Monday 16 October 2017

நவகிரக தலங்கள் தரிசனம் : புதன் தலம் - கோவூர்


நவகிரகங்களில் புதன் முக்கியத்துவம் வாய்ந்தவர். புத்தி கூர்மை, எதிலும் வேகம், சாதூர்யமான பேச்சு, குழப்பமின்றி முடிவெடுத்தல், அலங்காரத்தில் ஆர்வம், கணக்கு, நவீன ஆராய்ச்சி என்று எல்லா விஷயங்களுக்கும் புதன்தான் காரணம். ஒருவர் ஜாதகத்தில் புதன் சரியில்லையெனில் குழப்பம், ஞாபகமறதி மிக்கவராகவும், எதிலும் ஆர்வமில்லாதவராகவும், மந்த புத்தியோடும் இருப்பார். ஜாதகத்தில் புதன் சரியில்லையென்றால், கோவூர் தலத்தில் அருட்பாலிக்கும் சுந்தரேஸ்வரரையும், சௌந்தராம்பிகையையும் வழிபட, புத்தி சுடர்விட்டு பிரகாசிக்கும். 

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் இத்தல இறைவன் மீது கோவூர் பஞ்சரத்னம் பாடி சிறப்பித்துள்ளார். தேவேந்திரனின் ஐராவதம் எனும் யானை அகழ்ந்து உருவாக்கி, நீராடிய ஐராவத தீர்த்தம், சிவகங்கை என அழைக்கப்படுகிறது. கயிலாயத்துக்கு ஒப்பான இத்தலத்தின் தலவிருட்சம், மகாவில்வம்.  இது 9, 16, 27 தளங்கள் கொண்டது. இந்த இலைகள் மகாசக்தி படைத்தவை. இத்தலத்தில் புதன் ஈசனோடு இணைந்த அம்சமாக விளங்குகிறார். அதனால், புதனுக்கு தனி சந்நதியில்லை. மூலவரை வணங்கினாலே போதும்.

கோயிலுக்குள் வலப்புறமாக கருவறையில் சுந்தரேஸ்வரர் அருள் வெளிச்சம் பரப்புகிறார். பசுவடிவ பார்வதிதேவிக்கு சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியராக காட்சிதந்து அருளியதால் திருமேனீச்சுரம் என்று பெயர். இதுமட்டுமல்லாது அன்னை காமாட்சி மாங்காடு தலத்தில் செய்த தவத்தால் மூவுலகும் வெம்மையால் கொதித்தது. அந்த கணத்தில் மகாலட்சுமி காமதேனுவாக இவ்வூரில் தங்கி தேவர்களுக்கு குளிர்நிழலும், அருள்நிழலும் தந்தமையால் இவ்வூரை கோவூர் என அழைத்தனர். 

ஆலயத்தில் சூரியன், நால்வர், காளிகாம்பாள், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி சோமாஸ்கந்தர், சுக்கிரவார அம்மன், லிங்கோத்பவர், கருணாகரப் பெருமாள் உற்சவர், முருகன்-வள்ளி-தெய்வானை, துர்க்கை என எல்லோரையும் தரிசிக்கலாம். அம்பாள் கருவறையைச் சுற்றிலும் வாராஹி, வைஷ்ணவி, மகாலட்சுமி, பிராம்மி, துர்கி, சண்டேஸ்வரி, பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாளை தரிசித்து வெளியே வந்தால் புதனின் நட்பு கிரகமான சனி பகவானை அக்னி மூலையில் தரிசிக்கலாம். சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் கோவூர் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment