனர். இவரை நாரதர், பிரகலாதர், பிரகலாதனின் தாய் கயாது ஆகியோர் வணங்கியபடி உள்ளனர். நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும்வித்தில் நரசிம்மதீர்த்தக்குளம் கோயிலின் முன் உள்ளது. லட்சுமி தினமும் இக்குளத்தில் நீராடி நரசிம்மரை பூஜிப்பதாக ஐதீகம். பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சடாவர்மன் வல்லபபாண்டியன் இக்கோயிலுக்கு நிலம் வழங்கிய செய்தி கோயில் கல்வெட்டில் உள்ளது. தென்காசி- திருநெல்வேலி சாலையில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருந்து 2கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.
No comments:
Post a Comment